Monday, May 30, 2022

பத்ரியன் மலர்ச் சந்தையைப் பற்றவைத்தேன்







பாரிமுனைப் பத்ரியன் மலர்ச் சந்தையை உரசி
சிகரெட்டைப் பற்றவைத்தேன்.
படங்களாய்க் குவிந்து கிடக்கும் கடவுள்களின் மீது
ஊதுவத்தியின் சாம்பல் படர்கிறது.
வட்டமான மூங்கில் கூடையில்
தாழம் பூக்களை அடுக்குபவனிடம்
வாசத்தை நுகரக் கேட்டேன்.
தென்னங்குருத்தைப் போன்ற இலையால்
நாசித் துளைகளை அடித்து விரட்டலானான்.
சற்றும் அசையாது
ஒரு வண்டைப் போல் சதா ரீங்கரித்தேன்.
நடுக்கமுற்ற அவன் தாய்
பூவைப் பிய்த்து என் திசை பார்த்து எறிந்தாள்.
கண்களால் கவ்விச்சென்று
மேற்கூரை இடிந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்து
முகர்ந்துகொண்டே இருந்தேன்.
நாசியின் விளிம்பில் ஒட்டிய
சாமை போன்ற மென்துகள்களை
நுனி விரலில் கிள்ளி எடுக்கப் பார்த்த போது
என் முதுகு தட்டப்பட்டது.
தட்டிய ஓசையைத் தேடினேன் 
ஆலம் விழுதுகளால் நெய்யப்பட்ட சுவர்தான் நின்றிருந்தது.
பாதி உடைந்த ஜன்னலில் எட்டிப் பார்த்தேன் 
நிழலில் காயவைத்த தாழம் பூவைப் 
பொடிசெய்யும் பசியற்ற வயிறு
வெந்நீரில் கொதித்த தாழம் பூவில்
பனைவெல்லத்தைக் கரைக்கும் தேகச் சூடு உள்ளவன் 
தாழம் பூ இலையை நெய்யில் வதக்கும் நீர்க்கடுப்பு உள்ளவன்
தாழம் பூ இலை கொதித்த நீரில் 
தொண்டையால் நீச்சலடிக்கும் தோல் நோயாளி
எண்ணற்ற நிழல்கள் 
மேற்கூரை இடிந்த சுவருக்குள்
மீண்டும் பற்றவைத்தேன்
மலர்ச் சந்தையை.

 

  


 

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...