Tuesday, October 18, 2022

பழைய வாழ்வை மீட்கிறேன்

 


2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி பீஃப் கவிதைகள் எழுதி முடித்தேன். அதன் பிறகு பல்வேறு சூழலால் தொடர்ந்து கவிதைகள் எழுத இயலவில்லை. இடையிடையே கவிதைக்கான மனநிலை நிலவினைப் போல் வளர்வதும் தேய்வதுமாக இருந்தது. நான் வளர்பிறையைத் தேய்பிறையிலும் தேய்பிறையை வளர்பிறையிலும் மாறி மாறி உணர்ந்தவாறே இருந்தேன். எண்ணிலிறந்த பௌர்ணமிகளும் அமாவாசைகளும் கடந்து சென்றன. பழைய வாழ்க்கையை மீட்கும் போராட்டத்தில் எழுதுவதை மறந்தேன். ஒருமுறை ஷங்கருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது படைப்புலகில் தொடர்ந்து பலர் இயங்குவதைக் குறிப்பிட்டேன். என் வருத்தத் தொனியைப் புரிந்த அவர் ``கவலைப்படாதீங்க பச்சோந்தி, இடைவெளிவிட்டு எழுதும் போது அது வேறொன்றாக இருக்கும்'' என்றார். சில முறை பீஃப் கவிதைகளுக்குப் பிறகு என்னால் எழுத முடியுமா என்கிற சந்தேகமும் எழுந்ததுண்டு. ஏப்ரல் 2022 வரை இப்படித்தான் கடந்தது. ஒருநாள் நடைப்பயிற்சிச் செய்யும் போது திணைகள் இதழுக்கு உங்களின் கவிதைகள் வேண்டும் என்றார் ஷங்கர். நான் திகைத்தபடி நின்றதைக் கண்டு ``எனக்காக எழுதுங்கள்'' என்று கெஞ்சலுடன் சொன்னார். கொஞ்சம் கொஞ்சமாக எழுதும் மனநிலைக்குத் தயாராகிக்கொண்டிருந்த மனதிற்கு  ``எனக்காக எழுதுங்கள்'' என்னும் ஷங்கரின் சொற்கள் உத்வேகமளித்தன. 

ஒருமுறை அண்ணாசாலையிலிருந்து கலை விமர்சகர் ஜமாலனைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தேன். அண்ணா திரையரங்கம் அருகே நடந்துகொண்டிருந்த போது வெ.நி.சூர்யாவுடன் போனில் பேசினேன். என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என அவர் வினவினார். அக்காலகட்டத்தில் இவ்வாறான கேள்வியைக் கேட்பவரிடம் ``கடுமையான  பொருளாதார நெருக்கடி எதுவும் எழுதவில்லை'' என்கிற template ஆன பதிலைச் சொல்லி வந்ததையே சூர்யாவிடமும்  சொன்னேன். அப்படியென்றால் அதை எழுதுங்கள் என்றார். சூர்யாவின் பதிலில் என்னை நானே ஏமாற்றிக்கொண்டு வருடங்களை வீணடித்தாகத் தோன்றியது. அந்நேரத்தில் மிக நெருங்கிய நண்பர் ஒருவர் ஏற்படுத்திய அவமானம், வலி என்னை முரட்டுத்தனமான வாசிப்புக்குள் தள்ளியது. தொடர்ந்த வாசிப்பினுடே சிறிய பயணத்தை யதேச்சையாக மேற்கொள்ள நேர்ந்தது. அப்படியான பயணத்தில் எழுதிய முதல் கவிதையை ஷங்கர், வெ.நி.சூர்யா, பெரு விஷ்ணுகுமார் மூவருக்கும் அனுப்பினேன். மூவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் வெ.நி.சூர்யா தலைப்பை மாற்றலாம் என்கிற ஆலோசனை சொன்னார். அந்நேரத்தில் தனிமை வெளி இதழுக்குக் கவிதைகள் வேண்டுமென்று பிரவீண் பஃறுளி கேட்கத் தலைப்பைக்கூட மாற்றாமல் அனுப்பி வைத்தேன். லேஅவுட் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் `நடனமற்றுத் தரையிறங்கும் ஆகாயம்' என்னும் தலைப்பைத் தனிமை இதழின் ஆசிரியர் குழுவுக்கு அனுப்பிய கையுடன் சூர்யாவுக்கும் அனுப்பினேன். அவருக்குத் தலைப்பு பிடித்திருந்தது. முதலில் கவிதைகள் கேட்ட ஷங்கருக்குக் கவிதைகள் அனுப்பவில்லையே என்கிற குற்றவுணர்வு என்னுள் எழுந்தது. திணைகள் இதழ் பணி தொடங்க இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும் அதற்குள் எழுதித் தாருங்கள் என்று ஷங்கர் கேட்டதற்கு இணங்க அடுத்தடுத்து எழுதிய ஏழு கவிதைகளை அனுப்பினேன். 

விகடனில் இருந்து கிடைத்த பணத்தில் கடன் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டதாக ஒருமுறை பெரு விஷ்ணுகுமாரிடம் கூறினேன். அப்போது அவர் ``அவ்வளவுதான் ப்ரோ மீண்டும் பழையபடி இயங்க ஆரம்பியுங்கள்'' என்றார். இப்படி எனக்குள் இருந்த என்னை மீட்ட ஷங்கரை, சூர்யாவை, விஷ்ணுவை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். ஆமாம் பழைய வாழ்க்கையை மீட்கத் தொடங்கியுள்ளேன். தனிமை, திணைகள் இதழ்களை அடுத்து தற்போது `அகநாழிகை கலை இலக்கிய இதழ்' இல் `உப்பலையும் கரையும் மாநகரம்', `ஒயினென்ற வார்த்தையைக் குடித்தல்', `மண்டையோடுகளின் பறையிசை' என்னும் தலைப்பிலான பச்சோந்தியின் மூன்று கவிதைகள் வெளிவந்துள்ளன. அகநாழிகை இதழுக்கும் அதன் ஆசிரியர் பொன் வாசுதேவனுக்கும் மிக்க நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அகநாழிகை கலை இலக்கிய இதழில் வெளியான மூன்று கவிதைகள்


உப்பலையும் கரையும் மாநகரம்



ஒயினென்ற வார்த்தையைக் குடித்தல்





மண்டையோடுகளின் பறையிசை

Sunday, October 9, 2022

சுஜாதாவின் பச்சோந்தியும் அன்னப்பறவையும்

 


அறிவியல் புனைவுகளின் மேல் தீரா மோகம் ஏற்பட்டுள்ளது. அறிவியல் புனைவு புரியவேண்டுமென்றால் அறிவியல் என்றால் என்ன என்கிற அடிப்படைப் புரிதல் வேண்டும். இரண்டையும் அறியும் வேட்கையில் இருக்கிறேன். ஒரு பனுவலைப் படித்துப் புரிந்துகொள்வதைவிடக் காட்சியின் மூலம் உணர்தல் மிக எளிது என்பதால் சினிமாக்களைப் பார்க்க ஆரம்பித்தேன். ஏற்கெனவே Gravity, Avatar போன்ற படங்கள் பார்த்திருந்தாலும் கிறிஸ்டோபர் நோலனின் Inception, Interstellar பார்த்த பிறகு இந்த உலகை அறிவியல் நோக்குடன் பார்க்கும் விதம் முற்றிலும் மாறியது எனலாம். அதற்குக் காரணம் படங்கள் பார்க்கப்பட்ட காலகட்டமே. ஒருநாள் be4books சென்றிருந்த போது அறிவியல் புனைவு திரைப்படங்கள் பார்த்துக்கொண்டிருப்பது குறித்துக் கவிதைக்காரன் இளங்கோவிடம் சொன்னேன். அவர் utopia and eutopia என்னும் சொற்களின் அர்த்தங்களை google இல் தேடிப் பாருங்கள் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்தும் என்றார். தேடிப் படித்தேன் புரிந்தும் புரியாமலும் இருந்ததால் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் செய்தி அனுப்பினேன். பெருவிஷ்ணுகுமார் ஒரு லின்க் அனுப்பி இருந்தார், அதற்குள் நேசமித்திரன் மிகத் தெளிவான பதிலை அனுப்பி இருந்தார். பிறகு அறிவியல் சார்ந்த கதை, கட்டுரைகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். அவற்றில் ஒன்றாக சுஜாதாவின் `ஏன், எதற்கு, எப்படி'. 

இன்று அப்பனுவலைப் புரட்டிக்கொண்டிருக்கையில் பின்பக்கம் இருந்த சப்ஜெக்ட்ஸ் இல் இடம்பெற்ற பச்சோந்தி என்னும் சொல் கண்ணில்பட்டது. பச்சோந்தி என்றதும் உங்களுக்கு என் நினைவு வரலாம், பலருக்குத் தன்னையேகூட நினைவு வரலாம். ஆனால், இந்தப் பச்சோந்தி `விலங்கு... பறவை... பூச்சி...' என்னும் உப தலைப்பின் கீழ் இருந்தது. 164 ஆம் பக்கத்திற்குத் தாவினேன். `பச்சோந்தியின் நெர்வஸ் சிஸ்டத்தில் இருக்கிறது நிறம் மாறும் சூட்சுமம்' என்று தன் பதிலில் கூறியிருந்தார் சுஜாதா. மேலும்,  அபாயம் வந்தால் மட்டுமல்ல... வெளிச்சம், உஷ்ணம், எண்ண ஓட்டம் இப்படிப்பட்ட சங்கதிகளுக்கும் பச்சோந்தி தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் என்பது மிகவும் உற்சாகமாக இருந்தது. இதில் என்ன உற்சாகம் என நீங்கள் கேட்கலாம் பச்சோந்தி என்று பெயர் வைத்ததால் அதன் பின்னுள்ள லாபநஷ்டங்கள் பச்சோந்திக்கே தெரியும். அதைப் பின்னொரு சமயத்தில் விரிவாக எழுதுகிறேன்.

மாலை 5.30 மணியளவில் குருதிபலி செந்திலைப் பார்க்கச் செல்லும் போது ஏன், எதற்கு, எப்படி, மார்கழி பாவியம் ஆகிய இரண்டு நூல்களையும் கையில் எடுத்துச் சென்றேன். கையில்தான் இரண்டு ; பையில் இன்னும் இருந்தன. எங்கு சென்றாலும் கையிலும் முதுகிலும் புத்தகங்கள் சுமந்து சில நேரங்களில் அயர்ச்சியடைவது உண்டு. ஆனால், அந்தச் சுமையோடு அலைந்து திரிவதுதான் என் பலம். சிம்ஸன் சிக்னலில் 29A பேருந்தில் ஏறி பைகிராஃப்ட்ஸ்  சாலையில் இறங்கினேன். கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டிருந்த செந்திலுக்கு வணக்கம் சொன்னதும் கைகளை இறுகப் பற்றி வாங்க பச்சோ என்றார். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று  `ஏன், எதற்கு, எப்படி' பனுவலைப் புரட்ட ஆரம்பித்தேன். அதில் இடம்பெற்ற பாலையும் நீரையும் அன்னப்பறவை பிரிக்காது என்னும் பதில் குறித்து சற்று நேரம் கழித்துச் செந்திலிடம் பேசினேன். பாலையும் நீரையும் பிரிக்கும் என்பதை நேரிடையான அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளாமல் அறிவியல்பூர்வமாக நீர் கலந்ததா, கலக்காததா என்பதை வாசனை, சுவையின் மூலம் அன்னப்பறவை அறியும் என்பதாகப் புரிந்துகொள்ளலாம் என்றார். இந்தப் பதில் ஒருவகையில் தர்க்கரீதியாகப்பட்டது. பிறகு அன்னம் என்கிற சொல் முதலில் சோற்றுப் பருக்கைக்கு வந்ததா இல்லை அன்னப்பறவைக்கு வந்ததா என்னும் கேள்வியுடன் இரண்டும் வெண்மை நிறமுடையது என்பதால் இப்படிக் கேட்கிறேன் என்றார். சற்று யோசித்து பறவை, பருக்கை இரண்டில் பறவைதான் முதலில் தோன்றியது. எனவே அன்னம் என்பது பறவைக்குத்தான் முதலில் இருந்திருக்கும் என்றேன். ஆந்திராவில் அன்னம் என்னும் சொல் இன்னும் பேச்சு வழக்கில்  இருப்பதைச் சுட்டிக்காட்டினார். 

அன்னத்திலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்ற செந்தில் த்ரீ என்னும் ஆங்கிலச் சொல் சமஸ்கிருதத்தில் இருந்துதான் கையாண்டிருக்க வேண்டும் என்பதை `திரிசூலம், திரிகடுகம், திரிலோகாதிபதி என்னும் சொற்களின் உதாரணத்துடன் கூறினார். சமஸ்கிருதம் படித்தவன் என்கிற முறையில் ஏகம், த்வீ, த்ரீணி, சத்வாரி, பஞ்ச, ஷட், சப்த, அஷ்ட, நவ, தச, ஏகாதச என்று சொற்களில் ஓட ஆரம்பித்து த்ரீணி சொல்லுக்கு மீண்டும் ஓடிவந்தேன். அட ஆமா செந்தில் அப்படியும் இருக்கும் அல்லவா என்றேன். நிலம், கடல் என எல்லை தாண்டும் சொற்கள் எத்தனை வியூகங்களை வகுக்கின்றன. 

Thursday, October 6, 2022

ரமேஷ் பிரேதனின் ` பட்டாம் பூச்சி'யை வாசித்தல்

Pinterest


நேற்று மாலை அலுவலகம் முடிந்ததும் நண்பர் செந்தில்குமாரைச் சந்திக்கச் சென்றேன். இவர் திருவல்லிக்கேணியில் உள்ள பைகிராஃப்ட் சாலை நடைமேடையில் புத்தக்கடை நடத்தி வருகிறார். தன் அப்பாவின் மரணத்திற்குப் பிறகு அவர் மேற்கொண்ட பணியைக் கடந்த 25 ஆண்டுகளாகச் செய்துவருகிறார். பத்து நாட்களாகத்தான் செந்திலைத் தெரியும். நான்கைந்து நாட்களாக தினசரி சந்தித்து வருகிறோம். இதற்கு முன் தினசரி சந்திப்பு என்பது வெய்யில் மற்றும் ஷங்கரராமசுப்பிரமணியம் இருவருடன்தான். வெய்யிலுடன் ஆறு மாதங்களுக்குள்ளும் ஷங்கருடன் ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளும் தினசரி சந்திப்பு முடிவுக்கு வந்துவிட்டது. வேறு யாரையும் சந்திக் கூடாது என்றெல்லாம் இல்லை, கடந்த 24 ஆண்டுகளாகச் சென்னை வாழ்க்கையை ஏக்கத்துடனும் பசியுடனும் அறியாமையுடனும் ஏகாந்தமாய் வாழப் பழகிவிட்டேன். அவ்வளவுதான். 

ஐந்து நாட்களில் முதல் மூன்று நாட்கள் அந்தரங்கமான விசயங்களை மட்டும் பகிர்ந்தோம். விஜயதசமி அன்று கடை விடுமுறை என்பதால் நண்பகல் நேரத்தில் அழைத்திருந்தார். நல்லதம்பி தெருவுக்கு வரவழைத்து வாலஜா சாலையில் தேநீர் அருந்தியபடி உரையாடினோம். இன்று மாலை வெளியில் செல்லலாமா என்றேன். யாரும் செல்லத் தயங்கும் இடத்திற்குச் செல்லலாமா என்றேன். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க எங்க போக வேண்டுமென்று மட்டும் சொல்லுங்கள் நான் அழைத்துச் செல்கிறேன் என்றார். Broken Bridge ஐப் பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை அங்கு அவ்வளவு எளிதாக உள்ளே போக முடியாது என்று நண்பர் சொன்னதாகக் கூறினேன். அந்த இடம்பற்றித் தெரியவில்லை ஆனாலும் போகலாம் என்றார். வெறுமனே வேடிக்கை பார்ப்பதும் சொந்த விசயங்களைப் பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல் ஏதாவது வாசிக்க வேண்டும் என்று மனதில் தோன்ற `மார்கழி பாவியம்', `மர்ம நபர்' கவிதைத் தொகுப்புகளை அவரிடம் கூடச் சொல்லாமல் எடுத்துச் சென்றேன். காமராஜர் சாலையைக் கடந்து நொச்சிக்குப்பக் கருவாட்டுக் காற்றின் உப்பை நுகர்ந்தபடி சென்றோம். Broken Bride சென்று வந்த அனுபவத்தைப் பிறகு பகிர்கிறேன். இரவு 9.30 மணிக்குச் சாம்ராஜைச் சந்திக்க செந்தில் செல்ல இருந்ததால் 8.30 க்கு இருவரும் கிளம்புவதாக முடிவெடுத்தோம். 

பெசன்ட் நகரில் இருந்து மைலாப்பூர் கிரி ட்ரேட்க்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு மெரினா நோக்கி வந்தோம். கவிதை வாசிக்கலாம் என்று முடிவெடுத்துக் கடற்கரைக்குள் சென்றோம். விண்மீனற்ற வானின் கீழ் சோளப்பொறிகள் வாட்டும் அடுப்பிலிருந்து தீச்சிறகுகள் பறந்தவண்ணமிருந்தன. செம்மஞ்சள் நிற உச்சி விளக்கின் ஒளியில் தேவதச்சனின் கவிதைகள் ஒன்றிரண்டை வாசித்தோம். வழக்கமாக தனியே ஒரு கவிதையை வாசிக்கையில் தனிமனிதச் சிந்தனையோடு அதாவது ஒற்றைத்தன்மையோடு முடியும். அரிதான பொழுதுகளில் ஒருவரின் பன்முகத்தன்மையும் வெளிப்படும். ஆனால், இது என்ன சொல்கிறது நாம் என்ன புரிந்துகொண்டோம் என்பதைக் கலந்து பேச நினைக்காமல் அடுத்தடுத்த கவிதைகளுக்குத் தாவிவிடும் தட்டையான வாசிப்பிலேயே முடிவடையும். இது புரியவில்லையே என்று யாரிடமாவது கேட்கலாம் என்றால் கவிதைக்கு விளக்கமெல்லாம் கேட்கப் படாது என்று முட்டுக்கட்டை போட்டு விடுவார்கள். அதற்கு நேர்மாறாக செந்தில் இருந்தார். ஒரு கவிதை வாசித்தால் அது என்ன சொல்கிறது என்று உங்களுக்குத் தெரிந்ததை நீங்க சொல்லுங்க, எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன் என்று முடிவெடுத்துக்கொண்டோம்.

தேவதச்சனின் சில கவிதைகளை வாசித்து பிறகு ரமேஷ் பிரேதனின் `கவையில் தேனடை' கவிதையை வாசித்தோம்.

கவையில் தேனடை

என் நண்பனின் திருமணத்தில் பங்கேற்க இயலவில்லை. பாரீசிலிருந்து புதுவை வந்து தேனிலவு முடித்து ஊர் திரும்பிய தம்பதியரைச் சந்தித்து வாழ்த்தி தேன் பாட்டிலைப் பரிசளித்தேன். அவன் `ஙே' என்று விழித்தான். அவள் வெட்கத்துடன் சமையலறைக்கு எடுத்துச் சென்றாள். விடைபெறும் போது நண்பனின் காதில் தேனில் பட்டாம்பூச்சியை ஊறவைத்துத் தின்றால் இல்லற சுகம் கூடும், இது பிரெஞ்சு முறை என்றேன். 

நான் பாரீசுக்குத் திரும்பி ஒரு மாதம் கழித்து நண்பனின் மனைவி தொலைபேசியில் அழைத்தாள்; அவன் பட்டாம்பூச்சிகளை வேட்டையாடப் பூங்காக்களே கதி என்றிருக்கிறானாம்.

நான் தலையில் அடித்துக்கொண்டேன். அவள் உடைபட்ட கண்ணகியின் சிலம்பு போலச் சிரித்தாள். காதில் தேன் வந்து பாய்ந்தது. 

இக்கவிதையை வாசிக்கும் முன்பே தலைப்பை மட்டும் கேட்ட செந்தில் `கவை என்றால் என்ன' என்றார். நானும் `ஙே' என்று விழித்தேன். இதற்கும் இக்கவிதையைப் பலமுறை வாசித்து இதன் உள்ளிருக்கும் அறியாமையை, எள்ளலைப் பலமுறை ரசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் கவை என்னும் சொல் கவ்வை என்பதாகப் புரிந்துகொண்டேன். ஊரில் உண்டிக்கோலைக் கவ்வான் என்றும் வேலி அடைக்க வெட்டிய முட்களை அள்ளும் V வடிவ மரக் கருவியைக் கவ்வை என்று அழைப்போம். அதன் பொருளியே புரிந்திருந்தேன். ஆனால், அர்த்தமென்ன என்று கேட்டதும் திடுக்கிடல் உண்டானது. சில சொற்களின் சித்திரம் அல்லது ஒலி நன்கு அறியப்பட்டது போல் மயக்கம் தருமல்லவா. பொது வெளியில் நாம் அன்றாடம் பார்க்கும் முகம் அல்லது மரம், செடி, பூ எல்லாம் நமக்கு நன்கு பரிச்சயமானவைதாம். ஆனால், பெயரென்ன என்று கேட்டால் திருதிருவென முழிப்போம் அல்லவா அப்படித்தான் கவ்வை என்ற சொல்லைத் தாண்டி வேறெதுவும் சொல்ல இயலவில்லை.  


செந்தில்குமார்

உடனே google இல் தேட செல்போனை எடுத்தேன். உடனே அகராதியைத் தேடாமல் கொஞ்ச நேரம் மனதிற்குள் அசைபோடுங்க விடை கிடைக்கும் என்றார் செந்தில். ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருக்கும் ஏதாவது ஒன்றில் பொருந்திப் போகிறா என்று பார்ப்போம் என்றார். சொற்களை நீங்கள் சொல்லுங்கள் சரியா இல்லையா என்று நான் சொல்கிறேன் என்றேன். கவைக்கு உதவாது என்று சொல்வார்கள் அல்லவா என்றதும் ஆமாம் அந்தப் பொருளில்தான் வரும் எதுக்கும் உதவாத செயலைச் செய்பவனைத்தான் குறிக்கும் என்றேன். சரி என்றால் உங்களின் திருப்திக்காக அகராதியைத் தேடுங்க என்றார். மரக்கிளை, கவைக்கோல், கரிசனை, கோட்டை, எலும்புக்கவை, காரியம் ஆகிய சொற்களின் நடுவே `பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்' என்னும் பெரும்பாணாற்றுப் பாடல் வரிகள் கிடைத்தன. ஒருவழியாக கவிதையை வாசித்து முடித்ததும் சிரிப்பொலியில் பட்டாம்பூச்சி என்கிற படிமம் எதைக் குறிக்கிறது என்கிற அடுத்த வினாவுக்கு எதை எதையோ யோசித்து பிறகு பெரும்பாணாற்றுப் பாடலின் `அல்குல்' சொல்லில் மனம் ஊன்றியது. அல்குல் என்றால் பெண்ணின் பிறப்புறுப்பு அல்லவா, ச்சே யோனியை எப்படித் தேனில் ஊறவைப்பது இவ்வாறு மனதிற்குள்ளே யோசித்தவாறு எனக்குள்ளே வெட்கமுற்று நெளிகிறேன். 

ரமேஷ் பிரேதன் யோனியை விதவிதமாகக் கவிதையில் கட்டமைத்திருப்பார். ஒரு இடத்தில் இரண்டாக வகுந்த ஆப்பிளைப் போல் உள்ளது என்று யோனியை வருணித்திருப்பார். இயற்கையிலேயே காய்களும் கிழங்குகளும் ஆணுறுப்பு வடிவிலும் பழங்கள், இலைகள், பூக்கள் எல்லாம் பெண்ணுறுப்பு வடிவிலும் இருக்கும் என்று வாசித்து உணர்ந்திருக்கிறோம் அல்லவா. அதனால்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறேன். பட்டாம்பூச்சி சிறகு விரித்தால் திறந்த யோனியைப் போல்தானே இருக்கும். இவ்வாறெல்லாம் யோசித்து எதுவும் சொல்லாமல் கூகுளில் காட்டிய சொற்களில் ஒன்றான மரக்கிளை என்ற சொல்லை உச்சரிக்கிறேன். மரக்கிளைக்கு எதற்கு இவ்வளவு அழுத்தம் தரவேண்டுமென்று செந்தில் கேட்கிறார். இவ்வாறு இருவரும் யோசித்துக்கொண்டிருக்கையில் `பே.... ' என்று ஒரு குழந்தை பயமுறுத்தியது. ஐயோ நாங்க ரொம்பவே பயந்துட்டோம் என்றதும் அக்குழந்தை எங்களுக்கும் மேற்கே மணலில் அமர்ந்திருந்த தன் அப்பா அம்மாவை நோக்கி ஓடியது. சற்றுத் தொலைவில் ஒலிக்கும் உருமிச் சத்தத்திற்குத் தாயும் தந்தையும் மகனுமாக நடனமாடுகிறார்கள்.

இரவு 9.30 மணி ஆகவும் திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் என்னை இறக்கிவிட வந்தார் செந்தில். விடைபெற்றுத் திரும்பும் போது அந்த பட்டாம்பூச்சி என்கிற இமேஜ் என்ன என்று நாம் விடாது யோசிக்கணும் செந்தில் என்றேன். டிக்கெட் வாங்கிப் படியேறுகிறேன் செந்திலிடமிருந்து அழைப்பு, சொல்லுங்க செந்தில் என்றேன் அந்தப் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றார். என்ன அது என்றேன் ஆர்வமாக, பெண்ணின் பிறப்புறுப்பைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றார். கரெக்ட்டு நானும் அப்பவே யோசித்தேன் ஆனால் சொல்ல ஒரு மாதிரியா இருந்தது என்றேன். கூச்சத்தைக் குப்பையில எறிங்க பச்சோ என்றார். எந்தக் குப்பையில் போடுவதென்றுதான் தெரியவில்லை ஆனால் இப்படிச் சொல்ல ஒரு நண்பன் கிடைத்துவிட்டான். இனிக் குப்பையைத் தேடுவோம்.

06.10.2022

வியாழன்

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...