அதிகாலையில் தூக்கம் கலைபவள் அப்பா எங்கே என்றுதான் தேடுவாள். பல் துலக்கி விட்டு, முகம் கழுவி விடுவேன். அவள் அம்மா காய்ச்சிய தேநீரை ஆற்றிக் கொடுப்பேன். பெரும்பாலான நேரங்களில் என் முதுகிலேதான் சவாரி செய்வாள் அல்லது மடியிலேதான் உருண்டுகிடப்பாள். வெறுமனே கூடவே இருப்பாள் எப்போதும்.
தினமும் அவளை குளிக்க வைப்பதும் நான்தான். அவளை தலைக்குக் குளிப்பாட்டும் போது மலைகளைக் கோதுவது போல் இருக்கும். சோப்பு நுரையோடு ஒழுகும் சளியைச் சிந்தி எறிவேன். அவள் என்னிடமிருந்து மீன்களைப் போல் நழுவுவாள். உடல் துவட்டி உடைமாற்றிவிடுவேன். சுடச் சுட இருக்கும் சோற்றை பிசைந்துகொண்டே இருப்பாள். கத்திப்பார்ப்பேன், நானே பிசைந்து ஊட்டுவேன் அவள் வாயை மூடிக்கொள்வாள். ரெண்டடி அடிக்க ரெண்டு வாய் சாப்பிடுவாள்.
சில பொழுதுகளில் பள்ளிக்குச் செல்லும் சாலையில் ஆயாம்மாவின் இட்லிக் கடையில் ரெண்டு இட்லி வாங்கி ஊட்டுவேன். ஒன்றரை இட்லி சாப்பிடுவாள். பின் வழியெங்கும் இருக்கும் மரங்களை அறிமுகப் படுத்துவேன். பாட்டும் பாடுவேன். ஓரிரு நாள்களில் அவள் எனக்கு அவற்றை சுட்டிக்காட்டுவாள். ஓரிரு வரிகளைப் பாடியும் காட்டுவாள். ஆச்சர்யப்படுவேன்; அதிசயிப்பேன்.
பின்பு கூட்டமுள்ள பேருந்தில் அவளை நானும் என்னை அவளுமாக பற்றிக்கொண்டு பள்ளி செல்வோம்.
முன்னிரவின் பொழுதில் கதவு தட்டும் ஓசையைக் கேட்டு பற்றித் தொங்குவாள்.
மகள் அப்பனைப் பரிசுத்தப்படுத்துபவள்...
மகள் அப்பனை பக்குவப்படுத்துபவள்...
மகள் அப்பனை இம்சிப்பவள்...
மகள் அப்பனை ஆற்றுப்படுத்துபவள்...
அவளே ஆயுளின் குறுகிய இருட்டு...
அவளே ஆயுளின் நீண்ட ஒளி!!!
No comments:
Post a Comment