Sunday, October 9, 2022

சுஜாதாவின் பச்சோந்தியும் அன்னப்பறவையும்

 


அறிவியல் புனைவுகளின் மேல் தீரா மோகம் ஏற்பட்டுள்ளது. அறிவியல் புனைவு புரியவேண்டுமென்றால் அறிவியல் என்றால் என்ன என்கிற அடிப்படைப் புரிதல் வேண்டும். இரண்டையும் அறியும் வேட்கையில் இருக்கிறேன். ஒரு பனுவலைப் படித்துப் புரிந்துகொள்வதைவிடக் காட்சியின் மூலம் உணர்தல் மிக எளிது என்பதால் சினிமாக்களைப் பார்க்க ஆரம்பித்தேன். ஏற்கெனவே Gravity, Avatar போன்ற படங்கள் பார்த்திருந்தாலும் கிறிஸ்டோபர் நோலனின் Inception, Interstellar பார்த்த பிறகு இந்த உலகை அறிவியல் நோக்குடன் பார்க்கும் விதம் முற்றிலும் மாறியது எனலாம். அதற்குக் காரணம் படங்கள் பார்க்கப்பட்ட காலகட்டமே. ஒருநாள் be4books சென்றிருந்த போது அறிவியல் புனைவு திரைப்படங்கள் பார்த்துக்கொண்டிருப்பது குறித்துக் கவிதைக்காரன் இளங்கோவிடம் சொன்னேன். அவர் utopia and eutopia என்னும் சொற்களின் அர்த்தங்களை google இல் தேடிப் பாருங்கள் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்தும் என்றார். தேடிப் படித்தேன் புரிந்தும் புரியாமலும் இருந்ததால் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் செய்தி அனுப்பினேன். பெருவிஷ்ணுகுமார் ஒரு லின்க் அனுப்பி இருந்தார், அதற்குள் நேசமித்திரன் மிகத் தெளிவான பதிலை அனுப்பி இருந்தார். பிறகு அறிவியல் சார்ந்த கதை, கட்டுரைகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். அவற்றில் ஒன்றாக சுஜாதாவின் `ஏன், எதற்கு, எப்படி'. 

இன்று அப்பனுவலைப் புரட்டிக்கொண்டிருக்கையில் பின்பக்கம் இருந்த சப்ஜெக்ட்ஸ் இல் இடம்பெற்ற பச்சோந்தி என்னும் சொல் கண்ணில்பட்டது. பச்சோந்தி என்றதும் உங்களுக்கு என் நினைவு வரலாம், பலருக்குத் தன்னையேகூட நினைவு வரலாம். ஆனால், இந்தப் பச்சோந்தி `விலங்கு... பறவை... பூச்சி...' என்னும் உப தலைப்பின் கீழ் இருந்தது. 164 ஆம் பக்கத்திற்குத் தாவினேன். `பச்சோந்தியின் நெர்வஸ் சிஸ்டத்தில் இருக்கிறது நிறம் மாறும் சூட்சுமம்' என்று தன் பதிலில் கூறியிருந்தார் சுஜாதா. மேலும்,  அபாயம் வந்தால் மட்டுமல்ல... வெளிச்சம், உஷ்ணம், எண்ண ஓட்டம் இப்படிப்பட்ட சங்கதிகளுக்கும் பச்சோந்தி தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் என்பது மிகவும் உற்சாகமாக இருந்தது. இதில் என்ன உற்சாகம் என நீங்கள் கேட்கலாம் பச்சோந்தி என்று பெயர் வைத்ததால் அதன் பின்னுள்ள லாபநஷ்டங்கள் பச்சோந்திக்கே தெரியும். அதைப் பின்னொரு சமயத்தில் விரிவாக எழுதுகிறேன்.

மாலை 5.30 மணியளவில் குருதிபலி செந்திலைப் பார்க்கச் செல்லும் போது ஏன், எதற்கு, எப்படி, மார்கழி பாவியம் ஆகிய இரண்டு நூல்களையும் கையில் எடுத்துச் சென்றேன். கையில்தான் இரண்டு ; பையில் இன்னும் இருந்தன. எங்கு சென்றாலும் கையிலும் முதுகிலும் புத்தகங்கள் சுமந்து சில நேரங்களில் அயர்ச்சியடைவது உண்டு. ஆனால், அந்தச் சுமையோடு அலைந்து திரிவதுதான் என் பலம். சிம்ஸன் சிக்னலில் 29A பேருந்தில் ஏறி பைகிராஃப்ட்ஸ்  சாலையில் இறங்கினேன். கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டிருந்த செந்திலுக்கு வணக்கம் சொன்னதும் கைகளை இறுகப் பற்றி வாங்க பச்சோ என்றார். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று  `ஏன், எதற்கு, எப்படி' பனுவலைப் புரட்ட ஆரம்பித்தேன். அதில் இடம்பெற்ற பாலையும் நீரையும் அன்னப்பறவை பிரிக்காது என்னும் பதில் குறித்து சற்று நேரம் கழித்துச் செந்திலிடம் பேசினேன். பாலையும் நீரையும் பிரிக்கும் என்பதை நேரிடையான அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளாமல் அறிவியல்பூர்வமாக நீர் கலந்ததா, கலக்காததா என்பதை வாசனை, சுவையின் மூலம் அன்னப்பறவை அறியும் என்பதாகப் புரிந்துகொள்ளலாம் என்றார். இந்தப் பதில் ஒருவகையில் தர்க்கரீதியாகப்பட்டது. பிறகு அன்னம் என்கிற சொல் முதலில் சோற்றுப் பருக்கைக்கு வந்ததா இல்லை அன்னப்பறவைக்கு வந்ததா என்னும் கேள்வியுடன் இரண்டும் வெண்மை நிறமுடையது என்பதால் இப்படிக் கேட்கிறேன் என்றார். சற்று யோசித்து பறவை, பருக்கை இரண்டில் பறவைதான் முதலில் தோன்றியது. எனவே அன்னம் என்பது பறவைக்குத்தான் முதலில் இருந்திருக்கும் என்றேன். ஆந்திராவில் அன்னம் என்னும் சொல் இன்னும் பேச்சு வழக்கில்  இருப்பதைச் சுட்டிக்காட்டினார். 

அன்னத்திலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்ற செந்தில் த்ரீ என்னும் ஆங்கிலச் சொல் சமஸ்கிருதத்தில் இருந்துதான் கையாண்டிருக்க வேண்டும் என்பதை `திரிசூலம், திரிகடுகம், திரிலோகாதிபதி என்னும் சொற்களின் உதாரணத்துடன் கூறினார். சமஸ்கிருதம் படித்தவன் என்கிற முறையில் ஏகம், த்வீ, த்ரீணி, சத்வாரி, பஞ்ச, ஷட், சப்த, அஷ்ட, நவ, தச, ஏகாதச என்று சொற்களில் ஓட ஆரம்பித்து த்ரீணி சொல்லுக்கு மீண்டும் ஓடிவந்தேன். அட ஆமா செந்தில் அப்படியும் இருக்கும் அல்லவா என்றேன். நிலம், கடல் என எல்லை தாண்டும் சொற்கள் எத்தனை வியூகங்களை வகுக்கின்றன. 

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...