Wednesday, April 28, 2021

தன்னைத் தேடித் தான் காண்பது - பழமலய்




நிலப்பிரபுத்துவத்தின் எச்ச்ங்கலாகத் தேங்கியுள்ள கிராம வாழ்க்கை விடக்கூடாததா?

முதலாளித்துவத்தின் வெளிப்பாடாக ஓட்டம் காட்டுகிற நகர வாழ்க்கை விரும்பத் தக்கதா?

"எப்பா இவ்வளவு பெரிய ஊரா நம்மூரு " என்று வியந்தது ஒரு காலம்.  "அட இத்துனூண்டு ஊரா நம்மூரு " என்று மெய்யுணர்தல் ஒரு காலம். "இக்கரைக்குப் அக்கரை பச்சை" என்பதுதான் நடப்பியலாக இருக்கிறது. நகரங்களில் சாதிகள் இல்லை . நல்லது! நகர வீடுகளில் திண்ணைகள் இல்லை. நல்லதா? இவை மட்டுமா? இந்நாளிலும் -

பிற சாதியினர் கால்களில் மிதிபடும் செருப்பு ஒரு சாதியினர் கைகளில் எடுபடுவதாக இருக்கிறது. பாம்புக்குப் பாலை ஊற்றி வளர்க்கக் கூடாது. ஆனால் சாதிப் பாம்பிற்கோ அது செத்த பிறகும் வார்க்கப்படுகிறது. எது மெய்? செத்ததா? உயிரோடு இருப்பதா?

கவிஞர் பச்சோந்திக்கு வேடிக்கை பார்க்கும் சாதிக் கொடிகளின் கீழ் நிழல் இல்லை, என்றாலும் சாதிகள் இருக்கின்றன. கொடிகள் பறக்கின்றன. எறும்புகள் பாவம்! இருத்தலையும் கொள்ளி. இவர்களுக்கு மழை மட்டுமா பாம்பு? வெயிலுந்தான்!

"வாழையடி வாழையாய் - நான் வாழலாமா ஏழையாய்?" என்பது எவ்வளவு பெரிய கேள்வி. "வெளிச்சம் எல்லோருக்கும் வெளிச்சமாக இல்லை" என்பதும் பெரிய சோகம்.

திருந்தாதவர்களும் வருந்தாதவர்களும் இருந்துகொண்டே இருக்கிறார்கள். "தீக்குச்சியை உரசிப் பனித்துளி என்கிறார்கள். கிழக்கைக் காட்டி வடக்கு என்கிறார்கள்."

"நான் பூஜ்ஜியத்திலிருந்து பூக்க வேண்டியிருக்கிறது; காயத்திலிருந்து காய்க்க வேண்டி இருக்கிறது.". 

கவிஞர் பச்சோந்தி, வெளிப்படையாக எந்த அரசியலையும் பேசுவதில்லை. அவர் கவிஞர். அவர் பேசமாட்டார். அவர் கவிதைகள்தாம் பேசும். ஊர் என்றாலும், சேரி என்றாலும், அது அவர் ஊர், அவர் சேரி. அவர் மண். அது இருக்கிறது. அவர் மக்கள். அவர்கள் ஆவிகளாகவும் இருக்கிறார்கள். கவிஞர் பச்சோந்தி, தன் மண்ணையும் மக்களையும் கவிதைகளாக, கதைக் கவிதைகளாக உணர்கிறார். நம்மை உணரச் செய்கிறார்.

யாருக்கும் அவை `ஞாபக் கறையான்கள் கடித்துப் போட்ட பால்ய காகிதங்கள்', 'கிணற்றில் போட்ட அஞ்சு பைசா தூளி ஆடிகிட்டே மிதந்து மிதந்து தரை தொட விரைவதைப்போல் நடு நெஞ்சில் மிதப்பவை' அவை.

அவர்கள் இல்லாமல், ஒத்தையடி ஓடைப் பாதையும், புளியமரத்து நிழலும் அநாதை ஆவதில் கவிஞருக்குச் சம்மதம் இல்லை. ஏனென்றால், அவை, அவர்!.

`நீச்சலடித்த நினைவுகள் நெஞ்சில் கசிகின்றன 

வெயில் மிதக்கும் 

மொட்டுக் கிணறுகளில்'.

கவிஞருக்கு மௌனம் இல்லை. நேற்றைய ஞாபகங்கள் அடுத்தடுத்து வந்து பேசிக்கொண்டே இருக்கின்றன.

காதல் கடிதத்தைப் பிரித்துப் படிக்கையில் வியர்வைத் துளிகள் கொட்டின, 

ஒரு கிறித்துவ ஆணும் இந்துப் பெண்ணும் ஊரை விட்டு ஓடிப் போனது, 

காதலுக்கு உள்ளேயும் தாழ்ப்பாள், வெளியேயும் பூட்டு!

குலசாமிகள் செத்துப் போகிறார்கள். காவல் தெய்வங்கள் காவல் தெய்வங்களாக இருந்தும் காப்பற்றவில்லை.

உனக்கான வாழ்க்கை உன்னிடமிருந்து பிடுங்கப்படுகிறது.

வளமையைப்போலே வறுமையும் பேசப்பட வேண்டியதே.

சாதிப்பற்று, மதவெறி, இனப்படுகொலை - எல்லாம் என்ன? ஏன்?

வாசக நண்பர்கள் உடனான உரையாடல் நம்பகமானதாக இருக்கிறது. வாசக நண்பரும் ஒருவராகவா இருக்கிறார்? பலதரப்பட்டவர்கள்! யாரோடு எதைப் பேசுவது?

என்ன மாதிரியான பிய்த்தல் பிடுங்கல் இது! மனிதர்கள் சூழலுக்குத் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மனிதனின் அடையாளமே பச்சோந்தியா? இருக்கலாம். ஆனால் அவன் தேடுகிறான். தேடிக் கண்டடைய விரும்புகிறான்.

இவ்வளவுக்கும் இடையில் கவிஞர் தன்னை அடையாளம் காண வேண்டியிருக்கிறது. தன் முகத்தைத் தானே பார்க்க வேண்டும். அது, கண்ணாடியில் அல்ல, அதைத் தவிர்த்து. ஓகோ! அகத்தைப் பார்க்க வேண்டுமா? இது சாத்தியம்தானா? சாத்தியமாகியிருக்கிறது. இக்கவிதைகள் , இவர் முகத்தை இவரே பார்த்துக்கொள்ளும் ஒரு முயற்சியே . இதற்குக் கவிதைகளைத் தவிர்த்து வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இது இவருக்குப் போலவே எவருக்கும் பொருந்துவதே. இதனாலேயே நான் ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை அவரவர் எழுத வேண்டும் என்று சொல்லி வருகிறேன். தன்னைத் தேடிக் காண்பதற்கு உள்ள ஒரே குறுக்கு வழி இதுதான். மனிதருக்குத் தன்னை அறிவதே அறிவாக இருக்க முடியும். இதற்கு உதவுவதே கலை, இலக்கியம்.

கவிஞர், வானத்தில் தொங்கும் பொம்மை, மகள் வாசனை என இரண்டு கவிதைகள் எழுதி இருக்கிறார். பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை.

ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்கிற வேறுபாடு எல்லாம் பார்க்காமல் , மயக்கம் செய்யும் மக்களைப் பற்றிப் பாண்டியன் அறிவுடை நம்பி ஒரு பாடல் பாடியுள்ளார் 

(புற நானூறு -188)

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப்பெருஞ் செல்வர் ஆயினும்,............... இடைப்படக்

குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,

இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,  5

மயக்குறு மக்களை.............( இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே.)

என ஒருகியுள்ளார்.

நான் அறிய பாண்டியன் அறிவுடை நம்பி பாடியுள்ள இந்த அருமையான பாடலுக்குப் பிறகு தமிழில் மலர்ந்துள்ள நெஞ்சில் கனல் மணக்கும் ஓர் அருமையான கவிதை கவிஞர் பச்சோந்தி எழுதியுள்ள வானத்தில் தொங்கும் பொம்மை என்கிற இக்கவிதையே ஆகும்.

மகள் என்கிற ஒரே கவிதைக்காகக் கூட இவரை நாம் கொண்டாடலாம், மதிக்கலாம். இத்தொகுதியில் காணும் விண்மீன்களுக்கு இடையில் ஒரு வண்ண மீன் அது.

இது அதுதான் (இதோ அந்த விண்மீன் )

`கதவு திறந்தேன் 

வீடெல்லாம் நிரம்பியிருந்தது

ஊருக்குப் போன 

மகளின் வாசனை' 

கவிஞர் தொடர்ந்து எழுதலாம். ஆம், அவருக்காகவும் பிறருக்காகவும்.


த.பழமலய்,

விழுப்புரம், 

30.10.2014.

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...