Tuesday, October 18, 2022

பழைய வாழ்வை மீட்கிறேன்

 


2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி பீஃப் கவிதைகள் எழுதி முடித்தேன். அதன் பிறகு பல்வேறு சூழலால் தொடர்ந்து கவிதைகள் எழுத இயலவில்லை. இடையிடையே கவிதைக்கான மனநிலை நிலவினைப் போல் வளர்வதும் தேய்வதுமாக இருந்தது. நான் வளர்பிறையைத் தேய்பிறையிலும் தேய்பிறையை வளர்பிறையிலும் மாறி மாறி உணர்ந்தவாறே இருந்தேன். எண்ணிலிறந்த பௌர்ணமிகளும் அமாவாசைகளும் கடந்து சென்றன. பழைய வாழ்க்கையை மீட்கும் போராட்டத்தில் எழுதுவதை மறந்தேன். ஒருமுறை ஷங்கருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது படைப்புலகில் தொடர்ந்து பலர் இயங்குவதைக் குறிப்பிட்டேன். என் வருத்தத் தொனியைப் புரிந்த அவர் ``கவலைப்படாதீங்க பச்சோந்தி, இடைவெளிவிட்டு எழுதும் போது அது வேறொன்றாக இருக்கும்'' என்றார். சில முறை பீஃப் கவிதைகளுக்குப் பிறகு என்னால் எழுத முடியுமா என்கிற சந்தேகமும் எழுந்ததுண்டு. ஏப்ரல் 2022 வரை இப்படித்தான் கடந்தது. ஒருநாள் நடைப்பயிற்சிச் செய்யும் போது திணைகள் இதழுக்கு உங்களின் கவிதைகள் வேண்டும் என்றார் ஷங்கர். நான் திகைத்தபடி நின்றதைக் கண்டு ``எனக்காக எழுதுங்கள்'' என்று கெஞ்சலுடன் சொன்னார். கொஞ்சம் கொஞ்சமாக எழுதும் மனநிலைக்குத் தயாராகிக்கொண்டிருந்த மனதிற்கு  ``எனக்காக எழுதுங்கள்'' என்னும் ஷங்கரின் சொற்கள் உத்வேகமளித்தன. 

ஒருமுறை அண்ணாசாலையிலிருந்து கலை விமர்சகர் ஜமாலனைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தேன். அண்ணா திரையரங்கம் அருகே நடந்துகொண்டிருந்த போது வெ.நி.சூர்யாவுடன் போனில் பேசினேன். என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என அவர் வினவினார். அக்காலகட்டத்தில் இவ்வாறான கேள்வியைக் கேட்பவரிடம் ``கடுமையான  பொருளாதார நெருக்கடி எதுவும் எழுதவில்லை'' என்கிற template ஆன பதிலைச் சொல்லி வந்ததையே சூர்யாவிடமும்  சொன்னேன். அப்படியென்றால் அதை எழுதுங்கள் என்றார். சூர்யாவின் பதிலில் என்னை நானே ஏமாற்றிக்கொண்டு வருடங்களை வீணடித்தாகத் தோன்றியது. அந்நேரத்தில் மிக நெருங்கிய நண்பர் ஒருவர் ஏற்படுத்திய அவமானம், வலி என்னை முரட்டுத்தனமான வாசிப்புக்குள் தள்ளியது. தொடர்ந்த வாசிப்பினுடே சிறிய பயணத்தை யதேச்சையாக மேற்கொள்ள நேர்ந்தது. அப்படியான பயணத்தில் எழுதிய முதல் கவிதையை ஷங்கர், வெ.நி.சூர்யா, பெரு விஷ்ணுகுமார் மூவருக்கும் அனுப்பினேன். மூவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் வெ.நி.சூர்யா தலைப்பை மாற்றலாம் என்கிற ஆலோசனை சொன்னார். அந்நேரத்தில் தனிமை வெளி இதழுக்குக் கவிதைகள் வேண்டுமென்று பிரவீண் பஃறுளி கேட்கத் தலைப்பைக்கூட மாற்றாமல் அனுப்பி வைத்தேன். லேஅவுட் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் `நடனமற்றுத் தரையிறங்கும் ஆகாயம்' என்னும் தலைப்பைத் தனிமை இதழின் ஆசிரியர் குழுவுக்கு அனுப்பிய கையுடன் சூர்யாவுக்கும் அனுப்பினேன். அவருக்குத் தலைப்பு பிடித்திருந்தது. முதலில் கவிதைகள் கேட்ட ஷங்கருக்குக் கவிதைகள் அனுப்பவில்லையே என்கிற குற்றவுணர்வு என்னுள் எழுந்தது. திணைகள் இதழ் பணி தொடங்க இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும் அதற்குள் எழுதித் தாருங்கள் என்று ஷங்கர் கேட்டதற்கு இணங்க அடுத்தடுத்து எழுதிய ஏழு கவிதைகளை அனுப்பினேன். 

விகடனில் இருந்து கிடைத்த பணத்தில் கடன் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டதாக ஒருமுறை பெரு விஷ்ணுகுமாரிடம் கூறினேன். அப்போது அவர் ``அவ்வளவுதான் ப்ரோ மீண்டும் பழையபடி இயங்க ஆரம்பியுங்கள்'' என்றார். இப்படி எனக்குள் இருந்த என்னை மீட்ட ஷங்கரை, சூர்யாவை, விஷ்ணுவை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். ஆமாம் பழைய வாழ்க்கையை மீட்கத் தொடங்கியுள்ளேன். தனிமை, திணைகள் இதழ்களை அடுத்து தற்போது `அகநாழிகை கலை இலக்கிய இதழ்' இல் `உப்பலையும் கரையும் மாநகரம்', `ஒயினென்ற வார்த்தையைக் குடித்தல்', `மண்டையோடுகளின் பறையிசை' என்னும் தலைப்பிலான பச்சோந்தியின் மூன்று கவிதைகள் வெளிவந்துள்ளன. அகநாழிகை இதழுக்கும் அதன் ஆசிரியர் பொன் வாசுதேவனுக்கும் மிக்க நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அகநாழிகை கலை இலக்கிய இதழில் வெளியான மூன்று கவிதைகள்


உப்பலையும் கரையும் மாநகரம்



ஒயினென்ற வார்த்தையைக் குடித்தல்





மண்டையோடுகளின் பறையிசை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...