Monday, March 21, 2022

வறுமை என்பது விதியல்லவே!


மதியமும் மாலையும் அம்மாவிடம் பேச அக்காவின் எண்ணுக்கு அழைத்திருந்தேன். இரண்டு முறையும் எண் பிஸியாக இருந்தது. அதன் பிறகு அம்மாவிடம் பேச வேண்டும் என்பதை மறந்துவிட்டேன். அம்மாச்சிக்கு உடல்நிலை சரியில்லையென்று மனைவி சொல்லியிருந்தாள். பேசணும் பேசணும் என்று நினைத்து மறந்துவிட்டேன். நேற்று இரவு வேகவைத்த சக்கரவள்ளிக் கிழங்கைப் பிள்ளைகளுடன் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் அண்ணன் கான்ஃபரென்ஸ் அழைப்பின் மூலம் பேசிய அம்மா, என்ன சாமி போனே பண்ணமாட்டிக்கிற என்றார். இல்லம்மா... என்று இழுத்தேன். இரண்டாயிரம் ரூபாய் எனக்கு அனுப்பிவிட்டு, அங்க செலவுக்கு என்ன சாமி செய்யுற என்றார். அதெல்லாம் காசு இருக்கிறதும்மா என்றேன். மீண்டும் இரண்டாயிரம் அனுப்பியதைச் சொல்லவும், அட ஏன் அதையே சொல்கிறாய் என்றேன். இல்ல சாமி டவுனுக்குள்ள இருக்கிறீங்க, அதான் என்றார். 22 ஆண்டுகளாக நாங்க டவுனில்தான் இருக்கிறோம். ஒவ்வொரு அப்பா அம்மாவும் மாசம் பொறந்தா ஆயிரக்கணக்கில் பிள்ளைகளிடம் அனுப்பச் சொல்லி தொந்தரவு செய்கிறார்கள். நீயென்னடான்னா இரண்டாயிரம் ரூபாய் அனுப்பியதை நினைத்துப் புலம்புகிறாயே என்றேன். மௌனமாக இருந்தார்.

சரி உடல்நிலை எப்படி இருக்கிறது என்று வழக்கம் போல் கேட்டேன். அதான் சாமி, ஒரு தப்பு செய்திட்டேன் என்றார். என்னாச்சு என்றதும், மருந்து அடிக்கிற டப்பாவை உங்க அப்பா மாமரத்தில் தொங்க விட்டுருக்கிறார். அதை ஆடு தட்டிவிட்டிருக்கும் போல, கீழே காய்ந்து கட்டியாக இருந்தது. மர நிழலில் அமர்ந்து ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது வெத்தலைக்குச் சுண்ணாம்பு இல்லையென்று அந்த மருந்துக் கட்டியைப் புட்டு மென்றுவிட்டேன் என்றார். என்னம்மா இப்படி வெறித்தனமாவா வெத்தலை போடுவ என்றேன். நல்லவேளை உயிர் பிழைத்துவிட்டேன் என்றவரிடம், இப்ப எப்படி இருக்கிறது என்றேன். நல்லா இருக்கிறது, கொஞ்சமாதான் சாப்பிட முடிகிறது என்றார். கவலைப் படாதே இன்னும் ஒரு மாதத்தில் நம்ம கஷ்டத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்றேன். ஆமாம், கஷ்டப்படுகிறவங்க கஷ்டப்பட்டுகிட்டே இருக்கணும் என்பது ஒன்னும் விதியில்லையே!

21.03.2022
திங்கட்கிழமை

2 comments:

  1. அம்மா வழியாக நல்ல தகவல் தோழர் ❤️

    ReplyDelete

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...