Thursday, March 17, 2022

நிலமிழந்தவர்களின் சமரசமற்ற போராட்டம் - `பட'

அதிகாரத்தின் சுரண்டலை எதிர்த்துத் தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். அதிகாரமோ தொடர்ந்து நமக்குத் துரோகம் செய்துகொண்டே இருக்கிறது. துரோகம் தொடர்ந்துகொண்டே இருக்கும் போது போராட்டம் மட்டும் அறுந்துவிடுமா என்ன? மதம், சாதி, இனம், மொழி, குடும்பம், நட்பு, காதல் அனைத்தும் துரோகத்திற்கும் மீறலுக்கும் இடையேயானவை என்றே வரலாறு நமக்குச் சொல்கிறது. சந்ததிகளுக்காகத் தம்மைத் தியாகம் செய்யும் களப் போராளிகளின் நெஞ்சுறுதிதான் நம் நிலத்தை, பண்பாட்டை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. 

மார்ச் 10 ஆம் தேதி வெளியான `பட' என்னும் திரைப்படம் `ஆதிவாசி பூமி ஆதிவாசிகளுக்கே' என்னும் சித்தாந்தத்தைச் சமரசமின்றி உரக்கச் சொல்கிறது. கேரளாவில் 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் கமல் கே.எம் இயக்கியிருக்கிறார். கேரள அசெம்ளியில் 140 எம் எல் ஏக்கள் `ஆதிவாசிகள் சட்ட'த்தை  நிறைவேற்றுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகள் இச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமெனப் போராடுகிறார்கள். அதிகாரம் போராட்டக்காரர்களின் மீது தாக்குதலைத் தொடுக்கிறது. வியர்வை படிந்த நிலமெங்கும் ரத்தம் சிந்தவைக்கிறது. காயங்களோடும் கதறலோடும் எரியும் புகை மூட்டங்களுக்கிடையே ஓடி ஒளியும் மக்களைத் துரத்தித் துரத்தித் துன்புறுத்துகிறது. போராட்டத்தினால் எந்தப் பலனும் இல்லை என்பதை உணர்ந்த ஆதிவாசிகள் `அய்யங்காளி படை' என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்து ஆட்சியரைப் பிணையக் கைதிகளாக்கிச் சில நிபந்தனைகளை வைக்கிறது. நிபந்தனைகளுக்கு அதிகாரம் செவிமடுத்ததா, பிணையக் கைதி ஆட்சியர் என்ன ஆனார் என்பதே `பட'.

செய்தித்தாள்கள் வடது இடது மேல் கீழ் என அத்துணைப் பகுதிகளிலும் எரிந்து சுருளும் பின்னணியில் திரையில் எழுத்து பொறிக்கப்படும். முதல் காட்சி வானில் இருந்து அடர்ந்த மரங்களினூடே தடாகத்தை நோக்கிச் செல்கிறது என்று பார்த்தால், அதன் அருகே உள்ள குறும்பாறையில் விளையாடும் சிறுவர்களை நோக்கிச் செல்கிறது. ஓடியாடுகையில் அதில் ஒரு சிறுவன் சிறு குச்சியால் வேர்களினோரம் இருக்கும் புற்றுகளை இடித்துக்கொண்டிருப்பான். சிறுமி ஒருத்தி அவனிடமிருந்து குச்சியைப் பிடுங்கிக்கொண்டு ஓடுவதும் அவளை இவன் துரத்திச் செல்வதும் வானுயர்ந்த ஆரண்யம் வெறுமனே வனமல்ல ; இது சூரியன் ஒளிரும் எங்கள் தாயின் கருவறை, அறுபடாத தொப்புள் கொடி, உறையாத ரத்த நெடி என்றெல்லாம் நமக்கு அறிவுறுத்துகிறது. நடிகர்கள் குஞ்சாக்கோ போபன், விநாயகன், ஜோஜு ஜார்ஜ், திலீஷ் போத்தன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நிஜப் போராளிகளின் உணர்வுகளைத் தங்களின் தேர்ந்த நடிப்பால் மிகத் துல்லியமாய் வெளிப்படுத்துகிறார்கள். எளிய காட்சிகளிலும் வலிமையான இசையால் மிரட்டுகிறார் விஷ்ணு விஜய். போராட்ட வடிவத்தைக் காவல்துறை சீர்குலைக்க நினைக்கையில், ஆட்சியரின் மண்டை மீது துப்பாக்கியை நீட்டி ஆட்சியகத்தின் ஒரு பகுதியைக் குண்டுவைத்துத் தகர்த்தி மேலும் நம்மைப் பதற்றம் கொள்ளச் செய்கிறது. ஆனால், சமரசப் பேச்சுவார்த்தையின் போது எங்கள் வசம் இருப்பவை பொம்மைத் துப்பாக்கியும் வெடி மருந்தில்லாக் குழாய்களும்தாம் என்பது நம்பும்படியாக இல்லை. போராட்டங்களை மேற்கொள்ளும் பெரும்பாலோர் ஒரு கட்டத்தில் அதிகாரத்திடம் அடிபணிந்துவிடுகின்றனர். இதனால் அதன் வடிவங்கள் நீர்த்துப் போகின்றன. ஆனால், சமரசமற்ற போராட்டத்தின் சாட்சியாக இருக்கிறது `பட'. 

வேடிக்கை பார்ப்பவர்களைக் கொஞ்சம் கோபம் கொள்ளவும் எப்போது நிலத்தை மீட்போம் என ஏங்குவோரை கொஞ்சம் ஆற்றுப்படுத்தவும் செய்யும் `பட', அதிகார மட்டத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. என்னவிதமான விளைவுகளை வேண்டுமானாலும் செய்யட்டும், ஆதிவாசி பூமி ஆதிவாசிகளுக்கே!

 

17.03.2022
வியாழக்கிழமை
   

1 comment:

  1. அருமை தோழர்.
    வாழ்த்துகள்

    ReplyDelete

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...