Thursday, March 31, 2022

இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம் Mr.கருணா பிரசாத்


நந்தனம் அரசுக் கல்லூரியில் பி.காமும் தஞ்சைப் பல்கலையில் எம்.ஏ தமிழும் படித்த கருணா பிரசாத் நாடகத்துறையில் பிஎச்டி முடித்தவர். கூத்துப்பட்டறையில் தம்மை இணைத்துகொண்ட பிறகு பயணம் வேறொன்றாக உருமாறியதை அறிந்தவர். முப்பது ஆண்டுகளாக ராயப்பேட்டை அலுவலகம் பதிப்பகமாக இயங்கிவந்த நிலையில் இனி அங்குப் புத்தக விற்பனையும் நடைபெறவிருக்கிறது. அவரின் போதிவனம் பதிப்பக வெளியீடான `நவீன ஓவியம் : புரிதலுக்கான சில பாதைகள்' நூலினை வாங்கச் சென்றிருந்தேன். 

பொதுவாக நாம் சந்திக்கச் செல்லும் ஆளுமைகள் தாம் கற்ற அறிவின் மூலம் நம்மைக் கேள்விக்குட்படுத்தி எதிராளியின் பலமென்ன என்று பரிசோதிப்பார்கள். அப்படியான உரையாடலில் பேசுபவர் அல்லது கேட்பவர் இவர்களில் யாராவது ஒருவருக்குக் குற்றவுணர்வு ஏற்பட்டு விடும். சந்திப்பதற்கு முன்பு இருக்கும் உற்சாகம் உரையாடல் முடிந்து திரும்பும் போதும் தீராமல், இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே என்று தோன்றவைப்பது ஆரோக்கியமான உரையாடல் என்று என் வகையில் வரையறுக்கிறேன். சிலர் பேசிக்கொண்டிருக்கும் போதே சலிப்புணர்வுடன் துண்டித்துவிடும் அபாயச் சூழலும் நிகழ்வதுண்டு. அன்று கருணா பிரசாத்துடனான உரையாடல் முதல் வகையைச் சேர்ந்தது.

சமோசா சாப்பிடுகிறீர்களா என்று கேட்டார். சமோசா, பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய்ப் பண்டங்கள் அதிகம் எடுத்துக்கொள்வதில்லை என்று மறுத்து லெமன் டீ ஓகே என்றேன். இரண்டு லெமன் டீ சொல்லிச் சக்கரையைத் தனியாகக் கொடுத்து விடும்படிக் கூறினார்.  

நீங்கள் நீலத்தில் என்னவாக இருக்கிறீர்கள் அதற்கு முன்பு என்ன செய்தீர்கள் என்று கேட்டார் . உதவி ஆசிரியராக இருக்கிறேன். இதற்கு முன் கணையாழியில் பணி செய்திருக்கிறேன். 2012 காலகட்டத்தில் கல்லூரி நண்பருடன் இணைந்து விளம்பர நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தேன். பிஸினஸ் மேனாக இருந்த என்னைப் பத்திரிகைத் துறை நோக்கி அழைத்து வந்தவர் கணையாழி ஆசிரியரான ம.இராசேந்திரன்தான். 

கணையாழியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்த பிறகு என் வாழ்க்கை வேறொன்றை நோக்கி நகர்வதை உணரத் தொடங்கினேன். என் அறிவுலகின் முதல் தந்தை ம.ரா என்றேன். பின்பு வம்சியில் பணி புரிந்தேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது ``எங்கே திருவண்ணாமலையிலா?'' என்று இடைமறித்தார். ஆமாம் என்றேன். கலை இலக்கிய இரவுகள், நாடகங்கள் எனத் தீவிரமாய் இயங்கிய திருவண்ணாமலை நினைவுகளைப் பகிர்ந்தார். வம்சியில் வேலை செய்த போதுதான் கே.வி.ஷைலஜா என்னை விகடனில் சேர்த்துவிட்டார் என்றேன். ஓ... வெனப் புன்முறுவல் பூத்தார்.

உரையாடல் ஒரு கட்டத்தில் இவ்வாறு தொடங்கியது.

தாஸ்தவெஸ்கி மனிதனின் அடிமனதில் தேங்கிக் கிடக்கும் கசடுகளையும் குற்றவுணர்வையும்தானே தொடர்ந்து எழுதிவந்தார் என்று தொடங்கினேன். ``மனதின் அழுக்கை, கசடுகளையும் எழுத நினைக்கிறேன். ஆனால் முடியவில்லையே'' என்ற ஜி.நாகராஜனின் வார்த்தைகளைப் பகிர்ந்தார்.

அப்படி எழுதுவது அபூர்வம் என்றேன். ஆமாம், தன்னைப் பொதுச் சமூகத்தின் முன் நிர்வாணப்படுத்த அசாத்திய துணிச்சல் வேண்டும் என்றார். என் மரணத் தறுவாயில் ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவும் இருந்தால்தான் என் ஆன்மா சாந்தியடையும் என்றான் கண்ணதாசன். கேரள நவீனக் கவிதையின் சொத்து என்று அறியப்படும் பாலச்சந்திரன் சுள்ளிகாடின் `சிதம்பர நினைவுகள்' அப்படியான நூல்தான். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவரே ``அந்தப் பாலச்சந்திரன் இறந்துவிட்டான்'' என்று பகிரங்கப்படுத்தியிருக்கிறார் என்றேன்.

அந்த மாதிரி விசயங்களுக்குப் பிரான்சிஸ் கிருபா எத்தனித்தார். அதற்குக் காலம் கை கொடுக்கவில்லை என்றார். 

மண்ட்டோவும் இந்த வகைமையில் வரக் கூடியவர்தானே. குடும்பப் பெண்களைவிட விலைமாதருடன் இருப்பதையே விரும்புகிறேன். இப்படியெல்லாம் சொல்வதற்கு எவ்வளவு கட்ஸ் வேண்டும்!? என்றேன்.

ஐயோ.....! அவரின் பிரார்த்தனை ஒன்று போதும். தன் வாழ்க்கையை ரசனைக்கு உட்படுத்தியதாகவே பார்க்கும் மனோநிலை அவருக்கு வாய்ந்திருந்தது. பெரும்பாலானோர், தன் வாழ்வின் மறுபக்கத்தை அது தரும் வலி, வேதனைகளைப் புறக்கணித்துவிட்டுச் செல்வதுதானே இயல்பாக இருக்கிறது. கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஏன் இவ்வாறு நிகழ்கிறது, காரணங்கள் என்ன, எப்படித் தீர்க்க முடியும் என்ற பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டுமல்லவா என்றார். 

இப்போது இருக்கும் எழுத்தாளர்கள் தப்பு செய்தாலும் தன் ஆளுமைச் சிதைவுக்குள்ளாகிவிடக் கூடாது என்பதற்காக மறைக்கத்தான் பார்க்கிறார்கள். போலியான ஆளுமையைப் பாதுகாக்க மிகத் தீவிரமாய் மெனக்கெடுகிறார்கள் என்றேன்.

சிறுது மௌனத்திற்குப் பிறது, அது உண்மை என்றார்.

சபாரி ஹோட்டலின் உள் கட்டமைப்பைப் பார்த்து மிகப் பழைமையானது போல இருக்கிறது என்றேன். ஆமாம், பிரபஞ்சன், தமிழினி வசந்த குமார், சி.மோகன் இன்னும் மிக முக்கியமான நவீன இலக்கியவாதிகள் இங்கு டீ குடித்திருக்கிறார்கள். பக்கத்தில்தான் கிரியாவின் பழைய அலுவலகம் இருந்தது என்றார். அப்படியென்றால் இடைவெளி சம்பத், லாசரா, கிரியா ராமகிருஷ்ணன், ஜி.நாகராஜன், கருணா பிரசாத் என எத்தனையோ ஜாம்பவான்கள் இங்கு டீ குடித்திருப்பார்கள் அல்லவா. ஆமாம், நாளை பச்சோந்தியும் இடம்பெறுவார் அல்லவா டியர்ஸ்... 

* ஆளுமைகளைச் சந்திக்கும் நம்பிக்கையை, தைரியத்தை உங்களுடனான உரையாடல் அளித்திருக்கிறது. உங்களுக்கு என் வணக்கங்கள் திரு.கருணா பிரசாத்

30.03.2022

புதன்கிழமை

  

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...