Monday, May 30, 2022

நடனமற்றுத் தரையிறங்கும் ஆகாயம்


 

கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் நடந்துகொண்டிருந்தேன்.

இடிந்து நொறுங்கிய வீட்டின் எஞ்சிய சுவர்

வேர்களால் வேயப்பட்டிருந்தது.

அதன் மீது சாய்ந்திருக்கிறது

ஒரு முனை உடைந்த மூங்கில் ஏணி.

வெட்டுத் தழும்புகளுடன் நின்றிருக்கும் அரச மரத்தின்

பாதி உடைந்த கிளை

அக்கினி வெய்யிலில் எரிகிறது.

அந்த நெருப்பில் சுருட்டைப் பற்றவைக்கிறான்

வாயற்ற வயோதிகன்.

சுருள் சுருளாய் மேகங்கள் சஞ்சரிக்கையில்தான்

தொண்டையில் மடித்துவைத்திருந்த உதடுகள்

எட்டிப் பார்த்தன.

பழக்கூடையில் ஊன்றிய குடை

காற்றில் சாயாதபடி 

கண்ணாடி வளையல்கள் இறுக்கிப் பிடிக்க

மற்றோர் கையின் வளையலோசை

பலாச் சுளைகள் மீது அமர்ந்த ஈக்களை விரட்டுகிறது.

நடனமற்ற அரசின் பழுத்த இலை

ஆகாயத்தைத் தரையிறக்கும் பொழுதில்

ரத்தக்கறை படிந்த லுங்கியொன்று

நடைமேடை மீது தூங்கித் தூங்கி வழிகிறது.

சிலையாய் நிற்கும் ஜார்ஜ் மன்னன்

சுட்டாலும் பாதத்தை மட்டும் நகர்த்தாமல் 

மண்டையைக் கழட்டிக் கிரீடத்தைச் சொரிகிறான்.

 

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...