Sunday, March 20, 2022

சதுப்பு நிலத்தின் சூழலியல் பூங்கா!


ஒரு வாரம் ஆகிவிட்டது நடைப்பயிற்சிக்குச் சென்று. சோம்பேறித்தனம், இன்னொரு வகையில் சொல்வதென்றால் காலையில் எழுந்து படிக்க ஆரம்பித்து விடுகிறேன். இன்று காலை எழுந்ததும் உடன் தூங்கிய மகனை எழுப்பி மேலறைக்கு அழைத்துச் சென்றேன். அவனும் அம்மாவும் கொஞ்சிக் கொண்டிருக்கையில் பல்துலக்கி முகம் கழுவி விட்டு வந்தேன். நடைப்பயிற்சிக்குச் செல்வதைப் பார்த்த மனைவி, பாலும் 100 கிராம் சிறு பருப்பும் வாங்கிக் கொடுத்துட்டுப் போங்க என்றாள். நானும் வருகிறேன் என்று சொன்ன மகனிடம் பாலையும் பருப்பையும் ஒப்படைத்துவிட்டுக் கிளம்பிவிட்டேன். 

மேட்டுத் தெருவின் கிழக்கு வானம் தன் நெற்றியில் முழுச் சூரியனைச் சூடியிருந்தது. கோவாப் பழச் சூரியனைத் தூரத்து மொட்டை மாட்டியில் ஏறிப் பறித் தின்றுவிடலாம் போல் இருந்தது. கறுப்புத் தார்ச்சாலையில் வாசல் தெளித்த நீரெல்லாம் பாதரசம் போல் தளும்பிக்கொண்டிருந்தது. தளும்பலில் காலலைகள் முட்டி மோதி உடைந்து சிதற, அச்சிதறலின் ஓரிரு துளிகளை நீரற்ற சாலை இழுத்துச் சென்றது.  

51V வெள்ளைப் பலகை பேருந்தில் ஏறி, கைவேலியில் இறங்கி பள்ளிக்கரணைச் சாலையில் ஓட ஆரம்பித்தேன். ``என்னடா மடிப்பாக்கம் தானே போவ'' என்று தானே கேட்கிறீர்கள். இப்போது வேறு இடம். பள்ளிக்கரணைச் சதுப்பு நிலத்தில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டுள்ள `சூழலியல் பூங்கா' வுக்குச் செல்கிறேன். இப்பூங்கா `தேசிய காற்று சக்தி நிறுவனம்' (National Institute Of Wind Energy) அருகே அமைந்துள்ளது. நீருக்கிடையே நாணல் நிறைந்திருந்த பகுதி. கரையோரம் காளான் குடை போன்று குடில் இருந்தது. பேருந்தில் வரும் போது, போகும் போதெல்லாம் அந்தக் குடிலுக்குச் சென்று அமரவேண்டும் என்று நினைத்ததுண்டு. இப்போது அதன் மொத்த வடிவமும் உள் கட்டமைப்பும் மாறிவிட்டதை, இரண்டு வாரத்திற்கு முன்பு பள்ளிக்கரணை செல்லும் போது யதேச்சையாகப் பார்த்தேன். பாலாஜி காலனியில் இறங்கி உள்ளே சென்று பார்த்தால், கிட்டத்தட்ட பியூஸ் மனுஷ் உண்டாக்கிய சேலம் மூக்கனேரி போன்று காட்சியளித்தது. நடுவே நீண்ட பாதை. அதன் நடுவே பச்சைப் பசேலெனப் புல்வெளி. அதன் இருமருங்கிலும் நடக்கும் பாதை. இதன் வலது பக்கம் வறண்டு பிளந்த நிலம். இடது பக்கம் நீர் நிரம்பிய பகுதி. அங்கங்கே பறவைகள் அமர பட்ட மரக் குச்சிகள் நடப்பட்டிருந்தன. 

பூவரசு (Portia), நாவல் (Jamun), கொடுக்காப்புளி (Manila Tamarind), அரசு (Peepal), மகிழம் (Bulletwood), ஏழிலைப் பாலை (Blackboard), இலுப்பை (Indian Butter), மகாகனி (West Indian Mahogany), வேம்பு (Neem), நீர்க்கடம்பு (Freshwater Mangrove), நீர் மருந்து (Arjun), நீர்ப் பருத்தி (Sea hibiscus) ஆகிய மரங்கள் உள்ளன. இதன் கிழக்கே மாபெரும் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 20 ஊழியர்கள் பணிபுரியும் இப்பூங்கா மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அங்கு புல்வெளிக்கு நீர்ப் பாய்ச்சிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் கூறினார். பெரும்பாலும் பணக்காரர்கள் வந்து செல்லும் நடைப்பயிற்குக் கூடமாக இச்சூழலியல் பூங்கா அமைந்துள்ளது. எப்போதும் இரு சக்கர வாகனங்கள் நிறைந்திருக்கும் வெளிப்பகுதி இன்று கார்களாலும் நிரம்பியிருந்தது. சென்ற வாரம் பள்ளி நண்பன் சுந்தரமூர்த்தியை அங்கு கண்டேன். மிக விசாலமான, பறவைகள், மூலிகை மரங்கள் நிறைந்த இச்சூழலியல் பூங்காவுக்கு நடைப்பயிற்சி வருகிறீர்களோ இல்லையோ சும்மா ஒரு முறைச் சுற்றிப் பார்க்கவாவது குடும்பத்துடன் செல்ல வேண்டும். குளிர்சாதன வணிக அங்காடிகளிலும் திரையரங்குகளிலும் எங்குமே செல்லாமல் வீட்டுக்குள்ளே அடைந்து கிடப்பவர்களும் இங்கே செல்லலாம். பறவைகளாய்ச் சிறகு விரித்துப் பறக்கலாம்...     

21.03.2022
திங்கட்கிழமை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...