Saturday, January 6, 2024



என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப் கவிதைகளுக்குப் பின். 

இரண்டாயிரம் ஆண்டு தொன்மைவாய்ந்த கவிமொழியின் மரபில் வந்த நாம் கவிதையெல்லாம் யாருங்க படிக்கிறாங்க, கவிதைத் தொகுப்பெல்லாம் யாருங்க வாங்குகிறாங்க என்று பதிப்பகங்களே சலிப்புற்றுப் பேசும் சூழலில்தான் பீஃப் கவிதைகள் வெளிவந்து கொண்டாடப்பட்டது. 2020 ஆம் ஆண்டு புத்தகச் சந்தையில் அதிகம் விற்பனையான 10 புத்தகங்களில் ஒன்றாக பீஃப் கவிதைகளை `தி இந்து தமிழ் திசை’ நாளேடு அறிவித்திருந்தது. எங்கு சென்றாலும் என் முகம் தெரிகிறதோ இல்லையோ பீஃப் கவிதைகள் என்றால் கல்லூரி மாணவர்கள்கூட அறியும் அளவிற்குச் சென்றடைந்திருக்கிறது. அதே நேரத்தில் இதன்மூலம் உண்டான அடையாளம் பணிச் சூழலிலும் தனிப்பட்ட வாழ்விலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக இப்பனுவலை ஓர் தொடர்வண்டிப் பயணத்தில் விடிய விடிய வாசித்த திருமுருகன் மாமா அதிகாலையில் இதை நம் ஊருக்குள் யாரிடமும் படிக்கக் கொடுத்துவிடாதே என்றார். இதை ஒருவகையில் வரவேற்கிறேன். ஏனென்றால் வெறுமனே அழகியலையும் பெருமிதத்தையும் மட்டுமே முன்னிறுத்தாமல் நமக்குள் இருக்கும் கசடுகளையும் சுயமதிப்பீட்டுடன் அணுகவேண்டும் என்பதை முக்கியம் என்று கருதுகிறேன். 

கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதுமுள்ள பல பெருநிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை எந்தவிதக் குற்றவுணர்வுமின்றிக் கூண்டோடு பணிநீக்கம் செய்தன. நோய்த் தொற்றில் கொத்துக் கொத்தாக இறந்துகொண்டிருந்த சமயத்தில் உயிரோடு இருந்தாலே போதும் என்பதே அதிகப்பட்ச வேண்டுதலாக இருந்தது. இச்சூழலில்தான் ஆனந்த விகடன் 170 தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்தது மிகப் பெரிய பேசு பொருளானது.

'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே! என்னும் தாயுமானவர் பாடலைத் தன் இலச்சினையில் பொருத்தியுள்ள ஆனந்த விகடன் எந்தவிதப் பாகுபாடுமின்றி 170 பேரைத் தெருவில் முகக் கவசத்துடன் நிற்கவைத்தது. விசுவாசமானவர்கள் - விசுவாசமற்றவர்கள், அனுபவமிக்கவர்கள் - புதிதாய் வேலைக்குச் சேர்ந்தவர்கள், வயதானவர்கள் - இளைஞர்கள், ஒத்த அரசியல் உடையோர் - எதிர் அரசியல் பேசுபவர் எனப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் பல ரகம். பணிநீக்கம் செய்யப்பட்டதைக் காட்டிலும் அதற்காக விகடன் மேற்கொண்ட முயற்சிகளும் நடந்துகொண்ட விதமும்தான் மிகவும் அருவருப்பூட்டின. நிறுவனம் நினைத்தபடி அனைவரையும் தன் வழிக்கு இணங்கவைத்தது; ஒற்றை ஆளைத் தவிர. அந்த ஒற்றை ஆள் நிறுவனத்திற்கு எதிராக நின்று போராடினான். இறுதியில் வெற்றியும் பெற்றான். இவ்வெற்றியில் அரண்செய் ஆசிரியரும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கத்தை ஏற்படுத்தியவருமான தோழர் ஹசீப்க்கு மிக முக்கியப் பங்குண்டு. 

170 பேரை பணிநீக்கம் செய்த விகடனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள், எதிர்த்துப் போராடிய என்னை மிகவும் ஆபத்தானவனாகச் சித்தரிப்பது கேலிக்குரியதாகவே இருக்கிறது. யாருடனும் சகஜமாகப் பேசமுடியவில்லை. எங்கும் வேலை பெற முடியவில்லை. மிகவும் நேசித்தவர்கள்கூடப் பேசுவதற்கும் சந்திப்பதற்கும் தயங்குகிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது. அரண்செய், நீலம் பணி ஆறுதலாக இருந்தது. விகடனை எதிர்த்து நான் பெற்ற வெற்றி நீலத்தையும் அசைத்துப் பார்த்துவிட்டது போல் உணர்ந்தேன்.

ஒருமுறை எழுத்தாளர் தமிழ்ப் பிரபாவுடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருக்கையில் நீங்கதான் ஆஊன்னா கேஸ் போடுற ஆளாச்சே என்று சொன்னது மன உளைச்சலைத் தந்தது. இந்தப் புரிதல் நீலத்திலும் நீடிப்பது கடினம் என்பதையும் அறிவுறுத்தியது. சின்னச் சின்ன புரிதலற்ற தன்மையால் நீலமும் என்னைப் பணிநீக்கம் செய்தது. இது விகடன் பணிநீக்கத்தைவிட மிகுந்த மனவேதனையைக் கொடுத்தது. `நீலத்திலேயே வேலை செய்யாதவன் இனி எங்கு போய் வேலை செய்வான்' என்று பிறர் நினைக்கக் கூடுமே. இது எதிர்காலத்தை மிகவும் கேள்விக்குறியாக்கிவிடுமே என்று எண்ணிக் கொஞ்சம் இலகுவாகப் பேச முயன்றேன். இறுதியாக வாசுகி பாஸ்கர் ``நீங்கள் என்னதான் மன்றாடினாலும் எங்கள் முடிவை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. ஏதாவது பேசி எங்களின் நேரத்தை வீணாக்காதீர்'' என்றார். இனிப் பேசிப் பலனில்லை என்பதை அறிந்து அங்கிருந்து விடைபெற்றேன். 

பணிநீக்கம் செய்யப்பட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். இந்நிலையில் பிள்ளைகளைப் பள்ளியில் விடுவதும் மீண்டும் மாலையில் வீட்டிற்கு அழைத்து வருவதும் முதன்மையான பணியாகிவிட்டது. வீட்டிலேயே தங்காதவன் தினமும் வீட்டில் இருப்பது எவ்வளவு அவஸ்தையானது. அப்போது டைபாய்டு காய்ச்சலால் உடல் இளைத்தேன். மீண்டு வந்தேன். 

ஒருமுறை நண்பர் சீனுவிடம் பிள்ளைகளுடன் ஏற்பட்ட ஓர் அனுபவத்தைப் பகிர்ந்தேன். அவர் மிகவும் துயருற்றார். இக்காலத்தை ஏன் எழுதக் கூடாது என்று தோன்றியது. அவ்வாறு எழுதிக்கொண்டிருக்கையில் கஜேந்திரன் ஐயாவிடம் ஓர் உரையாடலினூடே பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள், பணிநீக்கக் காலச் சித்திரங்கள் ஆகிய விசயங்களைப் பகிர்ந்தேன். பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள் மிகவும் புதிய பாடுபொருளாக இருக்கிறது. உலகில் இப்படியான விசயத்திற்கு நீங்கள்தான் கரு கொடுத்து உரு கொடுக்கிறீர்கள் என்ற போது இதன் முக்கியத்துவத்தைத் தீவிரமாய் உணர்ந்தேன். ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்த நாவல், புதிதாய் எழுதிக்கொண்டிருந்த சிறுகதைகள் அனைத்தையும் விட்டுவிட்டு இதில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். 

ஆறு ஆண்டுகளாய்ப் பணிநிமித்தமாக மகளைப் பிரிந்து வாழ்ந்த போது அவளுக்கு எழுதியதுதான் என் முதல் உரைநடை. அது `ஓர் விடுமுறைக்காய்க் காத்திருப்போம் மகளே' என்னும் தலைப்பில் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. பிறகு, விகடன் தடம் இதழுக்கு `நான் ஏன் எழுதுகிறேன்' என்னும் பகுதிக்குக் கவிஞர் வெய்யில் வற்புறுத்திக் கேட்க எழுதியது. பிறகு, பீஃப் கவிதைகளுக்கு முன்னுரை எழுதியது. இதையும் வெய்யிலின் வற்புறுத்தலின் பேரில்தான் எழுதினேன். என் எழுத்தின் மீது அவருக்குச் சந்தேகம் இருந்தது. இவன் தெரிந்து எழுதுகிறானா இல்லை குருட்டாம் போக்கில் எழுதுகிறானா என்னும் சந்தேகம் வெய்யிலுக்கு இருந்தது. அச்சந்தேகம் `நான் ஏன் எழுதுகிறேன்', பீஃப் கவிதைகள் முன்னுரை மூலம் தெளிவானது. 

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் முதல் சந்திப்பின் போதே எழுத்தாளர் சுந்தரராமசாமியின் மேற்கோளுடன் உரைநடையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். எப்போதும் போல் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு, ஷங்கரின் தொடர் வற்புறுத்தலால் ஏதாவது எழுதுவோம் என்று வலைத்தளம் தொடங்கி அதில் எழுதி வந்தேன். அவருக்கு அனுப்பினால் உடனடியாக வாசித்துவிட்டுக் கருத்துக் கூறுவார். இப்படி வெய்யில், ஷங்கர்ராமசுப்ரமணியன் இருவரால்தான் உரைநடையின் பக்கம் கவனம் செலுத்தினேன். 

பணிநீக்கக் காலத்தில் ஷங்கர் மிகவும் உறுதுணையாக இருந்தார். எப்படியாவது என்னை கரை சேர்க்கப் போராடினார் என் அப்பனைப் போல். இறுதியில் சிங்கப்பூர் அனுப்பவும் ஏற்பாடு செய்தார். ஆனால், அவரின் செயல்களுக்கு நான் உறுதுணையாக இருக்கவில்லை. பிறகு, என்னால் உங்களின் கண்ணீரைத் தொடர்ந்து வேடிக்கை பார்க்க முடியாது என்று விடைபெற்றார். ஷங்கரைப் போல் இக்காலத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் எழுத்தாளரும் எங்கள் கல்லூரி பேராசிரியருமான பிரவீண் பஃறுளி. பொருளாதார தடுமாற்றத்திற்குத் தன்னால் இயன்ற அளவு பங்களித்தார்.

பலரும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருந்த சமயத்தில் நூல்கள், திரைப்படம் சார்ந்த விசயங்களுக்குத் தக்க ஆலோசனைகள் வழங்கி ஆரத்தழுவும் கவிஞர் வே.நி.சூர்யாவுக்கு நன்றி. தன் பணிகளுக்கு நடுவே இத்தொகுப்பை வாசித்துப் பின்னட்டைக் குறிப்பு எழுதிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சில தர்க்கரீதியான கேள்விகளையும் செம்மையாக்கம் செய்யவேண்டிய அவசியத்தையும் உணர்த்திய எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜுக்கு நன்றி. அட்டை ஓவியம் வரைந்த பிரேம் டாவின்ஸி, நூலை வடிவமைப்பு செய்த சந்தோஷ் கொளஞ்சி, ஓவியர் கோபு, நிழற்படக் கலைஞர் பாலாஜி கங்காதரன் ஆகியோருக்கு நன்றி. இக்கொடிய காலத்தில் துயரங்களைப் பகிர்ந்து வாழும் மனைவி சுகன்யா, பிள்ளைகள் யாழிசை, மீகாமன் ஆகியோருக்கும் நன்றி. 

மீண்டும் என்னை எழுதத் தூண்டியவர்களில் எழுத்தாளர் ஜீவகரிகாலனுக்கு மிக முக்கியப் பங்குண்டு. இந்நூலை வெளியிடும் யாவரும் பதிப்பகத்திற்கும் ஜீவகரிகாலனுக்கும் நன்றி. 

ஈரத்துடன் பச்சோந்தி

Thursday, December 8, 2022

ஆடுதொட்டி: மாமிச நிலத்தின் வரைபடங்கள்


சீமை ஓடுகள் வேய்ந்த கூரையின் கிழக்குப் பகுதியின் ஓடுகள் முற்றிலும் உதிர்ந்துள்ளன. பாதி உடைந்த ரீப்பாக்கள் மட்டுமே இடிந்த சுவரின் மேல் இருக்க, ஆங்காங்கே உடைந்த ஓடுகளுக்குள் தெரியும் வானத்தின் வழியே எட்டிப் பார்க்கும் பறவையின் அலகுகள். மூங்கிலில் தலைகீழாய்த் தொங்கும் தோலுரிக்கப்பட்ட மாடுகள். சிமென்ட் தரை எங்கும் அலையடிக்கும் ரத்தச் சமுத்திரத்தை அள்ளும் ரப்பர் வாளிகள். ரத்தத்தில் பீறிடும் தரையில் துடிதுடிக்கும் மாட்டின் அறுந்த கழுத்து. ஈக்களின் ரீங்காரத்தில் அடுக்கப்பட்டிருக்கும் காதுகளும் நாக்குகளும் கூடவே நீலம் ஏறிய கண்களும். எஞ்சிய உறுப்புகள் சிதறிக் கிடக்கும் நடைபாதைக்கும் கிழக்கே அழுகிய மாட்டு எலும்புகளின் மீது அமர்ந்த பறவைகள் கண்களைக் கொத்தி உறிஞ்ச, பற்களும் கண்களும் ஒட்டிய தலை எலும்புகள் குண்டானில் அள்ளப்பட்டு கேன்டர் வண்டியில் ஏற்றப்படுகின்றன. இறைச்சி துண்டங்களுக்கு இடையே மனிதர்களும் மனிதர்களுக்கு இடையே இறைச்சி துண்டங்களுமாகக் காட்சி மாறி மாறி நகர்கிறது.

சென்னைப் புளியந்தோப்பிலுள்ள ஆடுதொட்டி 1903இல் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டப்பட்டது. மேற்கில் ஓட்டேரியும் வடமேற்கில் பெரம்பூரும் வடக்கே வியாசர்பாடியும் வடகிழக்கே பேசின் பாலமும் தெற்கே பட்டாளமும் சூழ இவற்றின் மையத்தில் அமைந்துள்ளது புளியந்தோப்பு. திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதி நகரமாய், பெருநகரமாய் சென்னை உருவாவதற்கு முன்பே கிராமமாக இருந்தது. பெயருக்கேற்றவாறே புளிய மரங்கள் நிறைந்த பகுதி இன்னும் அதன் புராதனத்தன்மையை இழக்காது இருக்கிறது. கண்கூசும் விளக்குகள் எங்கும் இல்லை. இருளை விலக்கிக் காட்டும் கருஞ்சிவப்பு ஒளியே எங்கும் நிறைந்துள்ளது.

பிரிட்டிஷார் வருகைக்குப் பிறகு பின்னி மில், ஆடுதொட்டி போன்ற ஆலைகளும் தொழிற்சாலைகளும் இங்கு அமைந்தன. சென்னையின் பிற இடங்களுக்குச் செல்லும் பெரும்பான்மை இறைச்சி இங்கிருந்துதான் போகிறது.

இப்பகுதிக்குச் சென்றாலே மாட்டுக்கறி காற்றில் மிதந்து நாசியைத் துளைத்த வண்ணம் இருக்கும். அழுகிய எலும்புகள் குவிந்துகிடக்கும் பகுதிக்குச் சென்றால் மட்டும் குடலைப் பிடுங்கும் துர்நாற்றம் அடிக்கும். மாட்டின் காயாத இரத்தம், இறைச்சித் துண்டுகள், மாட்டு எலும்புகள், சேறும் சகதியுமான கழிவுகள் என அத்தனையும் தேங்கிப்படிந்துள்ளன. நடைபாதையின் மீதே மாட்டின் காது, நாக்கு, கொம்பு, கால்கள் என அங்குமிங்குமாகச் சிதறிக் காணப்படும். கால்வாயிலும் சாலையோரமெங்கும் எலும்புகள் கலந்த சதைச் சகதி குவிந்துகிடக்கும்.

இந்தக் குவியலுக்கு நடுவே உள்ள பகுதிகளிலும் ஆங்காங்கே கோணிப்பைகளை விரித்துக் கூறு கூறாய் மாட்டுக்கறி விற்கப்படுகிறது. அதன் முனையில் மீன்பாடி வண்டியிலிருந்து இறக்கப்படும் ஆட்டுத்தோல்கள் பதப்படுத்தப்பட்டுப் பாண்டிச்சேரிக்குக் கொண்டுசென்று அங்கிருந்து அயல்நாடுகளுக்கு ஆடை உற்பத்திக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆடுதொட்டியில் அம்பேத்கர் சாலைக்கு மேற்கே சுமார் 50 ஏக்கர் அளவில் காலியாக உள்ள இடம் இன்னும் பூர்வ கிராமத்தின் எச்சத்தைச் சுமந்திருக்கிறது. பின்னி மில்லின் எதிரே அமைந்துள்ள இதன் நுழைவாயிலில் குழிநீரில் ஊறிய மாட்டுத் தோலைக் கவ்வி இழுத்துச் சென்றது நாய். கொட்டாமணக்குச் செடிகள் விரவிக்கிடக்கும் நிலமெங்கும் கண்ணுக்கு எட்டும் தூரமிருந்த பச்சையத்தைச் செம்மறி ஆடுகளும் வெள்ளாடுகளும் மேய்ந்த வண்ணம் இருந்தன.

மணலி அருகே உள்ள சின்னமாத்தூரைச் சேர்ந்த சிறுவன் மேய்ப்பர்களில் ஒருவன். அவனின் இடது கன்னம் தசையற்று இருந்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனைப் பிணவறையில் பணி செய்த அவனது தந்தை அளவுக்கு மீறி மது குடித்ததால் சிறுநீரகம் செயலிழந்து இறந்துள்ளார். அதன் பின் இவ்வேலைக்கு வர நேர்ந்ததாகச் சொன்னவனிடம் வருமானம் குறித்து கேட்டேன். உதட்டைப் பிதுக்கித் தெரியவில்லை என்றபடி ஆடுகளை வளைத்து வர ஓடினான். எல்லை மீறும் ஆடுகளுக்குக் கற்கள் நிரப்பிய வெற்றுத் தண்ணீர்ப் போத்தலைக் குலுக்கிச் சத்தமிட்டான்.

ஆடுதொட்டிக்கு எதிரே அமைந்திருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புச் சிதைந்து, உருக்குலைந்து போர்க்காலத்தில் எஞ்சிய பகுதிபோலத் தோற்றம் அளித்தது. முக்கால்வாசிக் குடும்பங்கள் காலி செய்யப்பட்டு மாற்று இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு சிலர் இன்னும் அங்கு வசிக்கின்றனர். நாய் குரைக்கும் சத்தத்தை விரட்டிப் படியேற முயன்றபோது படிமுனைகள் உடைந்திருந்தன. சோடா பாட்டில் மூடிகளும் உடைந்தும் உடையாத மது போத்தல்களும் விரவிக் கிடந்தன.

அரசாங்கம் பல முறை காலி செய்யச் சொல்லியும் காலி செய்யாததால், தரைத் தளத்துப் படிகள் மட்டும் இடித்துத் தள்ளப்பட அவ்விடத்தில் குட்டியானை வண்டியை நிறுத்திக் கழற்றப்பட்ட கதவு, ஜன்னல்களுடன் ஒவ்வொரு பொருளாய் இறக்கிக்கொண்டிருந்தனர். மாட்டு எலும்புகள் கொட்டப்பட்ட அடுக்குமாடியின் ஓரம் அன்னை மரியாள் புழுதியைப் போர்த்தியிருந்தாள். புதைசாக்கடை செல்லும் கால்வாய் சீரமைப்புப் பணி சாலை வாகனங்களை நகர்த்தாமல் இயக்கிக்கொண்டிருந்தது. இடைவிடாது ஒலிக்கும் வாகனங்களின் ஒலிப்பான்கள் காதைப் பிளந்தன. தீபாவளி பண்டிகையை அறிவுறுத்தும் பட்டாசு மட்டும் அங்கு வெடிக்கப்படவே இல்லை.

ஆடுதொட்டிக்குத் தெற்கே உள்ளது டிக்காஸ்டர் சாலை. இங்கு கூண்டில் அடைக்கப்படாத அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. 14.09.1997 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் சிலையைத் திறந்து வைத்துச் சிறப்புரை ஆற்றியுள்ளார் வாழப்பாடியார். கூண்டற்ற அம்பேத்கர் சிலைகளைப் புளியந்தோப்புத் தெருக்களின் பல இடங்களில் காணலாம்.

தேங்கிய குண்டானில் ஒட்டியிருந்த மாட்டுச் சாணத்தை சாலையில் தேங்கிய மழைநீரில் அலசிக் கழுவியவனின் மேல் சேற்றை அள்ளி வீசிச் செல்கிறது வாகனம். ஆடுதொட்டி வாசலின் இடதுபுறமிருக்கும் ‘கேஜிஎஃப் ஹரிஃபா பிரியாணி சென்டர்’  மிகவும் பிரபலமான அதிகாலை பிரியாணி கடை. விடிவதற்கு முன்பு 3 மணிக்கே சுடச் சுட பிரியாணி இங்கே கிடைக்கும்.

சென்னையில் சில இடங்களில் கடிப்பதற்குக் கடினமான கறித்துண்டுகள் இருக்கும். ஆனால், ஹரிஃபா கடை பிரியாணியில் கறித்துண்டுகள் மைசூர் பாகைப் போல் வாயில் வைத்ததும் மேல்கீழ் அன்னங்களின் அழுத்ததில் கரைந்து கரைசலாக மாறிவிடுகிறது. சில சமயம் அது அல்வா துண்டுபோலும் இருக்கும். டிக்காஸ்டர் சாலை ஏ1 பீஃப் ஸ்டாலில் தலைகீழாய்த் தொங்கும் மாடு கத்தியால் வகுந்தபடி இருந்தது. அதன் எதிரே அமைந்துள்ள இஃப்ரான் பிரியாணிக் கடையில் நல்லி எலும்புகள் எண்ணெயில் கொதித்து ஆவியை எழுப்பின.

2017இல் பெய்த கனமழையில் வெள்ளநீர் ஆடுதொட்டியில் உட்புகுந்து ஏராளமான ஆடுகள் செத்து மடிந்துள்ளன. கட்டிவைக்கக்கூட இடமின்றிச் சாணச் சகதியின் மீதே கால்நடைகள் நிற்கும் இங்கு இருசக்கர வாகனம், மீன்பாடி வண்டி, ஆட்டோ, குட்டியானை, லாரி போன்ற எண்ணற்ற வாகனங்களில் இறைச்சி ஏற்றிச் செல்லப்படுகிறது. புதிதாக வந்து செல்பவர்கள் மூக்கைப் பொத்தி முகம் சுளிக்கும் அளவுக்குக் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன.

2017ஆம் ஆண்டு ஆடுதொட்டியைப் பார்வையிட்ட சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தாயகம் கவி, ஒரு மாதத்திற்கும் முன்பே இவ்விடத்தை இடிக்கச் சொல்லி வலியுறுத்தியும் இன்னும் ஏன் இடிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் இடிக்கவில்லை என்றால் கட்டடம் தானாக இடிந்து விழுந்து மாடுகளோடு மனிதர்களும் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுமென எச்சரித்தும் உள்ளார். ஓய்வெடுக்க இடமின்றித் தவிக்கிறோம் என அங்குள்ள தொழிலாளர்கள் தங்களின் மனக்குறையைத் தாயகம் கவியிடம் முறையிட்டுள்ளனர். அதற்குப் பதிலளித்தவர், ஏற்கெனவே இதற்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருந்தேன். ஆனால், எதுவும் செய்யவில்லை என்பது இப்போதுதான் எனக்கே தெரிகிறது என்று அயர்ச்சியுற்றுப் பேசியுள்ளார். மேலும், இதுகுறித்து அப்போது ஊடகத்திற்குப் பேட்டியளித்த தாயகம் கவி “2009ஆம் ஆண்டு அண்ணன் தளபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட `நவீனமுறை ஆடுதொட்டி’ என்னும் திட்டமென்பது 2011ஆம் ஆண்டு முழுமை பெற்றது. பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, திமுக ஆட்சியில் அண்ணன் தளபதி கொண்டு வந்தார் என்கிற ஒரே காரணத்திற்காக அத்திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது. அதற்குப் பிறகு மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து நவீனமயமான ஆடுதொட்டியைத் திறந்துவிட வேண்டுமென்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளேன். அதைத் தொடர்ந்து பல்வேறு சமயங்களில் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இங்கு நிலவிவரும் சுகாதாரச் சீர்கேட்டைக் கலைய வேண்டுமென்று பலமுறை கேட்டும்கூட இந்த அதிமுக ஆட்சித் தன் காதில் போட்டுக்கொள்ளாமல் இங்கு பணிபுரியும் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் வாழ்வையும் சிதைத்துக்கொண்டிருக்கிறது. என்னுடைய தொகுதி மேம்பாட்டிற்காக ஐம்பது இலட்ச ரூபாய் ஒதுக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், நான் கொடுக்கும் தொகையை ஏற்றுக்கொண்டு இந்த விசயத்தையெல்லாம் சரிசெய்வதற்கு மாநகராட்சி கைக்கொடுக்குமா என்பதுதான் தெரியவில்லை’’ என்று கூறியுள்ளார். 

தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஆட்டுச் சந்தையான ஆடுதொட்டியிலிருந்துதான் பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நாம் விவசாயத்தைக் கைவிட்டதனால் தமிழ்நாட்டுக்கு உள்ளிருந்து 25 சதவீதம் ஆடுகளும் மகாராஷ்டிரா, குஜராத், அசாம், பஞ்சாப், கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலிருந்து 75 சதவீதம் ஆடுகளும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இவை யாவும் பருவகாலத்திற்குத் தக்கதான வரத்தாக இருந்தாலும் ஜோத்பூர், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் இருந்து எப்பொழுதும் வந்த வண்ணமிருக்கும். “தமிழ்நாட்டு ஆடுகளுக்கு வெறுமனே புல்தான் தின்னக் கொடுப்போம். ஆனால், வடமாநிலங்களில் ஆடுகளுக்குச் சிறுதானியங்கள் கொடுப்பார்கள். இதனால் கறியின் சுவையும் மாறுபடும். மலைப் பகுதியில் வளரும் ஆடுகளை வாலாடுகள் என்று அழைப்பது உண்டு. ஆனால், அதை நாய்க் கறி என்று பொதுவில் விமர்சனம் எழுப்பியதால் பெரிய அளவில் எங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டது’’ என்கிறார் ஆடுதொட்டி சங்கச் செயலாளரான ராஜ். இப்போதைய சந்தை நிலவரப்படி கிலோ 620 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆடுகளின் வரத்து அதிகமாகும்போது விலை குறையவும் வரத்து குறையும்போது விலை அதிகமாகவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்.

ஆடுதொட்டியின் நுழைவாயிலின் இருபுறமும் ஆண்களும் பெண்களும் கடைவிரித்திருந்தனர். மென்பச்சைச் சட்டையுடன் கறுப்புக் குல்லா அணிந்த பாய் வெண்கோணியை விரித்து நெருப்பில் வாட்டிய ஆட்டுக் கால்களை நான்கு நான்காகக் கூறுபோட்டிருந்தார். வழக்கமான நாட்களில் ஒரு கூறு 230 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் தீபாவளி அன்று கூறு 350 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் தெரிவித்தார். தீபாவளிக்கு முந்தைய நாள் 450 ரூபாய்க்கு விற்றதைக் கடைக்காரரின் பேரன் கூறினான்.


புரட்டாசி மாதம் முடிந்த மறுநாள் என்பதால் கூட்டம் அலைமோதியது. ஆனால், ஆட்டுத் தலை வழக்கமான விலையான 130 ரூபாய்க்கே விற்கப்பட்டது. அருகில் மரப்பலகையில் விரிக்கப்பட்ட கோணியில் நீர்நிரப்பிய பலூனைப் போல் குடல் இருப்பதாகத் தோன்றியது. ஆனால், அதனுள் கோலிக்குண்டைப் போல் பத்துப் பதினைந்து உருண்டைகள் இருந்தன. அது என்னவென்று வினவியபோது, “இதுதான் கருவறை. இதனுள் இருப்பதெல்லாம் சினைமுட்டைகள். இதைத் தின்றால் முதுகுவலி சரியாகும்” என்றார் கடைக்காரர்.

குழந்தைகளின் கழுத்து நேராக நிற்கவில்லை என்றால் ஆட்டுத்தலையைத் தாய் தின்றால் நின்றுவிடும் என்றவரிடமிருந்து விடைபெற்று ஆடுதொட்டியின் நுழைவுப் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கியபோது சகதியில் கோணியை விரித்துக் குடல்களை விற்றுக்கொண்டிருந்தார் ஒரு பெண். மேலும் சில பெண்கள் வானவில் நிறக் குடைகளை விரித்துக் குடற்கூறுகளின் மேல் மொய்த்த ஈக்களைக் கைகளால் விரட்டிக்கொண்டிருந்தனர். சாலைக்கு வந்தபோது அவ்விடத்தைக்  கடப்பவர்கள் மூக்கைப் பொத்தியபடிச் சென்றனர்.

சுவரில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் படங்கள் பொறித்த வண்ணச் சுவரொட்டிகளும் கறுப்பு நிறக் கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. மாட்டுக்கொழுப்பைப் போல் மிதந்தூறும் கழிவுகளில் ஊன்றிக் கண்கள் தெளிவின்மையைத் தோற்றுவித்தன.

ஆடுதொட்டியின் கிழக்கு நுழைவாயிலின் மூலையில் வயிற்றுக் கன்று அறுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. கருமையான வெற்று மீன்பாடியும் கேன்டர் வண்டியும் நின்றுகொண்டிருக்க, கோணியில் கட்டி அடுக்கப்பட்டிருந்த எலும்புகளின் மீது காக்கைகள் கரைந்த வண்ணம் இருந்தன. சுவரையொட்டித் தொங்கிய கயிறுகளில் துணிகளைப் போல் தொங்கிக்கொண்டிருந்தன குடல்கள். தரையில் குவிந்திருந்த விலா எலும்புகளை அள்ளிக்கொண்டிருந்தவரின் கைக்குவியலிலிருந்து விறகுகளைப் போல் நழுவி விழுந்தன எலும்புகள். முதுகில் ‘N’ என்று எழுதப்பட்ட நான்கு மாடுகளைத் தாழியைப் போல் வயிற்றைத் தொங்கவிட்ட ஒருவர் பிடித்துச் சென்றார்.

காலணிகளற்ற கால்களுடன் அடர்பச்சைச் சராய் அணிந்திருந்த அவர் மாட்டின் நான்கு கழுத்துகளும் கோக்கப்பட்ட ஒற்றைக் கயிற்றைப் பிடித்திருந்தார். அந்நான்கு மாடுகளின் பின்பகுதியைத் தன் வலக்கைக் குச்சியால் அடித்தபடி இடக்கையில் முதுகில் ‘EB’ எனப் பொறிக்கப்பட்ட செவலை மாட்டை இழுத்துச் சென்றான் சிறுவன். தொட்டியின் கிழக்குப் பகுதியில் முற்றும் பூசப்படாத செங்கல் வீட்டின் இரண்டாவது மாடியின் சுவரோரம் ஆலமரம் கிளை பரப்பியிருந்தது.

தொட்டியின் பூட்டிய கழிப்பறை வாசலில் துண்டு துண்டாக நறுக்கப்பட்ட மாட்டுக்கறிகளை ஈக்கள் மொய்க்க, எதிர்த்திசையில் எண்ணிலிறந்த மாட்டின் கரும்பாதங்கள் அந்தரத்தில் தொங்கியபடி இருந்தன. கறுப்பு நிற மாமிசச் சகதியின் மேல் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சி சிறகடித்துப் பறந்தது.

பட்டாசுச் சத்தங்களுக்கும் பறவைகளின் கீச்சொலிகளுக்கும் நடுவே மாடுவெட்டும் இடத்திற்குள் நுழைந்தேன். மூங்கில் கழியில் எண்ண முடியாத அளவுக்கு மாடுகள் தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருந்தன. இடையே தரையில் கிடத்திச் சங்கறுக்கப்பட்ட மாட்டின் கழுத்திலிருந்து பீறிட்ட இரத்தம் தரையெங்கும் தெறித்தது. ரத்தக் குழம்பில் விரிக்கப்பட்ட பச்சை மாட்டுத் தோலில் குடல்களும் கொம்புகளும் தலைகளுமாகக் குவிந்துகிடக்க, நரம்புப் புடைக்க உள்ளிருந்து அறுத்த மாட்டைத் தூக்கிவருபவர் தன் இரு சக்கர வாகனத்தின் முன்பக்கத்தில் திணித்தார். மற்றொருவர் உடல் அழுந்த தூக்கிவந்த மாட்டின் ஒரு பாதியை மீன்பாடி வண்டியில் எறிந்தார்.

அந்த இடத்தில் காத்திருந்த கணக்கற்ற வாகனங்களில் தங்களுக்கான இறைச்சியை ஏற்றிய வண்ணம் இருந்தனர். கீறல்விட்ட சுவரின் அருகே பாலித்தீனை விரித்துத் தோலுரிக்கப்பட்ட மாட்டின் தலைகள் நீலக் கண்களுடன் வானம் பார்க்கத் தலைகீழாய்க் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. வெகுநேரமாய்த் தெருவிளக்கின் மீது அசைவற்று இருந்த ஓர் ஒற்றைப் பறவை தனக்கான மாமிசத் துண்டைக் கவ்வி மேற்கூரை இடிந்து பாழடைந்த சுவரைத் தாண்டிக் கிழக்குத் திசையில் மறைந்தது. மேற்கூரையற்ற இடம் கழிவுநீரில் மிதந்துகொண்டிருந்தது.

தொட்டியின் கிழக்குத் திசையில் உடன் பிறந்த சகோதரிகளின் அருகருகே தனியே கடைவைத்திருந்தார் ஜானகி. தன் 12 வயதில் தொட்டியில் வியாபாரம் செய்யத் தொடங்கிய இவருக்குத் தற்போது 85 வயது. மாட்டின் குடல், ஈறல், நாக்கு ஆகியவற்றைக் காலின் கட்டைவிரல் இடுக்கில் கத்திபிடித்து அறுக்கும் பழக்கமுடையவர். இவ்வாறு காலிடுக்கில் கறியறுக்கும் லாவகம் வாடிக்கையாளர் மட்டுமல்லாது சக வியாபாரிகளே வியக்கும் வண்ணம் இருக்கும்.

தான் வியாபாரம் ஆரம்பித்த தொடக்கக் காலத்தில் ஒரு கிலோ மாட்டுக்கறி 2 ரூபாய் 50 பைசா என்பவர், ஒருநாளைக்குப் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்த நினைவுகளை மீட்கிறார். “லாரியில் ஏற்றிவரும் மாடுகள் செத்துப் போனால் எங்களிடம் கொடுத்துவிடுவார்கள். ஏனென்றால் செத்த மாட்டை பாய்கள் அறுக்க மாட்டார்கள். இப்போது அதுவும் நடைமுறையிலில்லை, மாடு செத்துவிட்டால் அதன்மீது பினாயிலை ஊற்றி லாரியில் ஏற்றிவிடுவார்கள்” என்கிறார்.

மாட்டின் எந்தவோர் உறுப்பும் வீண் இல்லை; அத்தனையும் பொன். ஆடுதொட்டியின் சாணம் முழுவதையும் பிரபல நடிகர் ஒருவர் குத்தகைக்கு எடுத்துத் தன் தோட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார். மாடு அறுக்கும், விற்கும் தொழிலில் இஸ்லாமிய - தலித் சமூக மக்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர். மூன்று, நான்கு தலைமுறைகளாயினும் இருவருக்கும் இடையே எந்தவொரு பிணக்கும் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் மாடு அறுக்கும் இடத்திற்குக் காரில் வந்த பிராமணப் பெண், காச நோய்க்கு என்னென்னவோ மருத்துவம் பார்த்தேன் ஒன்றும் சரியாகவில்லை என்று புலம்பியுள்ளார். கடைசியில் மருத்துவர் அப்பெண்ணை இங்கு அனுப்பியுள்ளார். மாட்டைக் கடவுளாகக் கும்பிடும் அப்பெண், மாட்டின் பச்சை ரத்தத்தைப் பல்லைக் கடித்துக் குடித்ததோடு, கடந்த வாரம் நோய் குணமானதைத் தெரிவித்து ரத்தம் கொடுத்த பெண்ணைக் கும்பிட்டு நன்றி தெரிவித்ததோடு மாட்டின் ரத்தம் தோய்ந்த தொட்டியின் மண்ணைத் தொட்டு வணங்கியும் சென்றுள்ளார்.

மாநகரின் பல்வேறு இடங்களுக்கும் இறைச்சியை விநியோகிக்கும் ஆடுதொட்டியின் சுற்றுச்சூழல் மிகவும் துயர் படிந்துள்ளது. மேலும், இது அழுகிய நகரமா எனவும் எண்ணத் தோன்றுகிறது.

எங்கும் விலங்கின் சதைகளும் எலும்புகளும் மண்ணோடு மண்ணாகக் கலந்து போவதற்கு இடமின்றித் தேங்கியுள்ளன. இக்கழிவுகளுக்கிடையேதான் விலங்குகளை அறுப்பதும் வியாபாரம் நடத்துவதும் நடக்கின்றன. டிக்காஸ்டர் சாலை முழுவதும் விதவிதமான பிரியாணிக் கடைகளும் ஏராளமான இறைச்சிக் கடைகளும் உள்ளன. ஆடுதொட்டியைச் சுற்றியுள்ள வீடுகள் விலங்குகளின் அழுகிய வாசத்திற்குப் பழகிவிட்டன போலும். இங்குள்ளோர் கேட்பதற்கு நாதியற்ற மக்களாய்ப் போயுள்ளனர். உதாரணமாகச் சமீபத்தில் பெய்த மழைக்கு மின்மாற்றியின் கீழ்ப் பகுதி மழைநீரில் மூழ்கியிருந்தது. ஆடுதொட்டியின் கிழக்குப் பகுதியில் உள்ள சாலையில் இருபுறமும் எலும்பும் தோலும் நிறைந்த சகதி நீண்ட காலமாய் அகற்றப்படாமல் தேங்கியுள்ளது.


மாநகரின் பல பகுதிகளில் சாலை ஓரம் குப்பையற்ற மண்ணைச் சுரண்டும் தொழிலாளர்களை நாம் பலமுறை பார்த்திருப்போம். என்னவென்று விசாரித்தால் அமைச்சர் வருகிறார் என்பார்கள். இன்னும் சில இடங்களில் சாலையின் மத்தியில் உள்ள புல்வெளிகளுக்குக் களையெடுத்தல், நடைபாதைக்கு வண்ணம் பூசுதல் போன்ற வேலைகளையும் அவ்வேலைகளை மேற்பார்வையிடும் மேலதிகாரிகளையும் பார்த்திருப்போம். இப்போது பெண் துப்புரவுப் பணியாளர்கள் விடிய விடிய சென்னை மாநகரையே சுத்தம் செய்த வண்ணம் உள்ளனர். இவ்வாறான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும்போது, ஆடுதொட்டியின் உள்ளும் புறமுமுள்ள கழிவுகள், குப்பைகள் மட்டும் ஏன் மாதக் கணக்கில் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன.

இடிந்து விழும் சுவர்களைப் புனரமைப்புச் செய்து புதிய கட்டடங்களை ஏன் கட்டித்தரவில்லை. மேற்கூரையுடன் சுவர் இடிந்து விலங்குகளும் மனிதர்களும் பலியானால்தான் இதற்கு அரசு செவி சாய்க்குமா? எந்தவித அக்கறையில்லா அரசுகள் வெறுமனே வாக்குச் சீட்டுகளாக மட்டுமே புளியந்தோப்பு மக்களை எண்ணுவது பேரவலம் அல்லவா?  

புளியந்தோப்பை விட்டு ஏதேதோ காரணங்களுக்காக எங்கெங்கோ சென்றுகொண்டிருக்கிறேன். ஆனால், என் உடலெங்கும் அழுகிய விலங்கின் நாற்றம் வீசியபடி இருக்கிறது. சிற்சில சமயங்களில் அந்நாற்றம் நாசியின் நுனியில் ஒட்டி வெளிப்படுவதான உணர்வு மேலிடுகிறது!


அருஞ்சொல் இணைய இதழில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம். அருஞ்சொல் லின்க் இங்கு இணைத்துள்ளேன்.

https://www.arunchol.com/panchothi-on-aaduthotti-and-beef

Monday, November 7, 2022

என்னை நன்றியுள்ளவனாக்கு இயற்கையே!


நாம் மிகவும் நேசிக்கக்கூடியவர்களின் ஒவ்வோர் அசைவையும் அவர்கள் அடையும் உயரங்களையும் கண்டு நெகிழ்ச்சியடைந்து அவர்கள் மேற்கொள்ளும் பயணத்திலுள்ள சாதக பாதகங்களைப் பகிர்ந்து அவர்களின் நலம்விரும்பியாக இருப்போம். ஆனால், அவர்கள் நம்மீது சிறு அடிப்படைப் புரிதலுமின்றி இருப்பார்கள். தெரிந்தும் அவர்களின் மீது தொடர்ந்து அன்பு செலுத்திவருவோம். அவர்களும் தொடர்ந்து நம்மைச் சந்தேகத்திற்கு உட்படுத்தி, யூகங்களால் நம்மை மதிப்பிட்டபடியே இருப்பார்கள். மேலும் மேலும் இவர்களின் அன்பைப் பெற நடத்தைச் சான்றிதழை நெற்றியில் ஒட்டியபடி வாழ நேரிடும். இன்னும் சிலர் சாதிச் சான்றிதழைக் கண்டு நெருங்குவார்கள். மாறாக ஒருவரின் நடத்தை, சாதி இரண்டையும் பொருட்படுத்தாமல் எங்கோ இருக்கும் ஒரு சாமானியரை, வாழ்வின் விளிம்பில் தத்தளிப்பவரை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லவேண்டுமென்ற அரிதான உறவையும் கண்டிருப்போம். என் வாழ்வில் ஓர் அரிதான உறவுதான் எழுத்தாளர் கே.வி.ஷைலஜா. 

2015 ஆம் ஆண்டின் மத்தியக் காலத்தில் கணையாழியில் வேலை செய்த போது வேறு எந்தப் பத்திரிகை அலுவலகத்திலும் வேலை தேடிச் சென்றது கிடையாது. அங்கு பணிநீக்கம் செய்த பிறகு இதைவிட நல்ல இடத்தில் வேலைக்குச் சேர வேண்டும் என்கிற வைராக்கியம் உதித்தது. இப்போதும் கணையாழிதான் என் முதல் பள்ளி. ம.இராசேந்திரன்தான் என் முதல் ஆசிரியர் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. திடீர் திருமண வாழ்வை எதிர்கொள்ள முடியாது தத்தளித்த போதுதான் கணையாழியில் பணிக்குச் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. மேலும், வியாபாரமா இலக்கியமா என்கிற குழப்பம் வேறு. இரண்டிற்கும் தீர்வு சொன்னது கணையாழிதான். ம.இராசேந்திரன் சக மனிதன் மீது செலுத்தும் அன்பும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கிடையே இருக்கும் அந்நியோன்னியமும்தான் என் இல்லற வாழ்விற்குத் தெளிவைக் கொடுத்தது.  

மகன் மீகாமன் பிறந்த தருணத்தில் மிகத் தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருந்தேன். பொருளாதார நெருக்கடியின் போது நண்பன் ஆன்மன் போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். மிகவும் துயருற்ற சமயத்தில் என் மகனை நினைத்து ஒரு கவிதை எழுதி முகநூலில் பதிவிட்டிருந்தேன். அதைப் படித்த கவிஞர் பீனிக்ஸ் ஷைலஜாவிடம் சொல்லி இருக்கிறார். பச்சோந்தியைக் கூப்பிடுங்க அவனுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஷைலஜா - பவா சொன்னதாக பீனிக்ஸ் என்னிடம் தெரிவித்தார். யார் அழைத்தும் அவ்வளவு எளிதில் அடைக்கலம் தேடிச் செல்ல விருப்பமில்லாதவன் ஷைலஜா, பவா இருவரின் அன்பில் அடைக்கலமானேன். அதற்குமுன் வம்சி புத்தகக் கடை வீட்டிற்கு மாறிய போது நண்பன் ம.நவீனுடன் அங்கு சென்றிருக்கிறேன். அந்நிகழ்வில்  எழுத்தாளர் பிரபஞ்சன் 360 டிகிரியில் தன் மென்னுரையை ஆற்றிக்கொண்டிருந்தார். ஓலையின் அடியில் இளஞ்சிவப்பு வெளிச்சத்தில் அமர்ந்தபடி அவரின் பேச்சை ரசித்துக்கொண்டிருந்தேன். அருகில் கிருஷ்ண மூர்த்தி, ஷபி இருவரும் அமர்ந்திருக்கத் தங்களை அறிமுகம் செய்துகொண்டோம். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் என் முதல் நூலான 'வேர்முளைத்த உலக்கை'க்கு திருவண்ணாமலை அடிவாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் சிறப்புரையாற்றிய இந்நிகழ்வுக்கு ஷைலஜா, பவா இருவரும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். அந்நிகழ்வின் ஏற்புரையில்கூட நான் சுமாராகத்தான் பேசியிருந்தேன். இப்படி எந்த நெருக்கமுமில்லாத என்னை அழைத்துத் தங்கள் வீட்டில் தங்கவைத்து வம்சி பதிப்பகத்தில் வேலை கொடுத்தார்கள். அதுவும் வேறு வேலை கிடைக்கும்வரை வருமானம் கிடைக்கச் செய்ததுதான். ஒரு சமயம் விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் தனக்குத் தெரிந்தவர்தான் அவரிடம் உனக்கு வேலை கேட்டுப் பார்க்கிறேன் என்றார் ஷைலஜா. சொன்னதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து என் வேலை குறித்து அவ்வப்போது அவருக்கு நினைவூட்டினார். மாதங்கள் உருண்டோட நம்பிக்கையற்ற ஒரு பொழுதில் சென்னையிலுள்ள ஒரு புத்தகக் கடைக்கு என்னை நேர்காணலுக்கு அனுப்பினார் பவா. அங்கு மிகக் குறைவான சம்பளம் தருவதாகச் சொன்னதால் நான் மறுப்புத் தெரிவித்துவிட்டேன். 

இடைவிடாத நம்பிக்கையுற்ற ஷைலஜா கவலைப்படாத பச்சோந்தி விகடனில் உறுதியாகக் கிடைக்கும் என்று நம்பிக்கையளித்து ஆற்றுப்படுத்தினார். ஓர்நாள் அந்தக் காத்திருப்புக்கு அர்த்தம் கிடைக்கும் வகையில் ரா.கண்ணன் உன்னைச் சந்திக்க வரச் சொல்லியிருக்கிறார் என்று சொன்னதும் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தேன். அதற்கு முன்பு `இவன்தான் பாலா' போன்ற தொடர் படித்திருந்தாலும் ரா.கண்ணனின் முகம்கூட எனக்குத் தெரியாது என்று இப்போது சொல்வதில் வெட்கமாகத்தான் உள்ளது. என் முதல் நூலையும் அடுத்து வரவிருந்த நூலின் பிரின்ட் அவுட்டும் கூடவே கணையாழி, தமிழ் ஸ்டூடியோ `கூடு'வில் வெளியாகியிருந்த இரண்டொரு கட்டுரைகளின் நகலுடன் ஆனந்த விகடன் வரவேற்பறையில் காத்திருந்தேன். 

சட்டென்று என்னைப் பார்த்த ஒருவர் நான்தான் கண்ணன் வாங்க பாஸ் என்று கண்ணாடிச் சுவர்களாலான சிற்றறைக்கு அழைத்துச் சென்றார். மிகக் குறுகிய நேரம்தான் என்னிடம் பேசினார். உங்க பெயர் ரொம்ப unique ஆக இருக்கே அதென்ன பாஸ் பச்சோந்தி என்று ரா.கண்ணன் கேட்கச் சட்டென்று mother of god என்று பதிலளித்தேன். இதற்கு முன்பு என் புனைபெயர் குறித்து இவ்வளவு நேர்மறையாக யாரும் என்னிடம் கேட்டதில்லை நானும் இப்படி பதில் சொன்னதில்லை. இதுவரை யாருக்குமே சிபாரிசு செய்யாத ஷைலஜா உங்களை அனுப்பியிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கட்டாயம் ஏதோ உங்களிடம் இல்லாமல் அனுப்பியிருக்கமாட்டார். ஆனால், உங்களைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது, தெரிந்துகொண்டு அழைக்கிறேன் என்று அனுப்பிவைத்தார். 

ஒரு நாள் அழைத்துத் தேர்வு வைத்தார்கள். ரவிபிரகாஷ்தான் அத்தேர்வை நடத்தினார். வெண்ணிறத் தலைமுடியுடன் இந்தியன் தாத்தாவைப் போல் தோற்றத்திலும் குரலிலும் மிரட்டலாக இருந்த இவர்தான் பின்னாளில் ஆனந்த விகடனில் எனக்கு மிக ஆதர்சமாக இருந்தார். 

தான்தோன்றித்தனமாக, திக்கற்ற திசையில், இது இரவா பகலா என அறியாது பயணித்துக்கொண்டிருந்த என் வாழ்வில் மாபெரும் தீபத்தை ஏற்றினார் ஷைலஜா. வேலைக்குச் செல்லுமுன் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வந்துவிடக் கூடாது எதுவாக இருந்தாலும் முதலில் எங்களிடம் சொல்லு பச்சோந்தி பிறகு நாம் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று பவாவும் ஷைலஜாவும் என்னைத் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு அனுப்பிவைத்தனர். விகடனில் வேலை செய்த 2016 டிசம்பர் முதல் 2020 ஜுன் வரை எந்தப் புகாரும் அவர்களிடம் சொன்னதில்லை. ஏன் அதன்பிறகு திருவண்ணாமலைக்கே ஒருமுறைதான் சென்றேன். அதுவும் என்னுடைய இரண்டாவது கவிதை நூலான `கூடுகளில் தொங்கும் அங்காடி' நூல் வெளியீடு நிலத்தில் நடைபெற்ற போது சென்றதுதான். அதன்பிறகு அவ்வப்போது ஷைலஜா, பவாவுடன் பேசவுமில்லை. 

ஆனந்த விகடனில் என் பணியை நிரந்தரமாக்க, என்னை நீரூபிக்க மிகக் கடுமையாகப் போராடினேன். ஆரம்ப காலத்தில் தேநீர் குடிக்கக் கூட வெளியில் வந்ததில்லை, மதிய வெயிலைப் பார்த்ததில்லை. முதல் சந்திப்பின் போது விகடன் மனிதவள மேம்பாட்டுத்துறையைச் சேர்ந்த புவனேஸ்வரி ஏன் விகடனைத் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டார். பத்திரிகைத் துறைக்கு இது ஒரு பல்கலைக்கழகம் என்றேன். எங்கோ ஒரு மூலையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த என்னை விகடன் போன்ற பல்கலைக்கழகத்தில் படிக்கவைத்தவர் எழுத்தாளர் ஷைலஜா. அவரை அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதைத் தவிர எந்நன்றியும் அவருக்குச் செய்ததில்லை. ஷைலஜாவின் இப்பிறந்தநாளில் என்னை நன்றியுள்ளவனாக்கு என்று இயற்கையிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.



Tuesday, October 18, 2022

பழைய வாழ்வை மீட்கிறேன்

 


2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி பீஃப் கவிதைகள் எழுதி முடித்தேன். அதன் பிறகு பல்வேறு சூழலால் தொடர்ந்து கவிதைகள் எழுத இயலவில்லை. இடையிடையே கவிதைக்கான மனநிலை நிலவினைப் போல் வளர்வதும் தேய்வதுமாக இருந்தது. நான் வளர்பிறையைத் தேய்பிறையிலும் தேய்பிறையை வளர்பிறையிலும் மாறி மாறி உணர்ந்தவாறே இருந்தேன். எண்ணிலிறந்த பௌர்ணமிகளும் அமாவாசைகளும் கடந்து சென்றன. பழைய வாழ்க்கையை மீட்கும் போராட்டத்தில் எழுதுவதை மறந்தேன். ஒருமுறை ஷங்கருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது படைப்புலகில் தொடர்ந்து பலர் இயங்குவதைக் குறிப்பிட்டேன். என் வருத்தத் தொனியைப் புரிந்த அவர் ``கவலைப்படாதீங்க பச்சோந்தி, இடைவெளிவிட்டு எழுதும் போது அது வேறொன்றாக இருக்கும்'' என்றார். சில முறை பீஃப் கவிதைகளுக்குப் பிறகு என்னால் எழுத முடியுமா என்கிற சந்தேகமும் எழுந்ததுண்டு. ஏப்ரல் 2022 வரை இப்படித்தான் கடந்தது. ஒருநாள் நடைப்பயிற்சிச் செய்யும் போது திணைகள் இதழுக்கு உங்களின் கவிதைகள் வேண்டும் என்றார் ஷங்கர். நான் திகைத்தபடி நின்றதைக் கண்டு ``எனக்காக எழுதுங்கள்'' என்று கெஞ்சலுடன் சொன்னார். கொஞ்சம் கொஞ்சமாக எழுதும் மனநிலைக்குத் தயாராகிக்கொண்டிருந்த மனதிற்கு  ``எனக்காக எழுதுங்கள்'' என்னும் ஷங்கரின் சொற்கள் உத்வேகமளித்தன. 

ஒருமுறை அண்ணாசாலையிலிருந்து கலை விமர்சகர் ஜமாலனைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தேன். அண்ணா திரையரங்கம் அருகே நடந்துகொண்டிருந்த போது வெ.நி.சூர்யாவுடன் போனில் பேசினேன். என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என அவர் வினவினார். அக்காலகட்டத்தில் இவ்வாறான கேள்வியைக் கேட்பவரிடம் ``கடுமையான  பொருளாதார நெருக்கடி எதுவும் எழுதவில்லை'' என்கிற template ஆன பதிலைச் சொல்லி வந்ததையே சூர்யாவிடமும்  சொன்னேன். அப்படியென்றால் அதை எழுதுங்கள் என்றார். சூர்யாவின் பதிலில் என்னை நானே ஏமாற்றிக்கொண்டு வருடங்களை வீணடித்தாகத் தோன்றியது. அந்நேரத்தில் மிக நெருங்கிய நண்பர் ஒருவர் ஏற்படுத்திய அவமானம், வலி என்னை முரட்டுத்தனமான வாசிப்புக்குள் தள்ளியது. தொடர்ந்த வாசிப்பினுடே சிறிய பயணத்தை யதேச்சையாக மேற்கொள்ள நேர்ந்தது. அப்படியான பயணத்தில் எழுதிய முதல் கவிதையை ஷங்கர், வெ.நி.சூர்யா, பெரு விஷ்ணுகுமார் மூவருக்கும் அனுப்பினேன். மூவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் வெ.நி.சூர்யா தலைப்பை மாற்றலாம் என்கிற ஆலோசனை சொன்னார். அந்நேரத்தில் தனிமை வெளி இதழுக்குக் கவிதைகள் வேண்டுமென்று பிரவீண் பஃறுளி கேட்கத் தலைப்பைக்கூட மாற்றாமல் அனுப்பி வைத்தேன். லேஅவுட் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் `நடனமற்றுத் தரையிறங்கும் ஆகாயம்' என்னும் தலைப்பைத் தனிமை இதழின் ஆசிரியர் குழுவுக்கு அனுப்பிய கையுடன் சூர்யாவுக்கும் அனுப்பினேன். அவருக்குத் தலைப்பு பிடித்திருந்தது. முதலில் கவிதைகள் கேட்ட ஷங்கருக்குக் கவிதைகள் அனுப்பவில்லையே என்கிற குற்றவுணர்வு என்னுள் எழுந்தது. திணைகள் இதழ் பணி தொடங்க இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும் அதற்குள் எழுதித் தாருங்கள் என்று ஷங்கர் கேட்டதற்கு இணங்க அடுத்தடுத்து எழுதிய ஏழு கவிதைகளை அனுப்பினேன். 

விகடனில் இருந்து கிடைத்த பணத்தில் கடன் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டதாக ஒருமுறை பெரு விஷ்ணுகுமாரிடம் கூறினேன். அப்போது அவர் ``அவ்வளவுதான் ப்ரோ மீண்டும் பழையபடி இயங்க ஆரம்பியுங்கள்'' என்றார். இப்படி எனக்குள் இருந்த என்னை மீட்ட ஷங்கரை, சூர்யாவை, விஷ்ணுவை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். ஆமாம் பழைய வாழ்க்கையை மீட்கத் தொடங்கியுள்ளேன். தனிமை, திணைகள் இதழ்களை அடுத்து தற்போது `அகநாழிகை கலை இலக்கிய இதழ்' இல் `உப்பலையும் கரையும் மாநகரம்', `ஒயினென்ற வார்த்தையைக் குடித்தல்', `மண்டையோடுகளின் பறையிசை' என்னும் தலைப்பிலான பச்சோந்தியின் மூன்று கவிதைகள் வெளிவந்துள்ளன. அகநாழிகை இதழுக்கும் அதன் ஆசிரியர் பொன் வாசுதேவனுக்கும் மிக்க நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அகநாழிகை கலை இலக்கிய இதழில் வெளியான மூன்று கவிதைகள்


உப்பலையும் கரையும் மாநகரம்



ஒயினென்ற வார்த்தையைக் குடித்தல்





மண்டையோடுகளின் பறையிசை

Sunday, October 9, 2022

சுஜாதாவின் பச்சோந்தியும் அன்னப்பறவையும்

 


அறிவியல் புனைவுகளின் மேல் தீரா மோகம் ஏற்பட்டுள்ளது. அறிவியல் புனைவு புரியவேண்டுமென்றால் அறிவியல் என்றால் என்ன என்கிற அடிப்படைப் புரிதல் வேண்டும். இரண்டையும் அறியும் வேட்கையில் இருக்கிறேன். ஒரு பனுவலைப் படித்துப் புரிந்துகொள்வதைவிடக் காட்சியின் மூலம் உணர்தல் மிக எளிது என்பதால் சினிமாக்களைப் பார்க்க ஆரம்பித்தேன். ஏற்கெனவே Gravity, Avatar போன்ற படங்கள் பார்த்திருந்தாலும் கிறிஸ்டோபர் நோலனின் Inception, Interstellar பார்த்த பிறகு இந்த உலகை அறிவியல் நோக்குடன் பார்க்கும் விதம் முற்றிலும் மாறியது எனலாம். அதற்குக் காரணம் படங்கள் பார்க்கப்பட்ட காலகட்டமே. ஒருநாள் be4books சென்றிருந்த போது அறிவியல் புனைவு திரைப்படங்கள் பார்த்துக்கொண்டிருப்பது குறித்துக் கவிதைக்காரன் இளங்கோவிடம் சொன்னேன். அவர் utopia and eutopia என்னும் சொற்களின் அர்த்தங்களை google இல் தேடிப் பாருங்கள் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்தும் என்றார். தேடிப் படித்தேன் புரிந்தும் புரியாமலும் இருந்ததால் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் செய்தி அனுப்பினேன். பெருவிஷ்ணுகுமார் ஒரு லின்க் அனுப்பி இருந்தார், அதற்குள் நேசமித்திரன் மிகத் தெளிவான பதிலை அனுப்பி இருந்தார். பிறகு அறிவியல் சார்ந்த கதை, கட்டுரைகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். அவற்றில் ஒன்றாக சுஜாதாவின் `ஏன், எதற்கு, எப்படி'. 

இன்று அப்பனுவலைப் புரட்டிக்கொண்டிருக்கையில் பின்பக்கம் இருந்த சப்ஜெக்ட்ஸ் இல் இடம்பெற்ற பச்சோந்தி என்னும் சொல் கண்ணில்பட்டது. பச்சோந்தி என்றதும் உங்களுக்கு என் நினைவு வரலாம், பலருக்குத் தன்னையேகூட நினைவு வரலாம். ஆனால், இந்தப் பச்சோந்தி `விலங்கு... பறவை... பூச்சி...' என்னும் உப தலைப்பின் கீழ் இருந்தது. 164 ஆம் பக்கத்திற்குத் தாவினேன். `பச்சோந்தியின் நெர்வஸ் சிஸ்டத்தில் இருக்கிறது நிறம் மாறும் சூட்சுமம்' என்று தன் பதிலில் கூறியிருந்தார் சுஜாதா. மேலும்,  அபாயம் வந்தால் மட்டுமல்ல... வெளிச்சம், உஷ்ணம், எண்ண ஓட்டம் இப்படிப்பட்ட சங்கதிகளுக்கும் பச்சோந்தி தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் என்பது மிகவும் உற்சாகமாக இருந்தது. இதில் என்ன உற்சாகம் என நீங்கள் கேட்கலாம் பச்சோந்தி என்று பெயர் வைத்ததால் அதன் பின்னுள்ள லாபநஷ்டங்கள் பச்சோந்திக்கே தெரியும். அதைப் பின்னொரு சமயத்தில் விரிவாக எழுதுகிறேன்.

மாலை 5.30 மணியளவில் குருதிபலி செந்திலைப் பார்க்கச் செல்லும் போது ஏன், எதற்கு, எப்படி, மார்கழி பாவியம் ஆகிய இரண்டு நூல்களையும் கையில் எடுத்துச் சென்றேன். கையில்தான் இரண்டு ; பையில் இன்னும் இருந்தன. எங்கு சென்றாலும் கையிலும் முதுகிலும் புத்தகங்கள் சுமந்து சில நேரங்களில் அயர்ச்சியடைவது உண்டு. ஆனால், அந்தச் சுமையோடு அலைந்து திரிவதுதான் என் பலம். சிம்ஸன் சிக்னலில் 29A பேருந்தில் ஏறி பைகிராஃப்ட்ஸ்  சாலையில் இறங்கினேன். கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டிருந்த செந்திலுக்கு வணக்கம் சொன்னதும் கைகளை இறுகப் பற்றி வாங்க பச்சோ என்றார். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று  `ஏன், எதற்கு, எப்படி' பனுவலைப் புரட்ட ஆரம்பித்தேன். அதில் இடம்பெற்ற பாலையும் நீரையும் அன்னப்பறவை பிரிக்காது என்னும் பதில் குறித்து சற்று நேரம் கழித்துச் செந்திலிடம் பேசினேன். பாலையும் நீரையும் பிரிக்கும் என்பதை நேரிடையான அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளாமல் அறிவியல்பூர்வமாக நீர் கலந்ததா, கலக்காததா என்பதை வாசனை, சுவையின் மூலம் அன்னப்பறவை அறியும் என்பதாகப் புரிந்துகொள்ளலாம் என்றார். இந்தப் பதில் ஒருவகையில் தர்க்கரீதியாகப்பட்டது. பிறகு அன்னம் என்கிற சொல் முதலில் சோற்றுப் பருக்கைக்கு வந்ததா இல்லை அன்னப்பறவைக்கு வந்ததா என்னும் கேள்வியுடன் இரண்டும் வெண்மை நிறமுடையது என்பதால் இப்படிக் கேட்கிறேன் என்றார். சற்று யோசித்து பறவை, பருக்கை இரண்டில் பறவைதான் முதலில் தோன்றியது. எனவே அன்னம் என்பது பறவைக்குத்தான் முதலில் இருந்திருக்கும் என்றேன். ஆந்திராவில் அன்னம் என்னும் சொல் இன்னும் பேச்சு வழக்கில்  இருப்பதைச் சுட்டிக்காட்டினார். 

அன்னத்திலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்ற செந்தில் த்ரீ என்னும் ஆங்கிலச் சொல் சமஸ்கிருதத்தில் இருந்துதான் கையாண்டிருக்க வேண்டும் என்பதை `திரிசூலம், திரிகடுகம், திரிலோகாதிபதி என்னும் சொற்களின் உதாரணத்துடன் கூறினார். சமஸ்கிருதம் படித்தவன் என்கிற முறையில் ஏகம், த்வீ, த்ரீணி, சத்வாரி, பஞ்ச, ஷட், சப்த, அஷ்ட, நவ, தச, ஏகாதச என்று சொற்களில் ஓட ஆரம்பித்து த்ரீணி சொல்லுக்கு மீண்டும் ஓடிவந்தேன். அட ஆமா செந்தில் அப்படியும் இருக்கும் அல்லவா என்றேன். நிலம், கடல் என எல்லை தாண்டும் சொற்கள் எத்தனை வியூகங்களை வகுக்கின்றன. 

Thursday, October 6, 2022

ரமேஷ் பிரேதனின் ` பட்டாம் பூச்சி'யை வாசித்தல்

Pinterest


நேற்று மாலை அலுவலகம் முடிந்ததும் நண்பர் செந்தில்குமாரைச் சந்திக்கச் சென்றேன். இவர் திருவல்லிக்கேணியில் உள்ள பைகிராஃப்ட் சாலை நடைமேடையில் புத்தக்கடை நடத்தி வருகிறார். தன் அப்பாவின் மரணத்திற்குப் பிறகு அவர் மேற்கொண்ட பணியைக் கடந்த 25 ஆண்டுகளாகச் செய்துவருகிறார். பத்து நாட்களாகத்தான் செந்திலைத் தெரியும். நான்கைந்து நாட்களாக தினசரி சந்தித்து வருகிறோம். இதற்கு முன் தினசரி சந்திப்பு என்பது வெய்யில் மற்றும் ஷங்கரராமசுப்பிரமணியம் இருவருடன்தான். வெய்யிலுடன் ஆறு மாதங்களுக்குள்ளும் ஷங்கருடன் ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளும் தினசரி சந்திப்பு முடிவுக்கு வந்துவிட்டது. வேறு யாரையும் சந்திக் கூடாது என்றெல்லாம் இல்லை, கடந்த 24 ஆண்டுகளாகச் சென்னை வாழ்க்கையை ஏக்கத்துடனும் பசியுடனும் அறியாமையுடனும் ஏகாந்தமாய் வாழப் பழகிவிட்டேன். அவ்வளவுதான். 

ஐந்து நாட்களில் முதல் மூன்று நாட்கள் அந்தரங்கமான விசயங்களை மட்டும் பகிர்ந்தோம். விஜயதசமி அன்று கடை விடுமுறை என்பதால் நண்பகல் நேரத்தில் அழைத்திருந்தார். நல்லதம்பி தெருவுக்கு வரவழைத்து வாலஜா சாலையில் தேநீர் அருந்தியபடி உரையாடினோம். இன்று மாலை வெளியில் செல்லலாமா என்றேன். யாரும் செல்லத் தயங்கும் இடத்திற்குச் செல்லலாமா என்றேன். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க எங்க போக வேண்டுமென்று மட்டும் சொல்லுங்கள் நான் அழைத்துச் செல்கிறேன் என்றார். Broken Bridge ஐப் பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை அங்கு அவ்வளவு எளிதாக உள்ளே போக முடியாது என்று நண்பர் சொன்னதாகக் கூறினேன். அந்த இடம்பற்றித் தெரியவில்லை ஆனாலும் போகலாம் என்றார். வெறுமனே வேடிக்கை பார்ப்பதும் சொந்த விசயங்களைப் பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல் ஏதாவது வாசிக்க வேண்டும் என்று மனதில் தோன்ற `மார்கழி பாவியம்', `மர்ம நபர்' கவிதைத் தொகுப்புகளை அவரிடம் கூடச் சொல்லாமல் எடுத்துச் சென்றேன். காமராஜர் சாலையைக் கடந்து நொச்சிக்குப்பக் கருவாட்டுக் காற்றின் உப்பை நுகர்ந்தபடி சென்றோம். Broken Bride சென்று வந்த அனுபவத்தைப் பிறகு பகிர்கிறேன். இரவு 9.30 மணிக்குச் சாம்ராஜைச் சந்திக்க செந்தில் செல்ல இருந்ததால் 8.30 க்கு இருவரும் கிளம்புவதாக முடிவெடுத்தோம். 

பெசன்ட் நகரில் இருந்து மைலாப்பூர் கிரி ட்ரேட்க்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு மெரினா நோக்கி வந்தோம். கவிதை வாசிக்கலாம் என்று முடிவெடுத்துக் கடற்கரைக்குள் சென்றோம். விண்மீனற்ற வானின் கீழ் சோளப்பொறிகள் வாட்டும் அடுப்பிலிருந்து தீச்சிறகுகள் பறந்தவண்ணமிருந்தன. செம்மஞ்சள் நிற உச்சி விளக்கின் ஒளியில் தேவதச்சனின் கவிதைகள் ஒன்றிரண்டை வாசித்தோம். வழக்கமாக தனியே ஒரு கவிதையை வாசிக்கையில் தனிமனிதச் சிந்தனையோடு அதாவது ஒற்றைத்தன்மையோடு முடியும். அரிதான பொழுதுகளில் ஒருவரின் பன்முகத்தன்மையும் வெளிப்படும். ஆனால், இது என்ன சொல்கிறது நாம் என்ன புரிந்துகொண்டோம் என்பதைக் கலந்து பேச நினைக்காமல் அடுத்தடுத்த கவிதைகளுக்குத் தாவிவிடும் தட்டையான வாசிப்பிலேயே முடிவடையும். இது புரியவில்லையே என்று யாரிடமாவது கேட்கலாம் என்றால் கவிதைக்கு விளக்கமெல்லாம் கேட்கப் படாது என்று முட்டுக்கட்டை போட்டு விடுவார்கள். அதற்கு நேர்மாறாக செந்தில் இருந்தார். ஒரு கவிதை வாசித்தால் அது என்ன சொல்கிறது என்று உங்களுக்குத் தெரிந்ததை நீங்க சொல்லுங்க, எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன் என்று முடிவெடுத்துக்கொண்டோம்.

தேவதச்சனின் சில கவிதைகளை வாசித்து பிறகு ரமேஷ் பிரேதனின் `கவையில் தேனடை' கவிதையை வாசித்தோம்.

கவையில் தேனடை

என் நண்பனின் திருமணத்தில் பங்கேற்க இயலவில்லை. பாரீசிலிருந்து புதுவை வந்து தேனிலவு முடித்து ஊர் திரும்பிய தம்பதியரைச் சந்தித்து வாழ்த்தி தேன் பாட்டிலைப் பரிசளித்தேன். அவன் `ஙே' என்று விழித்தான். அவள் வெட்கத்துடன் சமையலறைக்கு எடுத்துச் சென்றாள். விடைபெறும் போது நண்பனின் காதில் தேனில் பட்டாம்பூச்சியை ஊறவைத்துத் தின்றால் இல்லற சுகம் கூடும், இது பிரெஞ்சு முறை என்றேன். 

நான் பாரீசுக்குத் திரும்பி ஒரு மாதம் கழித்து நண்பனின் மனைவி தொலைபேசியில் அழைத்தாள்; அவன் பட்டாம்பூச்சிகளை வேட்டையாடப் பூங்காக்களே கதி என்றிருக்கிறானாம்.

நான் தலையில் அடித்துக்கொண்டேன். அவள் உடைபட்ட கண்ணகியின் சிலம்பு போலச் சிரித்தாள். காதில் தேன் வந்து பாய்ந்தது. 

இக்கவிதையை வாசிக்கும் முன்பே தலைப்பை மட்டும் கேட்ட செந்தில் `கவை என்றால் என்ன' என்றார். நானும் `ஙே' என்று விழித்தேன். இதற்கும் இக்கவிதையைப் பலமுறை வாசித்து இதன் உள்ளிருக்கும் அறியாமையை, எள்ளலைப் பலமுறை ரசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் கவை என்னும் சொல் கவ்வை என்பதாகப் புரிந்துகொண்டேன். ஊரில் உண்டிக்கோலைக் கவ்வான் என்றும் வேலி அடைக்க வெட்டிய முட்களை அள்ளும் V வடிவ மரக் கருவியைக் கவ்வை என்று அழைப்போம். அதன் பொருளியே புரிந்திருந்தேன். ஆனால், அர்த்தமென்ன என்று கேட்டதும் திடுக்கிடல் உண்டானது. சில சொற்களின் சித்திரம் அல்லது ஒலி நன்கு அறியப்பட்டது போல் மயக்கம் தருமல்லவா. பொது வெளியில் நாம் அன்றாடம் பார்க்கும் முகம் அல்லது மரம், செடி, பூ எல்லாம் நமக்கு நன்கு பரிச்சயமானவைதாம். ஆனால், பெயரென்ன என்று கேட்டால் திருதிருவென முழிப்போம் அல்லவா அப்படித்தான் கவ்வை என்ற சொல்லைத் தாண்டி வேறெதுவும் சொல்ல இயலவில்லை.  


செந்தில்குமார்

உடனே google இல் தேட செல்போனை எடுத்தேன். உடனே அகராதியைத் தேடாமல் கொஞ்ச நேரம் மனதிற்குள் அசைபோடுங்க விடை கிடைக்கும் என்றார் செந்தில். ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருக்கும் ஏதாவது ஒன்றில் பொருந்திப் போகிறா என்று பார்ப்போம் என்றார். சொற்களை நீங்கள் சொல்லுங்கள் சரியா இல்லையா என்று நான் சொல்கிறேன் என்றேன். கவைக்கு உதவாது என்று சொல்வார்கள் அல்லவா என்றதும் ஆமாம் அந்தப் பொருளில்தான் வரும் எதுக்கும் உதவாத செயலைச் செய்பவனைத்தான் குறிக்கும் என்றேன். சரி என்றால் உங்களின் திருப்திக்காக அகராதியைத் தேடுங்க என்றார். மரக்கிளை, கவைக்கோல், கரிசனை, கோட்டை, எலும்புக்கவை, காரியம் ஆகிய சொற்களின் நடுவே `பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்' என்னும் பெரும்பாணாற்றுப் பாடல் வரிகள் கிடைத்தன. ஒருவழியாக கவிதையை வாசித்து முடித்ததும் சிரிப்பொலியில் பட்டாம்பூச்சி என்கிற படிமம் எதைக் குறிக்கிறது என்கிற அடுத்த வினாவுக்கு எதை எதையோ யோசித்து பிறகு பெரும்பாணாற்றுப் பாடலின் `அல்குல்' சொல்லில் மனம் ஊன்றியது. அல்குல் என்றால் பெண்ணின் பிறப்புறுப்பு அல்லவா, ச்சே யோனியை எப்படித் தேனில் ஊறவைப்பது இவ்வாறு மனதிற்குள்ளே யோசித்தவாறு எனக்குள்ளே வெட்கமுற்று நெளிகிறேன். 

ரமேஷ் பிரேதன் யோனியை விதவிதமாகக் கவிதையில் கட்டமைத்திருப்பார். ஒரு இடத்தில் இரண்டாக வகுந்த ஆப்பிளைப் போல் உள்ளது என்று யோனியை வருணித்திருப்பார். இயற்கையிலேயே காய்களும் கிழங்குகளும் ஆணுறுப்பு வடிவிலும் பழங்கள், இலைகள், பூக்கள் எல்லாம் பெண்ணுறுப்பு வடிவிலும் இருக்கும் என்று வாசித்து உணர்ந்திருக்கிறோம் அல்லவா. அதனால்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறேன். பட்டாம்பூச்சி சிறகு விரித்தால் திறந்த யோனியைப் போல்தானே இருக்கும். இவ்வாறெல்லாம் யோசித்து எதுவும் சொல்லாமல் கூகுளில் காட்டிய சொற்களில் ஒன்றான மரக்கிளை என்ற சொல்லை உச்சரிக்கிறேன். மரக்கிளைக்கு எதற்கு இவ்வளவு அழுத்தம் தரவேண்டுமென்று செந்தில் கேட்கிறார். இவ்வாறு இருவரும் யோசித்துக்கொண்டிருக்கையில் `பே.... ' என்று ஒரு குழந்தை பயமுறுத்தியது. ஐயோ நாங்க ரொம்பவே பயந்துட்டோம் என்றதும் அக்குழந்தை எங்களுக்கும் மேற்கே மணலில் அமர்ந்திருந்த தன் அப்பா அம்மாவை நோக்கி ஓடியது. சற்றுத் தொலைவில் ஒலிக்கும் உருமிச் சத்தத்திற்குத் தாயும் தந்தையும் மகனுமாக நடனமாடுகிறார்கள்.

இரவு 9.30 மணி ஆகவும் திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் என்னை இறக்கிவிட வந்தார் செந்தில். விடைபெற்றுத் திரும்பும் போது அந்த பட்டாம்பூச்சி என்கிற இமேஜ் என்ன என்று நாம் விடாது யோசிக்கணும் செந்தில் என்றேன். டிக்கெட் வாங்கிப் படியேறுகிறேன் செந்திலிடமிருந்து அழைப்பு, சொல்லுங்க செந்தில் என்றேன் அந்தப் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றார். என்ன அது என்றேன் ஆர்வமாக, பெண்ணின் பிறப்புறுப்பைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றார். கரெக்ட்டு நானும் அப்பவே யோசித்தேன் ஆனால் சொல்ல ஒரு மாதிரியா இருந்தது என்றேன். கூச்சத்தைக் குப்பையில எறிங்க பச்சோ என்றார். எந்தக் குப்பையில் போடுவதென்றுதான் தெரியவில்லை ஆனால் இப்படிச் சொல்ல ஒரு நண்பன் கிடைத்துவிட்டான். இனிக் குப்பையைத் தேடுவோம்.

06.10.2022

வியாழன்

Thursday, September 8, 2022

பச்சோந்தியின் 2 கவிதைகள் - தனிமை இதழில் வெளியானவை

 



நடனமற்றுத் தரையிறங்கும் ஆகாயம்


கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் நடந்துகொண்டிருந்தேன்.

இடிந்து நொறுங்கிய வீட்டின் எஞ்சிய சுவர்

வேர்களால் வேயப்பட்டிருந்தது.

அதன் மீது சாய்ந்திருக்கிறது

ஒரு முனை உடைந்த மூங்கில் ஏணி.

வெட்டுத் தழும்புகளுடன் நின்றிருக்கும் அரச மரத்தின்

பாதி உடைந்த கிளை

அக்கினி வெய்யிலில் எரிகிறது.

அந்த நெருப்பில் சுருட்டைப் பற்றவைக்கிறான்

வாயற்ற வயோதிகன்.

சுருள் சுருளாய் மேகங்கள் சஞ்சரிக்கையில்தான்

தொண்டையில் மடித்துவைத்திருந்த உதடுகள்

எட்டிப் பார்த்தன.

பழக்கூடையில் ஊன்றிய குடை

காற்றில் சாயாதபடி 

கண்ணாடி வளையல்கள் இறுக்கிப் பிடிக்க

மற்றோர் கையின் வளையலோசை

பலாச் சுளைகள் மீது அமர்ந்த ஈக்களை விரட்டுகிறது.

நடனமற்ற அரசின் பழுத்த இலை

ஆகாயத்தைத் தரையிறக்கும் பொழுதில்

ரத்தக்கறை படிந்த லுங்கியொன்று

நடைமேடை மீது தூங்கித் தூங்கி வழிகிறது.

சிலையாய் நிற்கும் ஜார்ஜ் மன்னன்

சுட்டாலும் பாதத்தை மட்டும் நகர்த்தாமல் 

மண்டையைக் கழட்டிக் கிரீடத்தைச் சொரிகிறான்.



 பத்ரியன் மலர்ச் சந்தையைப் பற்றவைத்தேன் 


பாரிமுனைப் பத்ரியன் மலர்ச் சந்தையை உரசி

சிகரெட்டைப் பற்றவைத்தேன்.

படங்களாய்க் குவிந்து கிடக்கும் கடவுள்களின் மீது

ஊதுவத்தியின் சாம்பல் படர்கிறது.

வட்டமான மூங்கில் கூடையில்

தாழம் பூக்களை அடுக்குபவனிடம்

வாசத்தை நுகரக் கேட்டேன்.

தென்னங்குருத்தைப் போன்ற இலையால்

நாசித் துளைகளை அடித்து விரட்டலானான்.

சற்றும் அசையாது

ஒரு வண்டைப் போல் சதா ரீங்கரித்தேன்.

நடுக்கமுற்ற அவன் தாய்

பூவைப் பிய்த்து என் திசை பார்த்து எறிந்தாள்.

கண்களால் கவ்விச்சென்று

மேற்கூரை இடிந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்து

முகர்ந்துகொண்டே இருந்தேன்.

நாசியின் விளிம்பில் ஒட்டிய

சாமை போன்ற மென்துகள்களை

நுனி விரலில் கிள்ளி எடுக்கப் பார்த்த போது

என் முதுகு தட்டப்பட்டது.

தட்டிய ஓசையைத் தேடினேன் 

ஆலம் விழுதுகளால் நெய்யப்பட்ட சுவர்தான் நின்றிருந்தது.

பாதி உடைந்த ஜன்னலில் எட்டிப் பார்த்தேன் 

நிழலில் காயவைத்த தாழம் பூவைப் 

பொடிசெய்யும் பசியற்ற வயிறு

வெந்நீரில் கொதித்த தாழம் பூவில்

பனைவெல்லத்தைக் கரைக்கும் தேகச் சூடு உள்ளவன் 

தாழம் பூ இலையை நெய்யில் வதக்கும் நீர்க்கடுப்பு உள்ளவன்

தாழம் பூ இலை கொதித்த நீரில் 

தொண்டையால் நீச்சலடிக்கும் தோல் நோயாளி

எண்ணற்ற நிழல்கள் 

மேற்கூரை இடிந்த சுவருக்குள்

மீண்டும் பற்றவைத்தேன்

மலர்ச் சந்தையை.

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...