Thursday, October 6, 2022

ரமேஷ் பிரேதனின் ` பட்டாம் பூச்சி'யை வாசித்தல்

Pinterest


நேற்று மாலை அலுவலகம் முடிந்ததும் நண்பர் செந்தில்குமாரைச் சந்திக்கச் சென்றேன். இவர் திருவல்லிக்கேணியில் உள்ள பைகிராஃப்ட் சாலை நடைமேடையில் புத்தக்கடை நடத்தி வருகிறார். தன் அப்பாவின் மரணத்திற்குப் பிறகு அவர் மேற்கொண்ட பணியைக் கடந்த 25 ஆண்டுகளாகச் செய்துவருகிறார். பத்து நாட்களாகத்தான் செந்திலைத் தெரியும். நான்கைந்து நாட்களாக தினசரி சந்தித்து வருகிறோம். இதற்கு முன் தினசரி சந்திப்பு என்பது வெய்யில் மற்றும் ஷங்கரராமசுப்பிரமணியம் இருவருடன்தான். வெய்யிலுடன் ஆறு மாதங்களுக்குள்ளும் ஷங்கருடன் ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளும் தினசரி சந்திப்பு முடிவுக்கு வந்துவிட்டது. வேறு யாரையும் சந்திக் கூடாது என்றெல்லாம் இல்லை, கடந்த 24 ஆண்டுகளாகச் சென்னை வாழ்க்கையை ஏக்கத்துடனும் பசியுடனும் அறியாமையுடனும் ஏகாந்தமாய் வாழப் பழகிவிட்டேன். அவ்வளவுதான். 

ஐந்து நாட்களில் முதல் மூன்று நாட்கள் அந்தரங்கமான விசயங்களை மட்டும் பகிர்ந்தோம். விஜயதசமி அன்று கடை விடுமுறை என்பதால் நண்பகல் நேரத்தில் அழைத்திருந்தார். நல்லதம்பி தெருவுக்கு வரவழைத்து வாலஜா சாலையில் தேநீர் அருந்தியபடி உரையாடினோம். இன்று மாலை வெளியில் செல்லலாமா என்றேன். யாரும் செல்லத் தயங்கும் இடத்திற்குச் செல்லலாமா என்றேன். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க எங்க போக வேண்டுமென்று மட்டும் சொல்லுங்கள் நான் அழைத்துச் செல்கிறேன் என்றார். Broken Bridge ஐப் பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை அங்கு அவ்வளவு எளிதாக உள்ளே போக முடியாது என்று நண்பர் சொன்னதாகக் கூறினேன். அந்த இடம்பற்றித் தெரியவில்லை ஆனாலும் போகலாம் என்றார். வெறுமனே வேடிக்கை பார்ப்பதும் சொந்த விசயங்களைப் பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல் ஏதாவது வாசிக்க வேண்டும் என்று மனதில் தோன்ற `மார்கழி பாவியம்', `மர்ம நபர்' கவிதைத் தொகுப்புகளை அவரிடம் கூடச் சொல்லாமல் எடுத்துச் சென்றேன். காமராஜர் சாலையைக் கடந்து நொச்சிக்குப்பக் கருவாட்டுக் காற்றின் உப்பை நுகர்ந்தபடி சென்றோம். Broken Bride சென்று வந்த அனுபவத்தைப் பிறகு பகிர்கிறேன். இரவு 9.30 மணிக்குச் சாம்ராஜைச் சந்திக்க செந்தில் செல்ல இருந்ததால் 8.30 க்கு இருவரும் கிளம்புவதாக முடிவெடுத்தோம். 

பெசன்ட் நகரில் இருந்து மைலாப்பூர் கிரி ட்ரேட்க்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு மெரினா நோக்கி வந்தோம். கவிதை வாசிக்கலாம் என்று முடிவெடுத்துக் கடற்கரைக்குள் சென்றோம். விண்மீனற்ற வானின் கீழ் சோளப்பொறிகள் வாட்டும் அடுப்பிலிருந்து தீச்சிறகுகள் பறந்தவண்ணமிருந்தன. செம்மஞ்சள் நிற உச்சி விளக்கின் ஒளியில் தேவதச்சனின் கவிதைகள் ஒன்றிரண்டை வாசித்தோம். வழக்கமாக தனியே ஒரு கவிதையை வாசிக்கையில் தனிமனிதச் சிந்தனையோடு அதாவது ஒற்றைத்தன்மையோடு முடியும். அரிதான பொழுதுகளில் ஒருவரின் பன்முகத்தன்மையும் வெளிப்படும். ஆனால், இது என்ன சொல்கிறது நாம் என்ன புரிந்துகொண்டோம் என்பதைக் கலந்து பேச நினைக்காமல் அடுத்தடுத்த கவிதைகளுக்குத் தாவிவிடும் தட்டையான வாசிப்பிலேயே முடிவடையும். இது புரியவில்லையே என்று யாரிடமாவது கேட்கலாம் என்றால் கவிதைக்கு விளக்கமெல்லாம் கேட்கப் படாது என்று முட்டுக்கட்டை போட்டு விடுவார்கள். அதற்கு நேர்மாறாக செந்தில் இருந்தார். ஒரு கவிதை வாசித்தால் அது என்ன சொல்கிறது என்று உங்களுக்குத் தெரிந்ததை நீங்க சொல்லுங்க, எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன் என்று முடிவெடுத்துக்கொண்டோம்.

தேவதச்சனின் சில கவிதைகளை வாசித்து பிறகு ரமேஷ் பிரேதனின் `கவையில் தேனடை' கவிதையை வாசித்தோம்.

கவையில் தேனடை

என் நண்பனின் திருமணத்தில் பங்கேற்க இயலவில்லை. பாரீசிலிருந்து புதுவை வந்து தேனிலவு முடித்து ஊர் திரும்பிய தம்பதியரைச் சந்தித்து வாழ்த்தி தேன் பாட்டிலைப் பரிசளித்தேன். அவன் `ஙே' என்று விழித்தான். அவள் வெட்கத்துடன் சமையலறைக்கு எடுத்துச் சென்றாள். விடைபெறும் போது நண்பனின் காதில் தேனில் பட்டாம்பூச்சியை ஊறவைத்துத் தின்றால் இல்லற சுகம் கூடும், இது பிரெஞ்சு முறை என்றேன். 

நான் பாரீசுக்குத் திரும்பி ஒரு மாதம் கழித்து நண்பனின் மனைவி தொலைபேசியில் அழைத்தாள்; அவன் பட்டாம்பூச்சிகளை வேட்டையாடப் பூங்காக்களே கதி என்றிருக்கிறானாம்.

நான் தலையில் அடித்துக்கொண்டேன். அவள் உடைபட்ட கண்ணகியின் சிலம்பு போலச் சிரித்தாள். காதில் தேன் வந்து பாய்ந்தது. 

இக்கவிதையை வாசிக்கும் முன்பே தலைப்பை மட்டும் கேட்ட செந்தில் `கவை என்றால் என்ன' என்றார். நானும் `ஙே' என்று விழித்தேன். இதற்கும் இக்கவிதையைப் பலமுறை வாசித்து இதன் உள்ளிருக்கும் அறியாமையை, எள்ளலைப் பலமுறை ரசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் கவை என்னும் சொல் கவ்வை என்பதாகப் புரிந்துகொண்டேன். ஊரில் உண்டிக்கோலைக் கவ்வான் என்றும் வேலி அடைக்க வெட்டிய முட்களை அள்ளும் V வடிவ மரக் கருவியைக் கவ்வை என்று அழைப்போம். அதன் பொருளியே புரிந்திருந்தேன். ஆனால், அர்த்தமென்ன என்று கேட்டதும் திடுக்கிடல் உண்டானது. சில சொற்களின் சித்திரம் அல்லது ஒலி நன்கு அறியப்பட்டது போல் மயக்கம் தருமல்லவா. பொது வெளியில் நாம் அன்றாடம் பார்க்கும் முகம் அல்லது மரம், செடி, பூ எல்லாம் நமக்கு நன்கு பரிச்சயமானவைதாம். ஆனால், பெயரென்ன என்று கேட்டால் திருதிருவென முழிப்போம் அல்லவா அப்படித்தான் கவ்வை என்ற சொல்லைத் தாண்டி வேறெதுவும் சொல்ல இயலவில்லை.  


செந்தில்குமார்

உடனே google இல் தேட செல்போனை எடுத்தேன். உடனே அகராதியைத் தேடாமல் கொஞ்ச நேரம் மனதிற்குள் அசைபோடுங்க விடை கிடைக்கும் என்றார் செந்தில். ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருக்கும் ஏதாவது ஒன்றில் பொருந்திப் போகிறா என்று பார்ப்போம் என்றார். சொற்களை நீங்கள் சொல்லுங்கள் சரியா இல்லையா என்று நான் சொல்கிறேன் என்றேன். கவைக்கு உதவாது என்று சொல்வார்கள் அல்லவா என்றதும் ஆமாம் அந்தப் பொருளில்தான் வரும் எதுக்கும் உதவாத செயலைச் செய்பவனைத்தான் குறிக்கும் என்றேன். சரி என்றால் உங்களின் திருப்திக்காக அகராதியைத் தேடுங்க என்றார். மரக்கிளை, கவைக்கோல், கரிசனை, கோட்டை, எலும்புக்கவை, காரியம் ஆகிய சொற்களின் நடுவே `பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்' என்னும் பெரும்பாணாற்றுப் பாடல் வரிகள் கிடைத்தன. ஒருவழியாக கவிதையை வாசித்து முடித்ததும் சிரிப்பொலியில் பட்டாம்பூச்சி என்கிற படிமம் எதைக் குறிக்கிறது என்கிற அடுத்த வினாவுக்கு எதை எதையோ யோசித்து பிறகு பெரும்பாணாற்றுப் பாடலின் `அல்குல்' சொல்லில் மனம் ஊன்றியது. அல்குல் என்றால் பெண்ணின் பிறப்புறுப்பு அல்லவா, ச்சே யோனியை எப்படித் தேனில் ஊறவைப்பது இவ்வாறு மனதிற்குள்ளே யோசித்தவாறு எனக்குள்ளே வெட்கமுற்று நெளிகிறேன். 

ரமேஷ் பிரேதன் யோனியை விதவிதமாகக் கவிதையில் கட்டமைத்திருப்பார். ஒரு இடத்தில் இரண்டாக வகுந்த ஆப்பிளைப் போல் உள்ளது என்று யோனியை வருணித்திருப்பார். இயற்கையிலேயே காய்களும் கிழங்குகளும் ஆணுறுப்பு வடிவிலும் பழங்கள், இலைகள், பூக்கள் எல்லாம் பெண்ணுறுப்பு வடிவிலும் இருக்கும் என்று வாசித்து உணர்ந்திருக்கிறோம் அல்லவா. அதனால்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறேன். பட்டாம்பூச்சி சிறகு விரித்தால் திறந்த யோனியைப் போல்தானே இருக்கும். இவ்வாறெல்லாம் யோசித்து எதுவும் சொல்லாமல் கூகுளில் காட்டிய சொற்களில் ஒன்றான மரக்கிளை என்ற சொல்லை உச்சரிக்கிறேன். மரக்கிளைக்கு எதற்கு இவ்வளவு அழுத்தம் தரவேண்டுமென்று செந்தில் கேட்கிறார். இவ்வாறு இருவரும் யோசித்துக்கொண்டிருக்கையில் `பே.... ' என்று ஒரு குழந்தை பயமுறுத்தியது. ஐயோ நாங்க ரொம்பவே பயந்துட்டோம் என்றதும் அக்குழந்தை எங்களுக்கும் மேற்கே மணலில் அமர்ந்திருந்த தன் அப்பா அம்மாவை நோக்கி ஓடியது. சற்றுத் தொலைவில் ஒலிக்கும் உருமிச் சத்தத்திற்குத் தாயும் தந்தையும் மகனுமாக நடனமாடுகிறார்கள்.

இரவு 9.30 மணி ஆகவும் திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் என்னை இறக்கிவிட வந்தார் செந்தில். விடைபெற்றுத் திரும்பும் போது அந்த பட்டாம்பூச்சி என்கிற இமேஜ் என்ன என்று நாம் விடாது யோசிக்கணும் செந்தில் என்றேன். டிக்கெட் வாங்கிப் படியேறுகிறேன் செந்திலிடமிருந்து அழைப்பு, சொல்லுங்க செந்தில் என்றேன் அந்தப் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றார். என்ன அது என்றேன் ஆர்வமாக, பெண்ணின் பிறப்புறுப்பைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றார். கரெக்ட்டு நானும் அப்பவே யோசித்தேன் ஆனால் சொல்ல ஒரு மாதிரியா இருந்தது என்றேன். கூச்சத்தைக் குப்பையில எறிங்க பச்சோ என்றார். எந்தக் குப்பையில் போடுவதென்றுதான் தெரியவில்லை ஆனால் இப்படிச் சொல்ல ஒரு நண்பன் கிடைத்துவிட்டான். இனிக் குப்பையைத் தேடுவோம்.

06.10.2022

வியாழன்

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அருமை ஐயா..!! தேவதச்சனின் மர்ம நபர் கவிதைத் தொகுப்பில் 43 வது கவிதை 'நிர்வாணம்' அவருக்கே உரிய எளிமையான வரிகள் தான்.ஆனால் ஒரு முறை படிக்கும் போது ஒரு அர்த்தத்தையும் மறுமுறை படிக்கும் போது நேர் எதிர் அர்த்தத்தையும் கொடுக்கும். அவர் எந்த அர்த்தத்தில் எழுதினார் என்று யூகிப்பது கடினம்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி. அந்தக் கவிதை குறித்து விரைவில் உரையாடுவோம்

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...