உன் நெஞ்சில் என்னைக் கட்டிவைத்தாய்
ஒரு நிமிடக் கண்ணயர்வில்
முதுக்குபுறமாய்த் துளையிட்டுத் தப்பிவிட்டேன் மகளே
உன் நாநுனியில் என்னைச் சுற்றிவைத்தாய்
ஓட்டைப்பல்லின் வழியே
எகிறிக்குதித்தேன் மகளே
உன் கொலுசில் என்னைத் திருகி வைத்தாய்
அடர்ந்த கூட்ட நெரிசலில்
தொலைந்துகொண்டேன் மகளே
உன் கண்களுக்குள் என்னைக் கட்டிவைத்தாய்
கண்ணீரின் கரிப்போடு
சொட்டிவிட்டேன் மகளே
உன் முத்தத்தில் என்னை முடிந்துவைத்தாய்
உதட்டுப் பள்ளத்தில் பதுங்கி
உலர்ந்துவிட்டேன் மகளே
ஒன்றே ஒன்றைப் புரிந்துகொண்டால் போதும் மகளே
எங்கும் சிக்குவது
ஓரிடத்திலும் தழைக்காது
எங்கும் சிக்காதது
எங்கும் வியாபித்திருக்கும்
- பச்சோந்தி
No comments:
Post a Comment