Wednesday, April 20, 2022

பற்றி எரியும் அப்பாவின் கனவு!


தம்மைப் போல் பண்ணையடிமையாய்த் தம் பிள்ளைகளும் வாழ்ந்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் அப்பா. மேலும், எல்லா பிள்ளைகள் மீதும் ஒருவித வெறுப்பைத் தொடர்ந்து காட்டி வந்தார். இதனால், இரண்டு விசயங்கள் நடந்தன. ஒன்று வெறுப்பைத் தாங்காமல் ஊரை விட்டுப் பிள்ளைகள் ஓடுவது ; மற்றொன்று படிப்பு என்கிற சொல்லில் விடுதியில் சேர்த்து விடுவது. மூத்த அண்ணன் முதல் ரகம் ; இளைய அண்ணன் இரண்டாம் ரகம். ஆனால், தம் பிள்ளைகள் பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற கனவை மூட்டையாய்ச் சுமந்தபடியே இருந்தார். அக்கனவு எதுவென்று சுட்டுவிரல் நீட்டவோ, அக்கனவை நோக்கிக் கைக்கூட்டி அழைத்துச் செல்லவோ, அக்கனவைச் சொற்களால் விளக்கவோ அவரால் இயலவில்லை. ஆனால், தீராக் கனவு அதிகாலைச் சூரியனைப் போல் சுடர்விட்டுக்கொண்டே இருந்தது. 

சிறுவயதிலிருந்தே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கண்ணதான், வாலி, வைரமுத்து போன்றோரின் திரைப்பாடல்களை அடிக்கடி சொல்லிக் காட்டுவார். ஒவ்வொரு முறையும் அவர் பேச்சிலிருந்து ஒரு சொலவடை வந்து விழும். அறிந்தோ, அறியாமலோ அவை எனக்குள் சேகரமாகின. கலைஞர், அண்ணா உரையாடல்களைச் சொல்லிக் காட்டுவார். ஆனால், அவரின் பேச்சைச் சமீபம் வரை நான் பொருட்படுத்தியதில்லை. ஊருக்குச் சென்றால் அப்பாவின் நண்பர் பாபுவைத் தேடி அவர் தோட்டத்திற்குச் சென்று விடுவேன். வீட்டை விட்டால் அவர் தோட்டத்தில்தான் இருப்பேன். தென்னைக்கு நீர் பாய்ச்சும் அவர், இலக்கியம் படிக்கும் என் அருகில் வந்து அமர்ந்துகொள்வார். அவருக்குக் கேட்கும் படி வாசிப்பேன், பிறகு அது குறித்தும் உரையாடுவோம். 

அப்படி கடந்த வருடம் பொது முடக்கக் காலத்தில் வாசிப்பின் ஊடே, உங்களின் மொழி வளம், உச்சரிப்பு, முகபாவம் எல்லாம் தேர்ந்த கலைஞனையே வெளிக்காட்டுகிறது என்றேன். இதை ஏற்கெனவே பலமுறை அவரிடம் சொல்லி இருக்கிறேன். இதற்கு அவர் அளித்த பதில் புதிதாக இருந்தது. ``என்னை விட உங்கள் அப்பா மிக அருமையாகப் பேசுவார். நிறைய பழமொழி சொல்லுவார்'' என்றார். அப்பாவைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்கிற குற்றவுணர்வு எழுந்தது. எப்போதும் அம்மாவைப் பற்றியே பேசுவேன். ஊருக்கு போன் செய்தால் கூட அம்மாவிடம்தான் அதிக நேரம் பேசுவேன். அப்பாவிடம் அவ்வளவாகப் பேச மாட்டேன். நலம் விசாரிப்பைத் தவிர அப்பாவும் பெரிதாகப் பேச மாட்டார். நான் எழுதிய கவிதைப் பனுவல்களைக் காட்டுக்கு எடுத்துச் சென்று வரிக்கு வரி படிப்பார். 

கடந்த ஓராண்டுக்கு முன்பு ``நான் எழுதிய கவிதை'' என்று ஒரு காகிதத்தைக் கொடுத்தார் அப்பா. இப்போது அது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அவ்வப்போது ``ஒரு கதை சொல்லுறேன் கேளுப்பா'' என்பார், நான் அவர் சொற்களைப் பெரிதுபடுத்தியதில்லை. 

இப்போதெல்லாம் அப்பாவின் உதட்டசைவைக் கேட்கத் தோன்றுகிறது. அவருக்குத் தெரியும் மொத்தப் பழமொழிகளையும் அவரின் பண்ணை வாழ்வையும் ஒரே மூச்சில் கேட்க வேண்டும் என்று மனம் உந்துகிறது. தரை தேய்த்து நடக்கும் அவர் காலடி ஓசையின் பின்னே நடக்க வேண்டும். கரும் புள்ளிகள் பூத்த அவர் முகத்தைப் பார்த்துப் பேச வேண்டும் என மனம் ஏங்குகிறது. ஆனால், அவரோ பல வருடங்களாகத் தம் பிள்ளைகளின் அன்புக்கு ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறார். தம் பிள்ளை பெரியாளா வரவேண்டும் என்னும் அப்பாவின் கனவு இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது. எனக்கு என் பிள்ளை பெரியாளா வரவேண்டும் என்கிற கனவு பற்றியிருக்கிறது. அப்பாவின் மகனும் மகனின் மகனும் அப்பாக்களின் கனவை அடைக்காத்துச் சிறகடிக்க வைப்பார்கள். அச்சிறகுகள் விரியும் காலம் வந்துவிட்டது டியர்ஸ்... 

20.04.2022
புதன்கிழமை

1 comment:

  1. அப்பாவை எல்லோரும் தாமதமாகவே
    புரிந்து கொள்கிறோம்
    அது அப்பாவுக்கும் தெரியும்

    ReplyDelete

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...