Monday, May 30, 2022

பத்ரியன் மலர்ச் சந்தையைப் பற்றவைத்தேன்







பாரிமுனைப் பத்ரியன் மலர்ச் சந்தையை உரசி
சிகரெட்டைப் பற்றவைத்தேன்.
படங்களாய்க் குவிந்து கிடக்கும் கடவுள்களின் மீது
ஊதுவத்தியின் சாம்பல் படர்கிறது.
வட்டமான மூங்கில் கூடையில்
தாழம் பூக்களை அடுக்குபவனிடம்
வாசத்தை நுகரக் கேட்டேன்.
தென்னங்குருத்தைப் போன்ற இலையால்
நாசித் துளைகளை அடித்து விரட்டலானான்.
சற்றும் அசையாது
ஒரு வண்டைப் போல் சதா ரீங்கரித்தேன்.
நடுக்கமுற்ற அவன் தாய்
பூவைப் பிய்த்து என் திசை பார்த்து எறிந்தாள்.
கண்களால் கவ்விச்சென்று
மேற்கூரை இடிந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்து
முகர்ந்துகொண்டே இருந்தேன்.
நாசியின் விளிம்பில் ஒட்டிய
சாமை போன்ற மென்துகள்களை
நுனி விரலில் கிள்ளி எடுக்கப் பார்த்த போது
என் முதுகு தட்டப்பட்டது.
தட்டிய ஓசையைத் தேடினேன் 
ஆலம் விழுதுகளால் நெய்யப்பட்ட சுவர்தான் நின்றிருந்தது.
பாதி உடைந்த ஜன்னலில் எட்டிப் பார்த்தேன் 
நிழலில் காயவைத்த தாழம் பூவைப் 
பொடிசெய்யும் பசியற்ற வயிறு
வெந்நீரில் கொதித்த தாழம் பூவில்
பனைவெல்லத்தைக் கரைக்கும் தேகச் சூடு உள்ளவன் 
தாழம் பூ இலையை நெய்யில் வதக்கும் நீர்க்கடுப்பு உள்ளவன்
தாழம் பூ இலை கொதித்த நீரில் 
தொண்டையால் நீச்சலடிக்கும் தோல் நோயாளி
எண்ணற்ற நிழல்கள் 
மேற்கூரை இடிந்த சுவருக்குள்
மீண்டும் பற்றவைத்தேன்
மலர்ச் சந்தையை.

 

  


 

நடனமற்றுத் தரையிறங்கும் ஆகாயம்


 

கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் நடந்துகொண்டிருந்தேன்.

இடிந்து நொறுங்கிய வீட்டின் எஞ்சிய சுவர்

வேர்களால் வேயப்பட்டிருந்தது.

அதன் மீது சாய்ந்திருக்கிறது

ஒரு முனை உடைந்த மூங்கில் ஏணி.

வெட்டுத் தழும்புகளுடன் நின்றிருக்கும் அரச மரத்தின்

பாதி உடைந்த கிளை

அக்கினி வெய்யிலில் எரிகிறது.

அந்த நெருப்பில் சுருட்டைப் பற்றவைக்கிறான்

வாயற்ற வயோதிகன்.

சுருள் சுருளாய் மேகங்கள் சஞ்சரிக்கையில்தான்

தொண்டையில் மடித்துவைத்திருந்த உதடுகள்

எட்டிப் பார்த்தன.

பழக்கூடையில் ஊன்றிய குடை

காற்றில் சாயாதபடி 

கண்ணாடி வளையல்கள் இறுக்கிப் பிடிக்க

மற்றோர் கையின் வளையலோசை

பலாச் சுளைகள் மீது அமர்ந்த ஈக்களை விரட்டுகிறது.

நடனமற்ற அரசின் பழுத்த இலை

ஆகாயத்தைத் தரையிறக்கும் பொழுதில்

ரத்தக்கறை படிந்த லுங்கியொன்று

நடைமேடை மீது தூங்கித் தூங்கி வழிகிறது.

சிலையாய் நிற்கும் ஜார்ஜ் மன்னன்

சுட்டாலும் பாதத்தை மட்டும் நகர்த்தாமல் 

மண்டையைக் கழட்டிக் கிரீடத்தைச் சொரிகிறான்.

 

Friday, May 27, 2022

 




எல்லோருக்கும் அருகில் இருக்கிறாய்

என்னைத் தவிர

எல்லோருக்கும் தொலைவில் இருக்கிறேன்

உன்னைத் தவிர

 


Saturday, April 23, 2022

போலிகளை எதிர்கொள்வதுதான் பெரும் சவால்


நேற்று மாலை வேளச்சேரியிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகம் சென்றுகொண்டிருந்தேன். மனைவி `இளங்கலை தமிழ் இலக்கியம்' படிக்கிறாள். ஆன்லைன் தேர்வு நடைபெறுவதால், தேர்வுத்தாளைச் சமர்ப்பிக்கத்தான் இப்பயணம். 

தமிழ்க் கவிதைகளில் சவாலான ஒரு கவிதைத் தொகுப்பைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் வெளியான நண்பர் மாரி செல்வராஜின் `உச்சினியென்பது' நூலினை மிகத் தீவிரமாக வாசித்தபடி பேருந்தில் பயணித்தேன். சரியாக மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே சென்றுகொண்டிருந்த போது நேரம் பார்க்கக் கைபேசியை எடுத்தேன். அதில் பரிசல் செந்தில்நாதனின் தவறிய அழைப்பு இருந்தது. உடனே அழைத்தேன், `இடைவெளி' கவிதைக்கான காலாண்டிதழ் இன்று மாலை 5.30 அளவில் வெளியிடுகிறோம். ஷங்கர் வருகிறார் நேரம் இருந்தால் அவருடன் வாங்க என்றார். எங்கே நடைபெறுகிறது என்றேன். மோகன் வீட்டில் என்றார். அப்போது நேரம் 4.45 இருக்கும். பல்கலைப் பணியை முடித்துவிட்டு சி.மோகன் வீடு இருக்கும் வளசரவாக்கம் செல்வது இயலாத காரியம். முடியாது என்று தெரிந்தும் விடைத்தாள் சமர்ப்பித்ததும் அழைக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். 

சென்ற வேலை முடிந்து ஷங்கரை அழைத்துப் பேசினேன். ``நிகழ்வுக்கு நூல்வனம் மணிகண்டன் வருவதாகக் கூறியுள்ளார். அவருக்காகக் காத்திருக்கிறேன். வந்ததும் புறப்பட்டு விடுவோம்'' என்றார். சரி வரும் போது இடைவெளி இதழ் ஒன்று எடுத்து வாருங்கள் என்றேன். ``தாராளமாக, கவிதைச் சிறப்பிதழ் தானே இரண்டு இதழ் கூட எடுத்து வருகிறேன். கவிதையை யார் படிக்கப் போகிறார்கள்'' என்றார். 

இன்று காலை ஷங்கரைப் பார்த்து இதழைப் பெற்றுக்கொண்டேன். சிறப்பாசிரியராக சி.மோகன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வோர் இதழும் ஒரு பொருளை மையப்படுத்திச் சிறப்பிதழாக வெளிவருமெனத் தெரிவித்துள்ள இடைவெளி ஆசிரியர் குழு அடுத்த இதழை கவிஞரும் ஆய்வாளருமான றாம் சந்தோஷ் பொறுப்பில் கொடுத்துள்ளது. 

முதல் இதழ் `ஆஹா சாகித் அலி' என்னும் இந்திய - அமெரிக்கக் கவிஞரின் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இந்த இதழின் பொறுப்பாசிரியர் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் இவ்விதழ்ப் பணியைச் செம்மையாகச் செய்துள்ளார். யார் இந்த ஆஹா சாகித் அலி என்று கூகுளில் தேடினால் விரல்விட்டு எண்ணக்கூடிய இணைப்புகளே கிடைத்தன. இந்து தமிழ் திசையில் `செய்திகள் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு' என்னும் குறுங்கட்டுரை, காலச்சுவடு பக்கத்தில் ந.ஜயபாஸ்கரனின் `அறுந்த காதின் தன்மை' என்னும் கவிதைத் தொகுப்பின் பின்னட்டைக் குறிப்பு உட்பட அனைத்தும் ஷங்கரின் பெயரையே காட்டின. 

சுதந்திர இந்தியாவில் பிறந்து எழுபதுகளின் பிற்பகுதியில் அமெரிக்காவிற்குக் குடியேறியவர் ஆஹா சாகித் அலி. அங்கு பென்சில்வேனியா பல்கலையில் பிஎச்டி முடித்து பேராசிரியராகப் பணிபுரிந்தவர், 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலமாகியுள்ளார். தன்னை நாடுகடத்தப்பட்டவன் என்று பிரகடனப்படுத்திக்கொண்ட சாகித் அலியைப் படிக்கப் படிக்கப் பாலஸ்தீனக் கவிஞர் முஹ்மது தர்வீஸ் நினைவில் வந்து போனார். அவரின் அடையாள அட்டை, கடைசிவானத்துக்கு அப்பால் என்னும் கவிதைகள் என்னை மிகவும் பாதித்தவை. நிலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டவர், நிலம் பிடுங்கப்பட்டவர், பிழைப்பு தேடி நிலத்தை விட்டுச் சென்றவர் எங்கெங்கு உள்ளார்களோ அனைவருக்கும் இவர்கள் நெருக்கமாக இருப்பார்கள். 

அதிகாரத்தை எதிர்க்கும் ஆயுதம்தான் கலை. அக்கருவியை இடைவிடாது முடுக்குபவர்கள்தாம் கலைஞர்கள். இங்கே, அதிகாரத்தைக் கேள்வி கேட்கப் புறப்பட்டவர்கள் தாமே ஓர் அதிகாரப் பிம்பமாய் உருவெடுத்திருப்பது துர்பாக்கியம். நேரடியான எதிரியைவிட முற்போக்கு போர்வையில் உலவும் போலிகளை எதிர்கொள்வதுதான் மிகப் பெரும் சவாலாக உள்ளது. மாறாக 
தன்னலமின்றிக் கலை என்னும் ஆயுதத்தை ஏந்தியவனே வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கிறான். ஆண்டாண்டுக் காலமாய் அடக்குமுறையைச் சந்திக்கும் தலைமுறைகளுக்கு அவன் விட்டுச் செல்லும் கலை ஆயுதமாக, ஆறுதலாக இருந்து வருகிறது. காஷ்மீரியக் கவிஞன் ஆஹா சாகித் அலியின் எழுத்துகள் இரண்டாம் வகை. 

`அஞ்சல் அலுவலகம் இல்லாத நாடு', `அன்பே ஷாஹித்', `பேகம் அக்தரின் நினைவில்', `கஸல்', `மதியத்தில் டில்லிக்குத் திரும்புவதைக் கனவு காண்கிறேன்', `டெல்லியைப் பற்றிய தொலைந்த நினைவு', `வீடுகள்', `கண்ணாடி வளையல்களின் கனவு', `டெல்லியில் கோஸின்ட்சேவின் கிங் லியர் நாடகத்தைப் பார்த்துவிட்டு வரும்போது', `பனிமனிதர்கள்' என்னும் தலைப்பிலான கவிதைகளும் ஆஹா சாகித் அலி பற்றிய சில குறிப்புகளும் அடங்கியுள்ளன. கணையாழி கடைசிப் பக்கத்தை சுஜாதா நிரப்பியது போல் இடைவெளியின் கடைசிப் பக்கத்தை சி.மோகன் எழுதியுள்ளார். கஸல் என்னும் தலைப்பிலான கவிதை இவ்வாறு தொடங்குகிறது...

இழப்பின் மொழியாக எஞ்சியிருக்கும் ஒரே மொழி
அரபிதான் 
இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டது வேறு மொழியில்
அரபியல் அல்ல.

கவிதைகளை மட்டும் நாளை எழுதுகிறேன் டியர்ஸ்....

23.04.2022
சனிக்கிழமை



 

Thursday, April 21, 2022

பலகீனங்களின் மேல் சவாரி செய்யும் சமூகத்தில்

  


நேற்று காலை 3.30 மணியளவில் போதி பிரவேஷ் எழுதிய `தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை' நூலில் இடம்பெற்ற `பாலின்பத்தின் ஆற்றல்' பகுதியைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் `பாலின்பம் நிகழும் போது நுண்ணறிவை உருவாக்கும் வேதிகள் சுரக்கின்றன. உச்சக்கட்டப் பாலின்பத்தின் போது சுரக்கும் வேதிகளே நுண்ணறிவை உருவாக்கக் கூடியவை' என்கிற இடம் குறித்துக் கூடுதல் புரிதல் தேவைப்பட்டது. ஆனால், பாலியல் சார்ந்து யாரிடம் பேசுவது என்கிற குழப்பம். பிறரின் பலகீனங்களின் மேல் சவாரி செய்யும் சமூகத்தில் இவ்வாறான உரையாடல் சாத்தியமில்லைதான். இரண்டு மணி நேரம் படித்துவிட்டு, பின்பு 5.30 க்கு மீண்டும் உறங்கச் சென்று விட்டேன். சரியாக 6.45 மணி இருக்கும், உறக்கத்தைத் தட்டி எழுப்பினாள் மகள். கீழறைக்கு வந்ததும் சதுரங்கம் ஆட அழைத்தாள். 

புதிய தலைமுறையில் தலைப்புச் செய்தி கேட்ட படியே காய்களை நகர்த்த ஆரம்பித்தோம். பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு அம்மாவுடன் படி ஏறிய மகனை அழைத்து அவன் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன். நேற்றெல்லாம் கடுமையான காய்ச்சல். வாந்தி எடுத்ததில் கொஞ்சம் வாடிப் போயிருந்தான். கையில் இருநூறு ரூபாய்தான் இருந்தது. மகனுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்பதைவிட பெரிய அளவில் மருத்துவச் செலவு வந்தால் யாரிடம் பணம் கேட்பது என்கிற பயம்தான் மேலோங்கி இருந்தது. ஆனாலும் எதுவும் ஆகிவிடாது மகனே கவலைப்படாதே என்று, மருந்துக் கடையில் டானிக்கும் வாந்தி மாத்திரையும் வாங்கிக் கொடுத்திருந்தேன். இன்று வெப்பச் சூடு ஏதுமில்லாதது ஆறுதலாக இருந்தது. விளையாட்டின் ஊடே மனைவி எடுத்து வந்த தேநீரின் சூட்டை ஆற்றினேன். ஆவி பறத்தலைப் பகிர்ந்து பருகினோம். என்னுடைய வழிகாட்டுதல் ஏதுமின்றி முதல் முறை ஆட்டத்தைத் தன்வசமாக்கி வெற்றி பெற்றாள் மகள். நான் அவள் கைகளை இறுகப் பிடித்து வாழ்த்துச் சொன்னேன். அப்பாவை வென்ற மகிழ்ச்சியுடன் மேலறைக்குச் சென்று விட்டாள். 

சற்று நேரத்தில் ஷங்கர் அழைத்து நிதானமான பதில் வணக்கத்துடன் தேநீர் குடிக்கலாமா என வினவினார். வீட்டில் குடித்த தேநீரின் கசப்பு இன்னும் தொண்டைக் குழியில் வடியாமல் கிடந்தது. ஷங்கர் அழைத்தால் செல்லாமல் இருக்க முடியாது. அது ஓர் அதீத அன்பு. அன்பை மறுத்து வேறென்ன செய்யப் போகிறோம் இவ்வுலகில். நடைப்பயிற்சியின் போது இடைவெளி விட்டு இரண்டு கோப்பைத் தேநீர் குடித்ததெல்லாம் பலமுறை நடந்திருக்கிறது. உடனே வருகிறேன் என்றேன். ஜிம் பக்கம் வந்திருங்க என்றார். அவருக்கு முன்பே ஜிம் எதிரே நின்று அழைத்தேன். அப்படியே கீழிறங்கி டீக்கடைக்கு வந்திருங்கள் என்றார். காய்கறிகளை இறக்கும் வேலை, தள்ளுவண்டியில் அடுக்கும் வேலை எனப் பரபரப்பாக இருந்தது தண்டீஸ்வரம் சாலை.

கனரா வங்கி ஏடிஎம் அருகில் இருந்த டீக்கடைக்குச் சென்று லெமன் டீ இருக்கிறதா என்று முன்பே விசாரித்தேன். இல்லை என்ற கடைக்காரர் புதிய நபராக இருந்தார். காய்கறி மூட்டை, கீரைக் கட்டுகள் நடைமேடை மீது கிடைந்தன. கட்டடங்களின் மீது விழுந்த சூரியன் இன்னும் வீதிக்கு வரவில்லை. பூக்கட்டும் மேசையும் பூக்கட்டுபவர் அமர மரப் பலகையும் தயார் நிலையில் இருந்தன. வெள்ளைச் சட்டை, கறுப்பு பேன்ட்டுடன் இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கிய ஷங்கரின் முகம் க்ளீன் ஷேவிங் செய்யப்பட்டிருந்தது. வாகனங்களின் இரைச்சலினூடே காகங்கள் கரைந்தன. ஜிம்மிற்குச் செல்லும் போது என்ன சட்டையுடன் என்று வினவுவதற்குள் சூர்யா பேசினார். அவருடன் பேசிக்கொண்டிருந்ததால் சட்டையை மாற்றத் தவறிவிட்டேன் என்றார். வெகுநாளாகிவிட்டது சூர்யாவைப் பற்றிப் பேசி எப்படி இருக்கிறார் என்றேன். அடுத்த கவிதைத் தொகுதியை உங்களுக்கு அனுப்பியது போல் அவருக்கும் அனுப்பியிருக்கிறேன். அவர் படித்துத் தன் கருத்தைச் சொன்னதும் வெளியீட்டுக்கான வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான் என்றார்.

மொத்தக் கவிதைகளையும் படித்து நான் அவரிடம் பேசிய போது, `இன்னும் கொஞ்சம் கூடுதலாக எழுத வேண்டும், அதற்கு ஒரு வருடம் கூட ஆகலாம்' என்கிற முடிவில் இருந்திருந்தார். இன்று `அந்தத் தொகுப்பு ஏற்கெனவே முடிந்து விட்டது. நானும் மன அளவில் அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். பலகீனமாக இருந்தாலும் கொண்டு வந்திடலாம். இனி எழுதப் போவது இந்தத் தன்மையில் இருக்காது. இது தன் நிகழ்வை முடித்துக்கொண்டது' என்று கூறிய போது, சர்க்கரை கம்மியான தேநீர் தயாராகியிருந்தது. மிகவும் மட்டமான சுவையைச் சுட்டியபடி கோப்பையில் வடியும் தேநீரைக் கழுவியோ அல்லது துடைத்தோ கொடுக்காமல் அப்படியே கொடுக்கிறார் பாருங்க என்று சொல்லும் போது கொழுத்த கறுப்பு வெள்ளை நாயொன்று ஷங்கரின் ஷார்ட்ஸை மோந்து பார்த்தது. நாயின் உரிமையாளர் அதட்டினார். மனிதர்களைப் போல் விலங்குகளிடமும் அன்பும் பரிவும் காட்டும் ஷங்கர் நாயின் செயலுக்கு அமைதியாக இருந்தது வியப்பொன்றுமில்லை.     

22.04.2022
வெள்ளிக்கிழமை



Wednesday, April 20, 2022

பற்றி எரியும் அப்பாவின் கனவு!


தம்மைப் போல் பண்ணையடிமையாய்த் தம் பிள்ளைகளும் வாழ்ந்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் அப்பா. மேலும், எல்லா பிள்ளைகள் மீதும் ஒருவித வெறுப்பைத் தொடர்ந்து காட்டி வந்தார். இதனால், இரண்டு விசயங்கள் நடந்தன. ஒன்று வெறுப்பைத் தாங்காமல் ஊரை விட்டுப் பிள்ளைகள் ஓடுவது ; மற்றொன்று படிப்பு என்கிற சொல்லில் விடுதியில் சேர்த்து விடுவது. மூத்த அண்ணன் முதல் ரகம் ; இளைய அண்ணன் இரண்டாம் ரகம். ஆனால், தம் பிள்ளைகள் பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற கனவை மூட்டையாய்ச் சுமந்தபடியே இருந்தார். அக்கனவு எதுவென்று சுட்டுவிரல் நீட்டவோ, அக்கனவை நோக்கிக் கைக்கூட்டி அழைத்துச் செல்லவோ, அக்கனவைச் சொற்களால் விளக்கவோ அவரால் இயலவில்லை. ஆனால், தீராக் கனவு அதிகாலைச் சூரியனைப் போல் சுடர்விட்டுக்கொண்டே இருந்தது. 

சிறுவயதிலிருந்தே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கண்ணதான், வாலி, வைரமுத்து போன்றோரின் திரைப்பாடல்களை அடிக்கடி சொல்லிக் காட்டுவார். ஒவ்வொரு முறையும் அவர் பேச்சிலிருந்து ஒரு சொலவடை வந்து விழும். அறிந்தோ, அறியாமலோ அவை எனக்குள் சேகரமாகின. கலைஞர், அண்ணா உரையாடல்களைச் சொல்லிக் காட்டுவார். ஆனால், அவரின் பேச்சைச் சமீபம் வரை நான் பொருட்படுத்தியதில்லை. ஊருக்குச் சென்றால் அப்பாவின் நண்பர் பாபுவைத் தேடி அவர் தோட்டத்திற்குச் சென்று விடுவேன். வீட்டை விட்டால் அவர் தோட்டத்தில்தான் இருப்பேன். தென்னைக்கு நீர் பாய்ச்சும் அவர், இலக்கியம் படிக்கும் என் அருகில் வந்து அமர்ந்துகொள்வார். அவருக்குக் கேட்கும் படி வாசிப்பேன், பிறகு அது குறித்தும் உரையாடுவோம். 

அப்படி கடந்த வருடம் பொது முடக்கக் காலத்தில் வாசிப்பின் ஊடே, உங்களின் மொழி வளம், உச்சரிப்பு, முகபாவம் எல்லாம் தேர்ந்த கலைஞனையே வெளிக்காட்டுகிறது என்றேன். இதை ஏற்கெனவே பலமுறை அவரிடம் சொல்லி இருக்கிறேன். இதற்கு அவர் அளித்த பதில் புதிதாக இருந்தது. ``என்னை விட உங்கள் அப்பா மிக அருமையாகப் பேசுவார். நிறைய பழமொழி சொல்லுவார்'' என்றார். அப்பாவைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்கிற குற்றவுணர்வு எழுந்தது. எப்போதும் அம்மாவைப் பற்றியே பேசுவேன். ஊருக்கு போன் செய்தால் கூட அம்மாவிடம்தான் அதிக நேரம் பேசுவேன். அப்பாவிடம் அவ்வளவாகப் பேச மாட்டேன். நலம் விசாரிப்பைத் தவிர அப்பாவும் பெரிதாகப் பேச மாட்டார். நான் எழுதிய கவிதைப் பனுவல்களைக் காட்டுக்கு எடுத்துச் சென்று வரிக்கு வரி படிப்பார். 

கடந்த ஓராண்டுக்கு முன்பு ``நான் எழுதிய கவிதை'' என்று ஒரு காகிதத்தைக் கொடுத்தார் அப்பா. இப்போது அது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அவ்வப்போது ``ஒரு கதை சொல்லுறேன் கேளுப்பா'' என்பார், நான் அவர் சொற்களைப் பெரிதுபடுத்தியதில்லை. 

இப்போதெல்லாம் அப்பாவின் உதட்டசைவைக் கேட்கத் தோன்றுகிறது. அவருக்குத் தெரியும் மொத்தப் பழமொழிகளையும் அவரின் பண்ணை வாழ்வையும் ஒரே மூச்சில் கேட்க வேண்டும் என்று மனம் உந்துகிறது. தரை தேய்த்து நடக்கும் அவர் காலடி ஓசையின் பின்னே நடக்க வேண்டும். கரும் புள்ளிகள் பூத்த அவர் முகத்தைப் பார்த்துப் பேச வேண்டும் என மனம் ஏங்குகிறது. ஆனால், அவரோ பல வருடங்களாகத் தம் பிள்ளைகளின் அன்புக்கு ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறார். தம் பிள்ளை பெரியாளா வரவேண்டும் என்னும் அப்பாவின் கனவு இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது. எனக்கு என் பிள்ளை பெரியாளா வரவேண்டும் என்கிற கனவு பற்றியிருக்கிறது. அப்பாவின் மகனும் மகனின் மகனும் அப்பாக்களின் கனவை அடைக்காத்துச் சிறகடிக்க வைப்பார்கள். அச்சிறகுகள் விரியும் காலம் வந்துவிட்டது டியர்ஸ்... 

20.04.2022
புதன்கிழமை

Tuesday, April 19, 2022

உடைந்த வளையல் வானத்தின் கீழ்...

 


நேற்று மாலை சிவராஜ் பாரதியும் நானும் அலுவலகத்தில் உரையாடிக்கொண்டிருந்தோம். வரவேற்பரையில் கரகரத்த குரல் ஒலித்தது. யாரென்று பார்த்தேன். புத்தக மூட்டையுடன் பரிசல் செந்தில்நாதன் வந்திருந்தார். தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு இம்மாத இறுதியில் மதுரையில் வானம் கலைத் திருவிழா 2022 நடைபெறவிருக்கிறது. அங்கு விற்பனை செய்வதற்காக நீலம் சார்பாகப் புத்தகங்கள் கேட்டிருந்தோம். எனவே, க.பஞ்சாங்கத்தின் `தலித்துகள் பெண்கள் தமிழர்கள்', கோ.ரகுபதியின் `காந்தியின் ஸநாதந அரசியல்', பிரஞ் ரஞ்சன் மணி, பமீலா சர்தார் இருவரும் தொகுத்து வெ.கோவிந்தசாமி மொழிபெயர்த்த `மறக்கப்பட்ட விடுதலைப் போராளி சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும்', வசந்த் மூனின் `ஒரு தலித்திடமிருந்து', பிரியா விஜயராகவனின் `ஆட்டுக்குட்டியும் அற்புத விளக்கும்' ஆகிய பிரதிகளுடன் பரிசல்  வந்திருந்தார்.  

காஸ்ட்லெஸ் கலக்டிவ் பார்க்கப் பாண்டிச்சேரிக்குச் சென்றீர்களா, கூட்டம் எப்படி இருந்தது என்றார். வழக்கம் போல் இளைஞர்கள் கூட்டம் திரண்டிருந்தது. விசில் சத்தம், கைத்தட்டல் என ஆரவாரமாக இருந்தது என்றேன். நேற்று நடைபெற்ற நாடக விழாவுக்குச் சென்றீர்களா என்றேன். இல்லை, நேற்றுதான் பரிசலின் நூல் வெளியீடு நடைபெற்றது என்றார். சரி வாங்க தேநீர் குடிப்போம் என்றேன். 

நல்லதம்பி தெருவில் இறங்கிச் சென்றபோது, வணிக அங்காடிக்குள் நுழைந்து செல்லலாம் என்றார். அடர் இருட்டு என்பதால் ஏதோ குகைக்குள் இருப்பது போல் இருக்கும். எனவே, எப்போதும் சாலையின் வழி சுற்றிச் செல்வதையே விரும்புவேன். குறுந்தெருவின் வானம், உடைந்த வளையல் துண்டினைப் போல் இருக்கும். அதில் தென்படும் சிறகுகளையும் மேகங்களையும் பார்த்துச் செல்லலாம் அல்லவா. ஆனால், தற்போது குகைக்குள் புகுந்துதான் சென்றோம்.

சற்று நேரத்திற்கு முன்பு சிவராஜுடன் தேநீர் குடித்ததால், செந்தில்நாதனுக்கும் மட்டும் ஒரு நார்மல் டீ சக்கரை கம்மி என்று கடைக்காரரிடம் சொன்னேன். தம்பி, ராம்கி எப்படி இருக்கிறான் என்றேன். ராம்கி என்பது செந்தில்நாதனின் மகன். 

போன வாரம்தான் அறுவை சிகிச்சை செய்தோம். 

ஏன் அடிக்கடி அறுவை சிகிச்சை செய்றீங்க, உடல்நிலைக்கு என்ன ஆச்சு. 

போன வருசம் விழுந்தது, இப்போதான் வலி எடுத்தது, இப்போது செய்யவில்லையென்றால் பின்னாடி பிரச்சினை ஆகிவிடும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இன்ஷுரன்ஸ் க்ளைம் செய்து சிகிச்சையைச் செய்தோம் என்றார். 

திரைப்பாடல் முயற்சி எப்படிப் போகிறது என்றார்.

யாரையும் சென்று வாய்ப்புக் கேட்பதில்லை. பரியேறும் பெருமாள் படம் ஆரம்பித்த போது மாரி செல்வராஜைச் சந்தித்ததுதான் கடைசி. அதன் பின்பு வேறு யாரையும் சென்று பார்க்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு சமயத்தில் அதியன் ஆதிரையைச் சந்திக்க போனில் தொடர்பு கொண்டேன், சந்திக்க முடியவில்லை. பிறகு, இனி யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம், நம்ம வேலையைப் பார்ப்போம் என்று தோன்றிவிட்டது என்றேன். வெட்கம், மானம், ரோசம் எல்லாவற்றையும் இறக்கி வைத்துவிட்டு ஒவ்வோர் அலுவலகமாய்ச் சென்று பாடல் வாய்ப்புக் கேளுங்கள். ஏதோ ஒரு படம், ரெண்டு படத்தில் எழுதினால் கூட அடுத்தடுத்து வாய்ப்பு வரும். யாரிடமும் சென்று வாய்ப்புக் கேட்கவில்லை என்றால் உனக்குப் பாடல் எழுத விருப்பம் இருக்கிறது என்று பிறருக்கு எப்படித் தெரியும். ஒண்ணும் தெரியாதவங்க எல்லாம் பாடல் எழுதி யூடியூபில் பதிவு செய்கிறார்கள், உனக்கு என்னய்யா குறைச்சல் என்றார்.

உன்னுடைய நோக்கம் பாடல் எழுதுவதுதான் என்று அறிவிப்பு கொடு, அப்போதுதான் யாராவது ஒருவர் வாய்ப்புக் கொடுப்பார். மூடி மறைத்து வைத்திருந்தால் வயசுதான் ஆகும் என்றார். இப்போது மட்டுமல்ல கடந்த நான்கு ஐந்து வருடங்களாக என்னைத் தொடர்ந்து பாடல் எழுதச் சொல்லும் நண்பர்களில் பரிசலும் ஒருவர். இவ்வளவு தார்மிக உரிமையுடன் திரைப்பாடல் எழுதச் சொல்லும் இன்னொரு நண்பர் அகரமுதல்வன். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அகரன் என்னுடன் சரியாகப் பேசுவதில்லை. வேளச்சேரியில் நடைபெற்ற பீஃப் கவிதைகள் விமர்சனக் கூட்டத்தில் கைக்கொடுக்கக் கூட மறுத்துவிட்டார். ஏன் கைக்கொடுக்க மறுக்கிறீர்கள் என்றேன், நான் எதுக்கு உங்களுக்குக் கைக்கொடுக்க வேண்டும் என்று மிகவும் அதிகாரத் தொனியுடன் அகரமுதல்வன் சொன்னது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பார்க்கும் இடமெங்கும் அன்பொழுகப் பேசிய அகரமுதல்வனுக்கு என் மேல் என்ன கோபம் என்பது புரியாத புதிராக உள்ளது. 

ஜி.நாகராஜன் சொல்வது போல் மனிதனுக்குத் தேவை அன்பு அல்ல மரியாதைதான். மரியாதையற்ற எந்த இடத்திலும் பச்சோந்தி இருக்க மாட்டான். என் 22 ஆண்டு சென்னை வாழ்க்கையில் மிகவும் தெரிவு செய்துதான் பழகி வருகிறேன். கூட்டத்தோடு கோவிந்தா போடும் பழக்கம் இதுவரையிலும் இனிமேலும் எனக்குச் சாத்தியமற்ற ஒன்று. 

பனுவலில் இருக்கும் போது இலக்கியக் கூட்டங்கள், சமூக நீதி நிகழ்வு எனத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளைப் பரிசல் நடத்தி வந்தார். இப்போது சரியான இடம் அமையவில்லை என்பதால் அவ்வாறான நிகழ்ச்சிகளைச் செய்ய முடியவில்லை என்று சற்று வருத்தத்துடன் தெரிவித்த பரிசல், இன்னும் ஐந்தாண்டுகளில் பதிப்பகத்தின் நூல் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும். சரி, விகடன் வரை செல்ல வேண்டும் புறப்படுவோமா என்றார். மாரி செல்வராஜின் `உச்சினியென்பது' கவிதை நூல் இருக்கிறதா என்றேன். 

அது வாங்கத்தான் வெய்யிலைச் சந்திக்க விகடனுக்குச் செல்கிறேன் என்றார். 
சரி நானும் வருகிறேன் எனக்கு ஒரு புத்தகம் கொடுங்க என்றேன். ஆனால், விகடனுக்கு வர மாட்டேன் என்றேன். அப்பு டீக்கடையில் வந்து நில்லுய்யா என்றார். மறுத்துவிட்டேன். பின்பு, ஈரானி டீக்கடை ஓரமாக நிற்பது என முடிவு செய்தோம். இருவரும் அவரின் டிவிஎஸ் 50 இல் புறப்பட்டோம். அண்ணா சாலையில் உள்ள IOB எதிரில் உள்ள ஸ்மித் சாலையின் ஓரம் என்னை இறக்கிவிட்டு விட்டு விகடனுக்குச் சென்றார் பரிசல். 

அருகில் இருந்த ஈரானி டீக்கடையை நோக்கினேன். விகடனில் பணி புரிந்த போது மாலை நேரத்தில் நண்பர்களுடன் டீ குடிக்க வருவோம். இங்கு பருப்பு கலந்த சிறிய அளவிலான சமோசா மிகச் சுவையாக இருக்கும். எதிரில் சிறிய அரசமரத்தின் அருகே இருந்த பெட்டிக்கடைப் பெண்மணி அவ்வழியாகச் சென்ற ஆஃபீஸர் ஒருவருக்குப் புன்னகை செய்தார். சாய்ந்திருந்த துருப்பிடித்த மின்பெட்டியின் கீழ் சருகுகள், கேபிள் வயர்கள், கட்டைகள் கிடந்தன. சிக்னல் விளக்குகள் பச்சையும் சிவப்புமாக ஒளிர்ந்தன. வெளியின் கருமை கூடியது. எங்கேனும் விண்மீன் தென்படுமா என்று வானத்தைத் துலாவினேன். சைக்கிளில் வந்த பூ வியாபாரி வெகு நேரமாய்ச் சாலையைக் கடக்கக் காத்திருந்தார். அலுவலகம் முடிந்து அங்கும் இங்குமாய்ப் பெண்கள் நடந்த வண்ணம் இருந்தனர். கருஞ்சிறகுகள் தனித்தும் சேர்ந்தும் கருமையாய்ச் சிறகடித்தன. உதிர்ந்து நைந்த மல்லிகைக் பூக்களை நெருக்கமான காட்சியில் நிழற்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். 

சிக்னலைத் தாண்டி வந்த பரிசல் செந்தில்நாதன் வெய்யிலிடம் நூல்கள் கேட்டேன் நூல் வனம் மணிகண்டனிடம் வாங்கிக்கச் சொல்லி விட்டார். பின், ``உன் தம்பி இரண்டு நூல்கள் வேண்டும் என்று காத்திருக்கிறான். நீயென்னடான்னா இல்லை என்று சொல்றீயே'' என்று சொன்னதும் இருங்க வருகிறேன் என்று சொல்லிவிட்டுத் திரும்பி வந்து மூன்று நூல்கள் கொடுக்கிறார். நான் கேட்டேன் இல்லை என்று சொல்லிவிட்டு, நீ இருக்கிற என்றதும் தருகிறார். ரெண்டு பேரும் என்னய்யா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க என்றார். சரி சரி எனக்கு ஒரு நூல் தாங்க என்று வாங்கி இருவரும் பிரித்துப் பார்த்தோம் மிக நேர்த்தியான வடிவமைப்பும் திக்கான காகிதமும் இடம்பெற்ற பின்னட்டையில் `மொழியின் பிரத்யேக மூக்குத்தியின் வெளிச்சம் இச்சொற்களில் இருக்காது. ஏனெனில் இவை இருளின் வரிகள்' என்று கூறும் மாரி செல்வராஜ் `கலையைக் களத்துக்கு இழுத்துவந்த அண்ணன் பா.இரஞ்சித்துக்கு...' என்று இந்நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார். பரிசல் செந்தில்நாதன் வடக்கு திசையை இரு சக்கர வாகனத்திலும் நான் தென் திசையைப் பேருந்திலுமாக விரட்டிச் சென்றோம். வேளச்சேரியில் இறங்குவதற்குள் பாதி நூலை வாசித்துவிட்டேன். கவிதைகளைப் பற்றிப் பிறகு பேசுவோம் டியர்ஸ்.


19.04.2022
செவ்வாய்க்கிழமை

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...