Saturday, March 12, 2022

நெடிதுயர்ந்தது மரங்கள் மட்டுமல்ல


சமீபத்தில் ஶ்ரீநேசனின் `கவிஞயம்' கட்டுரைத் தொகுப்பினைப் படித்தேன். அதில், `இஸ்ரேலியம்' கவிதை நூலுக்கான கட்டுரை `அறிவியலும் அரசியலும் குழந்தைகளும்' என்னும் தலைப்பில் இடம் பெற்றிருந்தது. பிரமிளின் புகழ் பெற்றக் கவிதையான E = mc², அறிவியலைப் புராணிகத்துடன் இணைத்து தத்துவமாகக் கண்ட புதிய அறிவியல் கவிதை என்றும் பிரம்மராஜனின் மொழிபெயர்ப்புக் கவிதைகளை அறிவியலின் தாக்கம் கொண்ட பரிசோதனைத்தன்மை வாய்ந்தவை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சிதான் பாம்பாட்டிச் சித்தனின் இஸ்ரேலியம் என்கிறார் ஶ்ரீநேசன். முன் பகுதியில் இடம் பெற்றிருப்பதாய்ச் சொன்ன தனிம அட்டவணை என்னைப் பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது. வேதியியல் பாடத்தில் படித்தது இன்னும் நினைவிருக்கிறது. உடனே படிக்க வேண்டும் என்கிற உந்துதலுக்கு இதுவும் ஒரு காரணம். கூகுளில் தேடினேன், out of stock என்று வரவே நேரிடையாக புது எழுத்து மனோன் மணியத்திற்கு அழைத்து என்.டி.ராஜ்குமார் நூல்களுடன் இஸ்ரேலியத்தையும் அனுப்பும்படி கூறினேன். அவரும் கைவசமில்லை என்றார். நண்பர்களிடம் கேட்டிருந்தேன், அவர்களிடமும் இல்லை. அறிவியல் புனைவு சிறப்பிதழ் `மீ' கொண்டுவருவது குறித்து ஒருமுறை பிரவீண் பஃறுளி பேசிக்கொண்டிருக்கும் போது பாம்பாட்டிச் சித்தனின் இஸ்ரேலியம் பற்றிப் பேசியது நினைவில் எழுந்தது. அவரிடம் நேற்று மாலை கேட்டிருந்தேன். நாளை காலை கல்லூரி வரும் போது எடுத்து வருகிறேன் என்று சொல்லியிருந்தார்.   

இன்று காலை V51 பேருந்தில் அலுவலகம் சென்றுகொண்டிருந்தேன். குருநானக் கல்லூரியைக் கடக்கும் போது, பிரவீண் பஃறுளியிடம் கவிதை நூல் கேட்டிருந்தது நினைவுக்கு வர, உடனே அவரைத் தொடர்புகொண்டேன். அரை மணி நேரமாக அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்றார். துண்டிக்கப்படாத அழைப்பினூடே கிடைத்துவிட்டது எனக் கூற, கல்லூரி வாசலில் காத்திருக்கவா என்றேன். சரி, 15 நிமிடத்திற்குள் வருகிறேன் என்றார். இதற்குள் கல்லூரி சிக்னலைத் தாண்டிச் சென்றது பேருந்து. செக் போஸ்டில் இறங்கி எதிரில் வந்த V51 பேருந்தில் ஏறி குரு நானக் கல்லூரி வாசலில் நின்றிருந்தேன். மாணவ, மாணவிகள் கல்லூரிக்குள் நுழைந்த வண்ணமிருந்தனர். அரும்பு மீசையுடன் கனவுகளுடன் கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த 17 வயதுச் சிறுவன் என்னிலிருந்து பிரிந்து இன்றும் வாசலில் நடந்ததைப் பார்த்தேன். 

பிரவீண் வரும் வரை என்ன செய்வது என்று அறியாமல் ஹானஸ்டியில் ஒரு லெமன் டீ குடித்தேன். இதன் விலை 15 ரூபாய். யாருமற்ற ஹானஸ்டியின் மத்தியில் ஒற்றை மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தது. இதன் சுவரில் காவி, பச்சை, வெள்ளை நிறங்கள் அடிக்கப்பட்டிருந்தன. மென்னிருளில் அதிக நேரம் அமர முடியாமல் சூரிய ஒளிக்கு வந்தேன். பூக்களற்ற பன்னீர் புஷ்ப மரத்தின் கீழ் ஆளுயர மின் பெட்டிகள் துருப்பிடித்திருந்தன. கிழிந்த துண்டறிக்கைகளால் மூடப்பட்டிருந்த அப்பெட்டியின் அருகே முதிர்ந்த வாகை மரம். ஆட்டோக்களற்ற குட் வில் ஆட்டோ நிறுத்தம். அதன் உச்சியில் குழைகளற்ற தென்னை ஓலைகளில் கந்தகம் படிந்திருந்தது. 

ஹானஸ்டிக்கும் ஆக்சிஸ் வங்கிக்கும் நடுவில் இருந்த சண்முகம் ஜெராக்ஸ் கடைக்குச் செல்லும் குறுக்குச் சந்தில் சிறிது நேரம் காத்திருந்தேன். பின் பேருந்து நிறுத்ததில் இருந்த படி கல்லூரிக்குச் செல்லும் வழியில் பார்த்த போது பிரவீண் விருட்டென்று இரு சக்கர வாகனத்தில் விரைந்ததைப் பார்த்தேன். மின்கையொப்பமிட விரைகிறார் என்று புரிந்து சற்று நேரம் கழித்து அழைத்தேன். மன்னிக்கவும் பச்சோந்தி கையொப்பமிடும் அவசரத்தில் உங்களை மறந்துவிட்டேன் என்றார். பரவாயில்லை, கேன்டீன் அருகே இருங்க நான் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று உள் நுழைந்தேன். கண்ணாடி பதித்த கருங்கல் சுவரெங்கும் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. திறந்த வெளி மைதானம் கம்பி வலையிடப்பட்டிருந்தது. இந்த மைதானத்தைச் சுற்றியுள்ள வட்டமான சாலையில் கராத்தே மாணவனாய், என்சிசி மாணவனாய் எத்தனை சுற்றுகள் ஓடியிருக்கிறேன். இதோ நெடுதுயர்ந்த மரங்களின் நடுவே ஒற்றையாளாய் நடந்துசெல்கிறேன். நெடிதுயர்ந்தது மரங்கள் மட்டுமல்ல.

12.03.2022
சனிக்கிழமை

 

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...