Wednesday, April 6, 2022

பழக்கமற்ற ஒன்று முதலில் மூச்சுமுட்டவைக்கும் தானே!?




நேற்று இரவு கீழறைக்கு உறங்கச் சென்றேன். பிள்ளைகளில் யாராவது ஒருவரை உங்களுடன் அழைத்துச் செல்லலாம் அல்லவா. காலையில் இருந்து கூடவே இருக்காங்க, கொஞ்ச நேரம் அசைய முடியவில்லை. எப்பப் பாரு சாப்பிட உக்காரும் போது, டாய்லட் வருது என்கிறான். பாத் ரூம் போனாலும் கூடவே வருகிறான். தூங்கும் போதும் ரெண்டு பேரும் இறுக்கி அணைத்துக்கொள்கிறார்கள், இடுப்பும் முதுகும் வலிக்கின்றன என்றாள். மகனை உடன் தூங்க அழைத்தேன் வர மாட்டேன் என்று சொல்லிவிட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் தனியாக தூங்கச் சென்று விட்டேன். ஆனால் ஏதோவொன்று என்னைத் தொந்தரவு செய்தபடியே இருந்தது. 

காலை 4 மணிக்கு எழுந்து எழில் சின்னதம்பி மொழிபெயர்த்த `கடைசி வருகை' மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலில் தலைப்பிட்ட கதையைத் தெரிவு செய்து படித்தேன். மிக விசித்திரமான கதை. கருப்பையில் சுமக்கப்படாத ஒருவன், ரத்தமும் சதையும் எலும்புமற்ற ஒருவன் பேசியபடியே இருப்பான். அவன் மற்றவரின் கனவில் தோன்றுபவன். கனவில் மட்டுமே உயிர் வாழும் அவனின் குரல் கனத்தை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்து வேறு ஒரு கதைக்கு நகர முடியவில்லை. இது ஒன்றே போதுமென மீண்டும் உறங்கச் சென்று விட்டேன். 

காலையில் எழுந்தால் வழக்கம் போல் கதவைத் தட்டி அப்பா, அம்மா உங்களைப் பால் வாங்கி வரச் சொன்னாங்க என்றான். இன்று உங்களுக்குப் பள்ளிக்கூடம் இருக்கிறதா என வினவினேன். இல்லை என்றான். சரி பால் வாங்க வேண்டாம் வெளியில் செல்வோம் என்று, மனைவியை செல்போனில் அழைத்தேன். அவள் அழைப்பை எடுப்பதற்குள் எங்கு செல்வது என்று யோசித்து, இன்று பார்த்தசாரதி கோயிலுக்குச் செல்வோம் கிளம்புங்க என்றேன்.  

வீட்டில் குடிக்க வேண்டிய காபியைக் `கோத்தாஸ் காபி' கடையில் குடிக்கலாம் என்று திட்டமிருந்தது. ஆனால், பேருந்தில் சென்றால் ரயில் நிலையத்திற்குச் செல்ல, பேருந்து நிறுத்தத்தில் இருந்து அதிக தூரம் நடக்க வேண்டும். எனவே, ஓலா ஆப்பில் ஆட்டோ புக் செய்தேன். 43 ரூபாய் கட்டணம் காட்டியது. குடும்பத்துடன் ஓலாவில் புக் செய்து போவது இதுதான் முதல்முறை. கிருஷ்ணர் கோயில் வாசலில் வந்து நின்ற ஆட்டோவில் ஏறி வேளச்சேரி ரயில் நிலையத்திற்குச் சென்றோம்.

ஆட்டோவின் வலது பக்கம் பிள்ளைகள் இருவரும் அமர, இடது பக்கம் நானும் மனைவியும் அமர்ந்துகொண்டோம். மஞ்சளும் சிவப்பும் இளஞ்சிவப்பும் கலந்த சேலை உடுத்தி மிக அழகாக இருந்தாள். இப்படி அழகாக இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியளித்தது. இவளையா அழுக்கு நைட்டி என்று கேலி செய்தேன்?. இரு கன்னங்களிலும் பதின் பருவத்துக்குரிய பருக்களின் தடங்கள் இன்னும் காய்த்துக் கிடக்கும்.

ஓராண்டியம்மன் தெருவில் விரைந்தது ஆட்டோ, ``வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குறோம் எங்கவாவது கூட்டிக்கிட்டுப் போகக் கூடாதா'' என்று மாறி மாறிக் கேட்ட பிள்ளைகளின் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியது. விஜய நகரின் மேம்பாலம் அடியில் சென்று கொண்டிருந்த போது, இப்படித்தானே மாமல்லபுரம் போனோம் என்று பேசிக்கொண்டு வந்தனர். ரயில் நிலையம் இறங்கி, டிக்கட் கவுன்ட்டரில்  ரூ.20 கொடுத்துத் திருவல்லிக்கேணிக்கு நான்கு டிக்கட் வாங்கிக்கொண்டோம். நடைமேடையில் பரவிக் கிடந்த புறாக்களின் எச்சங்களை மிதித்தபடி ரயில் பெட்டிக்குச் சென்றோம். 

பெட்டியில் வெங்கடேசன் அண்ணனை எதிர் பாராமல் சந்திக்க நேர்ந்தது. இவர் நாங்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகன். கிட்டத்தட்ட 47 வயதிருக்கும். காற்றடித்தால் பறந்து போகும் தேகம், உள்ளொடுங்கிய கன்னங்கள், பெரும்பாலான நேரங்களில் டவுசருடன்தான் இருப்பார். தன் அம்மாவின் மீது மிகுந்த பாசம் உள்ளவர். மயிலாப்பூர் வரை வந்த அவருடன் சிறிது நேரம் உரையாடிய படி சென்றோம். உரையாடிய படி என்று சொல்வதை விட அவர் பேசப் பேசத் தலையாட்டியபடி சென்றோம் எனலாம். ரயில் பெருங்குடியைத் தாண்டும் போது ஷங்கருடன் நடைப்பயிற்குச் சென்ற வழியைக் காட்டினேன். தரமணியை அடைந்ததும் எஞ்சிய ஏரியின் ஓரம் இருந்த பால்ய நண்பன் தினாவின் வீட்டைக் காண்பித்தேன்.

திருவல்லிக்கேணியில் இறங்கி மேற்குப் பக்கமாகத் திரும்பினோம். கிழக்குப் பக்கம் சென்றால் மெரினா கடற்கரை. மையத்தில் எஸ்கலேட்டர் மேலே நகர்ந்தது. அதன் மீது ஏற பிள்ளைகள் ஆசைப்பட்டார்கள். அப்படி ஏறினால் ரயிலைப் பிடித்து மீண்டும் வீட்டுக்குச் செல்ல வேண்டியதுதான் என்றதும் ``அம்மாடியோவ் அப்ப வேண்டாம் சாமி'' என்றனர் கோரஸாக. மேற்கில் உள்ள மாட்டான் குப்பத்தையும் ரயில் நிலையத்தையும் இணைக்கும் கூவம் நதியின் அழுகலைக் கடந்து செல்லும் போது கருவாட்டு வாசம் நாசியைத் துளைத்தது. மனைவிக்கு மூச்சுத் திணறியிருக்கும் போல், வேகமாக நடங்க என்றாள். அவள் எதற்காகச் சொல்கிறாள் என்று உணராமல் இங்கேதான் மக்களும் வசிக்கிறாங்க என்றேன். அவர்கள் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் என்றாள், ஆம் எதையும் பழக்கப்படுத்த வேண்டும். பழக்கமில்லாத எதுவும் முதல் சந்திப்பில் மூச்சு முட்ட வைப்பது இயல்புதானே!

06.04.2022
புதன்கிழமை

2 comments:

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...