Sunday, June 12, 2022

காற்றில் விளையும் நறுமணம்


மாம்பல ரயில்நிலையத்தில் தொடங்கிய இரும்பு மேம்பாலம்

மேட்லி சாலையில் முடிவுறாது நிற்கிறது 

நெருப்புச் சில்லுகள் விழும் அதன் அடியில்

கரும்பின் கணுக்களைச் சீவி

அடிக்கட்டையை வெட்டி எறிகிறான்

இனிப்பென்ற வார்த்தையை எறும்புகள் மொய்க்கின்றன

ஒரு கட்டு அறுகம்புல்லை

பத்து ரூபாய்க்கு விற்பனை செய்பவள்

நாவற்பழச் சுவை மீது உப்பைத் தடவுகிறாள்

வெய்யிலில் காயும் பூணூல்

தோல் நீங்கிய சுளைகளில் கண்களைச் செருகியது

வாகனங்களுக்கிடையே 

ஊக்குகளை வயிற்றில் ஏந்தி விற்பவனிடம் 

சந்தைக்கே நறுமணம் பூசியவள்

ஒரு கொத்து ஊக்குகளைச் சேர்த்து வாங்கிச் செல்கிறாள்

நெருக்கடி மிகுந்த அங்காடித் தெருவில்

மீன் வடிவப் பீப்பியை ஊதுகிறான் சிறுவன்

அது வளைந்து நீண்டு ஒலிக்கிறது

ஒருமுறை வானை இழுத்தும்

மறுமுறை பூமியைத் தூக்கியும்

விளக்குகள் எரியா சிக்னலில்

கேள்விக் குறியைக் கைத்தடியாய் இறுக்கிப் பிடித்துள்ள

பெரியார் சிலை முற்றும் தூசி படிந்துள்ளது 

உச்சந்தலையில் காய்ந்த பறவையின் எச்சம்.

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...