அனைவருக்கும் வணக்கம்!
2020 ஆண்டு ஜூன் மாதம் விகடனில் பணி நீக்கம் செய்யப்பட்டதை அனைவரும் அறிவீர்கள். அப்போதிருந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறேன். அரண் செய், நீலம் ஊடகங்களில் கிடைத்த வேலை கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ஆனாலும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப இயலவில்லை. மாதத்தின் பாதி நாட்களை நண்பர்களின் உதவியால் நகர்த்திக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து நண்பர்களிடம் பொருளாதார உதவியை நாடுவது குற்றவுணர்வாக இருக்கிறது. கடன் வாங்கிய வங்கியில் இருந்து தொடர்ந்து வீட்டுக்கு வந்து செல்கிறார்கள். பள்ளி திறந்த பிறகுதான் மீண்டும் மனைவி மக்களைச் சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறேன். வங்கியில் இருந்து பணம் கேட்டு வருவதால் என்னை விட வீட்டில் உள்ளவர்கள் உளரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது குறைந்த பட்சம் 35,000 இல் இருந்து 40,000 வரை சம்பளம் கிடைக்குமாறு ஏதேனும் ஊடகத்தில் பணிசெய்ய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள் என்கிற கோரிக்கைதான். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம் (தற்போது வரை) ஆகிய ஊடகங்களில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்துள்ளேன். கிட்டத்தட்ட ஊடகத்துறையில் 10 ஆண்டு கால அனுபவம் உள்ளவன். என்னைப் பற்றி, என் வேலையைப் பற்றி நான் பணிபுரிந்த ஊடகங்களில் கேட்டு அறிந்துகொள்ளலாம். அப்படி அறியும் பட்சத்தில் அது உங்களுக்கும் எனக்கும் உதவியாக இருக்கும். என் மீது அன்பு கொண்டவர்கள் ஏராளமானவர்கள் உண்டு என்பதை நன்கு அறிவேன். உங்களில் யாராவது இந்த உதவியைச் செய்தால் மிகவும் நன்றிக்குரியவனாக இருப்பேன். என்னுடைய வளர்ச்சியில் முகநூலுக்கும் முகநூல் நண்பர்களுக்கும் இன்றியமையாத பங்குண்டு. என்னை மேலும் வளர்த்தெடுங்கள் ; மேலும் உற்சாகப்படுத்துங்கள் ; மேலும் கைகொடுங்கள் என்பதை இதன் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் எதிர்காலத்தில் தமிழின் மகத்தான கலைஞர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். மகத்தானதை நோக்கிச் செல்லுமிந்த இளைஞனை மீட்பது உங்களின் கடமையும்கூட அல்லவா.
குறிப்பு :
பண உதவி செய்கிறேன் என்று எனது எண்ணுக்கு அழைப்பதை அல்லது உள் பெட்டிக்குச் செய்திகள் அனுப்புவதைத் துளியும் விரும்ப மாட்டேன். எங்கு சென்றாலும் துயர்மிகு காலத்தில் கைகொடுத்த, கைகொடுக்கும் அரண் செய், நீலம் ஊடகங்களையும் அதில் பணிபுரியும் நண்பர்களையும் என்றும் மறவாது இருப்பேன்.
09.03.2022
புதன்கிழமை
No comments:
Post a Comment