Wednesday, March 31, 2021

ஓர் விடுமுறைக்காகக் காத்திருப்போம் மகளே!






உன்னை முதன்முதலாய்ப் பிரிந்தது, நீ உன் அம்மாவின் வயிற்றில் ஏழுமாதமாய் இருந்தபோதுதான். 

இப்போது உனக்கு ஐந்து வயதாகப் போகிறது. இன்னும் பிரிந்துதான் இருக்கிறோம். நீ உன் அம்மாவோடு சென்னை வந்துபோன இரண்டுமூன்று முறைகளில், இரண்டு மூன்று மாதங்களே என்னோடு இருந்தாய். ஒருமுறை உன் அம்மா மறுமுறை கர்ப்பம்தரிக்கையில் சென்றாய், இரண்டாவது வளைகாப்புக்காக, மூன்றாவதுமுறைதான் உன்னைக் கட்டாயப்படுத்தி அனுப்பினேன். உன்னை மட்டுமா, உன் அம்மாவையும் அம்மாச்சியையும்தான். 

கடந்த இருபது வருடங்களில் எத்தனையோ இடர்களைச் சந்தித்ததுண்டு. ஆனால் அப்போதெல்லாம் உன்னப்பன், சரி ஊருக்குப் போயிடலாம் என்று நினைச்சதே இல்லை. ஏனோ உன்னை மூன்றாவது முறை அனுப்பிய அந்நொடி பாதி இறந்துதான் போனேன். ஆமாம் வாடகை தரமுடியவில்லை, கெரசின் வாங்க காசில்லை, ஏன் பால் வாங்கக்கூட இயலாத சூழ்நிலை. இதை அறிந்த உன் அம்மா ``கொஞ்ச நாள் ஊர்ல  போய் இருக்கேன் மாமா'' என்றாள். அப்போது வேணாம் என்றேன். பிறகு நானே ஒருநாள், ``கொஞ்சநாள் ஊர்ல போய் இருக்கியா" என்றேன். இம்முறை உன் அம்மா போகமாட்டேன் என்றாள். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்ககூடவே இருக்கிறேன் என்றாள். 

 வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கியிருந்தேன். அப்போது வந்த வர்தா புயலில் வீட்டுக்காரங்க கெரசின் பணம் கேட்கையில் உன் அம்மா வீட்டுக்காரங்களுக்கே தெரியாமல் உன் அம்மாவோடும் அம்மாச்சியோடும் ஊருக்குச் சென்றாய். ஆறேழு மாதங்கள் கடந்தன. பாதி இறந்த அப்பன் இப்போது உயிர்ப்பாய் இருக்கிறேன். ஆனாலும் உன் பிரிவு என்னை நிலைகுலையவைக்கிறது. 

பள்ளியில் சேர்க்கும்போதாவது உன்னருகில் வாழலாம் என்ற என் நினைப்பில் காலம் கல்லெறிந்துவிட்டது. எல்.கே.ஜி படிப்பும் ஊரிலேயே என்றாகிவிட்டது. இதுவரை அப்பனின் விடுமுறைக்காகக் காத்திருந்தாய்; இனி உன் விடுமுறைக்காகக் காத்திருப்பேன் மகளே!


ஜூன் 9, 2017. 

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...