Monday, April 4, 2022

எனக்கே என்னை அருவருப்பூட்டுகிறது


நேற்று மாலை ஏதாவது எழுதலாம் என்று அலுவலகம் வந்திருந்தேன். எண்ணற்ற விசயங்கள் இருந்தாலும் மனம் ஒரு முகப்படவில்லை. மாத இறுதியைக் கடக்க நண்பர்களின் ஏடிஎம் இல் கைவைக்கும் சூழல் ஒருவிதக் குற்றவுணர்வுக்குத் தள்ளி விடுகிறது. ஒரு வழியில் ஒவ்வொரு மாதமும் உதவி கிடைத்தாலும் அதற்காக நான் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் என்மேல் எனக்கே அருவருப்பூட்டுகிறது. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது அல்லவா. பிறருக்கு உதவ நினைக்கும் மனம் தொடர்ந்து உதவியை நாடியபடியே இருப்பது கசப்பான வரலாறுதானே. அனைவருக்கும் கடனைத் திருப்பித் தரும் நாள்தான் சுயமரியாதையோடு வாழ இயலும் என்று நினைக்கிறேன். முக்கியமாக அம்மாவுக்குச் செலவுக்குப் பணம் அனுப்ப வேண்டும். தள்ளாத வயதில் ஆடுமேய்த்து அவளும் அவ்வப்போது என் மாதக் கடைசியைத் தாங்குகிறார்.

நான்கு நாள்களுக்கு முன்பு அம்மா அழைத்திருந்தார். இந்த மாதம் பணம் அனுப்புகிறேன் என்று சொன்னதும் அட நீ வேற, பிள்ளைகளைப் பார்த்துக்கொள் என்றார். சரி, சம்பளம் வாங்கியதும் உன்னைப் பார்க்க வருகிறேன், பார்த்து ரொம்ப நாளாச்சே என்றேன். சரி சரி கண்ணுக்குள்ளயே இருக்கிற, ஒரு எட்டு வந்து பார்த்துட்டுதான் போ சாமி என்றார். இந்த வாரம் அம்மாவைப் பார்க்கப் போக வேண்டும். போகும் போது அம்மாவுக்குப் பிடித்த பொறி, பேரீச்சை, ஆரஞ்சு வாங்கிச் செல்ல வேண்டும். எம் பிள்ளை வந்தாதான் எனக்குக் கறிச் சோறு என்பார். அந்த வார்த்தைகளைக் கேட்கவாவது கண்டிப்பாக ஊருக்கு டிரெயின் ஏறணும். இப்பதான் முன்பதிவற்ற ரயில் பெட்டிகள் மீண்டும் விட்டாச்சே. ஐ ஜாலி ....


 04.04.2022
திங்கட்கிழமை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...