Tuesday, March 15, 2022

Friend Request ஐ எப்போது Accept செய்வாய் தோழி!


கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கும் மேல் அலுவலகம் வந்திருந்தேன். குதிரைவால் வசனகர்த்தாவான ராஜேஷ் அழைத்து `Parellel Mothers' படத்திற்கு ஒரு டிக்கெட் இருக்கிறது நீங்க போக முடியுமா என்றார். ``சாயங்காலம் சீக்கிரம் வந்து எங்களைப் பூங்காவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்'' என்ற மகளின் கட்டளையை எண்ணியபடி யோசித்தேன். என்னங்கய்யா படம் பார்க்க யோசிக்கிறீங்க என்றார். சரி போகிறேன் என்றதும் வாட்ஸ் அப்பில் டிக்கெட் அனுப்பினார். நன்றி என்றேன். நட்புக்குள் இந்த நன்றியெல்லாம் வேண்டாம், ஃப்ரீயா விடுங்க என்றார். `ஃப்ரீயா விடுங்க' என்னும் சொற்கள் தோழி ஒருத்தியை ஞாபகப்படுத்தின. 

அது பீஃப் கவிதைகள் வெளிவந்த சமயம். பாரதியார் பூங்காவில் படித்துக்கொண்டிருக்கும் போது, இடையில் முகநூலில் `என்னைத் தெரியுமா' என்கிற செய்தி என் இன்பாக்ஸ்க்கு வந்தது. `சத்தியமா தெரியாது' என்றேன். `சரி இனித் தெரிந்துகொள்வோம்' என்று சொன்னார். அதைத் தொடர்ந்து நிறைய விசயங்கள் பகிர்ந்துகொண்டோம். ஆரம்பத்தில் சாதாரணமாகச் சென்ற உறவு பேரன்பாகியது. அடிநெஞ்சிலிருந்து பேசிய சொற்கள் இன்னும் அலையடித்தபடியே உள்ளன. அவ்வப்போது நான் உடையும் போது, பயந்து நடுங்கும் போது `ஃப்ரீயா விடுங்க, ஃப்ரீயா விடுங்க' என்று சொல்லிக்கொண்டே இருப்பார். முன்பின் பெண்களுடன் பேசிப் பழகாததால் அவருடைய அன்பை எதிர்கொள்ள முடியாது தவித்தேன். உனக்கு எதுவேணுமென்றாலும் நான் செய்கிறேன், உன் வளர்ச்சிக்கு நான் கடைசிவரை உறுதுணையாக இருப்பேன் என்னும் சொற்கள் இன்னும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. 

அதீத அன்பைச் சந்தேகிக்க ஆரம்பித்தேன். பெண்களின் உடையை, நெயில் பாலீஸை, லிப்ஸ்டிக்கைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் மனநல மருத்துவர் ஷாலினியின் உரையை மேற்கோள் காட்டினேன். அங்கிருந்து சிறிய புரிந்துகொள்ளாமைத் துளிர்விட்டது. மேலும், எனக்குத் தோழி ஒருத்தி இருப்பதாகவும் கூறினேன். இருவரும் ஒருமுறை சினிமாவுக்குச் சென்றிருக்கிறோம் என்றேன். அக்கணத்தில் அவர் சற்று உடைந்து போனதாக உணர்ந்தேன். ஆனால், தோழியும் நானும் தொட்டுகூடப் பேசவில்லையென்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். படம் முடிந்து சுரங்கப் பாதையில் ரயிலேற்றி அனுப்பி வைத்தேன். அவர் விடைபெறும் போது தூரத்து உறவினரைப் பார்த்தது போல் இருக்கிறது என்றார். மேலும், அவ்வப்போது உங்களின் அன்பு எனக்கு என் அப்பாவை ஞாபகமூட்டுகிறது என்றும் கூறுவாள். இப்போது இரு தோழிகளும் என்னிடம் பேசுவதில்லை. 

` ஃப்ரீயா விடுங்க' என்று சொன்ன தோழியை ஒருகட்டத்தில் வாட்ஸ் அப்பில் பிளாக் செய்தேன், பிறகு அன்லாக் செய்தேன். முகநூலிலும் unfriend செய்துவிட்டேன். இப்படி அவரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக என்னைத் துண்டித்துக்கொண்டே சென்றேன். ஒரு கட்டத்தில் இவன் ஓவரா பண்ணுகிறான் என்று தோன்றியிருக்கும். என்னைவிட்டு எங்கோ போய்விட்டார். அவரைச் சரியா புரிந்துகொள்ளவில்லையோ என்கிற குற்றவுணர்வு என்னை ஆட்டுவிக்கத் தொடங்கியது. பேசி இரண்டு வருடமாகப் போகிறது. முகநூலில் மீண்டும் Friend Request கொடுத்தேன். பல மாதங்கள் உருண்டோடிவிட்டன. இன்னும் அவர் என் நட்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வப்போது அவரின் டைம் லைனைத் தேடுகிறேன் ; வாட்ஸ் அப் ஸ்டேடஸைப் பார்க்கிறேன். இன்னும் ஒருமுறை கூடச் சந்திக்காத தோழியின் முகம் வந்து வந்து போகிறது. எப்போது என் நட்பை ஏற்பார் தெரியவில்லை. ஏதோ ஓர் நொடியில் யாரோ ஒருவர் உதிர்க்கும் சொற்கள் அடிநெஞ்சைப் பிடுங்கிச் சென்றுவிடுகின்றன. ஏதோவொன்றை எழுத ஆரம்பித்து இப்படி முடித்துவிட்டேன். ஆரம்பமும் முடிவும் தன்னைத் தானே தெரிவு செய்துகொள்கின்றன. சரி `ஃப்ரீயா விடுங்க' பார்த்துக்கொள்வோம்.

15.03.2022
செவ்வாய்க்கிழமை


2 comments:

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...