Thursday, March 17, 2022

எனக்குப் பிடித்த சட்டை - D BOX

 


நேற்று சாயங்காலம் திருவல்லிக்கேணி சாலையிலுள்ள பாபிலோன் கடைக்கு லெமன் டீ குடிக்கச் சென்றேன். இது ஆதாம் மார்க்கெட்டுக்கும் எதிரில் உள்ளது. கிட்டத்தட்ட நான் பணி புரியும் அலுவலகத்தில் இருந்து 1 கி.மீ தொலைவு கொண்டது. ஒரு முறை உதவி இயக்குநர் அன்புதான் இக்கடையை அறிமுகப்படுத்தினார். இலஞ்சிக் கண்ணன், கே.சி.ரஞ்சித் குமார், அன்பு ஆகியோருடன் காலை 11 மணியளவில் சென்றிருந்தேன். மிக ஸ்ட்ராங்கான இஞ்சி டீ  குடித்தோம். பின்பு, நண்பர் ரவியுடனும் தனியாகவும் என அவ்வப்போது சென்றதுண்டு.  

விகடனுக்கு வேலைக்குச் சென்றதிலிருந்து, வாசன் அவென்யூ அப்பு அண்ணா கடையில் தினசரி லெமன் டீ குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டேன். அதிலும் மாலை நேரத்தில் சூடான வறுத்த வேர்க்கடலையை மென்ற படி குடிக்கும் லெமன் டீ மிகவும் சுவையாக இருக்கும். அங்கு வேலையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு வீட்டில் கொடுக்கிறதைக் குடிக்க ஆரம்பித்தேன். அது வேறு முழு ஊரடங்கு காலம் என்பதால் விதவிதமான மூலிகை கலந்து கொடுத்தார்கள். கசப்போ, துவர்ப்போ உயிர்வாழ அத்தனையும் குடிக்கத்தான் வேண்டியிருந்தது. 

சமீபமாக மீண்டும் லெமன் டீ குடிக்க ஆரம்பித்துள்ளேன். என்னடா சாராயம் குடிக்கிற அளவுக்கு ஓவரா பாவனை செய்கிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஒயின் எனக்கு ரொம்பப் பிடிக்கும், இது பற்றி இன்னொரு தடவை பேசுவோம். பாபிலோன் கடையில் லெமன் டீ குடித்துவிட்டு வெளியில் வந்தால், அதன் அருகே டாஸ்மாக் இருந்தது. இப்போதெல்லாம் நாக்கு மதுவின் சுவைக்கும் உடல் மாதுவின் சுவைக்கும் வழக்கத்தை மீறி ஏங்கித் தவிக்கிறது. ஆனால் அனுபவிக்கத்தான் சூழல் அமையவில்லை. அதிலும் வொயினைக் கூட யாராவது வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள் அல்லது கேட்டு வாங்கிக் கொள்ள முடிகிறது. மாதுவின் சுவைக்கு....?! எவ்வளவு அசிங்கமா பேசுகிறான் பாரு இவன்லாம்.... என்று உணர்வது புரிகிறது. இந்தச் சமூகத்தில் எதைப் பேச வேண்டுமோ அதைப் பேச மறுக்கிறோம். சரி இதுக்கு மேல இதைப் பற்றிப் பேசினால் என்னைத் தீவிரவாதியாய்ப் பார்ப்பீர்கள். நான் டாஸ்மாக் என்ற அந்தப் பெயர்ப் பலகையை ஏக்கத்தோடு பார்த்து விடைபெற்றேன். 

சற்று தொலைவில் D Box Mens Wear என்னும் துணிக்கடையின் கண்ணாடியில் வைக்கப்பட்டிருந்த சட்டைகளில் ஒன்று மிகவும் பிடித்திருந்தது. உள்ளே சென்று விலையை விசாரித்தேன், 590 என்றார் கடைக்காரர். எவ்வளவு குறைக்கலாம் என்றால், 40 ரூபாய் குறைத்து 550 ரூபாய்க்குத் தரலாம் என்றார். கடையில் M Size கொண்ட அனைத்துச் சட்டைகளையும் பார்த்தேன். எதுவும் பிடிக்கவில்லை. சரி, இதைக் கொடுங்க என்று ட்ரையல் ரூமில் சென்று போட்டுப் பார்த்தேன் மிகவும் கச்சிதமாக இருந்தது. 500 ரூபாய்க்குத் தரமுடியுமா என்றேன். வராது என்று கடைக்காரர் சொல்லிவிட்டார். ஏடிஎம் கார்டைக் கொடுத்து சங்கேத எண்களை அழுத்தினேன் 300 ரூபாய் மிச்சத் தொகை என்று என் மொபைலுக்குச் செய்தி வந்தது. இதுவரை வாங்கியதில் எனக்குப் பிடித்த சட்டைகளில் இதுவும் ஒன்று. பிடித்ததைப் பகிர்கிறேன் டியர்ஸ்...

17.03.2022
வியாழக்கிழமை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...