Monday, February 28, 2022

பசியற்ற வயிறும் பசியுற்ற உடலும்


அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் வாசலில் நின்றவாறே,  சுவரோரமிருந்த பழுதுற்ற தொலைக்காட்சிப் பெட்டின் அருகில் பையை வைத்தேன். மனைவி, மகன் இருவரும் கட்டிலில் அமர்ந்திருந்தனர். மகள் நின்றுகொண்டிருந்தாள். கைகால் கழுவச் சோப்பைத் தேடினேன். எப்போதும் வெளியிலிருக்கும் வெளிரிய ட்ரம் மீதுதான் இருக்கும். சில நேரத்தில் சிறிய மென்நீல வாளியில் துணி சோப்பு, பேஸ்ட், பிரஸ்களோடு கலந்திருக்கும். அம்மா இன்று சேலை கட்டினார் என்றாள் மகள். முதலில் மகிழ்ச்சியாக இருந்தாலும் சற்றெனக் கோபம் வந்து உங்க அம்மா சேலை கட்டினால் எனக்கென்ன கட்டாவிட்டால் என்னக்கென்ன என்றேன். மகளின் முகம் சுருங்கியதைக் கண்டேன். பையை உள் வைக்கும் போது நைட்டிதான் கட்டியிருந்தாள். ஆனால், அழுக்கு நைட்டியல்ல.

திருமணமாகி பத்தாண்டுகள் ஆகப் போகின்றன. ஆனால், மனைவி சேலை கட்டின நாட்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவைதாம். முதல் காரணம் பெரும்பாலும் ஊரில் இருந்திருப்பது ; மற்றொன்று மிகச் சொற்பமாகவே  குடும்பத்தை வெளியில் அழைத்துச் சென்றிருப்பது. இரண்டுமே குடும்பத்தின் மீது எனக்கிருக்கும் அக்கறையின்மையைத்தான் காட்டுகின்றன. வீட்டில் இருந்தாலும் புடவை அல்லது தூய்மையான உடை உடுத்த வேண்டும் என்பதைப் பெண்கள் அறிந்திருக்க வேண்டுமல்லவா, இது ஆண்களுக்கும்தான். அவர்களின் ஆடைச் சுதந்திரத்தில் தலையிடுவதாக இதை ஒற்றைப் பார்வையில் குறுக்க வேண்டாம். ஒரு நாள் ஏன் எப்போதும் அழுக்கு நைட்டியையே போட்டிருக்கிறாய், நல்ல துணியைப் போட வேண்டியதுதானே. ஆடைகள் புற அழகோடு அக அழகையும் காட்டும் கண்ணாடி. ஒருவிதமான தைரியத்தை, மரியாதையை, அழியா நினைவுகளைக் கொடுக்கக் கூடியவை. நான் சிறுவயதில் பார்த்த அம்மா வெள்ளைச் சேலையில் பிங்க் நிற பூப்போட்ட சேலையிலும் நீலப் புடவையில் வெள்ளைப் பூப்போட்ட சேலையில் இருந்தவள். மேலும், வட்டமான பொட்டு, மஞ்சள் அப்பிய முகம், பூ முடிந்த கொண்டை, வாய்ச் சிவக்கும் வெற்றிலை இப்படியான சித்திரங்கள் நினைவுக்கு வருகின்றன. இப்போது நீ இருக்கும் சூழலை உன் மகன் வளர்ந்த பிறகு நினைக்கும் போது என்ன நினைப்பான். அழுக்கு நைட்டி, பொட்டற்ற நெற்றி, பூவற்ற தலை. மஞ்சளற்ற முகம் இவைதானே வந்து போகும். அவனுக்காகவாவது நீ மாறக்கூடாதா என்றேன். அவவனுக்கு ஒரு கவலையென்றால் உங்களுக்கு ஒரு கவலை என்பாள். 

சில நேரம் எதிர் வீட்டுக்காரர்கள் முன்னே ஏ அழுக்கு நைட்டி என்றும் அழைத்துப் பார்த்தேன். என்ன சொன்னாலும் இப்படித்தான் இருக்கிறாள்.  ஒருமுறை என் பழைய நிழற்படம் ஒன்றை அவள் மூலமாகப் பார்க்க நேர்ந்தது. ச்சா... எவ்வளவு அழகா இருந்திருக்கிறேன். இளமையெல்லாம் வீணாகிறது என்றேன். அவள் சற்றென வெளியில் சென்று விண்மீன்களற்ற மேற்கு வானத்தை வெறிக்க ஆரம்பித்தாள். ஏதோ யோசித்துக்கொண்டிருக்கிறாள் என்று பொருட்படுத்தாது, சிறிது நேரம் கழித்து அவளருகில் சென்றேன். அவளின் கண்ணீரில் தூரத்து வெளிச்சம் கரைந்தது. என்னாச்சு என்றேன். என்னைப் பார்க்காமல் மௌனமாய் உடைந்து அழுதாள். என் சொற்கள் அவளைக் காயப்படுத்தியிருக்குமோ என்றெண்ணி, பிறகென்ன இத்தனை ஆண்டுகளில் நீயாக விருப்பப்பட்டு ஒரு முத்தம் கொடுத்திருக்கிறாயா.  நெருங்கிவந்து கட்டியணைத்திருக்கிறாயா. ஒரு கணவன் மனைவியிடம் இதை எதிர்பார்ப்பது பிழையா என்றேன். அவளுக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது. இனி மாற்றம் இருக்கும் என்பது போல் இருந்தது. ஆனால், இதோ இப்போதும் அப்படியேதான் நகர்கிறது வாழ்க்கை.

கடந்த வாரம் முடித்திருத்தம் செய்தேன். வழக்கத்திற்குக் கொஞ்சம் கூடுதல் அழகாய் இருப்பதாய்த் தோன்றியது. பிள்ளைகள் பள்ளி சென்ற பிறகு அவளைக் கட்டியணைக்க முயற்சி செய்தேன். என்னிலிருந்து தன்னைப் பிடுங்கிக்கொண்டு கதவைத் திறந்து வெளியேறுவதிலேயே குறியாக இருந்தாள். மீண்டும் மீண்டும் முயற்சி செய்கையில் பாலியல் வன்கொடுமை செய்கிறேனோ என்கிற சந்தேகம் வர எனக்கே என் மேல் வெறுப்பு வந்தது. விருப்பமில்லையென்றால் விட்டுவிட வேண்டியதுதானே. ஏன் இப்படி இழிவாக நடந்துகொள்கிறாய். பாலியல் வன்கொடுமை செய்பவனுக்கும் உனக்கு என்ன வேறுபாடு என்று எனக்குள் நானே கேட்டுக்கொண்டு சரி அலுவலகம் செல்கிறேன் என்றேன். சாப்பிட்டுப் போங்க என்றாள். பசியில்லை என்றேன் கொஞ்சமாகச் சாப்பிட்டுப் போங்க என்றதும் சாப்பிட்டேன். கிளம்பும் போது அவளிடம் இவ்வாறு கூறினேன். ``பசியற்ற வயிற்றுக்கு அளவற்ற உணவைக் கொடுக்கிறாய். பசியுற்ற உடலைப் பட்டினி போடுகிறாய்''. போய் துணி துவைக்கணும் பாத்திரம் தேய்க்கணும் அவற்றையெல்லாம் யார் செய்வார் என்றாள். சரி, மனைவி கணவனுக்குச் செய்வதை யார் செய்வார் என்றேன். திடுக்கிடலுடன் பார்த்தாள்.  

01.03.2022
செவ்வாய்க் கிழமை   

லூஸுத்தனத்தின் முடிவிலி


துணிதுவைக்க மாடிக்கு வந்தேன். அவ்விடத்தைப் பாத்திரங்களால் நிரப்பியிருந்தாள் மனைவி. ஆடஞ்சு நிற வாளியில் துணிகளை அமிழ்த்தினேன். ``பாத்திரம் துலக்க வேண்டும், பால் காயவைக்கக் கூடப் பாத்திரமில்லை. நான் அப்புறம் துவைத்துக்கொள்கிறேன்'' என்றாள். அவளின் சொற்களுக்குச் செவிகொடுக்காமல் கொஞ்சம் தள்ளி இந்துவின் வாசலில் அமர்ந்து துவைக்க ஆரம்பித்தேன். நீர்செல்லும் வழியில் ஏற்பட்ட அடைப்பைக் கேபிள் வயரால் துளைத்துக்கொண்டிருந்தாள். பின் தடிமனற்ற வயரால் துளைத்தாள். அவளுக்கு உதவியாக முயற்சி செய்து, இறுதியாகக் குச்சியால் குடைந்தோம். ஒன்றும் பயனில்லை. வெளியில் வந்த இந்து எங்களின் நிலையை வீட்டுக்குள்ளிருக்கும் தன் கணவனிடம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். சற்று நேரத்தில் வெளியில் வந்த பெருமாள் என்னாச்சு அண்ணா என்றபடி, சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் குழாயின் இணைப்பைப் பிடுங்க முயற்சி செய்தார். அதிலிருந்து வெளிவரும் நீர் அடுத்த வீட்டின் பின்பகுதியில் கொட்டாமல் இருக்க, ஒரு வாளி கேட்டார். எந்த வாளியை எடுத்துக்கொடுப்பது என்பதில் என் மனைவிக்குக் குழப்பம் ; எனக்கும்கூட. சற்றேனத் துணிதுவைக்க நீர் பிடித்து வைத்திருந்த சிறிய வாளியை எடுத்துக்கொடுத்தேன். பிடுங்கப்பட்ட குழாயைக் குலுக்க அடைப்பிலிருந்து பொதுபொதுவென நீர்கொட்டியது. பின், துவைப்பதைத் தொடர்ந்தேன். மனைவி பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தாள்.     

இரண்டு பேன்ட்டை மட்டும் படிச்சுவரில் காயவைத்தேன். அவற்றையும் கொடிக் கயிற்றிலேயே காயவைக்கலாம் என்றாள். கொடி அறுந்துவிடும் என்று மறுத்துவிட்டேன். பால் வேறேன்ன வாங்க வேண்டும் என்றேன், அமைதியாக இருந்தாள். பீரோவைத் திறந்து பேன்ட், சட்டை, ஜட்டி மூன்றையும் எடுத்துக் கட்டிலில் வைத்தேன். குளிக்கப் போகும் முன் மீண்டும் என்ன வாங்கணும் என்றேன். பால், சன் ரைஸ், விம் பார் மட்டும் போதும் என்று சொல்ல, படியிறங்குகையில் மகன் அழைத்து `அம்மா துணி சோப்பு வாங்கி வரச் சொன்னாங்கப்பா' என்றான். ஓகே என்று சைகை செய்த படி `அம்மாடியோ கொலுசுச் சத்தம் ஆதாரமா நெஞ்சு நிக்கும்' என்கிற புத்தம் பூவே திரைப்படப் பாடலைப் பாடிக்கொண்டே புஸ்ரா கடைக்குச் சென்றேன்.

பொருள்கள் கொடுத்துக்கொண்டபடி நேற்று வந்த விருந்தாளி யார் என்றார் கடைக்காரர். என் அண்ணன். அவர்தான் என்னைப் பள்ளி முதல் கல்லூரிவரை படிக்க வைத்தவர். தாயாய், தந்தையாய், நண்பனாய் இருந்து என்னை ஆளாக்கியவர் என்றேன். எப்போது சென்னைக்கு வந்தேன், உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர், என்னென்ன வேலைகள் செய்திருக்கிறேன் என அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார். பிறிதொரு தருணத்தில் விரிவாகப் பேசுவோம் என விடைபெற்றேன். சந்தில் நுழைந்து செல்லும் போது பொருட்களின் எண்ணிக்கை குறைவது போல் தோன்ற பேச்சினூடே விம் பார் கேட்டேதை அவரும் சரிபார்ப்பதை நானும் மறக்கலானோம். மீண்டும் ஓடிச் சென்று வாங்கி வரும் வழியில் இட்லிக் கடை ஆயா அழுகிய முட்டைகளைச் சாலையில் வீசிக்கொண்டிருந்தார். அழுகலைக் கொத்தி வானோக்கிக் கரைந்தது காகம்.

சோப்புக் கரைசலில் அழுக்கு தேய்க்கையில் லிங்கம் சற்று வலித்தது. இரவின் சுயமைதுன நினைவு வந்துபோனது. தலைக்கு எண்ணெயே வைக்க மாட்டிக்கிறீங்க என்று கடந்த வாரம் பாரசுட் தேங்கெண்ணெய்ப் போத்தலைக் கொடுத்தாள். பேச்சுவாக்கில் கீழறைக்கு எடுத்துச் சென்றுவிட்டேன். நேற்று இரவு ஆன் ஃப்ராங்கின் `ஒரு இளம்பெண்ணின் நாட்குறிப்பு'ப் படித்துக்கொண்டிருக்கையில் ஓரிடத்தில் யாக்கை சிலிர்த்தது. கைக்கு வாகாக இருந்த எண்ணெயை எடுத்து என் அடிவயிற்றில் ஊற்றிப் பிசைந்துகொள்ள ஆரம்பித்தேன். கூழாங்கல்லைப் போலிருந்த லிங்கம் கடப்பாரையாய் விறைத்து விம்மியது. உடலுறவை விட சுயமைதுனத்தில்தான் இன்பத்தின் விளிம்பைச் சந்திக்க நேர்கிறது. ஆனாலும், எண்ணிப் பார்க்க உடலுறவே சுகந்தமானது.

குளித்து முடித்துக் கீழறைக்குச் சென்று உடைகூட மாற்றாமல் செல்போனில் செஸ் விளையாட ஆரம்பித்துவிட்டேன். ஜெயிக்க வேண்டிய ஆட்டம் எதிராளி கைக்கு மாறும் நொடியில் ``அப்பா டீ குடிக்க வாங்க'' என்றாள் மகள். சூட்டைச் சிறுகச் சிறுகப் பருகியபடி, O  N E ONE, T W O TWO  படித்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்தேன். வாஜி, போஜி, பஜ்ஜி என்று கிண்டலடித்தேன். கையிலிருந்த வாய்ப்பாட்டை என் மீது எறிந்தான். அட்டை கிழிந்த வாய்ப்பாடு உன் கிழிந்த டவுசரு மாதிரி இருக்கிறது என்றேன். அனைவரும் கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்தோம். பசியற்றதால் சாப்பாடு வேண்டாம் என்று அலுவலகம் கிளம்பினேன். இரண்டு தோசையாவது சாப்பிடுங்கள் என்றாள் மனைவி. ஆமாம், போட வேண்டியதைப் போட மாட்டிக்கிறாய். ஆனால், பசியில்லையென்றாலும் சோற்றைப் போட்டுக் கொல்லுகிறாய் என்றேன். ``போட வேண்டியது என்னதுப்பா'' என்றான் மகன். உன் அம்மாகிட்ட போய்க் கேளு, ரகசியமாய்க் காதில் சொல்லும் என்றேன். லூஸுத்தனமா ஏதாவது உளரிக்கிட்டே இருக்காதீங்க என்றாள். ஆம் இது லூஸுத்தனத்தின்  முடிவிலிதான்.

28.02.2022

திங்கட்கிழமை

Friday, February 25, 2022

நம்புவீர்களா டியர்ஸ்!

 

தி.நகர் காய்கறிச் சந்தைக்குச் சென்றுவிட்டு V51 பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே கோத்தாஸ் காபிக் கடை வாசலில் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்றுக்கொண்டிருப்பவரிடம் தினமும் 20 ரூபாய்க்கு ஏலக்கி வாங்கி வருவேன். காய்கறிப் பைகள் இரண்டையும் கடை வாசற்படியில் வைத்துவிட்டுப் பழம் வாங்கினேன். பின்பு, சாலையைக் கடந்து அரசமரத்தடி அடர் இருட்டில் கறுப்பு முகக் கவசத்தைக் கழற்றி மூச்சை இழுத்துவிட்டேன். கனத்தை இரு கால்களின் மீது வைத்துக் கை மாற்றிக்கொண்டேன். பிரமிளா மாவுக் கடை அருகில் இருசக்கர வாகனத்தின் பின் பக்கம் கிடைமட்டமாய்ச் சாய்ந்த பெண்ணொருத்தி. அத்தெருவின் முனை இருட்டில் நின்ற வண்டியில் முணுமுணுப்புச் சத்தம். இப்போது நான் மேட்டுத் தெருவின் முனையில் சென்றுகொண்டிருக்க கிடைமட்டமற்ற வண்டி என்னைக் கடந்து சென்றது.

வீட்டின் வாசலில் பை சற்று அறுபடும் சத்தம். காவலர் வீட்டுத் திண்ணையில் சற்று பைகளை வைத்துப் பின் படியேறினேன். பிள்ளைகளுக்குத் தோசை சுட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தாள் மனைவி. புதினா சட்னி. கீழறைக்கு வந்து உடை மாற்றிக் கை கால் முகம் கழுவிச் செல்வதற்குள் பாய்விரித்துப் படுத்துவிட்டாள் மகள். என்னம்மா அதுக்குள் படுத்துவிட்டாய் என்றேன். இரண்டு நாட்களாகப் பாப்பாவுக்குக் கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்றாள். சத்தான உணவைச் சாப்பிடணும், பிளாஸ்டிக்கில் அடைத்ததையும் பிஸ்கட்டையும் வாங்கித் தின்றால் உடம்பில் என்ன இருக்கும். அவனைப் பாரு கண்ணில் பார்ப்பதைக் கையில் கிடைப்பதையெல்லாம் திங்கிறான். நீ பழமும் திங்க மாட்டிக்கிறாய் ; கறியும் திங்க  மாட்டிக்கிறாய் என்றேன். பிள்ளைமேல் கண்ணு வைக்காதீங்க என்றவள் ஏலக்கியை எடுத்து மகனுக்குத் தின்னக்கொடுத்தாள். நீ ஒரு பழம் சாப்பிடுமா நாளைக்கு உனக்குப் புதுத் துணி வாங்கித் தருகிறேன் என்றேன். மகள் மசிவதுபோல் தெரியவில்லை. காலையில் முட்டை வாங்கிக்கொடுத்தேன் தின்றாயா என்றால் மகன் மட்டும் தின்னதாகச் சொன்னாள். முறைத்துப் பார்க்க, அவனுக்கு இன்று விடுமுறை என்பதால் காலையில் ஆம்லெட் போட்டுக் கொடுத்தேன். பாப்பா பள்ளிக்கூடம் சென்றுவிட்டது, நாளைக்குப் போட்டுத் தருகிறேன் என்றாள். 

தோசை சாப்பிட்டு முடித்ததும் இரண்டு ஏலக்கியை எடுத்துவரச் சொல்லித் தின்றாலும், இன்னும் பசிப்பது போன்ற உணர்வு. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது என மனைவி சொல்ல மீண்டும் சொய்ங் சொய்ங்தான். முறுகலான தோசையைத் தின்றுகொண்டிருக்கையில் எனக்கு முறுகலாக இருந்தால் பிடிக்காது என்று உனக்குத் தெரியும் அல்லவா என்றேன். அதை எனக்கு வைத்துவிடுங்கள் வேறு சுட்டுத் தருகிறேன் என்றாள். அதற்குள் கால் தோசையைத் தின்றுவிட்டேன். சிறுநீர் கழிக்கச் சென்றாலும் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் செல்கிறாள், 9 வயது ஆகிறது இன்னமும் இப்படி இருக்கிறாள் என்றாள். ஏன் என்றேன். சின்ன வயதில் சொல்லிட்டுப் போகணும் என்று சொன்னேன். அதை இன்னமும் கடைப்பிடிக்கிறாள். ஒருவகையில் இது நல்லதுதான் என்றாள். இரவு நேரத்தில் வேண்டுமானால் அம்மாவை உடன் அழைத்துச் செல் மற்ற நேரத்தில் இனி சொல்லாமல் செல். நான் வேலை செய்யும் இடத்தில் 35 வயதிலும் சிறுநீர் கழிக்கச் சொல்லிவிட்டுச் சென்றதுண்டு என்றேன். 

பேசிக்கொண்டிருக்கும் போதே மகன் உறங்கிவிட்டான். அவனைக் கட்டியணைத்துப் பூனை போல் கத்தினேன் ; சிங்கம் போல் கர்ஜித்தேன் ; புலி போல் உறுமினேன். சிறிதும் அசையாது கிடந்தான். முதுகில் கையில் கடித்துவைத்து மீண்டும் கர்ஜித்தேன். புரண்ட படி எட்டி உதைத்தான். விடாது அவனைக் கொஞ்சி இம்சித்தபடி இருந்தேன். மகளைக் கொஞ்சும் போதெல்லாம் நெளிந்து வெட்கப்படும் மகன் இப்படியான தருணங்களைக் கொண்டாடுவான்.

மிச்சமிருந்த பாலில் சூடான தேநீர் குடித்தபடி கீழறைக்குச் சென்றேன். பை இங்கேயே இருக்கிறது வந்து எடுத்துச் செல்லுங்கள் என மகள் அழைத்தாள். தேநீரோடு படியேறி தேநீர்க் கோப்பையோடே பையைச் சுமந்து திரும்பும் போது, இருந்து குடித்துப் போகக் கூடாதா, அவ்வளவு பிஸி மேனா நீங்கள் என்றாள். ம் ஹூம் என்றேன். சரி இருந்து தம்பியைப் பார்த்துக்கொள்ளுங்கள் நானும் பாப்பாவும் சிறுநீர் கழித்துவிட்டு வருகிறோம். யாருமில்லை என்றால் எங்கள் பின்னாடியே வந்துவிடுவான் என்றாள். மீண்டும் ம்ஹும் போட்டேன். எவ்வளவு பெரிய சுயநலவாதியாக இருக்கிறேன் அல்லவா. ஒரு சில நேரம்தான் இப்படி இருப்பேன் என்றால் நம்புவீர்களா டியர்ஸ்.

26.02.2022
சனிக்கிழமை   

முள்ளங்கி நிலா

அன்று மாலை அலுவலகம்விட்டு வீடு செல்லும் போது முறுக்கு, ப்ரெட், சிப்ஸ் வாங்கிச் சென்றேன். பிள்ளைகள் இருவரும் கட்டிலில் படுத்திருந்தபடி மோட்டு - பட்லு பார்த்துக்கொண்டிருந்தார்கள். முறுக்கைப் பிரித்த மனைவி சிக்கு வாடை அடிப்பதாக என்னையும் முகர்ந்து பார்க்கச் சொன்னாள். எனக்கும் அப்படியான வாசனை அடித்தது. ஆனால், கடிக்கும் போது அப்படியான தன்மை தெரியாததால் சாப்பாட்டுகுக் கடித்துக்கொண்டேன். ஏற்கனவே ஒருமுறை வாங்கிவந்த முறுக்கு வாயில் வைக்க முடியாத அளவுக்குச் சிக்குவாடை அடித்தது. கடைக்காரரிடம் கொடுத்து வேறு பாக்கெட் வாங்கிவந்தேன். எடுத்துச் சென்ற முறுக்கை ஒருவருக்கு இருவர் கடித்துச் சுவைத்துப் பார்த்துதான் கொடுத்தார்கள். இப்போது இரண்டாவது முறை. இதை மாற்றிவர தண்டீஸ்வரம் வரை போக சோம்பேறித்தனம். கோபத்தில் இனி அங்கு வாங்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டோம். 

தம்பி, சாப்பிடும் வரை செய்தி வை. அப்பா கீழ போன பிறகு மீண்டும் பொம்மைப் படம் வைத்துக்கொள் என்றேன். போப்பா என்ன டிவியே பார்க்க விடமாட்டிக்கிறீங்க. எப்பப் பாரு நியூஸ் சேனலையே பார்க்கிறீங்க என்றான். எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அவன் சேனலை மாற்றவில்லை. சாப்பிட்டு முடித்துச் சாவியை எடுத்துக்கொண்டு கீழறைக்குச் சென்றேன். இன்னைக்காவது எங்கள் கூட தூங்கக் கூடாதாப்பா. எப்பப் பார்த்தாலும் கீழயே போய் தூங்கிறீங்க என்றாள் மகள். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து வெளியேறினேன். அப்பா கீழ வந்து உங்கள் கூட செஸ் விளையாடவா, விளையாடி முடித்ததும் என்னை மேல விட்டுடணும் ஓகே வா என்றாள். சரி வாம்மா என்று அழைத்துச் சென்றேன். படியிறங்கும் முன் பையைக் குடுங்க நான் எடுத்து வருகிறேன் என்று பிடிவாதமாக வாங்கிக்கொண்டாள். 

செஸ் விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தில் ஒரு காந்த விசைகொண்ட சதுரங்கப் பலகையை வாங்கினேன். ஒரு நாள் ஊருக்குச் சென்றிருந்த போது அப்பா 500 ரூபாய் கொடுத்தார். நான் வேண்டாம் என்றேன். ``ஊருக்கு வரும்போதெல்லாம் செலவு செய்கிறாய் அப்பா நான் கொடுத்தா வாங்க மாட்டியா'' என்று அப்பா கேட்ட பிறகு மறுக்கமுடியவில்லை. 500 ரூபாயைப் பத்திரமாய்ச் சென்னைக்குக் கொண்டு வந்து அப்பா நினைவாக ஏதாவது ஒன்னு வாங்க வேண்டுமென்று திட்டமிட்டு வாங்கியதுதான் இந்தச் சதுரங்கப் பலகை. 

சில நாள்களாக அம்மாவின் செல்போனை எடுக்காமல் இருந்ததால் காய் நகர்த்தலை மறந்து போயிருந்தாள் மகள். நான் நகர்த்திய பிறகு இப்படி வைக்கணும் என்று சொல்லச் சொல்ல நகர்த்தினாள். ஆட்டம் என் கையில் முடிவதை அறிந்தவள் சற்று ஒடிங்கிப் போயிருந்தாள். அவளின் முகத்தில் தோற்றுவிட்டோம் என்கிற உணர்வு தென்பட்டது. இதற்கு முந்திய நாட்களில் விளையாடிய இரண்டு ஆட்டங்களில் அவளை வெற்றி பெறச் செய்திருந்தேன். தோல்வி நிலையிலிருந்து அவளை மீட்க, செல்போனில் உள்ள செஸ் ஆப்பில் ஒரு ஆட்டம் ஆடுவதென முடிவெடுத்தேன். Beginner, Easy, Medium கட்டங்களை ஜெயித்து வந்த என்னால் Hard Level ஐ கடந்து வரமுடியவில்லை. ஒரெ ஒரு மேட்ச் ஜெயித்தால் Expert Level சென்று விடலாம். ஆனால், மேட்ச் ஆரம்பிக்கும் ஓரிரு நொடிகளில் தோற்றுக்கொண்டே இருந்தேன். அப்பா எப்படித் தோற்கிறேன் என்று பாரும்மா என்று அவளின் முன் விளையாடி மகளை ஜெயித்த நேரத்தின் 4 இல் 1 பங்கில் ஆப்பில் நான் தோற்றேன். எப்பா என்னப்பா இப்படி விளையாடுறாங்க என்கிற சகஜ நிலைக்கு வந்தாள். கீழ் அறையின் வெளிச்சத்தை அணைத்துவிட்டு மேல் அறையில் விட்டு Good Night மா என்றேன். காலையில் நடைப்பயிற்சி செல்ல சீக்கிரமே வந்து என்னை எழுப்பணும், இல்லையென்றால் கீழ வந்து உங்களை உதைப்பேன் என்றபடி தலைகீழாகத் துடைப்பத்தை எடுத்துக் கைப்பிடியை உயர்த்தி ட்யூப் லைட் சுவிட்சைத் தட்டினாள். செல்போன் வெளிச்சத்தில் கீழறைக்கு நடக்கத் தொடங்கினேன். வட்டமாக அறுத்த முள்ளங்கியின் காற்பங்கைப் போல் ஒளிர்ந்துகொண்டிருந்தது நிலா.    

25.02.2022
வெள்ளிக்கிழமை
    

Thursday, February 24, 2022

கிளீன் போல்டு ஆகுமா கிளிஷே?


நேற்று தோழி ஒருவருக்கு `புத்தக் காட்சிக்குச் சென்றீர்களா' என்று செய்தி அனுப்பியிருந்தேன். `இன்னும் இல்லை, நீங்கள் எத்தனை தடவை சென்றீர்கள் பச்சோ' என்றார். `ஒரு தடவைதான், அதுவும் சும்மா. உங்களை மாதிரி அன்பான, அழகான ஒருவர் புத்தகங்கள் வாங்கித் தருவது என்று சொன்னால் மீண்டும் வரலாம் என்று இருக்கிறேன்' என்றேன். சிறிது நேரத்தில் மூன்று சூப்பர் எமோஜிகளை அனுப்பினார். `வெறும் சூப்பர்தானா' என்றேன். வெகுநேரமாக என் செய்தி கிரே நிறத்திலேயே இருந்ததால், அனுப்பாமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. பின்பு அன்பான, அழகான போன்ற சொற்கள் ரொம்ப கிளிஷேவானவை அவற்றை நீக்கியிருக்கலாமோ, நீக்கிவிட்டால் உப்புச் சப்பற்ற சொற்றொடராக இருந்திருக்கும் அல்லவா. தோழிகளிடம் புத்தகம் வாங்கித் தரச் சொல்வதே கிளிஷேதான். இப்படியாக ஏதேதோ எண்ணிக்கொண்டிருந்தேன். 

பொதுவாகப் பெண்களிடம் அதிகம் பழகும் ஆளில்லை ; குறைவாகவும் கூட. ஆனால், பெண்ணுறவுக்காக ஏங்கும் ஆண்களில் நானும் ஒருவன் என்பதில் எந்தக் கூச்சமுமில்லை. அன்பு, அழகு, ஏக்கம், கூச்சம், பிறப்பு, இறப்பு அனைத்துமே ஒரு கிளிஷேதானே. `சமூக வலைத்தளங்களில் இப்பெருநகரத்தில் எத்தனை பெண்கள் உண்டு, ஏன் நமக்கென்று ஒரு தோழி இல்லை' என்று எத்தனை முறை என்னை நானே கேள்வி எழுப்பியிருக்கிறேன். நான் ஒன்றும் விலங்குகள் வாழும் வனத்தில் இல்லை ; விண்மீன்கள் கொட்டிக்கிடக்கும் வானில் இல்லை ; ஓயாது ஒலிக்கும் அலை மடிப்புக்குள் இல்லை ; வேர்களைப் போல் நிலத்துக்குள்ளும் இல்லை. பிறகேன் இக்கொடிய தனிமை. கோடி மக்களில் நானும் ஒருவனாகத்தான் இருக்கிறேன். ஏன் ஒருவருக்கும் என்னைப் பிடிக்கவில்லை என்று தோன்றும். அப்போதெல்லாம் `உன்னைத் தேடி எத்தனை பெண்கள் வந்திருக்கிறார்கள். நீதான் வறட்டுக் கௌரவத்துடன், பயத்துடன் அவர்களைக் கண்டு விலகி ஓடியிருக்கிறாய். கொஞ்சம் நிதானமாக இரு; எதற்கும் அவசரப்படாதே ; சக மனிதருக்காக நேரம் ஒதுக்கு ; அவர்களிடம் உரையாடு. உனக்குள் உன்னைப் பூட்டிவைத்திருக்கிறாய். முதலில் உன்னைத் திற' என்று உள்ளுணர்வு பின்மண்டையில் அடிக்கும். 

நேற்று பதில் அனுப்பாத தோழி இன்று காலை சிரிப்பு எமோஜியுடன் Good Morning அனுப்பியுள்ளார். Very Good Morning உடன் கிட்டாரையும் சாக்லேட்டையும் அனுப்பியுள்ளேன். இதுவும் ஒரு கிளிஷேதான். கிளிஷேவை கிளீன் போல்டு ஆக்கமுடியாதல்லவா?!

 25.02.2022, 

வெள்ளிக்கிழமை

மகளின் பரிசு


அதிகாலை 5.45 அளவில் துணிகளை அள்ளிக்கொண்டு மாடிக்கு வந்தேன். உரித்துவைத்த வெள்ளைப் பூண்டாய் ஒளிர்ந்தது நிலா. இறைந்து கிடக்கும் கற்கண்டாய் விண்மீன்கள். வெளிச்சத்தைச் சொடுக்கிச் சோப்பைத் தேடினேன். சப்பையான சிறிய துண்டு மட்டுமே எஞ்சியிருந்தது. போர்வை, பேன்ட், சட்டை, கைக்குட்டை, மனைவி மற்றும் பிள்ளைகள் துணி இவை அனைத்துக்கும் குட்டியூண்டு சோப்புக் கட்டிப் போதாதுதான். சரி, கரையும் வரை துவைக்கலாம் என்று மென்மையான துணிகளை மட்டும் தெரிவு செய்தேன். முழுவதும் கரையும் நேரத்தில் இருட்டின் கதவைத் திறந்தாள்  மனைவி. வேறு சோப்பு இருக்கிறதா என்றேன். இல்லை என்றாள். காசு இருந்தால் கொடு வாங்கி வருகிறேன் என்றேன். இரண்டு பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து இதுதான் இருக்கிறது என்றாள். பால் வேற வாங்க வேண்டுமே என மனதினில் நினைத்துக்கொண்டு நாட்டார் கடைக்குச் சென்றேன். 

நாட்டார் கடைக்குச் சென்று மாதக் கணக்காகிவிட்டது. கடையில் வேலை செய்யும் தம்பி கிரிக்கெட் விளையாட வருபவன். எங்கு பார்த்தலும் அண்ணே அண்ணே என்று அம்பொழுகப் பேசுவான். மளிகைக் கடை வைத்திருக்கும் இஸ்லாமியக் குடும்பம் நாங்கள் குடியிருக்கும் வீட்டின் கீழ்த்தளத்திற்குக் குடிவந்தபிறகு நாட்டார் கடைக்குச் செல்வதில்லை. கொரோனா காலத்தில் வீடு தேடிவந்து காய்கறி, பால், முட்டை என எங்கள் வீட்டுக்கு மட்டுமல்லாது அருகில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொடுப்பார்கள். வியாபாரம் நிமித்தம்தான் என்றாலும் ஊரடங்குக் காலத்தில் துணிச்சலாக ஒவ்வொரு வீடாகச் சென்றது மெய்சிலிர்க்க வைத்தது. அதன்பின் தினந்தோறும் காய்கறி எல்லாம் புஸ்ரா கடையில் வாங்க ஆரம்பித்துவிட்டோம். 

ஒரு நாள் நாட்டார் கடைக்குக் காய் வாங்கச் சென்றிருந்தேன். காய்கறியின் விலையில் தங்கச் செயினே வாங்கிவிடலாம் என்றிருந்தது. ஏன் தம்பி இவ்வளவு விலை என்றேன். காய்கறி விலையெல்லாம் ஏறிப் போயிடுச்சு, நீங்க காய்கறியே வாங்குறது இல்லையா என்று எகத்தாளமாய்க் கேட்டேன். அதற்கு அடுத்து இன்றுதான் அங்கு செல்கிறேன். தம்பி, இன்னொரு வாடிக்கையாளரைக் கவனித்துக்கொண்டிருந்தான். தம்பி 10 ரூபாய் பவர் சோப்பு ஒன்னு கொடு என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டேன். அவன் என்னைப் பார்க்கக்கூட இல்லை. கிழக்குப் பக்கம் நின்றிருந்த நாட்டாரிடம் 10 ரூபாய் பவர் சோப்பு ஒன்னு வேணும் என்றேன். தம்பியைக் கைகாட்டியவரிடம் 10 ரூபாய் பால் பாக்கெட் இருக்கிறதா என்றதும் கணத்தில் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு உடனே எடுத்துக்கொடுத்து சோப்பையும் கொடுத்தார். புன்னைகையுடன் இரண்டு பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு வீடு வந்தேன். 

துணிதுவைத்துக்கொண்டிருக்கையில் நடைப்பயிற்சிக்குச் சென்று வந்த இந்து, 2 கிலோ சத்துமாவை என் மனைவியிடம் கொடுத்துவிட்டுப் பேசிக்கொண்டிருந்தார். ``இது ஒரிஜினல் தேங்காய் எண்ணெய் இல்லை. கலப்படம்தான் இவ்வாறு வாசனை அடிக்கும்'' என்கிற என் மனைவியின் சொற்கள் காதில் விழுந்தன. சில விசயங்களில் என்னைவிடக் கூருணர்வு உள்ளவள். என்னைக் கட்டிக்கொண்டு துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, சமையல் செய்வதே கதியென்றாகிவிட்டாள். இரண்டு முறை படிக்கவைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. மூன்றாம் சுற்றில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2021 ஆகஸ்ட் மாதம் B.Lit சேர்ந்திருக்கிறாள். அவள் கம்மலை அடகுவைத்த பணத்தில்தான் நடந்தது. மீதிப் பணம் அன்றைய மாதக் கடைசிக்கு உதவியது. ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் வட்டிகூட கட்டாமல் இருக்கிறோம் என்று அடிக்கடி சொல்வாள். இதற்கு முன் இரண்டு ஜெயினை அடகுவைத்து மீட்கமுடியாமல் மூழ்கிப் போயின. இதுவும் அவ்வாறு ஆகிவிடுமோ என்று அடிமனதில் அவளுக்குப் பயமுண்டு. கவலைப்படாதே விரைவில் நல்ல முன்னேற்றம் வரும், கண்டிப்பாக மீட்டிவிடுவோம் என்று சொல்லியிருக்கிறேன். துணிதுவைத்து முடிந்ததும் தண்ணீரூற்றித் துடைப்பத்தால் கூட்டிக்கொண்டிருந்தேன். இங்க கொடுங்கப்பா நான் கூட்டுகிறேன் என்றாள் மகள். துடைப்பத்தை எடுப்பதும் துணி துவைப்பதும் பெண்களின் வேலை மட்டுமல்ல என்று மறுத்துவிட்டேன்.

அப்பா என் தோழிக்கு இன்று பிறந்தநாள் ஏதாவது வாங்கிக் கொடுங்கள் என்றாள். என்னிடம் பணம் இல்லை. உண்டியலில் இருந்து எடுத்து வாங்கிக்கலாம் என்றேன். Gpay யில் 100 இருப்பது பிறகுதான் நினைவுக்கு வந்தது. இன்று காலை அம்மாதான் என்னைப் பள்ளியில் விடவேண்டும் என்றான் மகன். அப்பாதான் பள்ளியில் விடவேண்டும் என்றாள் மகள். அலுவலகம் கிளம்பும் போது இருவரையும் அழைத்தேன் மகள் மட்டும் உடன் வந்தாள். வழியில் நேற்று 8 ரூபாய்க்கு ரப்பர் வாங்கிய கடைக்குப் போகலாம் என்றாள். கடைக்குச் சென்றதும் முதலில் Gpay இருக்கிறதா என்று கேட்டேன். இருக்கிறது என்றதும் ஒரு பேனாவும் ரப்பரும் வாங்கினாள். எவ்வளவு என்றேன், 24 ரூபாய் என்றார். பணம் அனுப்புவதற்குள் தன் தோழிக்குக் கொடுக்கப் போகும் ஆர்வத்தில் இரண்டையும் கையில் எடுத்துக்கொண்டாள். அந்நேரம் பார்த்து Gpay வேலை செய்யவில்லை. இரண்டு மூன்று முறை முயற்சி செய்தும் பலனில்லை. பையைக் கடையின் ஓரம் வைத்துவிட்டு வீட்டில் சென்று உண்டில் காசை எடுத்து வரலாம் என்று முடிவெடுத்து ``அண்ணே, பை இங்க இருக்கட்டும் வீடுவரை சென்று வருகிறேன்'' என்றேன். நிலமை புரிந்துகொண்ட கடைக்காரர் ``ஒன்னும் பிரச்சினையில்லை பாப்பாவைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வந்து கொடுங்கண்ணே'' என்றார். ஏனோ சட்டென்று நினைவுக்கு வந்தது `அன்பின் வழியது உயர்நிலை'.  

24.02.2022
வியாழக்கிழமை

Wednesday, February 23, 2022

முக்தருன்னிஷா பேகம் தெரு

 

கடந்த திங்கட்கிழமை காலையில் அலுவலகத்தின் டைனில் ஹாலில் அமர்ந்திருந்தேன். சந்தைக்குச் சென்று வரலாமா என்று தம்பி அகத்தியன் கேட்டான். யோசிக்காமல் சட்டென்று போலாம் என்றேன். சந்தையென்றாலே ஆதாம் மார்க்கெட்தான். நல்லதம்பி தெருவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்பினோம். எப்போதும் போக்குவரத்து நெருக்கடி கொண்ட எல்லீஸ் சாலையைக் கடந்து முக்தருன்னிஷா பேகம் தெருவுக்குள் நுழைந்தோம்.  முக்தருன்னிஷா பேகம் தெரு இருபக்கமும் உயரமான கட்டடங்கள் உள்ள பகுதி. நீளமான வாய்க்கால் போன்ற வானத்தைக்கொண்டிருக்கும். ஒரு குடியிருப்பின் சுவர் மற்றொன்றின் மீது உரசியபடி இருக்கும். சில சுவருக்குள் சூரிய ஒளி புகமுடியாதபடி இருட்டாக இருக்கும். எனவே, சுவர் ஒட்டி இருக்கிறதா அல்லது விலகி இருக்கிறதா எனக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். இந்தத் தெருவின் மேற்கு முனை எல்லீஸ் சாலையையும் கிழக்கு முனை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையையும் தொட்டிருக்கும். காய்கறிக் கடையில் இருந்து காய்லாங் கடை, சலூன் கடை, போட்டோ ஃப்ரேம், கறிக் கடை, மருந்துக்கடை எனப் பல வகையான கடைகள் கொண்டிருக்கும் தெரு. உள்ளாட்சித் தேர்தல் நேரம் என்பதால் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட இஸ்லாமியக் கொடிகள் எங்கு பார்த்தாலும் கட்டப்பட்டிருந்தன. ``ஜெயலலிதா அம்மாவோடு அதிமுக காணாமல் போயிடுச்சுப்பா. இப்ப இருக்கிறவங்க எல்லா ஒன்னுக்கும் லாயக்கில்லை'' என்கிற சொற்கள் வண்டியைத் தொடர்ந்துவந்தன. ஆதாம் சந்தைக்கும் முன்பே ஒரு பெயர்ப் பலகையற்ற மளிகைக் கடையில் வண்டியை ஓங்கட்டினோம். அலுவலகத்திற்குத் தேவையான காய்கறிகள் பெரும்பாலும் இங்குதான் வாங்கி வரப்படும். சாலையோரம் நெல்லிக்காய்,  வெள்ளரிக்காய் எலுமிச்சைகளை விற்றுக்கொண்டிருந்தவளின் கூடையில் திமுக வாக்குச் சேகரிக்கும் துண்டறிக்கை கிடந்தது. அருகே  மரப்பலகையில் கோணியை விரித்து அதன் மீது பனங்கிழங்கு விற்றுக்கொண்டிருந்தார் முதியவர். செங்கல் மீது அமர்ந்திருந்த இருவரின் தொடை மீது முகக் கவசம் இருந்தது.

 `நீலம்' இலச்சினையுள்ள இரண்டு சந்தன நிறத் துணிப் பைகளை எடுத்துவந்திருந்தான் அகத்தியன். அதில் ஒன்றைக் கடைக்காரர் தனக்கு வேண்டுமென வாங்கிக் கொண்டார். இங்கு இஸ்லாமியப் பிச்சைக்காரர்கள் தெருவின் ஓரம் அங்குமிங்குமாய் அமர்ந்திருப்பர். `சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேண்டுமா, கண்ணாமூச்சி ஆட்டம் உனக்குச் சொல்லித் தரட்டுமா' என்கிற பாடலைப் பாடியபடி ஒரு பெண் நடந்து சென்றார். இரைச்சல் மிகுந்த அச்சாலையிலும்  கணீரென்று ஒலித்தது அக்குரல். அக்குரலைப் பின்தொடர்ந்தேன். `கோழி மிதிச்சு குஞ்சு முடம் ஆகிவிடாது, உனக்கு கொய்யாப்பழம் பறிச்சுத் தரேன் அழுகக் கூடாது' என்னும் வரியைப் பாடிக்கொண்டிருந்த போது எதிரில் ஸ்கூட்டியில் வந்த இஸ்லாமியப் பெண் இவரிடம் அரபு மொழியில் ஏதோவொன்று கேட்க போகிற போக்கில் பதில் சொல்லி `சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா ……………' என்று மீண்டும் ஒலித்தாள். அப்போது முக்தருன்னிஷா பேகம் தெருவின் எல்லை முடிந்திருந்தது. நான் தெரு முனையில் நின்று தூரத்தில் ஒலித்தபடி செல்லும் குரலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்பாடல் 1956 இல் T.R.ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த வண்ணக்கிளி திரைப்படத்தில் இடம்பெற்றது. மருதகாசியின் மயக்கும் வரிகளைக் கே.வி.மகாதேவன் இசையில் சுசிலா பாடியிருப்பார். எனக்குச் சுசிலாவின் மென்குரலைவிட இப்பெண்ணின் கம்பீரம், கணீர்த்தன்மை மிகவும் பிடித்திருந்தது. இனி இப்பாடலை எங்கு கேட்டாலும் இரைச்சலுற்ற தெருவில் ஒலித்த கம்பீரம் நினைவுக்கு வரும்.

இமைதாண்டாக் கண்ணீர்

 


இரண்டாவது மாடியின் சின்ன அறையில் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தாள் மனைவி. அம்மா கொடுத்தனுப்பிய தேங்காய், புளியைப் பழுதுற்ற தொலைக்காட்சியின் ஓரம் சாய்வாக வைத்துவிட்டு வழக்கம் போல் உடைமாற்றி முகம் கழுவி வர கீழ் அறைக்குச் சென்றேன். மகனிடம் `அப்பாகூடச் சென்று எடுத்து வா' என்றாள் மனைவி. `நீ கீழ வராதே' என்று சொல்லியும் பின்னாடியே வந்துவிட்டான். `எதற்காக வந்தாய்?' `பபுள்கம் எடுக்க'. `நீ உள்ளே வராத போ' என்றேன். அன்று காலையில் நடந்த சம்பவம்தான் அவன்மீது இவ்வளவு கோபம்கொள்ளக் காரணம்.

கடந்த ஒரு வாரமாக நல்லமுறையில் பள்ளி சென்று வந்தவன். காலையில் பள்ளிசெல்ல மறுத்து மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டான். மென்னழுகையோடே உடன் வந்தவனிடம் என்னாச்சு என்று கேட்டேன், பதிலில்லை. புஸ்ரா மளிகைக் கடையில் மகளுக்குப் பால்கோவாவும் மகனுக்கு மைசூர் பாகும் வாங்கிக் கொடுத்தேன். காகிதத்தில் மடிக்கப்பட்ட மைசூர் பாகுவை உள்ளங்கையோடு இறுகப் பிடித்தபடி வந்தான். சரி எப்படியும் வகுப்பறைக்குச் சென்று விடுவான் என்கிற தைரியத்தில் அழைத்துச் சென்று விட்டேன். வழக்கமான இடத்தில் எப்போதும் கேட்கும் கேள்வியை மகள் கேட்டாள் ``அப்பா நம்ம எப்பப்பா கார் வாங்குவோம்''. ``எப்படிம்மா குறிப்பா இந்த இடத்தில் வந்ததும் இந்தக் கேள்வியைக் கேட்குற'' என்றதும் ``இல்லை இந்த வீட்டில் நிறுத்தியிருக்கும் கார் ரொம்பப் பிடித்திருக்கிறது'' என்றாள். ``சரி சரி... கார் எல்லாம் வாங்க முடியாது. டூ வீலர் வேண்டுமானால் வாங்கலாம்'' என்றேன். ``எப்பப்பா'' என்றாள். ``இதைவிட நல்ல சம்பளத்திற்கு வேலைக்குப் போகும் போது கண்டிப்பாக வாங்கலாம்'' என்றேன். ``சரி இந்தப் பள்ளிக்கூடம் பிடித்திருக்கிறதா'' என்றேன். ``பிடிக்கவில்லையென்றால் என்னப்பா செய்வீங்க'' என்றாள். உடனடியான மகளின் இந்தப் பதிலுரைக்கும் கேள்விக்குத் திக்கித்திணறிப் போனேன். ``இதற்கு முன் நீ குருநானக் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாய். அப்போது அப்பா நல்ல சம்பளத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். கொரோனா வந்தபோது அந்த நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு எடுத்துட்டாங்க. கிட்டத்தட்ட ஐந்தாறு மாதங்கள் வேலையின்றி இருந்தேன். பிறகு வேலைக்குச் சேர்ந்த இடத்தில் முன்போன்ற சம்பளம் இல்லம்மா. இதைவிட நல்ல வேலைக்குப் போகும் போது உன்னையும் இதைவிட நல்ல பள்ளியில் சேர்த்துவிடுறேம்மா'' என்றேன். ``சரி சரி'' என்று சொன்னாள். 

பள்ளி இருக்கும் தெருமுனையை அடைந்தோம். மெல்லிய குரலில் அழுதவன் திடீரென்று ``கக்கா வருது'' என்றான். ``ஏன்டா காலையில் போகவில்லையா'' என்றால் ``இல்லை'' என்றான். அன்று நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றதால் அதில் எனக்கும் குழப்பம்தான். சரி பள்ளிக்கூடம் சென்றதும் போயிக்கலாம் என்றேன். ``அங்கே விடமாட்டாங்க'' என்று மகள் சொன்னதும் நடுப்பாதையில் என்னசெய்வதென்று அறியாமல், சரி முதலில் பள்ளிக்கூடம் போனதும் முடிவெடுத்துக்கலாம் என்று மகளைப் பள்ளியினுள்  அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போய் கக்கா போகவைக்கலாம் என்று நினைத்தேன். வீட்டுக்குப் போகும் போது இரண்டு மடங்கு வேகமாக நடந்தான். ``தம்பி, ஏன் பள்ளிக்கூடம் போக விருப்பமில்லாமல் இருக்கிறாய் ; எதுக்கெடுத்தாலும் ஏன் அழுகிறாய். நல்ல படிக்கணும் தைரியமா இருக்கணும். எப்பப் பார்த்தாலும் அழுதாய் என்றால் கோழைப் பையன் என்று கிண்டல் செய்வார்கள். மற்ற நேரமெல்லாம் எவ்வளவு தைரியமாய் இருக்கிறாய் ; கம்பீரமாய்ப் பேசுறாய், எல்லா வேலையும் செய்கிறாய். ஆனால், பள்ளிக்கூடம் என்றால் மட்டும் நடுங்கிச் சாகிறாய். இப்படியெல்லாம் இனிமே இருக்காமல் உன்னை மாற்றிக்கொள்'' என்றேன். ``ம்ம்ம்'' என்றான். பிள்ளையார் கோயில் தெரு குறுக்குச் சந்தின் அருகே சென்றதும் ``இங்கிருந்து நீ மட்டும் போ. வீட்டுக்குத் திரும்பும் போது கையசை'' என்றேன். சுமார் 200 மீட்டர் இடைவெளியில் இருந்து திரும்பி மட்டும் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டான். மதியப் பொழுதில் மனைவியை அழைத்துப் பேசும் போது, ``கக்கா போகணும் என்று சொல்லவும் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன்'' என்றேன். அப்படியா எங்கிட்ட வந்து ``நான் அழவும் அப்பா என்னைக் கூட்டிட்டு வந்துட்டாருன்னு சொன்னான்'' என்றாள்.

தம்பி இப்படியெல்லாம் பொய் பேசினால், அப்பா உன்கூடப் பேசமாட்டேன் என்றதும் சற்றென அவன் கண்களில் இமைதாண்டாது தேங்கி நின்றது கண்ணீர். எனக்கும் கஷ்டமாகிவிட்டது. `ஒன்பதாம் வகுப்பு விடுதியில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் பெட்டி படுக்கையோடு வந்தவன் தானே நீ. அதன் பின் மெட்ராஸுக்குப் போய் படித்தாயல்லவா. உன் பையன் படிக்க மாட்டானா. லூஸுல விடு' என்றது உள்ளுணர்வு. மாற்றம் ஒன்றுதானே மகத்தானது. காத்திருப்போம்...

23.02.2022
புதன்கிழமை

Tuesday, February 22, 2022

கிழிசலின் கிளை

மாற்றி மாற்றி அணிந்துவந்த இரண்டு நீல நிறப் பேன்ட்டின் அடிப்பகுதி கிழிந்துவிட்டது. சிறிது கிழிந்த நிலையில் மீண்டும் மீண்டும் உடுத்தினேன். விளைவு, கிழிசல் விரிந்து விரிந்து இன்னோர் கிளைவிட்டது. அழுக்குப் படிந்த இரண்டும் கீழறை ஹேங்கரில் தொங்குகின்றன. வேறு ஏதாவது பேன்ட் போடலாம் என்று மேலறை பீரோவைத் துலாவினேன். ``கலைக்காமல் எடுங்க'' என்று ஆணையிட்டாள் மனைவி. இப்படியான அவளின் சொற்களில் ஏனோ சில நேரம் பாதியில் தேடலை முடித்துக்கொள்வேன். இன்றும் அதே போன்று கட்டைளையிட்டாலும் இடைநிறுத்தமின்றித் தேடலைத் தொடர்ந்தேன். ஒரு கறுப்பு நிற ஜீன்ஸ் கிடைத்தது. என்னிடம் இருப்பதிலேயே மிகவும் கடினத்தன்மை மட்டுமல்ல ; விலையுயர்ந்ததும்கூட. வழக்கமாக 650 ரூபாயில் பேன்ட்டைத் தெரிவுசெய்துவிடுவேன். ஆனால், இதன் விலை 1,500 ரூபாய். மிக நீ.............ண்ட காலம் உழைத்ததும் இதுதான். கிட்டத்தட்ட ஒன்பது  ஆண்டுகள். அதாவது திருமணத்திற்கு முன்பு வாங்கியது. முதலை வாயளவு பிளந்து கிடப்பதும் இதன் அடிப்பகுதி மட்டும்தான். இதைத் தைய்க்க கோணூசிதான் வாங்க வேண்டும்.

தொடர்ந்த தேடுதலில் வெளிறிய sky blue நிறத்தில் ஒரு பேன்ட்டை எடுத்தேன். கிழிசலற்ற இருந்தாலும் கறைபடிந்திருந்தது. என்ன பட்டது என்று தெரியவில்லை. இதை இன்று உடுத்தப் போகிறேன் என்று மனைவியிடம் சொன்னேன். அதற்கு மேட்சாகச் சட்டையும் எடுத்துவைத்தேன். மேலும் தீவிரத் தேடுதலில் தைய்க்க முடியும் என்ற அளவில் இருந்த இரண்டு பேன்ட்களை எடுத்து, மனைவியிடம் ஊசி நூல் கேட்டேன். வெண்ணிற அட்டையில் குத்தப்பட்டிருந்த ஊசியின் ஒரு முனை துருப்பிடித்திருந்தது. கீழிருக்கும் கறுப்பு டப்பாவில் நூல் இருக்கிறது எடுத்துக் கொடுடா என்று மகனிடம் கூறினாள். அவன் `கீழ்' என்கிற சொல்லைக் கவனியாது மேல் அலமாரியில் தேடினான். நானந்தக் கறுப்பின் உற்புறத்தைக் கலைத்துப் பார்த்தேன், இல்லை. சமையல் வேலையில் பரபரப்பாக இருந்தவள், அப்புறமா தேடித் தைய்த்து வைக்கிறேன் என்றாள். மீண்டும் பீரோவைத் துலாவ ஆரம்பித்தேன். கிழியலற்ற, கறையற்ற பேன்ட் ஒன்று கிடைத்தது. 

எப்போதும் இருக்கும் இடத்தில் ஜட்டி இல்லாததால் ஜட்டி எங்கே என்று கேட்டேன். நீங்கள் மேலே எடுத்துவந்திருந்தால் துவைத்திருப்பேன். கீழதான் இருக்கும் என்றாள். கீழ இருக்க வாய்ப்பு இல்லை. இங்கதான் இருக்கும் என்றேன். கீழ் குளியறையில் வேறு யாரோ குளித்துக்கொண்டிக்கும் நீரோசை. வீட்டு உரிமையாளரின் இளைய மகனாகத்தான் இருக்கும். பின், அறையுனுள் சென்று,புத்தகங்களை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தேன். `கீழதான் ஜட்டி இருக்கும்' மனைவியின் சொற்கள் நினைவுக்கு வர, ஹேங்கரில் தொங்கும் இரண்டு பேன்ட்டின் உட்பகுதியைத் தேடினேன், இல்லை. பிறகு, உடைந்த மர நாற்காலி மீதும் அதன் அடியிலும் தேடி, மேலெழும் போது செய்தித்தாள்களின் மீது கோடு போட்ட வெள்ளைச் சட்டை இருந்தது. இது இரண்டு நாட்களுக்கு முன் போட்டதே, ஒருவேளை இதில் இருக்குமோ என்கிற யூகம் மெய்யானது. 

இரண்டு ஜட்டிகளையும் ஒரு பூப்போட்ட சட்டையை மட்டும் துவைக்கக் கொடுத்தேன். இன்னும் துவைக்க வேண்டிய நாலைந்து துணிகள் மனைவிக்குத் தெரியாமல் கீழறையில் இருக்கின்றன. அவற்றை நாளை எழுந்ததும் நான் துவைக்க முடிவெடுத்திருக்கிறேன். இவை இரண்டு போக மாற்றாக இரண்டு பழைய ஜட்டிகள் என்னிடம் உண்டு. ஒன்று இறுக்கமான சிவப்பு ஜட்டி ; மற்றொன்று கொஞ்சம் லூஸான சாம்பல் நிற ஜட்டி. மனைவி ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில் துவைக்கச் சோம்பேறித்தனப்படும் ஒரு சில நாட்கள் கிழிந்த ஜட்டியையும் போட்டிருக்கிறேன்.  ஒருமுறை கிழிந்ததைப் போடுறீங்களே, எவ்வளவோ செலவு செய்றீங்க ரெண்டு புது ஜட்டி வாங்கக் கூடாதா என்றாள். வாங்கலாம் வாங்கலாம் என்று காலம் கடத்தினேன். கடந்த வாரம்கூட ஒரு நாள் அந்தக் கிழிந்த ஜட்டியை அணிந்திருந்தேன். அடுத்த நாள் இனி இதை மீண்டும் துவைக்க வேண்டாம் என்று குப்பை சேகரிக்கும் பாலித்தீன் கவரில் திணித்துவிட்டேன். ஒரு நாள் அங்காடிக்குச் சென்று வந்த மனைவி எனக்குப் புதிதாக இரண்டு ஜட்டிகள் வாங்கி வந்திருந்தாள். அவளை அடிக்கடி `அழுக்கு நைட்டி',  `அழுக்கு நைட்டி' என்று கிண்டல் செய்யும் என் ஆண் மனம் சற்றே வெட்கித் தலைகுனிந்தது. அவள் நினைத்திருந்தால் `ஏய் கிழிந்த ஜட்டி' என்று சில முறை என்னைக் கிண்டல் செய்திருக்கலாம். ஆனால், ஒருபோதும் அவள் அப்படி அழைத்ததில்லை. சரி அதென்ன அழுக்கு நைட்டி என்று கேட்கிறீர்களா பிறிதொரு சமயம் எழுதுகிறேன் டியர்ஸ்.

23.02.2022,

புதன்கிழமை


சொற்களுக்குள் தள்ளப்பட்டவன்

வாரத்திற்கு மூன்று நாட்கள்தான் மகனுக்குப் பள்ளிக்கூடம். பள்ளியன்று மட்டும் `நான் நாளைக்குப் பள்ளிக்கூடம் போகிறேன்' என்று புலம்ப ஆரம்பித்து ஒப்பாரி வைப்பான். ஊரிலிருந்து வந்த முதல் நாள் அதற்குச் சம்மதம் தெரிவித்தோம். பிறகு ஒவ்வொரு நாளும் இப்படிச் சொல்ல ஆரம்பித்துவிட்டான். இப்போதெல்லாம் பள்ளிக்கூடம் என்றாலே பயந்து சாகிறான். அலுவலகம் கிளம்பும் போது மகளையும் மகனையும் பள்ளிக்கூடத்தில் விட்டுவிடச் சொன்னாள் மனைவி. வரமறுத்த மகனின் கன்னத்தைப் பளீரென அறைந்தாள். கதறியழுதபடி, படியிறங்கிக்கொண்டிருந்த என்னை அப்பாவெனக் கட்டிப் பிடித்தான். கணத்தில் தடுமாறி இருவரும் படியில் உருளத் தெரிந்தோம். ``எப்பப் பார்த்தாலும் ஏன்டா அழுதுகிட்டே இருக்கிற. அக்கா இருக்கேல்ல. லன்ச் டைம்ல வந்து உன்னைப் பார்க்கிறேன் அழாம இரு'' என்றாள். வழியெங்கும் கண்ணீரின் ஈரம். என்னால் கன்னத்தின் ஈரத்தை மட்டுமே துடைக்க முடிந்தது. பஜனை கோயில் தெருவில் இருந்த புஸ்ரா மளிகைக் கடையில் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுக்கவா என்றேன். வேண்டாம் என்றான். வகுப்பில் மிஸ் அடிக்கிறாங்களா. ம்ஹூம். பசங்க யாரும் கிண்டல் செய்கிறாங்களா. ம்ஹூம். அப்புறம் ஏன் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கலை என்றால் ஆழ்ந்த அமைதிதான் பதில். ஒரு வழியாகப் பள்ளியின் வாசலை அடைந்தோம். தன் சாப்பாட்டுக்கூடையை வாங்கிக்கொண்டு வலது பக்கமிருக்கும் வகுப்பறைக்குச் சென்றாள் மகள். பின் இருவரும் மகனின் வகுப்பறை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். வறண்டாவைத் தொடும் போதே அப்பா நான் வரலை என்றான். கையைப் பிடித்து அழைத்துச் சென்று வகுப்புக்கு வெளிச் சுவரோரம் பையை வைக்க அவன் கையை விட்டேன். என்னை உதறி எறிந்து `நான் வீட்டுக்குப் போறேன்' என்று விறுவிறுவென வறண்டாவிலிருந்து ஓடினான். விரட்டிப் பிடித்தேன். ஏன் இன்னும் வகுப்பறை திறக்கவில்லை என்று பக்கத்தில் இருந்த மாணவர்களை விசாரித்தேன். மாற்றலாகிய வகுப்பறையின் திசையைக் காட்டினார்கள். மகளின் வகுப்பறைக்குக் கீழ்த்தளத்தில் இருந்தது மகனின் வகுப்பறை. மாணவர்கள் நிறைந்த வகுப்பில் கரும்பலகையின் அருகே மணிமேகலை டீச்சர் நின்றுகொண்டிருந்தார். வணக்கம் வைத்து உள்நுழையும் போது `அப்பா என்னை அக்காகிட்ட விட்டுடுங்க' என்று படியேறி ஓடினான். நீ அக்காவின் வகுப்பறை செல்ல இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும். இந்த வகுப்பில் படித்தால்தான் அங்கு போக முடியும், கீழே இறங்கி வா என்றேன். பாதிப் படிகளைத் தாண்டிவந்தவனை இறுகப் பிடித்தேன். மீகாமன் `கம் இன் சைட்' ஏன் இப்படி அடம்பிடிக்கிற என்றார் மணிமேகலை டீச்சர். ``அப்பா உன் காலைப் பிடித்துக் கெஞ்சிக் கேக்கிறேன். என்னை வீட்டில் விட்டுடுங்கப்பா'' என்று முட்டிக்காலை இறுகப் பிடித்துக்கொண்டான். அதுவரை பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகளை விடவந்த பெற்றோர்கள் குபுக்கெனச் சிரித்துவிட்டார்கள். அவன் கைகளிலிருந்து முட்டிக்காலை மீட்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது. `நல்லா படிச்சிட்டு இருந்த பையன். ஏன் திடீரென்று இப்படி அடம் பிடிக்கிற' என்ற மணிமேகலை டீச்சர் `கம் இன்சைட்', `கம் இன்சைட்' என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அந்தச் சொற்களுக்குள் அவனைத் தள்ளிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டேன்.


22.02.2022
செவ்வாய்


Monday, February 21, 2022

I am proud of you அப்பா

இரண்டு நாளுக்கு முன்பு மகாபலிபுரம் போகலாம் என்று திட்டமிட்டிருந்த போது கையில் இரண்டாயிரம் இருந்தது. இன்று 600 ரூபாயாய்ச் சுருங்கிப் போனது. பணம் கட்டாததால் துண்டித்துப் போன கேபிள் கனெக்‌ஷன் எங்களின் பயணத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. ``வீட்டுக்குள்ளேயே இருப்பது ஜெயில் இருப்பது போல் இருக்கிறது. எங்கையாவது வெளியில் கூட்டிட்டுப் போங்கப்பா'' என்று பிள்ளைகள் கேட்டபிறகுதான் இந்தப் பயணம் முடிவானது. கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளுக்கு 10X10 அறை சிறையாகத்தான் இருக்கும். ஒருபக்கம் கேபிளுக்குப் பணம் கட்டச் சொல்லிக்கொண்டிருந்தாள் மனைவி. மறு பக்கம் எப்பப்பா மகாபலிபுரம் போவோம் எனப் பிள்ளைகள் ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு கட்டத்தில் சும்மா அமைதியா இருக்கமாட்டீங்களா எனக் கடுகடுக்க இனிமே கீழயே வரமாட்டேன் என்றாள் மகள்(எலியிடமிருந்து புத்தகங்களைக் காக்க கீழ் ஒரு அறை எடுத்துள்ளேன்). உன்னை யார் வரச் சொன்னது என்று மேலும் வெறுப்பைக் காட்டினேன். சற்றுநேரம் கழித்துக்குக் கதவைத் திறந்தால் படியில்  உட்காந்திருந்தாள். கேபிளுக்குப் பணம் கட்டவேண்டுமெனச் சொல்ல அப்படியென்றால் இன்றைக்கும் வெளியில் போகமாட்டோமா, போங்க நல்லா ஏமாத்துறீங்க எனச் சொல்லிவிட்டு மேலே சென்றுவிட்டாள். செய்வதறியாமல் நண்பனைத் தொடர்புகொண்டு கடற்கரைக்குக் கூட்டிப் போகச் சொல்லிக் காலையிலிருந்து பிள்ளைகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் கையில் முந்நூறு ரூபாய்தான் இருக்கிறது என்றேன். கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன், சிறிது நேரத்தில் அழைக்கிறேன் என்றான். 


முதல்முறை மீன் எடுத்துச் சமைத்திருந்தாள் மனைவி. மகன் அசைவப் பிரியன். அப்பப்போ மீன், கறி எடுத்துச் சமைக்க வேண்டும். பாவம் பிள்ளைகள் ஏங்கிப் போகும் எனச் சமீப காலமாகச் சொல்லிவந்தாள். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, நண்பர் நவீனிடமிருந்து அழைப்பு. பீனிக்‌ஸ் மாலில் 10:40 க்கு `Uncharted' என்கிற adventure movie. மூன்று டிக்கட் இருக்கிறது வருகிறீர்களா என்றார். அப்போது 10:20 ஆகியிருந்தது. படத்துக்குப் போறேன் என்கூட ஒருவர் வரலாம் இருவரில் யார் வர்றீங்க என்றேன். தம்பியை அழைத்துக்கொண்டு போங்க என்றாள் மகள். படம் முடிந்து சீக்கிரம் வந்து பீச்சுக்குக் கூட்டிப் போங்க என்றாள். சரி என்று  புறப்பட்டோம்.


அம்மா இல்லாமல் முதல்முறை என்னுடன் தனியாக வந்தான். இதற்கு முன்பு `பாபநாசம்', `காலா', `பரியேறும் பெருமாள்' இரண்டு படங்களுக்கும் பீனிக்ஸ் மாலுக்குக் குடும்பத்துடன் சென்றிருந்தோம். நான்கு பேரும் சேர்ந்து பார்த்த முதல் படம் `காலா'தான். பிறகு கறுப்பு உடைகொண்ட ரஜினி படத்தை எங்கு பார்த்தாலும் `அப்பா காலாப்பா' என்று சொல்வார்கள். வேளச்சேரி தண்டீஸ்வரத்திலிருந்து பீனிக்ஸ் மால் செல்லப் பயணச்சீட்டின் விலை 11 ரூபாய். இதற்கென எடுத்துச் சென்ற சில்லறைகளை எடுத்து நடத்துநரிடம் நீட்டினேன். இடையில் ஒரு நிறுத்தம்தான். நான் படித்த குருநானக் கல்லூரியை மகனுடன் கடந்து செல்லும் போது, சிறு நினைவு எழுந்தது. 2005 இல் அதிமுக தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்தது. `கல்லூரிக் காலத்தில் நம்ம கல்லூரிக்கு அருகில் பத்துத் திரையரங்கம் வரப்போகிறது' என்கிற செய்தி பரபரப்பாகிக்கொண்டிருந்தது. ஒரே இடத்தில் பத்துத் திரையங்கமா என்று பிளந்த வாய்களில் என்னுடையதும் ஒன்று. அது ஒரு நடக்கவியலாத கனவு அல்லது மிகச் சிறந்த கட்டுக்கதை என்றுதான் அன்று நினைத்திருந்தேன். இன்று மகனுடன் அங்கு சென்றுகொண்டிருக்கிறேன். 

திரைப்படம் தொடங்க இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருக்கின்றன. பீனிக்ஸ் வாசலில் இருக்கிறேன். எங்கே இருக்கிறீங்க என நவீன் கேட்டார். இதோ வந்துகொண்டிருக்கிறோம் என்றேன். வாசலில் இருந்து அவரை அழைத்தேன். உள்ளிருப்பதாகக் கூறினார். நுழைவாயிலில் மணிக்கட்டில் தெர்மல் ஸ்கேனரில் வெப்பநிலையைப் பரிசோதித்தனர். அடுத்து டிக்கட் கொடுக்கும் இடத்தில் டிக்கட் காட்டுங்கள் என்றார் ஒரு பெண்மணி. உள்ளே இருக்கிறாங்க என்கிற என் பதில் அவருக்கு ஒருவித சலிப்புணர்வைக் கொடுத்ததைக் கண்டேன். சற்று நிமிடத்தில் எனக்கே என்மேல் வெறுப்பு வந்தது. சரியா அவரிடம் பதில் சொல்லவில்லையோ? சொற்களைத் தெரிவுசெய்து பேசியிருக்க வேண்டுமோ என்று குழம்பிப்போயிருந்தேன். இந்த அவமதித்தல் எப்படி நடந்தது. நான் என்ன பேசினேன் என்பதை ஒருமுறை நினைத்துப் பார்த்தேன். வெறுமனே `உள்ள இருக்காங்க' என்கிற சொற்களைக் கேட்கும் போது நமக்கே அச்சொற்களின் மீது அச்சொற்களைப் பேசியவர் மீது வெறுப்புணர்வு வரத்தானே செய்கிறது என்றெண்ணி எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டு மொபைலைப் பார்த்தேன். அப்போதுதான் நவீனின் Missed Call ஐக்கண்டு அழைத்தேன். வாட்ஸ் அப்பில் டிக்கெட் அனுப்பியிருக்கிறேன். Screen 1, இருக்கை எண் D10, D11 என்றார். Mobile data வை ஆன் செய்து டிக்கெட் காட்ட அந்தப் பெண்மணியை அழைத்த போது பரவாயில்லை உள்ளே போங்க சார் என்றார். இழந்த நம்பிக்கையை, பலத்தை மீண்டும் மீட்டு மகனுடன் திரையரங்கினுள் நுழைந்தேன்.

இருட்டிலிருந்து மேல்நோக்கிப் பார்த்தோம். வலதுப் பக்க மேற்பகுதியில் செல்போன் வெளிச்சம் எங்களை அழைப்பது போல் இருந்தது. அங்கேதான் இருக்க வேண்டுமெனச் சென்றோம். மூன்று சீட்டின் நடுவே நவீன் அமர்ந்திருந்தார். அவரின் வலது பக்கம் மகனை அமரச் சொன்னேன். பொதுக்கென்று இருக்கை அவனை மூழ்கச் செய்திடும் போல் இருந்தது. எப்போது படம் போட்டார்கள் என்றேன். இரண்டு நிமிடங்கள்தான் இருக்கும் என்றார். நேட்டும் சாமும் புதையலின் வரைப்படத்தைத் திருடச் செல்லும் இடத்தில் மாட்டிக்கொள்ளும் காட்சியில் படத்தைப் பார்க்க ஆரம்பித்தோம். சகோதரன் பிரிவில் துயருரும் நேட்டின் முகம் கணத்தில் வாலிப முகமாய் உருமாறும். சில காட்சிகள் வித்தியாசமான கோணத்தில் படமாக்கப்பட்டிருந்தது. தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்ந்தது. இடைவேளையில் சிறுநீர் கழிக்கச் செல்லும் போது சுவரில் பதிப்பக்கப்பட்டிருந்த அகன்ற கண்ணாடி முன் மகனை நிறுத்திப் பார் என்றேன். சிறுநீர் கழிக்கும் இடம், கைகழுவும் இடம் எல்லாம் சும்மாவே கூடவந்தான். கைகழுவிய பிறகு வெப்பக் காற்றில் கைநுழைத்து எடுக்கும் சத்தத்தை உற்றுப் பார்த்தான். என் கைகளின் வெப்பத்தை உலரவைக்கும் போது, கை எட்டாமல் குறுக்கே கைகளை நீட்டிக்கொண்டிருந்தான். அவனின் கைகளையும் வெப்பக் காற்றில் உள்நுழைத்து உள்நுழைத்து எடுத்தேன். 

பால் வாங்க கடைக்குக் கூட்டிச் செல்லும் போதே கண்டதைக் கேட்கும் மகன் வணிக அங்காடியில் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டுவிடுவானோ என்று முதலில் அரங்கை விட்டு வெளியில் அழைத்துவர பயந்தேன். சினிமா டிக்கெட் பதிவுசெய்து வரமுடியாத நவீன் நண்பர் குடும்பம் பாப்கார்ன், கோக், தண்ணீர் பாட்டில் என மொத்தம் 600 ரூபாய்க்குச் சேர்த்தே பதிவுசெய்திருப்பதை நவீன் சொன்னதும் மகனே உனக்கு நல்ல தீனிடா என்றேன். அகமகிழ்ந்தான். இன்னொரு பக்கம் ச்சா இந்த 600 ரூபாய் இருந்திருந்தால் பிள்ளைகளை மகாபலிபுரம் அழைத்துச் சென்றிருக்கலாமே என்று என்னும் போது ஓசியில் கிடைப்பதைத் தின்றுவிட்டு வா, காசு கொடுத்து வாங்குவது போல் பாவனை செய்யாதே என்றது மனம். இதைக் குடிங்க என்று ஒரு கோப்பையைக் கொடுத்தார் நவீன். வாங்கினேன் சூடாக இருந்தது. என்ன இது என்றேன். Hot Chocolate என்றார். அப்படி ஒன்று இருப்பதே அப்போதுதான் தெரியும். அவ்வளவு முட்டாளா நீ என்று உங்கள் உன் மனம் சொல்லலாம். சில நேரங்களிள் உலகத்திலேயே அடிமுட்டாளில் முதன்மையானவன் நான்தான் என எண்ணிக்கொள்வேன். எனவே, முட்டாள் என்கிற உங்கள் நினைப்பில் கல் எறிய மாட்டேன். ரெண்டு மடக்குக் குடித்துவிட்டு நண்பருக்குக் கொடுத்துவிட்டேன். இடையிடையே பாப்கார்ன் கொறித்துக்கொண்டிருந்தேன். Hot Chocolate ஐ நண்பரிடம் கொஞ்சம் குடித்துவிட்டுத் தருகிறேன் என்று வாங்கினேன். நான் குடிப்பதைப் பார்த்த நண்பர் மீண்டும் வாங்கிக் கொள்ளாமல் முழுவதும் நீங்கள் குடிங்க என்றார்.  இனிப்புப் பாப்கார்னைத் தின்றுவிட்டு நெளிந்துகொண்டிருந்த மகனை உற்றுப் பார்த்தேன். போதும் என்று கொடுத்துவிட்டான். இதை மடித்துவைத்துப் பாப்பாவுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்றார் நண்பர்.  

குருநானக் கல்லூரி வாசலில் உள்ள ஹானஸ்டியில் 50 ரூபாய்குச் சில்லறை கேட்டுச் சென்றபோது, மகன் ஐஸ் கிரீம் என்றான். வீட்டுப் பக்கத்தில் வாங்கித் தருகிறேன் என்று சொல்வதற்குள் Gpay இல் இரண்டு கோன் ஐஸ் வாங்கிக் கொடுத்தார் நவீன். பாலித்தீன் கவரில் எடுத்துக்கொண்டு M70 பேருந்தில் வீடு திரும்பினோம். ஐஸ் கிரீமைக் கண்டதும் குதூகலமானாள் மகள். நல்ல வேலை கதவைச் சாத்திக்கொண்டு உறங்கலாம் என்றிருந்தோம் என்றாள் மனைவி. மடித்துவைத்திருந்த இனிப்புப் பாப்கார்னை எடுத்து மகளிடம் நீட்டினேன். சுவைத்துப் பார்த்த மனைவி பொடி தூவிய பாப்கார்ன்தான் எனக்குப் படிக்கும் என்றாள். சரி பீச்சுக்குப் போகலாமா என்றார்கள். இருங்க பாத்ரூம் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் காலையில் பணம் கேட்டிருந்த நண்பனுக்கு அழைத்தேன். துண்டிக்கப்பட்ட எண்ணிலிருந்து I'am driving right now. I'll call you back later என்கிற குறுஞ்செய்தி வந்தது. மீண்டும் 4 மணிக்கு போன் செய்த போது எதிரில் ஒலித்த பெண்ணின் குரல், தம்பி நான்தான் அக்கா பேசுகிறேன். தம்பி மீட்டிங்கில் இருக்குது. அப்புறம் பேசச் சொல்கிறேன் என்றது. மகனும் மகளும் பீச்சுக்குப் போலாம்ப்பா என்றார்கள். கையில் இருந்த பணத்தைக் கேபிளுக்குக் கட்டிவிட்டு, வீட்டில் இருந்த இரண்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டு புத்தகக் காட்சிக்குக் கிளம்பினேன். புத்தகக் காட்சி கூட்ட நெரிசலில் வீட்டிலிருந்து அழைக்கப்பட்ட போன் சத்தம் கேட்கவில்லை. அடுத்தடுத்து இரண்டு அழைப்பில் `இன்னும் கேபிள் வரவில்லை', இன்னும் கேபிள் வரவில்லை' என்ற சொற்கள். மூன்றாவது முறை அழைத்து ``கேபிள் வந்துவிட்டது. I am proud of you அப்பா'' என்றாள் மகள்.   

21.02.22
திங்கட்கிழமை 

Saturday, February 19, 2022

ஊஞ்சலாடும் பாரதியார் பூங்கா

நேற்றிரவு உறங்கச் செல்லும் முன்பே நாளை நடைப்பயிற்சி செல்லும் போது என்னையும் தம்பியையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மகள் கட்டளையிட்டாள். சரி என்று சொன்னேன். இப்படிச் சரியென்று சொல்லிவிட்டு அழைத்துச் செல்லாமல் சென்ற நாட்கள் எண்ணமுடியாதவை. இன்று வழக்கம் போல் 5.30 க்கு எழுந்து நடைப்பயிற்சிக்குத் தயாரானேன். ஆனால், இன்றும் மகளை ஏமாற்ற மனமில்லாமல், மேல் அறைக்குச் சென்றேன். முகம் கழுவ தண்ணீர்க்குழாயைத் திறக்க முற்பட்டேன். அது ஏற்கெனவே திறந்தபடிதான் இருந்தது. ட்ரம்மில் நீர் மொண்டு லக்ஸ் சோப்பில் முகம் கழுவேன். முகத்திலிருந்து வழிந்த நீர்ச்சொட்டுகளைச் சுவரில் எறிந்தபடி கதவைத் தட்டினேன். ஒரே தட்டலில் மனைவி உ சொல்லி கதவைத் திறந்தாள். பிள்ளைகளும் உற்சாகமடைந்துவிட்டார்கள். தினமும் செல்லும் மடிப்பாக்கம் ஏரிக்குக் கூட்டிச் செல்லலாம் என்றால் திரும்பி வர நேரமாகும் என்பதால் வேளச்சேரி பாரதியார் பூங்காவுக்கே அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். கட்டிலில் கலைந்த உறக்கத்தை மீண்டும் துளிர்க்க முயற்சி செய்த மகனின் மீது சாய்ந்து கட்டியணைத்து முதுகில் செல்லமாய்க் கடித்து வைத்தேன். ம்... விடுங்கப்பா என்றான். சரி போய் முகம் கழுவிக்கொண்டு வாங்க பூங்காவுக்குச் செல்லலாம் என்றதும் துரிதமாகத் தயாராகி முன் நின்றனர். மனைவியையும் அழைத்தேன். குப்பை கொட்ட வேண்டும் நீங்கள் சென்று வாருங்கள் என்றாள். குப்பையை நாம் போகும் போது கொட்டிக்கொள்வோம் என்றேன், மௌனமானாள். இப்படித்தான் எப்போது பூங்காவுக்குச் சென்றாலும் அவள் உடன்வரமாட்டாள்.

குப்பையை எடுத்துக்கொண்டு பிள்ளைகளுடன் பூங்காவுக்குச் சென்றேன். முழுதும் விடியாத பொழுதில் திறந்துவிட்டார்களா இல்லையா என்கிற சந்தேகத்துடன் பூங்காவின் கதவுக்கு அருகில் சென்றோம். உள்ளே பருத்த பெண்மணி ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். ஓ... திறந்துவிட்டார்கள் என்று உற்சாகத்துடன் ஊஞ்சலை நோக்கி இருவரும் ஓடினர். வேளச்சேரி தண்டீஸ்வரத்தில் பிராமணர் தெருவுக்கும் தெலுங்கு பிராமணர் தெருவுக்கும் நடுவில் உள்ளது பாரதி பூங்கா. இதன் கிழக்கு திசையிதான் யாவரும் பதிப்பகத்தினரின் B4Books கடை உள்ளது. தெற்குப் பகுதியில் தபால் நிலையம் உள்ளது. நெட்டிலிங்கம், பாக்கு, கொய்யா, பூவரசம், வேம்பு, புளியம் ஆகிய மரங்கள் இங்கு உள்ளன. அத்தனை இருக்க பாரதி பூங்காவில் பாரதி இருக்கிறாரா என்பதுதானே உங்கள் கேள்வி. இருக்கிறார். விரிந்த புத்தகவடிவில் அமைக்கப்பட்டுள்ள கல்லின் இடது பக்கத்தில் பாரதியார் முண்டாசுடன் இருக்க, அதன் வலப் பக்கத்தில் `சாதிகள் இல்லையடி பாப்பா', `ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று கூறி அலையும் அறிவிலிகாள்' பாடல்வரிகள் இடம்பெற்றுள்ளன.

ஊஞ்சலை ஆட்டிவிடச் சொல்லி மகள் அழைத்தாள். இருவரின் ஊஞ்சலுக்கும் நடுவில் நின்றபடி வலது கையால் மகனையும் இடது கையால் மகளையும் ஆட்டிவிட்டேன். நொண்டிக்கொண்டிருந்த கர்ப்பிணி நாயொன்று குறுந்திட்டில் ஏற சுற்றிச் சுற்றி வந்து கால்தூக்க முடியாமல் போக சிமென்ட் பெஞ்சின் அடியில் பதுங்கியது. பாட்டியுடன் வந்த சிறுமி ஒருத்தி அருகில் இருந்த ஊஞ்சலில் தன்னைத் தானே ஆட்டிக்கொண்டிருந்தாள். நடைப்பயிற்சியில் இருந்த அவளின் பாட்டியின் செல்போனில் ஒலித்தது `சஷ்டியை நோக்க சரவண பவனா'. சற்று அயர்ந்த என் மூக்கைப் பீடி நாற்றம் பிடிங்கிச் சென்றது. பின் திரும்பினால், கைப்பையைப் பூங்கா சுவரில் வைத்த ஒருவர் போன் பேசிக்கொண்டிருந்தார். இடக்கை விரல்களுக்கிடையே கசியும் புகையின் சாம்பல் காற்றில் பறக்கிறது.


அது என்ன மரம் என்று மகள் கேட்டாள். அது எனக்கு நெட்டிலிங்க மரம் என்று தொண்டை வரை வந்த சொல், அருகில் இரண்டு மூன்று பேர் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்து பெயர் தவறாக இருக்குமோ என்கிற சந்தேகத்தில் பதிலளிக்கவில்லை. இப்போதுதான் தெரிகிறது அது நாகலிங்க மரமென்று. இதன் மொட்டுகள் கூழாங்கல்லைப் போன்ற மென்மையுடனும் நசுக்குவதற்கு மிகக் கடினமாகவும் இருக்கும். கிளையில் ஓடும் கொடியில் தொங்கும் காய்கள் கால் பந்தைப் போலவும் பழவோடு மண்டையோட்டினைப் போலவும் இருக்கும். தன் மகளுடன் வந்த ஒருவர் மனைவியையும் மகளையும் ஊஞ்சலிட்டார். பொமெரேனியன் நாயுடன் ஊஞ்சலாடினாள் அவர் மனைவி. அவளின் மடியில் இருந்து குதித்த நாய் குண்டியைத் தரையுரசியபடி அரசஞ்சருகின் மீது சிறுநீர் கழித்தது.  

விளையாட்டை முடிக்கவைத்து வெளியே அழைத்து வந்ததும் வழக்கமாகச் செல்லும் தெலுங்கு பிராமணர் தெருவழியே மகள் அழைத்தாள். மகனோ, பிராமணர் தெருவழியாகச் சுற்றிச் செல்லலாம் என்றான். அக்கா வழி செல்லலாம் என்றால், தம்பி ஒத்துக்கொள்ளவில்லை. தம்பி வழி செல்லலாம் என்றால் அக்கா வழிக்கு வரவில்லை. பெரும்பாலும் மகளின் சார்பான நான் ஏனோ மகனின் பக்கம் சாய்ந்துவிட்டேன். மகள் நான் வரமாட்டேன் என அடம்பிடித்தாள். சரி இங்கேயே இரு என்று மகனுடன் புறப்பட்டு ரெண்டடி எட்டுவைத்தேன் புலம்பியபடி ஓடிவந்துவிட்டாள். மூவரும் கைவீசி தெருமுனைக்கு வந்தோம். ஐ... இப்படித்தான் தினமும் ஸ்கூலுக்குப் போவோம் என்று கோரஸாக இருவரும் கூறினார்கள். இனிக் கொஞ்ச நாளைக்குப் பூங்காவுக்கு அழைத்துச் செல்லச் சொல்லி தொல்லை தரமாட்டார்கள் என்று நினைக்கிறேன். பார்ப்போம்...

19.02.2022
சனிக்கிழமை
  

Friday, February 18, 2022

வேளச்சேரி கிழக்குப் பேருந்து நிறுத்தம்

தண்டீஸ்வரத்தின் கிழக்குப் பேருந்து நிறுத்தம் மிகப் பழமையானது. கிட்டத்தட்ட வேளச்சேரி கிராமாக இருந்த போது அது கட்டியிருக்கலாம். அங்கு இருபுறமும் நீர்ப்பாசனமுள்ள வயல்வெளி இருந்திருக்கலாம். நான்கு உருளைத் தூண்களால் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அதன் மேற்கூரைத் தளத்தின் நடுவே உத சூரியன் சின்னம் இருக்கும். திமுக பிரமுகர் கட்டியிருக்கலாம் என்கிற யூகம். இருபத்திரண்டு ஆண்டுகளாக இந்த நிறுத்தத்துடன் தொடர்பில் இருக்கிறேன். டவுசர் போட்ட பையனாய், பேன்ட் போட்ட இளைஞனாய், வேட்டி கட்டிய தகப்பனாய் எனப் பல்பருவங்களைக் கடந்துவந்திருக்கிறேன். இதோ இப்போது ஷர்ட்ஸுடன் நிற்கிறேன். மடிப்பாக்கத்தில் நடைபயிற்சி செய்ய இங்குதான் பேருந்து ஏறுவேன். 

    வேளச்சேரி கிழக்குப் பேருந்து நிறுத்தம்

2001-2002 ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது தினமும் இந்த நிறுத்தத்திற்கு வருவேன். பதின்மத்தின் இறுதியில் எதற்காக இங்கு வந்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள். உங்கள் யூகம் தவறு. நண்பனைப் பேருந்து ஏற்றிவிட. அவன் வீடு ஒட்டியம்பாக்கத்தில் இருந்தது. தடம் எண் 51B இல்தான் அங்கு செல்வான். சரி நண்பனைப் பற்றிச் சொல்கிறேன். அவன் பெயர் அருண் பிரசாத். தினமும் பள்ளிச் சீருடையை அயன் செய்துதான் போட்டு வருவான். உருண்டையான கண்கள். சிவந்த நிறமுடைய அவன் நெற்றியில் எப்போதும் திருநீறு கலையாதிருக்கும். துடைப்பக்குச்சி போன்ற தேகம். நானும் என் அண்ணனும் தங்கியிருந்த அறைக்கு அதிகம் முறை வந்தது அவனாகத்தான் இருப்பான். வந்ததும் வியர்வையில் சட்டைக் கழற்றித் தொங்கவிட்டுவிடுவான். சும்மா ஈர்க்குச்சி போன்ற அவன் எலும்புகள் பேன் காற்றில் அசைந்தாடும் என்றால் நம்பிவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால், தர்க்கரீதியாக நீங்கள் மூளைக்கு வேலைகொடுத்து நேரத்தைக் குப்பைக்கூடையில் போட வேண்டாம். 

இப்போது அந்தப் பேருந்து நிறுத்தம் வயோதிகத்தன்மையடைந்துள்ளது.  அல்லது கொஞ்சம் நீளமான உயரமற்ற தகனமேடை போன்று காட்சியளிக்கிறது. நின்றுகொண்டே தொட்டுவிடும் அதன் வெளிப்புற மேற்கூரையை இப்போதெல்லாம் அவ்வப்போது தொட்டுப்பார்ப்பதுண்டு. 51 B இன்றும் அதே தடத்தில்தான் ஓடுகிறது. அதைக் காணும் போதெல்லாம் கண்ணாடி அணிந்த நண்பனின் உருவம் வந்துவந்து போகும். ஆனால் அவனைப் பார்த்துதான் ஆண்டுகளாகின்றன. 

18.02.2022

வெள்ளிக்கிழமை

        

யாழிசையின் தோழி ஹரிணி

அதிகாலை தண்டீஸ்வரம் சாலை பரபரப்பானது. சாலையின் இருவோரமும் செய்தித்தாள் கோக்கும் அடுக்கும் பணி தீவிரமாய் நடக்கும். இன்னும் சரியாக விடியாத கருக்கலில் நடைப்பயிற்சிக்காக சென்றுகொண்டிருந்தேன். பேருந்து நிறுத்தத்தில் நன்கு அறிமுகமான முகக் கவசமற்ற முகம். என் மெல்லிய புன்னகையை என் முகக் கவசம் மறைத்திருக்கும். அருகில் சிறு குழந்தை. இருவரையும் கடந்து பின்பு திரும்பி முகக் கவசத்தை நீக்கி எப்படி இருக்கீங்க என்றதும் சற்று கூர்ந்து நோக்கிய அப்பெண்மணி ``அதானே பார்த்தேன். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று நினைத்தேன். மாஸ்க் போடவும் சரியா தெரியலை. நீங்கள் தானா? நான் நல்லா இருக்கேன். நீங்கள் எப்படி இருக்கீங்க'' என்றார். உங்க மகள் எங்க படிக்கிறாள் என்றதும் மாநகராட்சிப் பள்ளியில் என்றேன். என் மகளுக்கு ஃபீஸ் அதிகமாகிடுச்சு. நானும் வேறு எங்காவது சேர்க்கணும் என்றார். எவ்வளவு என்று கேட்டேன். அவர் பதிலில் நெஞ்சுடைந்து போவது போல் இருந்தது. காரணம் LKG கல்விக் கட்டணம் 45,000 ரூபாய். 


சரி என்ன இந்நேரத்தில்? 

ஊருக்குப் போகிறோம். 

எந்த ஊர் 

திருவண்ணாமலை.
   
திருவண்ணாமலையில் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று இடத்தைச் சுட்டிக் காட்டினேன். அவருக்குத் தெரியவில்லை. உம் பெயரு என்னம்மா என்று அவர் மகளிடம் கேட்டேன். முதலில் அச்சிறுமி தயங்கினாள். அவள் அம்மாவும் நானும் பேசப் பேசக் குழப்பமுற்றவளாய் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தாள். உன்கூட படிச்ச யாழிசை அப்பாதாம்மா நான் என்று சொன்னதும் அச்சிறுமியின் முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது. உன் பேரு என்ன என்றேன் ஹரிணி என்றாள். சரி யாழிசை கிட்ட போய் ஹரிணியைப் பார்த்தேன் உன்னை விசாரித்ததாய்ச் சொன்னாள் என்று சொல்கிறேன் என்றேன். தெற்கிலிருந்து வடக்காக அசைந்தாடிச் சத்தமின்றிச் சிரித்தாள் அச்சிறுமி. 
 
18.02.2022
வெள்ளி

சர்வதேசக் குரல் - சூரஜ் யங்டே

 ஒரு பக்கம் தலித் வகையறா என்கிற கருத்துத் திணிப்பும் இன்னொரு பக்கம் என் எழுத்து தலித் எழுத்தல்ல என்கிற அடையாள மறுப்பும் நிகழும் சூழலில் சாதியைப் பேசித்தான் ஆக வேண்டும் என்கிற சூரஜ் யங்டே இந்திய நிலப்பரப்பில் மட்டுமல்லாது சர்வதேசக் குரலாக ஒலிக்கும் வலிமையான குரல். தமிழில் இருக்கும் தீவிர தலித் முற்போக்கு எழுத்தாளர்களில் சிலர் பிற்போக்கின் அடிவருடியாக மாறி சலாம் போட்டுக்கொண்டிருக்கும் சூழலில் சூரஜை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். அரசியல் கூர்மையுடனான இவரின் உரையாடல்களை யூடியூப் சேனலில் கண்டு மெய்சிலிர்த்திருக்கிறேன். இப்படியான வலிய குரல்; கூரிய பார்வை, நெஞ்சுறுதி சமகால இளைஞர்களிடம் என்னளவில் கண்டதில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் முதல் தலித் அறிஞரான சூரஜ்ஜை வாசிப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த நூலினை வாங்கி வந்து கொடுத்த அன்புத் தம்பி ரவிக்கு நன்றி என்கிற ஒற்றைச் சொல் மட்டுமல்ல ; ஓராயிரம் முத்தங்கள்! 



Thursday, February 17, 2022

குசுவொலி

 சுமார் காலை ஐந்தரை மணியளவில் நடைப் பயிற்சிக்குத் தயாரானேன். புதிய டயரி பாதி விலையில் கிடைக்கும் என்பதை ஒவ்வொரு மாலையிலும் சிங்கப்பூர் ஷாப்பிங்கில் ஒலித்தது ஞாபகம் வர 75 ரூபாய்க்கு நேற்று ஒரு டயரி வாங்கினேன். அந்த டயரியை எடுத்துக்கொண்டு தண்டீஸ்வரம் சாலையில் நடந்துகொண்டிருந்தேன். மலிவான விலையில் வாங்கிய ஷாட்ர்ஸின் இடதுப் பக்க பாக்கெட் ஓட்டை என்பதால் வீட்டுச் சாவியை பஸ் பாஸ் வைத்திருக்கும் வலது பாக்கெட்டில் எறிந்தேன். பாரதி பூங்காவின் அருகில் சாலையைக் கடக்கும் போது V51 பேருந்துப் பலகைக் கண்ணில் பட கைக்காட்டி ஏறினேன். இரண்டு பேர் மட்டும் இருந்த அப்பேருந்து மூன்றாவதாக என்னைச் சுமந்து நகர்ந்தது.

`பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் 
கருமமே கட்டளைக் கல்'
திருவள்ளுவரின் வார்த்தைகள் ஓட்டுநருக்கும் பின்னுள்ள ஒளியில் ஒளிர்ந்தன. வழக்கமாய் ஒவ்வொரு பேருந்திலும் உள்ள குறளைப் படிப்பேன்.
வேளச்சேரி ரயில் நிலைய மேம்பாலத்தில் பேருந்து நகர்ந்துகொண்டிருந்தது.  அரைவட்ட வடிவ வளைவுகளை, செல்போன் டவரின் சிவப்பு நிற விளக்கைத் தாண்டி என்னை விரட்டிவந்தது முழுநிலவு. ராம் நகரில் நிறுத்தத்தில் ஏறிய ஒருவரின் செருப்பற்ற பாதங்கள் மகளிர் இருக்கையில் தொங்கிக்கொண்டிருந்தன. அதற்கும் அடுத்த நிறுத்தத்தில் பூவும் பொட்டுமாய் மாநிறத்தில் ஒரு பெண் மிக லட்சணமாக இருந்தாள். காலியான பேருந்தில் அவளுடன் ஆண் ஒருவர் அமர்ந்தான். அநேகமாக அவளின் கணவனாக இருக்கலாம். இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்கலாம் என்று இருந்தது. ஆனால், முன்னிருக்கையில் அமர்ந்தவரை முன்சென்று பார்ப்பது நாகரிகமாக இருக்காது என்றெண்ணிப் பாலையா கார்டனில் இறங்கினேன். வேளச்சேரியில் புன்னகை செய்த பள்ளி நண்பன் என்ன இங்க என்றான் 'சும்மா வாக்கிங் என்றேன். கிளினிக்கில் ஒரு வேலை என்றான். எத்தனை பிள்ளைகள் என்ற விசாரிப்பில் இருவருக்கும் தலா ஆணொன்று ; பெண்ணொன்று. கொரோனா வேலையிழப்பினால் தனியார் பள்ளியில் பணம் கட்டமுடியாமல் கார்ப்பொரேஷனில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டது எனக் கடந்தகால நினைவுகள் நிகழ்கால ஒன்றுபட்ட பகிர்தலோடு விடைபெற்றோம்.


நடைபாதை நத்தை முட்டைகள்

அகலவிருக்கும் மெல்லிய இருட்டில் நடைப்பயிற்சி ஏரியை அடைந்தேன். 100 மீட்டர் இடைவெளியில் இளஞ்சிவப்பு நிற டி ஷர்ட் அணிந்த பெண் நடந்துவந்தாள். நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காத கண்கள் சிறகுலர்த்தும் வாத்தில் கவிழ்ந்தன. பசும்புல்லில் வெண்சிறகுகள் பிய்ந்துகிடந்தன. பின் மீண்டும் அவளைப் பார்த்தேன் அவளும் என்னைப் பார்த்தாள். என்னை நெருங்கிய இளஞ்சிவப்பின் தூரம் தலைகுனிந்தபடி நகர்ந்தது. 
அலையடிக்கும் சிதறலான செவ்வானத்தின் மீது நீந்திக்கொண்டிருந்தது கருவாத்து. V வடிவத்தில் பறந்துவந்த சிறகுகள் சற்று தூரத்தில் M வடிவத்தில் பரிணமித்துப் பின் அரூப நிலையாகின. சதா கரைந்தபடியே காதுக்குள் காகம் நுழைகையில் கறுப்பு டி ஷர்ட் அணிந்தவன் விரைந்து ஓடிவருகிறான்.
நானும் ஓடத் தயாராகிவிட்டேன்.


கரையோரம் வீற்றிருந்தது இலையற்ற வேப்பமரம். அதன் கரிய கிளையில் தன் அலகைக் கூர்தீட்டியது காகம். செந்தாமரையை உரசியபடி நகரும் முக்குளிப்பான்கள் நாணலுக்கடியில் மூழ்கி மூழ்கி எழுகின்றன. சிற்றலைகளின் மீது வடதும் இடதுமாய்ப் படபடக்கும் அரூபச் சிறகுகள். கம்பி வேலிக்குள் பதுங்கிய ஆண் நாயொன்றின் மீது இரண்டு பெண் நாய்கள் லொள் லொள்களைக் கொட்டிக்கொண்டிருந்த தருணத்தில் வழுக்கைத் தலை அச்சமுற்றது நடைபாதையில். பனைவேரில் ஒடிந்துகிடந்த மாங்கிளையை மோந்து பார்த்த நாய்கள் பதுங்கிய நாயின் திசையை வெறித்தபடியே இருக்க, நான் அந்த மாங்கொத்தை நொச்சிமீது எறிந்து மீண்டும் ஓடத் தொடங்கினேன்.

ஏரியின் மேற்கோரம் குவிந்துகிடைக்கும் நாணலுக்கிடையில் குத்திநிற்கின்றன எண்ணிலிறந்த பீர் பாட்டில்கள். இலையற்று தோலுரிந்த எருக்கஞ் செடி வேர்சாய்ந்துகிடக்கிறது. நீலச் சங்குப் பூக்களைப் பறித்து செவ்வரளியின் மீது எறிகிறான். சேவல் கூவும் நாய் குரைக்கும் சிட்டுக் குருவி, மைனா ஒலிகளுக்கிடையே தொடையை அகல விரித்து வெடித்த குசுச் சத்தம் நடைமேடையை மூச்சுமுட்ட வைத்தது. ''எங்க இருக்கீங்க பால் வாங்கிட்டு, அப்படியே டீத்தூள் வாங்கிட்டு வந்திடுங்க'' என்று போனில் ஒலித்தாள் மனைவி. சரி இன்றைய சூடான தேநீரைப் பருகுவோம். 

17.02.2022
வியாழக்கிழமை

Wednesday, February 16, 2022

`தானாய் மலரும் காலம்'

வெகு நாளாகவிட்டது நடைப் பயிற்சிக்குச் சென்று. வேளச்சேரியின் பிரதான சாலைகள், குறுக்குச் சந்துகள் எனக் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியனுடன் சேர்ந்து நடந்ததுண்டு. குறிப்பாக வேளச்சேரி ரயில்நிலையத்தில் அதிகமான நாட்களைச் செலவிட்டிருக்கிறோம். எனக்கும் ஷங்கருக்குமான உறவு ஆரம்பத்தில் பிடிப்பற்றதாகத்தான் இருந்தது. அவரைச் சந்திக்கும் சமயமெல்லாம் சின்ன சீண்டல் இருந்துகொண்டே இருக்கும். அவை மேலும் அவரிடமிருந்து விலகல்தன்மையையே கொடுத்தன. பீஃப் கவிதைகளுக்குப் பிறகு இருவருக்கும் நல்ல இணக்கம் ஏற்பட்டது. அடிக்கடி போனிலும் நேரிலும் சந்தித்துப் பேசுவோம். குறிப்பாக விகடனில் வேலை இழந்த துயர் மிகு காலத்தில் என்னைப் பத்திரப்படுத்தினார். பொருளாதார ரீதியாக, வேலை வாய்ப்பு ரீதியாக, வாசிப்பு சார்ந்து புத்தகங்கள் அள்ளிக்கொடுப்பது எனப் பேரன்பைக் காட்டினார். நீண்ட காலமாக வாசிக்க வேண்டும் என்கிற ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை முதல் ஊரடங்கின் போது கேட்டேன். உடனே தன் வீட்டு நூலகத்தில் இருந்து எடுத்துக் கொடுத்தார். இப்படி சில முக்கியமான நூல்களைக் கேட்டதும் கொடுத்துவிடும் மனம் ஷங்கருக்கு. 


வேலையற்ற நாட்களில் எனக்கு எதுவும் ஆகிவிடுமோ எனக் கண்காணித்துக்கொண்டே இருப்பார். குரலில் தொய்வு அல்லது உடைசல் தெரிந்தால் உடனே வண்டி எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்துவிடுவார். பாவனை, பாசாங்கு இரண்டுமற்ற ஷங்கர் தன் அறிவை, ஆளுமையைப் பிறர் மீது திணிக்காதவர். செல்மாவுக்குப் பிறகு இப்படியான கட்டற்ற அன்பை என்மீது செலுத்தியவர் ஷங்கர் ஒருவராகத்தான் இருப்பார். 


வேளச்சேரி ரயில் நிலையம்

வேளச்சேரி ரயில் நிலையம்

அறிவுத்தளத்தில்தான் ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்றல்ல; சும்மா ஒருவரைச் சந்தியுங்கள். இந்த வேளச்சேரியில் உள்ள பூ விற்பவரைக் கால் நூற்றாண்டாகத் தெரியும். நான் சென்னை வந்த புதிதில் மருந்துக்கடை நடத்திய பெண் இன்று பாட்டியாகி உள்ளார். இவர்கள் மட்டுமல்லாது பால் போடுபவர், பேப்பர் போடுபவர் எனப் பலபேருடன் இன்றும் தொடர்பில் இருக்கிறேன். வீட்டுக்குள்ளே இருக்காமல் உங்களுக்குள் ஒடுங்கியிருக்காமல் பிறரைச் சந்தித்துப் பழகுங்கள் என அடிக்கடி கூறுவார். `கவிதை எழுதுவது பறக்கப் பழகுவது, உரைநடை எழுதுவது நடக்கப் பழகுவது' உங்களுக்கு நன்றாகப் பறக்கத் தெரிகிறது. நடக்கவும் கற்றுக்கொள்ளுங்கள் எனத் தொடர்ந்து கூறிவந்தவர் `பாட்டி வடை சுட்டது' என்று எளிமையாக எழுதத் தொடங்குங்கள் என்பார். அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிவிட்டு ஒன்றும் செய்யாமல் இருப்பேன். அது அவருக்கு ஒருவித எரிச்சலை உண்டு பண்ணியிருக்கும். பல நேரங்களில் சிலர் சொல்வதை என்னால் உடனே செய்ய முடியாமல் போன சம்பவங்கள் ஏராளம் உண்டு. ஏன் என் உள்ளுணர்வு சரி என்று சொல்லிச் செய்யாமல் போனவை கணக்கில் அடங்காதவை. அப்படித்தான் இதுவும். மற்றபடி பிறர் சொல்லிக் கேட்கக் கூடாதென்றெல்லாம் ஒன்றுமில்லை. எதுவும் தானாய் மலரும் போது மகத்துவமாக இருக்கும் அல்லவா. இது தானாய் மலரும் காலம்.

ஆமாம் இனி நடக்கப் பழகப் போகிறேன் நண்பர்களே!

17.02.2022
வியாழக்கிழமை

Tuesday, February 15, 2022

நரையைப் பகிர்கிறேன்


சமீபத்தில் ஓர் இலக்கிய நிகழ்வில் கலந்திருந்தேன். அங்கு எடுத்த போட்டோ ஒன்றை நண்பர் முகிலன் அனுப்பியிருந்தார். மிகுந்த ஆர்வத்துடன் பதிவிறக்கம் செய்து பார்த்தேன். திடுக்கிடலுடன் ஏமாற்றமே எஞ்சியது. இதற்கு முன் எடுத்த நிழற்படங்களைவிட இதில் நரை கூடியிருந்தது. சற்று சுருங்கி வறண்ட தோல் வயோதிகத்தன்மையைக் காட்டியது போல் இருந்தது. ஒருவகையில் கொஞ்சம் ஸ்டைலாகவும் இருந்தது. சிறுவயதில் வாயைத் திறந்தமேனிக்கு இருக்கும் போதெல்லாம் ``டே திறந்த வாயா'' என்று சிவகாமி டீச்சர் கிண்டல் செய்வார். அவ்வாறான தன்மையுடன் இல்லையென்றாலும் துருத்துவதற்கும் உள் மடித்தலுக்கும் இடையே பற்களுக்குள் சிக்கியிருந்தது நாக்கு. கணத்தில் திறந்திருக்கிறதா அல்லது மூடியிருக்கிறதா என யோசித்தேன், திறந்துதான் கிடந்தது வாய்.  என்னைக் கண்காணிக்கும் என்னைச் சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டு வாயை மூடிக்கொண்டேன். பின்பு, போட்டோ ஷாப்பில் Hue / Saturation ஐ சொடுக்கி நிழற்படத்தின் தன்மையை மாற்ற முயற்சி செய்தேன். கொஞ்சம் பலன் கிட்டியது. முடித்திருத்தம் செய்து பரட்டைத்தலையைச் சரிசெய்ய வேண்டுமென அப்போது நினைத்துக்கொண்டேன். நரையும் சுருக்கமும் மறையாமல் இருக்கும் அந்நிழற்படத்தை இப்போதைக்குப் பகிர்கிறேன்.



பச்சோந்தி
16.02.2022

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...