Tuesday, March 30, 2021

`அம்பட்டன் கலயம்' கவிதை நூலுக்கு தமுஎகச விருது தகவல் கிடைத்ததும் உடனே மனைவிக்கும் மகளுக்கும் சொன்னேன். அடுத்த நாள் காலை 3.30 மணியளவில் பாதி உறக்கத்தில் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் போது விருது அறிவிச்ச ஞாபகம் வர ஏனோ லேசான கண்ணீர் முட்டியது. துடைத்துக்கொண்டு மீண்டும் தூங்கிவிட்டேன். காலையில் அலுவலகம் செல்வதற்காக பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கையில் மீண்டும் லேசாக ஆரம்பித்து பொழபொழவென்று அடக்கமுடியாமல் மீண்டும் மீண்டும் அழுதேன். 

தனித்துவமான வாழ்வியல் அனுபவம் உங்கள் கவிதைகளில் உண்டு. ஆனால், சொல்லல் முறையில் தனித்துவம் இல்லை ;மாடர்னிட்டி கைகூடவில்லை; நாஸ்டாலஜி தேக்கமடைந்த உள்ளது. போன்ற விமர்சனங்கள் முதல் இரண்டு கவிதை நூல்களுக்குக் கிடைத்தது. இப்படியான படைப்பிலக்கியம் சார்ந்த உரையாடல் மூலம் அது என்ன? இது என்ன?என்று தேடித் தேடிப் படித்தேன். மிகவும் நேசித்தவர்களின் பிரிவு, நிராகரிப்பு, இருட்டடிப்பு போன்றவை தற்கொலைக்குத் தூண்டியது. இவர்களின் கால்கள் என்னோடு நடக்கத் தயங்கின; கண்கள் சந்திக்க மறுத்தன; அழைப்பை ஏற்க மறுத்தன. சிலர் சம்பந்தமில்லாமல் சமூக வலைதளங்களில் என்னை விமர்சனம் செய்தனர். இவை எல்லாவற்றையும் படிப்படியாக ஒவ்வொன்றாகத் தாண்டி வாசிப்பும் எழுத்துமாக இருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு எழுதியதுதான் அம்பட்டன் கலயம்.

இந்நூலுக்கு வெற்றிமொழி இலக்கியக் கூட்டத்தில் விமர்சனம் செய்த மனோ.மோகன் கடந்த பத்து ஆண்டுகளில் கவிதையின் பயணம் குறித்தும் அதில் பச்சோந்தியின் இடம் என்ன என்றும் மிக அற்புதமான கட்டுரை வாசித்தார். அதன்மூலம் மிகத் தெளிவான ஒரு பாதை தெரிந்தது. கற்றுக்கொள்ளும் படியாகவும் இருந்தது. தொடர்ந்து இந்திரன் அய்யா, பிரவீன் பஃறுளி, இளங்கோ கிருஷ்ணன் போன்றோர் கூகையில் நடைபெற்ற விமர்சனக் கூட்டத்தில் மிகச் சிறப்பாகப் பேசினார்கள். 

என்னை நானே சுய தணிக்கை செய்கிறேன். என்னை நானே மறுதலிக்கிறேன். இன்னும் ஒன்றும் செய்யாதது போலத்தான் உள்ளது. இனி வரும் காலங்களில் யாரும் எழுதாதவற்றை எழுதுவேன். எத்தனை விருதுகள் கிடைத்தாலும் தற்போது கிடைத்த தமுஎகச விருதை மறக்க இயலாது. தமுஎகச வுக்கும் விருது அறிவிச்சதும் தனக்குக் கிடைத்ததைப் போல மகிழ்ச்சியடைந்த நண்பர்களுக்கும் நன்றி! நிலவொளியில் பறையிசை முழங்க நடைபெற்ற திருவாரூர் இலக்கிய விருது விழா என் வாழ்வின் மறவா தருணங்கள்...

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...