Thursday, June 9, 2022

நின் அப்பம் சிறகுகளால் ஆனது




தண்டீஸ்வரம் பிரதான சாலையின் நடுவே

நசுங்கிய மாங்கனியை மிதித்தவன்

சற்று தொலைவில் பிதுங்கிக் கிடக்கிறான்

சேவல்கொண்டைகளாய் உதிர்ந்து கிடக்கும்

செங்கொன்றைப் பூக்கள்

ரத்தத் துளிகளாய்ச் சொட்டுகின்றன

அந்தச் சொட்டுகளைக் கூட்டிப் பெருக்கி

வண்டியில் ஏற்றும் துப்புரவுத் தொழிலாளி

செவக்கச் செவக்க வெற்றிலையை

வானில் இறைக்கிறார்

யாருமற்ற தேவாலய வாசலில்

வெகுநேரமாய் ஏந்தும் கைகளில் கொட்டியது

கருங்கற்களிலிருந்து வழியும் சிலுவையின் ரத்தம்

சிதறிய தேங்காய்ப் பருப்புகளை

முதுகெலும்புகள் காய்த்த விலங்கு கவ்விச் செல்கிறது

மட்கும் குப்பையை 

அலகுகள் உடைந்த பறவை கொத்திப் பறக்கிறது

அடுக்கிய பழங்களை

காலிழந்த வண்டு ரீங்கரித்தபடி துளையிடுகிறது

வெகுநேரமாய் ஏந்திய கைகள்

காலியான தூக்கை வான்பார்த்து எறிந்தன

அப்போது ஆலய மணி ஒலிக்கத் தொடங்கியது 

புறாக்களின் சிறகுகளால் நிறைந்தது வானம். 

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...