Friday, April 2, 2021

தெய்வத்தைப் புசித்தவன்


சமனடைந்துகொள்ள அல்லது சமநிலை குலைக்க எனக்கு நானே பேசிக்கொள்ளும் உள்பேச்சே கவிதை. கவிதைக்கு விலக்குகளில்லை; விதியில்லை; கட்டுப்பாடில்லை; தணிக்கையுமில்லை. அனைத்தும் எழுதப்படவேண்டியவையே என்று கூறும் செல்மா திண்டுக்கல் கல்லாத்துப்பட்டியில் பிறந்தவர். ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.

உலகத்தின் அம்மாக்களை எல்லாம் 'அம்மா என்பவள் காத்திருப்பவள்' என்கிற தன் ஒற்றைக் கவிதையில் எழுதியவர்தான். இக்கவிதையில் உள்ள அம்மா கிராமத்தை மையமிட்டு இருப்பாள். ஆனால், அம்மாக்களுக்கு ஏது கிராமம், நகரம் என்பதை அதே கவிதையில் இடம்பெறும் பின்வரும் வரிகளின்மூலம் உணரலாம்.

அம்மா என்பவள் குழந்தைகளை உறங்கவைத்து கணவனுக்குக் காத்திருப்பவள்// மூன்றாம் ஜாமத்தில் பணிவிடைகள் போல் சிலவற்றைத் தன் கணவனுக்குச் செய்ததைப் பிள்ளைகள் அறிந்தபின்னும்// வெட்கமற்ற அதிகாலையில் ஊறவைத்த தானியங்களின்மேல் உலக்கை குத்துபவள்.

மக்காத குப்பைப் புழுக்களின் நெளியும் நினைவுகளோடு பறக்கும் கொக்கைப்பற்றிக் குறிப்பிடுகையில் //வறண்டு வரும் குளத்தினைக் கொத்திக்கொண்டு பறந்துசெல்கிற கடைசி கொக்கு/என்றும், இன்னொரு கவிதையில் // துப்பாக்கிக்குத் தப்பிய பறவையின் பதற்றத்தை // என்றும் பறவைகளின் அழிவை, அலைவுறுதலை, அவை நிலமற்றுத்திரிவதை மேலும் பறவையற்ற வானத்தை நிலத்தைப் பற்றிப் பாடியிருப்பார்.

திசைகளற்ற எனது வானம் உன் இறகுகளுக்குள் // அன்பே பெரு உருவே உனைப் பற்றி ஏறுவேன்// மெதுவாய் இறுகிவரும் மென்முகடுகளை // உமிழ்நதியில் மூழ்கடித்து // பல்லாயிரமாய் // முத்தம் வெடித்துச் சாவேன் // என்று முல்லைநிலக் காதலும் கார்கால இசையும் நிரம்பியிருக்கும்.

கண்ணன் பாட்டு ராதையின் உதடுகளில் புதிய பற்தடங்கள் கவிதை இன்றைய உலகமயமாக்கலில் வாழ்ந்துகொண்டிருக்கும் கணவன் மனைவியின் அகவுணர்வைப் பிரதிபலிக்கும். சிலந்தி கடித்து கண்ணன் சாவதாய் ராதையும் , சிலிண்டர் வெடித்து ராதை சாவதாய் கண்ணனும் மாறிமாறிக் கனவுகண்டாலும் இறுதியில் பிரிவின் பொழுதைத் திடுக்கிட்டு அவள் தேநீர் தயாரிக்கச்செல்வதும் அத்தேநீரைச் சுவையாய் இருப்பதாகச் சொல்லும் கண்ணனுக்கு என்றுமில்லாதபடி முத்தமிட்டு ஆசுவாசமடைவார்கள். வடிவரீதியாகவும் புதிய பாடுபொருளிலும் சொல்நேர்த்தியிலும் ஒரே தொகுப்பில் அதிகமான கவிதைகள் அடங்கிய மிகச் சொற்பமான கவிதைத் தொகுப்பில் மிக முக்கியமானது 'தெய்வத்தைப் புசித்தல்' என்கிற இவர் முதல் தொகுப்பு. இது 2008 வெளிவந்தது. பத்தாண்டுகள் ஆனாலும் புதுமையும் இனிமையும் நிரம்பியிருப்பவை.

செல்மாவின் கவிதைகள்போல் உரையாடலின் வழியே வந்துவிழும் சொற்களும் துல்லியமானவை. அவை, முளைகட்டிய பயிர்கள்; ஓங்கி இழுத்துவிடும் கூர்மையான அம்புகள்; தாய்ச்சிறகுகளின் சூட்டில் பொறியும் குஞ்சுகள். ஒவ்வொரு இளம் கவிஞரும் சந்தித்து உரையாட வேண்டிய ஓர் அற்புதக் கலைஞர் செல்மா.


மார்ச் 2, 2018

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...