Tuesday, May 4, 2021

ஏக்கத்தைக் கொறிப்போம் வா



சிறுதானியங்களும் குறுங்கனிகளும் 

சேமித்துக் காத்திருக்கிறேன் 

எப்போது வருவாய் எம் பறவையே  

 

நீ உண்டு எஞ்சியவற்றை நான் உண்ணவே

பசியோடு காத்திருக்கிறேன் 

எப்போது வருவாய் எம் பறவையே  

 

கத்திரி வெய்யிலில்

நிலமும் காற்றும் வானும் கடுமையாய்ச் சுடுகின்றன

பெரும் கல்தொட்டியில் நீர் சேமித்துள்ளேன்

சற்றேனும்  வந்து சிறகுலர்த்தியாவது செல்வாயா

 

சதா பறந்துகொண்டே இருந்தால்

சிறகுகள் வலிக்காதா 

மூங்கில் கழிகளை இறுக்கி சிறுகுடில் கட்டியுள்ளேன்

கண்ணிமைப் பொழுதுகள் ஓய்வெடுத்துச் செல்லக்கூடாதா

 

உன் கால்கள் 

என் உச்சந்தலைமீது அழுந்தியுள்ளது

உன் உடல் காற்றில் மிதக்கிறது

உன் தலையை மட்டும்

எங்கு சுமந்து அலைகிறாய்

 

யார் யாரோ 

உன்னை எங்கெங்கோ பார்த்ததாய்ச் சொல்கிறார்கள்

ஒரு நொடி ஒரு பொழுது

உன் கருவிழிகள் என்னைப் பார்க்காதா

 

நினைவில் சேமித்த 

உன் முழு உருவப் படத்தைப் பார்த்தேங்கும்

என் ஏக்கத்திற்கு

ஒரு முற்றுப்புள்ளி வைக்கக்கூடாதா  

 

நீயும்கூட 

என்னை நினைத்து ஏங்கி இருப்பாய் அல்லவா

 

- பச்சோந்தி


05.05.2021


2 comments:

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...