Wednesday, March 16, 2022

கண்ணாடியில் ஒளிந்த பிம்பம்


51A பேருந்திலிருந்து தண்டீஸ்வரத்தில் இறங்கினேன். லதா சூப்பர் மார்க்கெட் எதிரில் நின்றபடி பேன்ட் பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்த போது, இரண்டு தவறிய அழைப்புகள் இருந்தன. ஒன்று மனைவியிடமிருந்து ; மற்றொன்று நண்பர் நவீனிடமிருந்து. முதலில் மனைவியை அழைத்து என்ன வாங்கி வரவேண்டும் என்றேன். ஒன்றும் வேண்டாம், வந்துவிட்டீர்களா என்று கேட்கத்தான் அழைத்தேன் என்றார். பஜ்ஜி, வடை எதுவும் வேண்டுமா என்றால், சாப்பிடும் நேரத்தில் எதற்கென்று சொல்லிவிட்டார். எதிரில் நடைவண்டியில் பலாவிலிருந்து சுளைகளைப் பிரித்து அதன் முனை நீக்கியதைக் கண்டதும், பலாச்சுளை வாங்கி வரவா என்றேன் ம்ம்... வாங்கி வாங்க இதையெல்லாம் கேட்டிட்டு இருக்கீங்க என்றார். கடைக்கு அருகில் சென்று ஒரு கூறு 20 ரூபாய் என்பதை அறிந்துகொண்டு, 30 ரூபாய்க்குக் கொடுங்க என்றேன். என் அருகில் நின்றவர் 100 ரூபாய்க்கு வாங்கிச் சென்றார். சரி, நம்ம ஒரு ஐம்பது ரூபாய்க்காவது வாங்கலாம் என்று 1/4  கிலோ வாங்கி வந்தேன். மகள் பழங்கள் சாப்பிடமாட்டாள். அவளுக்கு என்ன வாங்கலாம் என்று யோசிக்கையில் பேரீச்சம் பழம் நினைவுக்கு வந்தது. பழங்களில் இது ஒன்றைத்தான் சாப்பிடுவாள். 

அருகில் கண்ணாடிச் சுவர்களால் ஒளிர்ந்துகொண்டிருந்த ஐயங்கார் பேக்கரிக்குச் சென்றேன். உயரத்தில் இருந்த கரும் பேரீச்சையின் விலை 135 என்பதைக் கேட்டதும் எடுக்கச் சொன்னேன். அருகில் 1/2 கிலோ பக்கோடா வேண்டுமென்று சொல்லிய பெண் கண்ணாடிச் சுவரை நோக்கி கைவீசம்மா கைவீசு என்றபடி குழந்தையைப் போல் நடந்தாள். வயது 35 இருக்கும். குண்டான உடல் வாகு. கையில் இருந்த புத்தகங்களைக் கண்ணாடி மேசை மீது வைக்கும் போது அவர் நடந்ததை எண்ணி மென்மையாய்ச் சிரித்துவிட்டேன். காசைக் கொடுத்துவிட்டு மீதிச் சில்லறையை வாங்கும் தருணத்தில் மீண்டும் அவளைப் பார்த்தேன். தன்னை முழுவதுமாய்த் திருப்பி என்னை நோக்கிக் கூர்ந்து பார்த்தாள். இமைகளை மேல் உயர்த்தி ஆள்காட்டி விரலால் புருவத்தைச் சொரிந்தபடி திரும்பிவிட்டேன். சில்லரையைக் கொடுத்த கடைக்காரர் அந்தப் பெண்ணை உர்ரென்று முறைத்தார். புத்தகங்களையும் பழங்களையும் எடுத்த பிம்பம் கண்ணாடியில் ஒளிந்தது. 

சாலையைக் கடந்து பேட்டா ஷோரும் சுவர் திட்டில் பையை வைத்துப் பழங்களை உள் திணித்துப் புத்தகங்களைக் கையில் ஏந்தியபடி நடந்தேன். `கூர்மையாய்ப் பார்த்த பெண்ணை நோக்கி மீண்டும் ஒரு புன்னகை செய்திருக்கலாம் ; கையசைத்து ஒரு ஹாய் சொல்லியிருக்கலாம்; என்னை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டிருக்கலாம்' என்று எண்ணியபோது சக்தி அரிசி மண்டி வந்துவிட்டது. 1/2 கிலோ பாசிப் பருப்பு 60 ரூபாய், பட்டாணி 1/2 கிலோ 50 ரூபாய், கடுகு 15 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு மேட்டுத் தெருவின் இருளையும் ஒளியையும் கடந்து சென்றேன். பஜனை கோயில் தெருவின் முனையில் புஸ்ரா மளிகைக் கடைக்காரர், கடைக்கும் வெளியில் வாடிக்கையாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டபடி என் கைகளையே பார்த்துக்கொண்டிருந்தார். ஏனோ பருப்பு, பட்டாணிகளைப் பையில் திணித்துவிட்டுப் பழங்களைக் கையில் ஏந்திச் சென்றிருக்கலாம் என்று தோன்றியது. `சரி தவறிய இரண்டாவது அழைப்பு' என்னவானது என்று நீங்கள் கேட்பது காதில் ஒலிக்கிறது. கொஞ்ச நேரம் கழித்துச் சொல்கிறேன் டியர்ஸ்.... 

16.03.2022
புதன்கிழமை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...