Saturday, February 19, 2022

ஊஞ்சலாடும் பாரதியார் பூங்கா

நேற்றிரவு உறங்கச் செல்லும் முன்பே நாளை நடைப்பயிற்சி செல்லும் போது என்னையும் தம்பியையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மகள் கட்டளையிட்டாள். சரி என்று சொன்னேன். இப்படிச் சரியென்று சொல்லிவிட்டு அழைத்துச் செல்லாமல் சென்ற நாட்கள் எண்ணமுடியாதவை. இன்று வழக்கம் போல் 5.30 க்கு எழுந்து நடைப்பயிற்சிக்குத் தயாரானேன். ஆனால், இன்றும் மகளை ஏமாற்ற மனமில்லாமல், மேல் அறைக்குச் சென்றேன். முகம் கழுவ தண்ணீர்க்குழாயைத் திறக்க முற்பட்டேன். அது ஏற்கெனவே திறந்தபடிதான் இருந்தது. ட்ரம்மில் நீர் மொண்டு லக்ஸ் சோப்பில் முகம் கழுவேன். முகத்திலிருந்து வழிந்த நீர்ச்சொட்டுகளைச் சுவரில் எறிந்தபடி கதவைத் தட்டினேன். ஒரே தட்டலில் மனைவி உ சொல்லி கதவைத் திறந்தாள். பிள்ளைகளும் உற்சாகமடைந்துவிட்டார்கள். தினமும் செல்லும் மடிப்பாக்கம் ஏரிக்குக் கூட்டிச் செல்லலாம் என்றால் திரும்பி வர நேரமாகும் என்பதால் வேளச்சேரி பாரதியார் பூங்காவுக்கே அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். கட்டிலில் கலைந்த உறக்கத்தை மீண்டும் துளிர்க்க முயற்சி செய்த மகனின் மீது சாய்ந்து கட்டியணைத்து முதுகில் செல்லமாய்க் கடித்து வைத்தேன். ம்... விடுங்கப்பா என்றான். சரி போய் முகம் கழுவிக்கொண்டு வாங்க பூங்காவுக்குச் செல்லலாம் என்றதும் துரிதமாகத் தயாராகி முன் நின்றனர். மனைவியையும் அழைத்தேன். குப்பை கொட்ட வேண்டும் நீங்கள் சென்று வாருங்கள் என்றாள். குப்பையை நாம் போகும் போது கொட்டிக்கொள்வோம் என்றேன், மௌனமானாள். இப்படித்தான் எப்போது பூங்காவுக்குச் சென்றாலும் அவள் உடன்வரமாட்டாள்.

குப்பையை எடுத்துக்கொண்டு பிள்ளைகளுடன் பூங்காவுக்குச் சென்றேன். முழுதும் விடியாத பொழுதில் திறந்துவிட்டார்களா இல்லையா என்கிற சந்தேகத்துடன் பூங்காவின் கதவுக்கு அருகில் சென்றோம். உள்ளே பருத்த பெண்மணி ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். ஓ... திறந்துவிட்டார்கள் என்று உற்சாகத்துடன் ஊஞ்சலை நோக்கி இருவரும் ஓடினர். வேளச்சேரி தண்டீஸ்வரத்தில் பிராமணர் தெருவுக்கும் தெலுங்கு பிராமணர் தெருவுக்கும் நடுவில் உள்ளது பாரதி பூங்கா. இதன் கிழக்கு திசையிதான் யாவரும் பதிப்பகத்தினரின் B4Books கடை உள்ளது. தெற்குப் பகுதியில் தபால் நிலையம் உள்ளது. நெட்டிலிங்கம், பாக்கு, கொய்யா, பூவரசம், வேம்பு, புளியம் ஆகிய மரங்கள் இங்கு உள்ளன. அத்தனை இருக்க பாரதி பூங்காவில் பாரதி இருக்கிறாரா என்பதுதானே உங்கள் கேள்வி. இருக்கிறார். விரிந்த புத்தகவடிவில் அமைக்கப்பட்டுள்ள கல்லின் இடது பக்கத்தில் பாரதியார் முண்டாசுடன் இருக்க, அதன் வலப் பக்கத்தில் `சாதிகள் இல்லையடி பாப்பா', `ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று கூறி அலையும் அறிவிலிகாள்' பாடல்வரிகள் இடம்பெற்றுள்ளன.

ஊஞ்சலை ஆட்டிவிடச் சொல்லி மகள் அழைத்தாள். இருவரின் ஊஞ்சலுக்கும் நடுவில் நின்றபடி வலது கையால் மகனையும் இடது கையால் மகளையும் ஆட்டிவிட்டேன். நொண்டிக்கொண்டிருந்த கர்ப்பிணி நாயொன்று குறுந்திட்டில் ஏற சுற்றிச் சுற்றி வந்து கால்தூக்க முடியாமல் போக சிமென்ட் பெஞ்சின் அடியில் பதுங்கியது. பாட்டியுடன் வந்த சிறுமி ஒருத்தி அருகில் இருந்த ஊஞ்சலில் தன்னைத் தானே ஆட்டிக்கொண்டிருந்தாள். நடைப்பயிற்சியில் இருந்த அவளின் பாட்டியின் செல்போனில் ஒலித்தது `சஷ்டியை நோக்க சரவண பவனா'. சற்று அயர்ந்த என் மூக்கைப் பீடி நாற்றம் பிடிங்கிச் சென்றது. பின் திரும்பினால், கைப்பையைப் பூங்கா சுவரில் வைத்த ஒருவர் போன் பேசிக்கொண்டிருந்தார். இடக்கை விரல்களுக்கிடையே கசியும் புகையின் சாம்பல் காற்றில் பறக்கிறது.


அது என்ன மரம் என்று மகள் கேட்டாள். அது எனக்கு நெட்டிலிங்க மரம் என்று தொண்டை வரை வந்த சொல், அருகில் இரண்டு மூன்று பேர் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்து பெயர் தவறாக இருக்குமோ என்கிற சந்தேகத்தில் பதிலளிக்கவில்லை. இப்போதுதான் தெரிகிறது அது நாகலிங்க மரமென்று. இதன் மொட்டுகள் கூழாங்கல்லைப் போன்ற மென்மையுடனும் நசுக்குவதற்கு மிகக் கடினமாகவும் இருக்கும். கிளையில் ஓடும் கொடியில் தொங்கும் காய்கள் கால் பந்தைப் போலவும் பழவோடு மண்டையோட்டினைப் போலவும் இருக்கும். தன் மகளுடன் வந்த ஒருவர் மனைவியையும் மகளையும் ஊஞ்சலிட்டார். பொமெரேனியன் நாயுடன் ஊஞ்சலாடினாள் அவர் மனைவி. அவளின் மடியில் இருந்து குதித்த நாய் குண்டியைத் தரையுரசியபடி அரசஞ்சருகின் மீது சிறுநீர் கழித்தது.  

விளையாட்டை முடிக்கவைத்து வெளியே அழைத்து வந்ததும் வழக்கமாகச் செல்லும் தெலுங்கு பிராமணர் தெருவழியே மகள் அழைத்தாள். மகனோ, பிராமணர் தெருவழியாகச் சுற்றிச் செல்லலாம் என்றான். அக்கா வழி செல்லலாம் என்றால், தம்பி ஒத்துக்கொள்ளவில்லை. தம்பி வழி செல்லலாம் என்றால் அக்கா வழிக்கு வரவில்லை. பெரும்பாலும் மகளின் சார்பான நான் ஏனோ மகனின் பக்கம் சாய்ந்துவிட்டேன். மகள் நான் வரமாட்டேன் என அடம்பிடித்தாள். சரி இங்கேயே இரு என்று மகனுடன் புறப்பட்டு ரெண்டடி எட்டுவைத்தேன் புலம்பியபடி ஓடிவந்துவிட்டாள். மூவரும் கைவீசி தெருமுனைக்கு வந்தோம். ஐ... இப்படித்தான் தினமும் ஸ்கூலுக்குப் போவோம் என்று கோரஸாக இருவரும் கூறினார்கள். இனிக் கொஞ்ச நாளைக்குப் பூங்காவுக்கு அழைத்துச் செல்லச் சொல்லி தொல்லை தரமாட்டார்கள் என்று நினைக்கிறேன். பார்ப்போம்...

19.02.2022
சனிக்கிழமை
  

Friday, February 18, 2022

வேளச்சேரி கிழக்குப் பேருந்து நிறுத்தம்

தண்டீஸ்வரத்தின் கிழக்குப் பேருந்து நிறுத்தம் மிகப் பழமையானது. கிட்டத்தட்ட வேளச்சேரி கிராமாக இருந்த போது அது கட்டியிருக்கலாம். அங்கு இருபுறமும் நீர்ப்பாசனமுள்ள வயல்வெளி இருந்திருக்கலாம். நான்கு உருளைத் தூண்களால் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அதன் மேற்கூரைத் தளத்தின் நடுவே உத சூரியன் சின்னம் இருக்கும். திமுக பிரமுகர் கட்டியிருக்கலாம் என்கிற யூகம். இருபத்திரண்டு ஆண்டுகளாக இந்த நிறுத்தத்துடன் தொடர்பில் இருக்கிறேன். டவுசர் போட்ட பையனாய், பேன்ட் போட்ட இளைஞனாய், வேட்டி கட்டிய தகப்பனாய் எனப் பல்பருவங்களைக் கடந்துவந்திருக்கிறேன். இதோ இப்போது ஷர்ட்ஸுடன் நிற்கிறேன். மடிப்பாக்கத்தில் நடைபயிற்சி செய்ய இங்குதான் பேருந்து ஏறுவேன். 

    வேளச்சேரி கிழக்குப் பேருந்து நிறுத்தம்

2001-2002 ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது தினமும் இந்த நிறுத்தத்திற்கு வருவேன். பதின்மத்தின் இறுதியில் எதற்காக இங்கு வந்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள். உங்கள் யூகம் தவறு. நண்பனைப் பேருந்து ஏற்றிவிட. அவன் வீடு ஒட்டியம்பாக்கத்தில் இருந்தது. தடம் எண் 51B இல்தான் அங்கு செல்வான். சரி நண்பனைப் பற்றிச் சொல்கிறேன். அவன் பெயர் அருண் பிரசாத். தினமும் பள்ளிச் சீருடையை அயன் செய்துதான் போட்டு வருவான். உருண்டையான கண்கள். சிவந்த நிறமுடைய அவன் நெற்றியில் எப்போதும் திருநீறு கலையாதிருக்கும். துடைப்பக்குச்சி போன்ற தேகம். நானும் என் அண்ணனும் தங்கியிருந்த அறைக்கு அதிகம் முறை வந்தது அவனாகத்தான் இருப்பான். வந்ததும் வியர்வையில் சட்டைக் கழற்றித் தொங்கவிட்டுவிடுவான். சும்மா ஈர்க்குச்சி போன்ற அவன் எலும்புகள் பேன் காற்றில் அசைந்தாடும் என்றால் நம்பிவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால், தர்க்கரீதியாக நீங்கள் மூளைக்கு வேலைகொடுத்து நேரத்தைக் குப்பைக்கூடையில் போட வேண்டாம். 

இப்போது அந்தப் பேருந்து நிறுத்தம் வயோதிகத்தன்மையடைந்துள்ளது.  அல்லது கொஞ்சம் நீளமான உயரமற்ற தகனமேடை போன்று காட்சியளிக்கிறது. நின்றுகொண்டே தொட்டுவிடும் அதன் வெளிப்புற மேற்கூரையை இப்போதெல்லாம் அவ்வப்போது தொட்டுப்பார்ப்பதுண்டு. 51 B இன்றும் அதே தடத்தில்தான் ஓடுகிறது. அதைக் காணும் போதெல்லாம் கண்ணாடி அணிந்த நண்பனின் உருவம் வந்துவந்து போகும். ஆனால் அவனைப் பார்த்துதான் ஆண்டுகளாகின்றன. 

18.02.2022

வெள்ளிக்கிழமை

        

யாழிசையின் தோழி ஹரிணி

அதிகாலை தண்டீஸ்வரம் சாலை பரபரப்பானது. சாலையின் இருவோரமும் செய்தித்தாள் கோக்கும் அடுக்கும் பணி தீவிரமாய் நடக்கும். இன்னும் சரியாக விடியாத கருக்கலில் நடைப்பயிற்சிக்காக சென்றுகொண்டிருந்தேன். பேருந்து நிறுத்தத்தில் நன்கு அறிமுகமான முகக் கவசமற்ற முகம். என் மெல்லிய புன்னகையை என் முகக் கவசம் மறைத்திருக்கும். அருகில் சிறு குழந்தை. இருவரையும் கடந்து பின்பு திரும்பி முகக் கவசத்தை நீக்கி எப்படி இருக்கீங்க என்றதும் சற்று கூர்ந்து நோக்கிய அப்பெண்மணி ``அதானே பார்த்தேன். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று நினைத்தேன். மாஸ்க் போடவும் சரியா தெரியலை. நீங்கள் தானா? நான் நல்லா இருக்கேன். நீங்கள் எப்படி இருக்கீங்க'' என்றார். உங்க மகள் எங்க படிக்கிறாள் என்றதும் மாநகராட்சிப் பள்ளியில் என்றேன். என் மகளுக்கு ஃபீஸ் அதிகமாகிடுச்சு. நானும் வேறு எங்காவது சேர்க்கணும் என்றார். எவ்வளவு என்று கேட்டேன். அவர் பதிலில் நெஞ்சுடைந்து போவது போல் இருந்தது. காரணம் LKG கல்விக் கட்டணம் 45,000 ரூபாய். 


சரி என்ன இந்நேரத்தில்? 

ஊருக்குப் போகிறோம். 

எந்த ஊர் 

திருவண்ணாமலை.
   
திருவண்ணாமலையில் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று இடத்தைச் சுட்டிக் காட்டினேன். அவருக்குத் தெரியவில்லை. உம் பெயரு என்னம்மா என்று அவர் மகளிடம் கேட்டேன். முதலில் அச்சிறுமி தயங்கினாள். அவள் அம்மாவும் நானும் பேசப் பேசக் குழப்பமுற்றவளாய் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தாள். உன்கூட படிச்ச யாழிசை அப்பாதாம்மா நான் என்று சொன்னதும் அச்சிறுமியின் முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது. உன் பேரு என்ன என்றேன் ஹரிணி என்றாள். சரி யாழிசை கிட்ட போய் ஹரிணியைப் பார்த்தேன் உன்னை விசாரித்ததாய்ச் சொன்னாள் என்று சொல்கிறேன் என்றேன். தெற்கிலிருந்து வடக்காக அசைந்தாடிச் சத்தமின்றிச் சிரித்தாள் அச்சிறுமி. 
 
18.02.2022
வெள்ளி

சர்வதேசக் குரல் - சூரஜ் யங்டே

 ஒரு பக்கம் தலித் வகையறா என்கிற கருத்துத் திணிப்பும் இன்னொரு பக்கம் என் எழுத்து தலித் எழுத்தல்ல என்கிற அடையாள மறுப்பும் நிகழும் சூழலில் சாதியைப் பேசித்தான் ஆக வேண்டும் என்கிற சூரஜ் யங்டே இந்திய நிலப்பரப்பில் மட்டுமல்லாது சர்வதேசக் குரலாக ஒலிக்கும் வலிமையான குரல். தமிழில் இருக்கும் தீவிர தலித் முற்போக்கு எழுத்தாளர்களில் சிலர் பிற்போக்கின் அடிவருடியாக மாறி சலாம் போட்டுக்கொண்டிருக்கும் சூழலில் சூரஜை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். அரசியல் கூர்மையுடனான இவரின் உரையாடல்களை யூடியூப் சேனலில் கண்டு மெய்சிலிர்த்திருக்கிறேன். இப்படியான வலிய குரல்; கூரிய பார்வை, நெஞ்சுறுதி சமகால இளைஞர்களிடம் என்னளவில் கண்டதில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் முதல் தலித் அறிஞரான சூரஜ்ஜை வாசிப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த நூலினை வாங்கி வந்து கொடுத்த அன்புத் தம்பி ரவிக்கு நன்றி என்கிற ஒற்றைச் சொல் மட்டுமல்ல ; ஓராயிரம் முத்தங்கள்! 



Thursday, February 17, 2022

குசுவொலி

 சுமார் காலை ஐந்தரை மணியளவில் நடைப் பயிற்சிக்குத் தயாரானேன். புதிய டயரி பாதி விலையில் கிடைக்கும் என்பதை ஒவ்வொரு மாலையிலும் சிங்கப்பூர் ஷாப்பிங்கில் ஒலித்தது ஞாபகம் வர 75 ரூபாய்க்கு நேற்று ஒரு டயரி வாங்கினேன். அந்த டயரியை எடுத்துக்கொண்டு தண்டீஸ்வரம் சாலையில் நடந்துகொண்டிருந்தேன். மலிவான விலையில் வாங்கிய ஷாட்ர்ஸின் இடதுப் பக்க பாக்கெட் ஓட்டை என்பதால் வீட்டுச் சாவியை பஸ் பாஸ் வைத்திருக்கும் வலது பாக்கெட்டில் எறிந்தேன். பாரதி பூங்காவின் அருகில் சாலையைக் கடக்கும் போது V51 பேருந்துப் பலகைக் கண்ணில் பட கைக்காட்டி ஏறினேன். இரண்டு பேர் மட்டும் இருந்த அப்பேருந்து மூன்றாவதாக என்னைச் சுமந்து நகர்ந்தது.

`பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் 
கருமமே கட்டளைக் கல்'
திருவள்ளுவரின் வார்த்தைகள் ஓட்டுநருக்கும் பின்னுள்ள ஒளியில் ஒளிர்ந்தன. வழக்கமாய் ஒவ்வொரு பேருந்திலும் உள்ள குறளைப் படிப்பேன்.
வேளச்சேரி ரயில் நிலைய மேம்பாலத்தில் பேருந்து நகர்ந்துகொண்டிருந்தது.  அரைவட்ட வடிவ வளைவுகளை, செல்போன் டவரின் சிவப்பு நிற விளக்கைத் தாண்டி என்னை விரட்டிவந்தது முழுநிலவு. ராம் நகரில் நிறுத்தத்தில் ஏறிய ஒருவரின் செருப்பற்ற பாதங்கள் மகளிர் இருக்கையில் தொங்கிக்கொண்டிருந்தன. அதற்கும் அடுத்த நிறுத்தத்தில் பூவும் பொட்டுமாய் மாநிறத்தில் ஒரு பெண் மிக லட்சணமாக இருந்தாள். காலியான பேருந்தில் அவளுடன் ஆண் ஒருவர் அமர்ந்தான். அநேகமாக அவளின் கணவனாக இருக்கலாம். இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்கலாம் என்று இருந்தது. ஆனால், முன்னிருக்கையில் அமர்ந்தவரை முன்சென்று பார்ப்பது நாகரிகமாக இருக்காது என்றெண்ணிப் பாலையா கார்டனில் இறங்கினேன். வேளச்சேரியில் புன்னகை செய்த பள்ளி நண்பன் என்ன இங்க என்றான் 'சும்மா வாக்கிங் என்றேன். கிளினிக்கில் ஒரு வேலை என்றான். எத்தனை பிள்ளைகள் என்ற விசாரிப்பில் இருவருக்கும் தலா ஆணொன்று ; பெண்ணொன்று. கொரோனா வேலையிழப்பினால் தனியார் பள்ளியில் பணம் கட்டமுடியாமல் கார்ப்பொரேஷனில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டது எனக் கடந்தகால நினைவுகள் நிகழ்கால ஒன்றுபட்ட பகிர்தலோடு விடைபெற்றோம்.


நடைபாதை நத்தை முட்டைகள்

அகலவிருக்கும் மெல்லிய இருட்டில் நடைப்பயிற்சி ஏரியை அடைந்தேன். 100 மீட்டர் இடைவெளியில் இளஞ்சிவப்பு நிற டி ஷர்ட் அணிந்த பெண் நடந்துவந்தாள். நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காத கண்கள் சிறகுலர்த்தும் வாத்தில் கவிழ்ந்தன. பசும்புல்லில் வெண்சிறகுகள் பிய்ந்துகிடந்தன. பின் மீண்டும் அவளைப் பார்த்தேன் அவளும் என்னைப் பார்த்தாள். என்னை நெருங்கிய இளஞ்சிவப்பின் தூரம் தலைகுனிந்தபடி நகர்ந்தது. 
அலையடிக்கும் சிதறலான செவ்வானத்தின் மீது நீந்திக்கொண்டிருந்தது கருவாத்து. V வடிவத்தில் பறந்துவந்த சிறகுகள் சற்று தூரத்தில் M வடிவத்தில் பரிணமித்துப் பின் அரூப நிலையாகின. சதா கரைந்தபடியே காதுக்குள் காகம் நுழைகையில் கறுப்பு டி ஷர்ட் அணிந்தவன் விரைந்து ஓடிவருகிறான்.
நானும் ஓடத் தயாராகிவிட்டேன்.


கரையோரம் வீற்றிருந்தது இலையற்ற வேப்பமரம். அதன் கரிய கிளையில் தன் அலகைக் கூர்தீட்டியது காகம். செந்தாமரையை உரசியபடி நகரும் முக்குளிப்பான்கள் நாணலுக்கடியில் மூழ்கி மூழ்கி எழுகின்றன. சிற்றலைகளின் மீது வடதும் இடதுமாய்ப் படபடக்கும் அரூபச் சிறகுகள். கம்பி வேலிக்குள் பதுங்கிய ஆண் நாயொன்றின் மீது இரண்டு பெண் நாய்கள் லொள் லொள்களைக் கொட்டிக்கொண்டிருந்த தருணத்தில் வழுக்கைத் தலை அச்சமுற்றது நடைபாதையில். பனைவேரில் ஒடிந்துகிடந்த மாங்கிளையை மோந்து பார்த்த நாய்கள் பதுங்கிய நாயின் திசையை வெறித்தபடியே இருக்க, நான் அந்த மாங்கொத்தை நொச்சிமீது எறிந்து மீண்டும் ஓடத் தொடங்கினேன்.

ஏரியின் மேற்கோரம் குவிந்துகிடைக்கும் நாணலுக்கிடையில் குத்திநிற்கின்றன எண்ணிலிறந்த பீர் பாட்டில்கள். இலையற்று தோலுரிந்த எருக்கஞ் செடி வேர்சாய்ந்துகிடக்கிறது. நீலச் சங்குப் பூக்களைப் பறித்து செவ்வரளியின் மீது எறிகிறான். சேவல் கூவும் நாய் குரைக்கும் சிட்டுக் குருவி, மைனா ஒலிகளுக்கிடையே தொடையை அகல விரித்து வெடித்த குசுச் சத்தம் நடைமேடையை மூச்சுமுட்ட வைத்தது. ''எங்க இருக்கீங்க பால் வாங்கிட்டு, அப்படியே டீத்தூள் வாங்கிட்டு வந்திடுங்க'' என்று போனில் ஒலித்தாள் மனைவி. சரி இன்றைய சூடான தேநீரைப் பருகுவோம். 

17.02.2022
வியாழக்கிழமை

Wednesday, February 16, 2022

`தானாய் மலரும் காலம்'

வெகு நாளாகவிட்டது நடைப் பயிற்சிக்குச் சென்று. வேளச்சேரியின் பிரதான சாலைகள், குறுக்குச் சந்துகள் எனக் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியனுடன் சேர்ந்து நடந்ததுண்டு. குறிப்பாக வேளச்சேரி ரயில்நிலையத்தில் அதிகமான நாட்களைச் செலவிட்டிருக்கிறோம். எனக்கும் ஷங்கருக்குமான உறவு ஆரம்பத்தில் பிடிப்பற்றதாகத்தான் இருந்தது. அவரைச் சந்திக்கும் சமயமெல்லாம் சின்ன சீண்டல் இருந்துகொண்டே இருக்கும். அவை மேலும் அவரிடமிருந்து விலகல்தன்மையையே கொடுத்தன. பீஃப் கவிதைகளுக்குப் பிறகு இருவருக்கும் நல்ல இணக்கம் ஏற்பட்டது. அடிக்கடி போனிலும் நேரிலும் சந்தித்துப் பேசுவோம். குறிப்பாக விகடனில் வேலை இழந்த துயர் மிகு காலத்தில் என்னைப் பத்திரப்படுத்தினார். பொருளாதார ரீதியாக, வேலை வாய்ப்பு ரீதியாக, வாசிப்பு சார்ந்து புத்தகங்கள் அள்ளிக்கொடுப்பது எனப் பேரன்பைக் காட்டினார். நீண்ட காலமாக வாசிக்க வேண்டும் என்கிற ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை முதல் ஊரடங்கின் போது கேட்டேன். உடனே தன் வீட்டு நூலகத்தில் இருந்து எடுத்துக் கொடுத்தார். இப்படி சில முக்கியமான நூல்களைக் கேட்டதும் கொடுத்துவிடும் மனம் ஷங்கருக்கு. 


வேலையற்ற நாட்களில் எனக்கு எதுவும் ஆகிவிடுமோ எனக் கண்காணித்துக்கொண்டே இருப்பார். குரலில் தொய்வு அல்லது உடைசல் தெரிந்தால் உடனே வண்டி எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்துவிடுவார். பாவனை, பாசாங்கு இரண்டுமற்ற ஷங்கர் தன் அறிவை, ஆளுமையைப் பிறர் மீது திணிக்காதவர். செல்மாவுக்குப் பிறகு இப்படியான கட்டற்ற அன்பை என்மீது செலுத்தியவர் ஷங்கர் ஒருவராகத்தான் இருப்பார். 


வேளச்சேரி ரயில் நிலையம்

வேளச்சேரி ரயில் நிலையம்

அறிவுத்தளத்தில்தான் ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்றல்ல; சும்மா ஒருவரைச் சந்தியுங்கள். இந்த வேளச்சேரியில் உள்ள பூ விற்பவரைக் கால் நூற்றாண்டாகத் தெரியும். நான் சென்னை வந்த புதிதில் மருந்துக்கடை நடத்திய பெண் இன்று பாட்டியாகி உள்ளார். இவர்கள் மட்டுமல்லாது பால் போடுபவர், பேப்பர் போடுபவர் எனப் பலபேருடன் இன்றும் தொடர்பில் இருக்கிறேன். வீட்டுக்குள்ளே இருக்காமல் உங்களுக்குள் ஒடுங்கியிருக்காமல் பிறரைச் சந்தித்துப் பழகுங்கள் என அடிக்கடி கூறுவார். `கவிதை எழுதுவது பறக்கப் பழகுவது, உரைநடை எழுதுவது நடக்கப் பழகுவது' உங்களுக்கு நன்றாகப் பறக்கத் தெரிகிறது. நடக்கவும் கற்றுக்கொள்ளுங்கள் எனத் தொடர்ந்து கூறிவந்தவர் `பாட்டி வடை சுட்டது' என்று எளிமையாக எழுதத் தொடங்குங்கள் என்பார். அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிவிட்டு ஒன்றும் செய்யாமல் இருப்பேன். அது அவருக்கு ஒருவித எரிச்சலை உண்டு பண்ணியிருக்கும். பல நேரங்களில் சிலர் சொல்வதை என்னால் உடனே செய்ய முடியாமல் போன சம்பவங்கள் ஏராளம் உண்டு. ஏன் என் உள்ளுணர்வு சரி என்று சொல்லிச் செய்யாமல் போனவை கணக்கில் அடங்காதவை. அப்படித்தான் இதுவும். மற்றபடி பிறர் சொல்லிக் கேட்கக் கூடாதென்றெல்லாம் ஒன்றுமில்லை. எதுவும் தானாய் மலரும் போது மகத்துவமாக இருக்கும் அல்லவா. இது தானாய் மலரும் காலம்.

ஆமாம் இனி நடக்கப் பழகப் போகிறேன் நண்பர்களே!

17.02.2022
வியாழக்கிழமை

Tuesday, February 15, 2022

நரையைப் பகிர்கிறேன்


சமீபத்தில் ஓர் இலக்கிய நிகழ்வில் கலந்திருந்தேன். அங்கு எடுத்த போட்டோ ஒன்றை நண்பர் முகிலன் அனுப்பியிருந்தார். மிகுந்த ஆர்வத்துடன் பதிவிறக்கம் செய்து பார்த்தேன். திடுக்கிடலுடன் ஏமாற்றமே எஞ்சியது. இதற்கு முன் எடுத்த நிழற்படங்களைவிட இதில் நரை கூடியிருந்தது. சற்று சுருங்கி வறண்ட தோல் வயோதிகத்தன்மையைக் காட்டியது போல் இருந்தது. ஒருவகையில் கொஞ்சம் ஸ்டைலாகவும் இருந்தது. சிறுவயதில் வாயைத் திறந்தமேனிக்கு இருக்கும் போதெல்லாம் ``டே திறந்த வாயா'' என்று சிவகாமி டீச்சர் கிண்டல் செய்வார். அவ்வாறான தன்மையுடன் இல்லையென்றாலும் துருத்துவதற்கும் உள் மடித்தலுக்கும் இடையே பற்களுக்குள் சிக்கியிருந்தது நாக்கு. கணத்தில் திறந்திருக்கிறதா அல்லது மூடியிருக்கிறதா என யோசித்தேன், திறந்துதான் கிடந்தது வாய்.  என்னைக் கண்காணிக்கும் என்னைச் சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டு வாயை மூடிக்கொண்டேன். பின்பு, போட்டோ ஷாப்பில் Hue / Saturation ஐ சொடுக்கி நிழற்படத்தின் தன்மையை மாற்ற முயற்சி செய்தேன். கொஞ்சம் பலன் கிட்டியது. முடித்திருத்தம் செய்து பரட்டைத்தலையைச் சரிசெய்ய வேண்டுமென அப்போது நினைத்துக்கொண்டேன். நரையும் சுருக்கமும் மறையாமல் இருக்கும் அந்நிழற்படத்தை இப்போதைக்குப் பகிர்கிறேன்.



பச்சோந்தி
16.02.2022

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...