Monday, March 21, 2022

கடவுளின் தலை மீது சிறுநீர்க் கழிக்காதே!


இன்று காலை 10:30 மணியளவில் எல்லிஸ் சாலையில் சும்மா நடந்து சென்று கொண்டிருந்தேன். மசூதியின் மென்பச்சை சுவரிலும் கேபிள் வயர்கள் கூடு போன்று பின்னப்பட்ட மின் கம்பத்திலும் அலைவுற்றிருந்தன புறாக்கள். கரும்புள்ளிகளாய் நீல வானில் சிறகுகள். எல்லிஸ் புரத்தின் நுழைவாயிலில் இருந்த மேசை மீது கோத்து மீந்த சாமந்தியும் ரோஜாவும் மல்லிகையும் குவிந்திருக்க, தகரத்தின் மீது ஆணியடிக்கப்பட்ட சிறிய இருக்கை சுற்றி நான்கு செங்கல் சூழக் கிடந்தது. அருள் மிகு ஶ்ரீ நாகாத்தம்மன் திருக்கோயிலும் 59 அ வட்ட திமுக அலுவலகமும் அருகருகே. உச்சியில் கந்தகம் படிந்த நாவல் மரம், Vicky sign கடைக்குள் வேர் விட்டிருக்கிறது. வெல்டிங் வைக்கப்பட்ட கம்பிகள் தரத் தரவென இழுத்துச் செல்லப்படும் ஓசை. இதன் எதிரில் இருந்த மிலிட்டரி உணவு விடுதி, சமீப நாட்கள் வரை உமா டிபன் கடையாய் உருமாறியிருந்தது. தற்போது அது இடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

பெரு நகர சென்னை நடுநிலைப் பள்ளிக்குச் செல்லும் வழியின் வலது பக்கத்தில் உள்ள கும்மிருட்டு வசிக்கும் பாழடந்த கட்டடத்தில் ஆல, அரச மரங்கள் வேர் விட்டிருக்கின்றன. அதன் சுவர்க் கொடிக்கயிற்றில் ஈரம் சொட்டும் ஆடைகள். எதிரே இருக்கும் குலாம் முர்துலா தெருவின் முனையில் பிளவுற்ற சுவர் நடுவே பூவரசு மரம் கேபிள் வயர்களால் வளைத்துக் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே தாமரை மீது வீற்றிருக்கும் விநாயகர் கையிலும் குறுந்தாமரை. கடவுளை வரைந்த கலைஞன் கடவுளின் தலைக்கு மேல் `இங்கு சிறுநீர் கழிக்காதீர்' என்று எழுதியுள்ளான். சிறுநீர்க் கழிக்க இடமா இல்லை.  

22.03.2022
செவ்வாய்க்கிழமை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...