Wednesday, April 28, 2021

தண்டவாளங்களாலும் மின்சாரக் கம்பிகளாலும் மனங்கொண்ட வனாந்திரத்தின் ஒற்றைச்செடி

 


``கவிஞர் பச்சோந்தி யாரென்றால், ஓர் அசலான நவீன நாடோடி என்ற பிம்பம் எனக்கு இருக்கு. இவரின் 'வேர்முளைத்த உலக்கை' முதல் கவிதைத் தொகுப்பு. இவரின் எழுத்து சமகாலக் கவிஞர்களிடமிருந்து எப்படி மாறுபட்டது என்றால், அவர் தன் மொழியில் தன் கிராமத்து மொழியில் தன் மக்களின் பேச்சுவழக்கில் கவிதையை எழுதுபவர். இதை இதற்கு முன்பு பச்சியப்பன், யாழி முனுசாமி செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் முன்பாக பழமலய் செய்திருக்கிறார். தமிழில் அசாத்தியமாக நாமெல்லாம் புறந்தள்ளிய ஒரு பொதுவான மொழியென்று கொண்டாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தன் பேச்சுமொழி வழக்கு மொழியைக் கவிதைக்குள் மிக சாதுர்யமாகவும் மிக அசாத்தியமாகவும் பயன்படுத்தியவர் கவிஞர் பழமலய். அவருடைய 'சனங்களின் கதை' என்கிற கவிதைத் தொகுப்பு மிகக் கவனம்பெற்றது. பச்சோந்தி அந்தமாதிரியான இடத்திலிருந்து வந்தவர்.

இவரின் கூடுகளில் தொங்கும் அங்காடி மிகுந்த பயணங்களுக்குப் பிறகும், மிகுந்த மனிதர்களைக் கண்டதற்குப் பிறகும் அவரின் அனுபவங்களிலிருந்து எழுதப்பட்ட, தான் தொலைந்த, தான் இழந்த வாழ்க்கையை மீண்டும் அசைபோடுகிற தொகுப்பாகத்தான் இருக்கிறது. வேர்முளைத்த உலக்கை என்கிற கவிதை தொகுப்பு தமிழ்க் கவிதைப் பரப்பில் இவரின் முதல் நூல். முதல் கவிதைத் தொகுப்பின் சாபம் என்னவென்றால், அதைப் பற்றி பேசுவதற்கும், வாசிப்பதற்கும் ஆட்களே இருக்கமாட்டார்கள்.என்னுடைய முதல் கவிதை தொகுப்பு '....' என் சொந்தச் செலவில் வெளியிட்டு காண்பவரிடமெல்லாம் இலவசமாகக் கையளிக்கும் அவல நிலைதான் இருந்தது. அது அப்படியான காலகட்டம். ஆனால், வேர்முளைத்த உலக்கை என்கிற தொகுப்புக்குக் கவிஞர் குட்டி ரேவதி எழுதிய முன்னுரை மிக முக்கியமானது. கவிஞர் குட்டி ரேவதி போன்ற சில ஆளுமைகள்தான் கவிதை எழுதுபவர்களை உற்சாகமாக வரவேற்று ஆதரிப்பவர்கள். 

``இருட்டு எல்லோருக்கும் இருட்டாகவே இருக்கிறது

வெளிச்சம்தான் எல்லோருக்கும் வெளிச்சமாக இருப்பதில்லை" என்று கவிதை எழுதியவர்தான் பச்சோந்தி. 

வேர்முளைத்த உலக்கை' ரத்தமும் சதையுமான திண்டுக்கல் காலனி. நகரத்தின் பசியோடும் பட்டினியோடும் தங்குவதற்கு இடமற்ற ஒரு நவீன காலத்தினுடைய இந்த முதலாளித்துவ இந்த நகரமயமாதல், இந்த உலகமயமாதலில் தனித்து அடித்து விரட்டப்பட்ட ஒரு சாமானியனின் பதிவுதான் வேர்முளைத்த உலக்கை. என் சக கவிஞரான பச்சோந்தியை நான் ஏன் கொண்டாடுகிறேன் என்றால், இவர் தமிழ்க் கவிதையில் இந்தத் தலைமுறையில் நான் கைவிட்ட, நான் மறந்துபோன சில விசயங்களை நவீன மொழியில் இந்தத் தலைமுறையினரில் இதயத்துடிப்போடு எழுதக்கூடியவராக இருக்கிறார். இந்தத் தொகுப்பில் ஒரு கவிதை இருக்கிறது, 

தூளியாடி வளர்ந்தது மேல்கிளை

தூக்கிலாடி வளைந்தது கீழ்க்கிளை

பச்சோந்தி எழுதுகிற நீளமான கவிதைகளைவிட இதுபோன்ற இரண்டுவரிக் கவிதைகளில் இவர் காட்டுகிற பெரிய உலகம், பெரிய அரசியல், பெரிய விநோதம் வலிமையுடையது.

'கூடுகளில் தொங்கும் அங்காடி' அவர் சுயத்திலிருந்து விலகுகிறதோ என ஏன் அவர் எனக்குத் தெரிவித்தார். தெரிகிறது என்று சொல்லவில்லை ஏன் தெரிவித்தார் என்று கேட்கக் கூடிய உரிமை வாசகனான எனக்கு அந்த உரிமை இருக்கிறது. ஒரு புதிய இடத்தை நோக்கி நகர்வதற்கான முயற்சியாக இதை எடுத்துக்கொள்கிறேன். 

கவிஞர் பச்சோந்தி நன்கு அறியப்பட்டவர். தொடர்ச்சியாக எல்லாவற்றையும் வாசிக்கக் கூடியவர். இவர் தன் ரயில் பயணங்களில் கையில் ஏந்தியிருக்கும் புத்தகம் யாருடையது என்று மிகவும் உற்றுநோக்கக் கூடிய சமூகமாக முகநூல் சமூகம் இருந்தது. அவர் நாடோடியாகத் திரிகிறபோது இந்தப் பயணத்தில் பச்சோந்தி எந்தப் புத்தகத்தைப் படிக்கப்போகிறார் என்று ஒரு குழு பேசிக்கொள்கிற அளவுக்குப் பச்சோந்தியினுடைய வாசிப்பு பற்றிய ஒரு பெரிய பிம்பம் இருந்தது. பச்சோந்தியும் அதற்கு இரைபோடுகிற அளவுக்கு தான் படிக்கிற புத்தகத்தினை போட்டோ எடுத்து முகநூலில் பதிவிடுவார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிறைய புத்தகங்கள் படித்தவர். ஒரு கவிஞனுடைய மனம் ஒரு புதிய திசையை நோக்கிச் செல்லக்கூடிய இடர்ப்பாடுகளாகத்தான் இந்தத் தொகுப்பைப் பார்க்கிறேன். நான் சொல்லுகிற யாவும் குறைகள் கிடையாது. இது அவருடைய வீதியில் அவருடைய பயணத்தில் அவர் கண்டுகொள்ளாமல் விட்டுப்போன இடர்ப்பாடுகளைப் பற்றி நான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால், சில உன்னதமான சில கவிதைகளை இந்தத் தொகுப்பில் எழுதியிருக்கிறார். உன்னதமென்றால் பச்சோந்தியால்தான் எழுதமுடியும் என்கிற கவிதை இதில் இருக்கிறது. 

இந்தத் தொகுப்பிற்குப் பிறகான பச்சோந்தியையும் எனக்குத் தெரியும். ஆனந்த விகடனில் வெளியான உக்கிரமான பிரிதலைக் கண்ணீரோடும் கம்பலையோடும் சொல்லக்கூடிய `இரண்டே எரிதலை இழுத்துச் செல்லுதல்' என்கிற கவிதையை எழுதிய பச்சோந்தியையும் அதற்குப் பிறகாக இப்போது எப்படி செழுமையுடையவராய் வந்து அமர்ந்திருக்கிறார் என்பதும் தெரியும். மேலும், இத்தொகுப்பில் உள்ள 'கசாப்பு நிலம்' என்கிற கவிதையைப் பச்சோந்தியால் மட்டுமே எழுதமுடியும். இதுதான் பச்சோந்தியின் சுயம், இதுதான் தன் மொழியை இன்னும் கூர்மையாக இன்னும் செழுமையாக இதுதான் நம் காலகட்டத்தில் எழுதப்படவேண்டிய வார்த்தைகள். அடக்கப்படுபவர்களின் இலக்கியம் என்பது அதைக் கேட்பதற்கான செவிகளை, செவிடுகளாக இருக்கும். நாம் அடித்தேதான் திறக்கவேண்டும். நாம் அடித்துத் திறப்பதற்கான இரும்பு உத்தியலைப் போல்தான் நம் வார்த்தைகள் இருக்க வேண்டும். 'கசாப்பு நிலம்' என்கிற ஒரு கவிதையை எழுதி இருப்பதாலேயே இவரை நாம் கொண்டாட வேண்டும். ஏன் கொண்டாட வேண்டும் என்றால், இங்கு இன்னும் நம் இலக்கியங்களைப் பேசுவதற்கான ஒரு சூழலை உருவாக்கிக் கொள்ளவே இல்லை. 

''இரத்தம் உறைந்த தண்டவாள இருள் // கண்ணீர் உறிஞ்சிய நிறமற்ற வானம் // எலும்புகள் மண்டிய கசாப்பு நிலம் // 

இந்த வரிகள் நிறைய இளவரசன்களை, நிறைய சங்கர்களை நினைவூட்டுகின்றன. நிறையப் பேரின் அழுகுரல்களை நிறை கொளுத்தப்பட்ட குடிசைகளை நிறைய சேரிகளை, சேரிகளையும் ஊரையும் பிரித்துவைத்திருக்கும் அவலமான காலத்தில் நம்மீதே காரி உமிழக்கூடிய ஒரு வார்த்தையை இந்தக் கவிதையில் எழுதியிருக்கிறார். நான் பேசிக்கொண்டிருக்கிற இந்த இடம் ஒரு கசாப்பு நிலம். நாளை எங்கிருந்தோ ஒரு வார்த்தையை எடுக்கும் இடமும் ஒரு கசாப்பு நிலம். இது போன்ற கவிதைகள் இந்தத் தொகுப்பில் இருப்பதென்பது, இத்தொகுப்பை மிகப்பெரிய இடத்துக்கு நகர்த்திச் சென்றுவிட்டது. இதை எப்படிச் சொல்லவேண்டும் என்றால், ஓர் அழகிய வனாந்திரத்தில் இருக்கக் கூடிய ஒரு தனித்த முந்திரிப் பழ மரம்போல் சில கவிதைகள் இருக்கின்றன. முந்திரிக் காட்டில் முந்திரியும் பழமும் இருப்பது இயல்பு என்றால் தனித்த வனாந்திரத்தில் உள்ள ஒற்றை முந்திரி மரம் அந்த வனாந்திரத்தின் வாசத்தையே மாற்றிவிடும். அதுபோல்தான் பச்சோந்தியைக் கொண்டாட மெனக்கெட வேண்டும் என்கிற கவிதை இந்தத் தொகுப்பில் இருக்கிறது. இன்னும் ஒரு கவிதை 

தாத்தா வீட்டில் வானம் ஒழுகிமரச்சுவர் பசலை பூத்ததுஅப்பா வீட்டில் கூரை ஒழுகி செம்மண் சுவர் குழைந்ததுஎனது வீட்டில் ஓடு ஒழுகி செங்கல் நதி புரண்டோடுதுமகன் வீட்டில் புல்டோசர் மோதி டைல்ஸ் சுவர் சாலையானதுபேரன் வீட்டில் மழையே ஒழுகி கரைந்தது எல்லாம்எங்கும் அரூபச் சுவர்கள்

எனக்கு பச்சோந்தியின் மீது இருக்கக் கூடிய பெரிய பாசம், அன்பு என்பது அவர்போல் அவர் இந்த நகரத்தைப் பார்ப்பதுபோல சமகாலத்தில் இந்த நகரத்தை வேறு எவரும் பார்த்திருக்கமுடியாது. ஏனென்றால் அவருக்கான மனம் என்பது எப்போதும் ஊருக்கும் அவர் வாழ்கிற அறைக்கும் ரயிலின் தண்டவாளங்களால் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது அல்லது ரயிலில் போகிற மின்சாரக்கம்பிகளால் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. அவருக்கு எப்போதும் யாழிசையின் நினைவு, யாழிசையின் அம்மாவின் நினைவு அவர் அம்மா பற்றிய நினைவு அவர் குடும்பம் பற்றிய நினைவு அல்லது அவர் ஊரில் இருக்கக் கூடியதைப் போல்தான் சென்னையில் இருக்கும் நினைவு. அவர் எழுதுவது கிராமத்தின் மண்சுவர்களுக்கும் நகரத்தின் அறைகளின் கட்டில் அறைகளுக்கும் இடையே மாட்டிக்கொள்ளப்பட்ட ஒருவனின் குரல்தான் பச்சோந்தியினுடைய குரல். 



அவருக்கு பசி தெரியும். பச்சோந்திக்குப் பசி தெரியும் என்பது அகரமுதல்வனுக்கு நன்றாகத் தெரியும். பசி தெரிந்த ஒருவனால்தான் வார்த்தைகளைத் தீனிபோடமுடியும். அரூபச் சுவர் என்கிற கவிதையானது இவர் நகரக்கூடிய இடமாக எனக்குத் தெரிகிறது. அவர் எங்கேயோ நகர்ந்துசெல்ல விரும்புகிறார். அல்லது யாரோ ஒருவரின் குரலின் வழியாக அவர் வழிநடத்தப்படுகிறார். அவர் நடந்துபோகின்ற பாதைகளில் இப்படியான வார்த்தைகள் வந்துகொண்டே இருக்கும். இந்தக் கவிதையில் பெரிய தலைமுறையின் வாழ்க்கை இருக்கிறது. இந்தக் கவிதையைப் புரிந்துகொள்வதற்கு நாம் சமகால அரசியலை உற்றுநோக்கியிருக்க வேண்டும். நாம் எங்கெங்கோ விமானத்திலிருந்து தூவப்பட்ட நெற்கதிர்களைப் போல நாம் எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் விதைக்கப்பட்டிருக்கிறோம். அங்கெல்லாம் நாம் நடவுசெய்யப்பட்டிருக்கிறோம். நடவுசெய்யப்பட்டிருக்கிறவர்களின் பயிர்கள் கருகி இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி இந்தக் காலம் கவலைகொள்வதில்லை. 

பச்சோந்தி யாரைப்போன்ற கவிஞன். பழ்மலய், அறிவுமதி, யாழினி முனுசாமி, பச்சையப்பன் இவர்களைப் போன்ற ஒரு கவிஞன். இவரின் முதல் தொகுப்பில் அவ்வளவு சாத்தியங்கள் இருக்கின்றன. தடாலடியாக ஒரு மொழியை மிக இறுக்கமாக, மிகவும் நெருக்கடிகொண்ட வார்த்தைகளை ஏன் எழுத வேண்டும். 

இந்தத் தொகுப்பில் நிறைய எடிட் செய்திருக்கலாம், கவிதை தலைப்புகளை மாற்றியிருக்கலாம். செய்நேர்த்தியைக் கூர்மையாக்கிருக்கலாம் என்று தோன்றுகிறது. 

சட்டைப்பையில் கிடக்கும் சில்லரைகளில்ஒற்றை ரூபாயை தேடி எடுப்பதற்குள்கடந்துசென்றது பிச்சைப் பாத்திரம்  

இவன் இரண்டு வரி, மூன்று வரிக் கவிதைகளில் இவரின் உலகம் பற்றிய விசாலமான இடம் இருக்கிறது. இதெல்லாம் மிக நுண்ணிய ஒரு விசயம். ஆனால் பச்சோந்தி எழுதியதால் பேசப்படாது. அதுதான் உண்மை. இதையே தாமிரப்பரணி ஆற்றுப்பக்கமிருந்து எழுதியிருந்தால் `நிமிடங்களில் கணங்களில் மிக நுண்ணிய விசயங்களைக் கடந்து எழுதி இருக்கிறீர்கள்' என்று வாழ்த்துச் செய்திகளெல்லாம் குவிந்திருக்கும். ஆனால் இவர் கவிதைகளில் வெளிப்படும் அரசியல் குழப்பமாக இருக்கிறது. அதுமாதிரியான இடங்களில் கவிதையாகவில்லையோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஒரு மகோன்னதமான ஒரு கவிதை `வறுமைச் சுளை'. `பணி விழும் காலம்' இதுதான் பச்சோந்தியின் அசலான இயங்குதளம். 

பச்சோந்தி தமிழ்க் கவிதைப் பரப்பில் எந்தப் பின்புலமுமின்றி, ஒரு காட்டின் நடுவே தாந்தோன்றியாக வளரும் அத்தனை மரங்களுக்கு நடுவிலும் எத்தனையோ வெளிச்சக்கீற்றுகளை மறைத்து அவ்வளவு பெரிய விருட்சங்கள் நிழல்பரப்பி இருக்கும் அந்த வனாந்திரத்தில், சூரியக் கதிர்களைத் தேடி வளைந்து தன்னால் உயிர்பெற முடியும் என்று நம்பிய ஒரு செடி. அவனுடைய பட்டினி, அவனுடைய பயணம், பார்க்காத மனிதர்கள் கிடையாது, சந்திக்காத அனுபவங்கள் கிடையாது

அந்த வனாந்திரத்தில் தன்னை ஒரு செடியாக நினைத்தவன் இன்று மரமாக வளர்ந்திருக்கிறான்.

  -- அகரமுதல்வன்  

(கன்னிமாரா நூலகத்தில் கூடுகளில் தொங்கும் அங்காடி என்கிற எனது இரண்டாவது கவிதை நூலுக்கு வாசக சாலை அறிமுகக் கூட்டம் நடத்தியது. அங்கு அகரமுதல்வன் பேசினார். அதன் எழுத்து வடிவம்.)

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...