Thursday, March 24, 2022

கொலை கொலையாய்


வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் எருமை மாடுகளால் அதிர்வுற்றது. காற்றைக் குத்தும் கொம்புகள் சூரியனில் பிரகாசிக்க, 51B பேருந்து நெரிசலில் திக்கித் திணறுகிறது. கைவேலி நிறுத்தத்தில் இறங்கி ஓடும் போது நடைமேடை பின்னோக்கி நகரும். கொக்குகள் சிறகடிக்கும் இரும்புப் பாலத்தினடியில் சிறுநீர் நாற்றம். நடைப்பயிற்சி செய்பவரின் கனவில் கல்பாம்பு சீறிக் கொத்தும், புதர்கள் வேரொடுங்கிப் பிய்ந்தன. சிறகு விரித்த மரப் பட்டாம் பூச்சி அசையாது பறந்த வண்ணமாய் ஒரே இடத்தில். செக்கச் சிவந்த கால் பந்தாய்க் கிழக்கில் சூரியன். வெங்காயத் தாமரையை அமிழ்த்தும் சிறகுகள். நீர் நடுவே காய்ந்த மரங்கள் அரூபமாய் அலையடிக்கின்றன. தாயுடன் சிறுமிகள் கையேட்டின் பறவைகளின் நிறங்களைத் தடவிப் பார்த்துப் பெயர்ச்சொற்களின் பெயர்தலைப் பரிசோதிக்கும். புங்கங் காய்கள் கொலை கொலையாய்த் தொங்கும். கொலை கொலையாய்... எங்கும் எங்கெங்கும்....

25.03.2022
வெள்ளிக்கிழமை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...