Wednesday, April 28, 2021

கூடுகளில் தொங்கும் அங்காடி - பச்சோந்தி




கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் அல்லல்படுகிற மனம் கொண்ட மனிதனின் கவிதைகள் பச்சோந்தியினுடையது. மிக நெருக்கடியான, மன வெப்ளாரங்களில் இருந்து அவர் அதை எழுதியதாக நம்புகிறேன். குடும்பத்தைப் பிரிதல், நிலத்தைப் பிரிதல் என நாம் காலங்காலமாக இலக்கியத்தில் மிகப்பெரிய இடங்கொடுத்துப் பேசுகிற விசயங்களே இத்தொகுப்பில் பேசுபொருளாகின்றன.கூடவே, நவீன வாழ்க்கையில் ஏற்படக் கூடிய உளச்சிக்கல்கள், மனச்சிக்கல்கள், மற்றும் நகரத்தில் பசியோடு இருக்கிற ஒரு மனிதன், கிராமத்தின் அடுப்பங்கரை நினைவோடு வயிற்றில் எரிகிற தீயை தாழ்வுபடுத்திக் கொள்ளக்கூடிய இடங்களை இக்கவிதைகள் நினைவில் கொள்கின்றன. 

பச்சோந்தியினுடைய முதல் தொகுப்பான ‘வேர்முளைத்த உலக்கை’ அவரது மிக முக்கியமான படைப்பு. இந்தத் தலைமுறைக் கவிஞர்களில் கவனம் கொள்ளத்தக்க வருகை என்றே அத்தொகுப்பு உணர்த்தியது. ‘கவிஞர் பழமலய்’யின் கவிதைகளைப் போல கிராமத்து மொழியோடும், அதனுடைய பிரதேசத் தன்மையோடும் தன் வாழ்வை அத்தொகுப்பு முழுக்க வெளிப்படுத்தியிருந்தார் பச்சோந்தி. 

பச்சோந்தியின் ‘கூடுகளில் தொங்கும் அங்காடி’ தொகுப்பில் நவீன கவிதையின் அதி உட்சமான வடிவத்தைக் கையாண்டிருக்கிறார். அது கவிதைகளுக்கு, கவிதையின் மூலாதாரத்தைச் சீரிடச் செய்தது போன்ற தோற்றத்தையே அளிக்கிறது. ஒரு வாசகனாக நான் அப்படித்தான் சொல்ல முடிகிறது. 

மற்றபடிக்கு இத்தொகுப்பில் இருக்கும் பெரும்பான்மையான கவிதைகள் பசியைப் பற்றிப் பேசுகிறது, பயணத்தைப் பற்றிப் பேசுகிறது, ஒரு நாடோடியின் ஆனந்தத்தை, கண்ணீரை… இப்படியாக வழமையாகச் சொல்லக்கூடிய வார்த்தைகளில் இருந்தே வெளிப் பட்டிருக்கிறது. சிறப்பாகச் சில கவிதைகள் வறட்சியைப் பற்றி, நிலத்தைப்பற்றி, குளத்தைப் பற்றி, மரத்தைப் பற்றிப் பேசுகிறது. அதில் அடிக்கடி நம் கண்களில் தென்படுகிற கிழவர்கள், கிழவிகளின் பாத்திரங்கள் குறித்த சித்திரம் அசலான கிராமத்தின் நினைவூட்டலாக அமைகிறது.

உலகமயமாதல், நகரமயமாதல், முதலாளித்துவம் அனைத்தும் ஒரு மரத்தின் பெரிய கிளை. அந்தக் கிளையில் தொங்கிக் கொண்டிருக்கிற மனிதர்களின் பாடுகளை அழகுணர்ச்சியோடு சொல்ல முயன்றிருக்கின்றன. அன்னளவாகச் சமகாலத்தில் கவிதைகள் எழுதுகிற ஒரு கவிஞனுடைய முக்கியமான முயற்சியாக இத்தொகுப்பை அணுகலாம். ” 

-அகரமுதல்வன்

(நூல் வெளியில் இடம்பெற்றது)

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...