Saturday, April 23, 2022

போலிகளை எதிர்கொள்வதுதான் பெரும் சவால்


நேற்று மாலை வேளச்சேரியிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகம் சென்றுகொண்டிருந்தேன். மனைவி `இளங்கலை தமிழ் இலக்கியம்' படிக்கிறாள். ஆன்லைன் தேர்வு நடைபெறுவதால், தேர்வுத்தாளைச் சமர்ப்பிக்கத்தான் இப்பயணம். 

தமிழ்க் கவிதைகளில் சவாலான ஒரு கவிதைத் தொகுப்பைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் வெளியான நண்பர் மாரி செல்வராஜின் `உச்சினியென்பது' நூலினை மிகத் தீவிரமாக வாசித்தபடி பேருந்தில் பயணித்தேன். சரியாக மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே சென்றுகொண்டிருந்த போது நேரம் பார்க்கக் கைபேசியை எடுத்தேன். அதில் பரிசல் செந்தில்நாதனின் தவறிய அழைப்பு இருந்தது. உடனே அழைத்தேன், `இடைவெளி' கவிதைக்கான காலாண்டிதழ் இன்று மாலை 5.30 அளவில் வெளியிடுகிறோம். ஷங்கர் வருகிறார் நேரம் இருந்தால் அவருடன் வாங்க என்றார். எங்கே நடைபெறுகிறது என்றேன். மோகன் வீட்டில் என்றார். அப்போது நேரம் 4.45 இருக்கும். பல்கலைப் பணியை முடித்துவிட்டு சி.மோகன் வீடு இருக்கும் வளசரவாக்கம் செல்வது இயலாத காரியம். முடியாது என்று தெரிந்தும் விடைத்தாள் சமர்ப்பித்ததும் அழைக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். 

சென்ற வேலை முடிந்து ஷங்கரை அழைத்துப் பேசினேன். ``நிகழ்வுக்கு நூல்வனம் மணிகண்டன் வருவதாகக் கூறியுள்ளார். அவருக்காகக் காத்திருக்கிறேன். வந்ததும் புறப்பட்டு விடுவோம்'' என்றார். சரி வரும் போது இடைவெளி இதழ் ஒன்று எடுத்து வாருங்கள் என்றேன். ``தாராளமாக, கவிதைச் சிறப்பிதழ் தானே இரண்டு இதழ் கூட எடுத்து வருகிறேன். கவிதையை யார் படிக்கப் போகிறார்கள்'' என்றார். 

இன்று காலை ஷங்கரைப் பார்த்து இதழைப் பெற்றுக்கொண்டேன். சிறப்பாசிரியராக சி.மோகன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வோர் இதழும் ஒரு பொருளை மையப்படுத்திச் சிறப்பிதழாக வெளிவருமெனத் தெரிவித்துள்ள இடைவெளி ஆசிரியர் குழு அடுத்த இதழை கவிஞரும் ஆய்வாளருமான றாம் சந்தோஷ் பொறுப்பில் கொடுத்துள்ளது. 

முதல் இதழ் `ஆஹா சாகித் அலி' என்னும் இந்திய - அமெரிக்கக் கவிஞரின் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இந்த இதழின் பொறுப்பாசிரியர் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் இவ்விதழ்ப் பணியைச் செம்மையாகச் செய்துள்ளார். யார் இந்த ஆஹா சாகித் அலி என்று கூகுளில் தேடினால் விரல்விட்டு எண்ணக்கூடிய இணைப்புகளே கிடைத்தன. இந்து தமிழ் திசையில் `செய்திகள் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு' என்னும் குறுங்கட்டுரை, காலச்சுவடு பக்கத்தில் ந.ஜயபாஸ்கரனின் `அறுந்த காதின் தன்மை' என்னும் கவிதைத் தொகுப்பின் பின்னட்டைக் குறிப்பு உட்பட அனைத்தும் ஷங்கரின் பெயரையே காட்டின. 

சுதந்திர இந்தியாவில் பிறந்து எழுபதுகளின் பிற்பகுதியில் அமெரிக்காவிற்குக் குடியேறியவர் ஆஹா சாகித் அலி. அங்கு பென்சில்வேனியா பல்கலையில் பிஎச்டி முடித்து பேராசிரியராகப் பணிபுரிந்தவர், 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலமாகியுள்ளார். தன்னை நாடுகடத்தப்பட்டவன் என்று பிரகடனப்படுத்திக்கொண்ட சாகித் அலியைப் படிக்கப் படிக்கப் பாலஸ்தீனக் கவிஞர் முஹ்மது தர்வீஸ் நினைவில் வந்து போனார். அவரின் அடையாள அட்டை, கடைசிவானத்துக்கு அப்பால் என்னும் கவிதைகள் என்னை மிகவும் பாதித்தவை. நிலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டவர், நிலம் பிடுங்கப்பட்டவர், பிழைப்பு தேடி நிலத்தை விட்டுச் சென்றவர் எங்கெங்கு உள்ளார்களோ அனைவருக்கும் இவர்கள் நெருக்கமாக இருப்பார்கள். 

அதிகாரத்தை எதிர்க்கும் ஆயுதம்தான் கலை. அக்கருவியை இடைவிடாது முடுக்குபவர்கள்தாம் கலைஞர்கள். இங்கே, அதிகாரத்தைக் கேள்வி கேட்கப் புறப்பட்டவர்கள் தாமே ஓர் அதிகாரப் பிம்பமாய் உருவெடுத்திருப்பது துர்பாக்கியம். நேரடியான எதிரியைவிட முற்போக்கு போர்வையில் உலவும் போலிகளை எதிர்கொள்வதுதான் மிகப் பெரும் சவாலாக உள்ளது. மாறாக 
தன்னலமின்றிக் கலை என்னும் ஆயுதத்தை ஏந்தியவனே வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கிறான். ஆண்டாண்டுக் காலமாய் அடக்குமுறையைச் சந்திக்கும் தலைமுறைகளுக்கு அவன் விட்டுச் செல்லும் கலை ஆயுதமாக, ஆறுதலாக இருந்து வருகிறது. காஷ்மீரியக் கவிஞன் ஆஹா சாகித் அலியின் எழுத்துகள் இரண்டாம் வகை. 

`அஞ்சல் அலுவலகம் இல்லாத நாடு', `அன்பே ஷாஹித்', `பேகம் அக்தரின் நினைவில்', `கஸல்', `மதியத்தில் டில்லிக்குத் திரும்புவதைக் கனவு காண்கிறேன்', `டெல்லியைப் பற்றிய தொலைந்த நினைவு', `வீடுகள்', `கண்ணாடி வளையல்களின் கனவு', `டெல்லியில் கோஸின்ட்சேவின் கிங் லியர் நாடகத்தைப் பார்த்துவிட்டு வரும்போது', `பனிமனிதர்கள்' என்னும் தலைப்பிலான கவிதைகளும் ஆஹா சாகித் அலி பற்றிய சில குறிப்புகளும் அடங்கியுள்ளன. கணையாழி கடைசிப் பக்கத்தை சுஜாதா நிரப்பியது போல் இடைவெளியின் கடைசிப் பக்கத்தை சி.மோகன் எழுதியுள்ளார். கஸல் என்னும் தலைப்பிலான கவிதை இவ்வாறு தொடங்குகிறது...

இழப்பின் மொழியாக எஞ்சியிருக்கும் ஒரே மொழி
அரபிதான் 
இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டது வேறு மொழியில்
அரபியல் அல்ல.

கவிதைகளை மட்டும் நாளை எழுதுகிறேன் டியர்ஸ்....

23.04.2022
சனிக்கிழமை



 

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...