Thursday, April 1, 2021

ஒற்றை விண்மீன் ஓராயிரம் ஆன கதை



இருளின் நெற்றியில் இருந்த ஒற்றை விண்மீனைக் காட்டினாள் மகள். அதோ, நிலா என்றேன். உப்புமூட்டை தூக்கு என்றவளை முதுகில் சுமந்து துள்ளித் துள்ளி ஓடினேன். குனிந்து வளைந்து ஆடினேன். அவள் காலைப் பற்றிக்கொண்டு கூடவே அலைந்தான் மகன். குங்குமமும் திருநீறும் இட்ட நெற்றியோடு பச்சைவண்ண உடையில் மகளின் புத்தகப்பையைப் பிடித்தபடி இருந்தாள் மனைவி. பிள்ளைகள் இருவரும் சாயங்காலம் சூப்பர் மார்க்கெட் போலாம் என்று காலையில் சொன்னதை நினைவூட்டினர். சொடொக்ஸோ கார்டில் இருந்த ஐந்நூறு ரூபாயை நம்பி, சரி போகலாம் என்றேன். நாளைக்குப் போகலாம் என்று மனைவி வரமறுக்க, கட்டாயப்படுத்திச் சும்மாவாது மெயின்ரோடுவரை நடந்துசென்று வருவோம் என்றேன். 

அம்மாவின் பையைத் தன் தோளில் மாட்டியபடி படியிறங்கினாள் மகள். ஏய் இரும்மா இருட்டுல என்று செல்போன் டார்ச் லைட் அடித்தேன். அவ்வொளியில் படிகளைக் கடந்துசென்றோம்.

வழியில் செங்கல் சுவரைத் துளைத்த அரசமரத்தின் இலைகள் தெருவிளக்கில் மின்னிக்கொண்டிருந்தன. மாவு விற்பவள் புன்னகைத்தாள். வழக்கத்துக்கு மாறாக அம்மாவின் கையைப் பற்றி மகளும் அப்பாவின் கையைப் பற்றி மகனுமாகச் சென்றோம். அவன் என்னை ஓடலாம் வாப்பா என்றான். சற்று ஓடினோம். அம்மாவின் கையைவிடுத்து மகளும் எங்கள் பின் ஓடிவந்தாள். நாங்கள் பகலில் காணும் கொடுக்காய்ப்புளி மரத்தின் கிளைகள் கருமையான கோடுகளாய்த் தெரிந்தன. இருளையும் ஒளியையும் கடந்து சூப்பர் மார்க்கெட்டைக் கண்டதும் உள்ளே ஓடினார்கள் இருவரும்.

கடைக்குள் இருந்த பொருள்களில் ஒன்றை எடுத்து இது என்னதுப்பா என்றதும் பெயர் சற்றென்று நினைவுக்கு வராமல் பணிப்பெண்ணிடம் இதன் பெயர் என்ன என்றேன் ஜவ்வரிசி என்றாள். அதன் அருகில் இருந்த சின்னஞ்சிறிய கற்கண்டு பாக்கெட் வேண்டும் என்றாள் மகள். உனக்கு பல்வலி, தொண்டை வலி வேறு வேண்டாம் என்றால் மனைவி. பல், தொண்டை வலி சரியானதும் பாப்பா சாப்பிடட்டும் வாங்கிக்கலாம் என்று மகளைப் பார்த்துக் கண்ணடித்தேன். அவள் குதூகலித்தாள். பின், கல்லமிட்டாய், க்ரீம் பிஸ்கட், சாக்லேட் என்று மகள் எடுக்க, பருப்பு, எண்ணெய், வறமிளகாய், கோதுமை மாவு என மனைவி எடுக்க, ஒரு பொம்மையைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தான் மகன். அதன் விலை அதிகமாக இருக்குமோ என்று வேண்டாம் அப்புறம் வாங்கிக்கலாம் என்றேன். 

மொத்த விலை ரூ.480 என்று காட்டியது கணினி. இடையே சோப்பு எடுத்துவந்தாள் 515 ஆகியது. சரி கையில் முப்பது ரூபாய் இருக்கு இல்லையா என்று எனக்கு நானே கூறிக்கொண்டு, சொடொக்சோ கார்டைக் கொடுத்து பில் போடச் சொன்னேன். சொடொக்சோ மெஷின் இரண்டு நாள்களாக வேலை செய்யவில்லை என்றார் கடை ஓனர். பில் போடுவதற்கு முன்பே. சொடக்சோ கார்டு என்று சொல்லவேண்டாமா என்றார். உங்க மிஷின் ரிப்பேரா போனது எங்களுக்கு எப்படிங்க தெரியும் என்றேன். சரி வேற கார்டு இருக்கா என்றார். நான் இல்லையென்றதும் அவர் முகம் இறுகிப் போனது. பொருட்கள் நிரம்பிய பிளாஸ்டிக் வாளியை அங்கேயே வைத்துவிட்டு அப்புறம் வந்து வாங்கிக்கிறோம் என்றபடி வந்துவிட்டோம்.

மகனும் மகளும் எந்த ஓர் அறிகுறியும் இல்லாமல் அமைதியாக வந்தது ஆச்சரியமாக இருந்தது. மளிகைக் கடையில் ஒரு காராப் பூந்தி பாக்கெட்டும் ஒரு குட் டே பிஸ்கெட்டும் வாங்கியபடி வீடடைந்தோம். வீடு வந்தபின் அம்மாவின் பையைப் பிரித்துப் பார்த்த பிள்ளைகள். எங்கம்மா ஒண்ணுமே இல்லை என்றார்கள். அப்போதுதான் புரிந்தது பொருள்கள் வாங்காமல் வந்தது இவர்களுக்குத் தெரியவில்லையென்று. பிள்ளைகள் வெறுமையுற்று அங்கலாய்த்ததைக் கண்டு மனைவி என்னைப் பார்த்தாள். ச்சா அந்தப் பொம்மை வெறும் இருபது ரூபாய்தான் போட்டிருந்துச்சு என்றாள் மனைவி. அப்பா ஒண்ணுமே வாங்கலையா... அப்பா ஒண்ணுமே வாங்கலையா... என்ற மகன் முன் மௌனித்திருந்தேன். கொஞ்சம் அழவேண்டும் போலத் தோன்றியது. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. ஆத்திரத்தில் மகள் என் பானை வயிற்றின் மீது ஓங்கி அடித்துவிட்டுச் சென்றாள்.

சில ஆண்டுகளுக்கு முன் அவள் வேர்க்கடலையை எறிந்தபோது ஏற்பட்ட வலி மீண்டும். நான், சுவரில் கைகள் பதித்து அந்த வானத்தை வெறித்தேன். இப்போது ஒற்றை விண்மீனல்ல ஓராயிரம் விண்மீன்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. 

29 Feb 2020, 10:51

2 comments:

  1. நல்லதொரு அனுபவக்கதை...
    நல்லாயிருக்கு தோழர்.

    ReplyDelete

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...