Thursday, September 8, 2022

பச்சோந்தியின் 2 கவிதைகள் - தனிமை இதழில் வெளியானவை

 



நடனமற்றுத் தரையிறங்கும் ஆகாயம்


கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் நடந்துகொண்டிருந்தேன்.

இடிந்து நொறுங்கிய வீட்டின் எஞ்சிய சுவர்

வேர்களால் வேயப்பட்டிருந்தது.

அதன் மீது சாய்ந்திருக்கிறது

ஒரு முனை உடைந்த மூங்கில் ஏணி.

வெட்டுத் தழும்புகளுடன் நின்றிருக்கும் அரச மரத்தின்

பாதி உடைந்த கிளை

அக்கினி வெய்யிலில் எரிகிறது.

அந்த நெருப்பில் சுருட்டைப் பற்றவைக்கிறான்

வாயற்ற வயோதிகன்.

சுருள் சுருளாய் மேகங்கள் சஞ்சரிக்கையில்தான்

தொண்டையில் மடித்துவைத்திருந்த உதடுகள்

எட்டிப் பார்த்தன.

பழக்கூடையில் ஊன்றிய குடை

காற்றில் சாயாதபடி 

கண்ணாடி வளையல்கள் இறுக்கிப் பிடிக்க

மற்றோர் கையின் வளையலோசை

பலாச் சுளைகள் மீது அமர்ந்த ஈக்களை விரட்டுகிறது.

நடனமற்ற அரசின் பழுத்த இலை

ஆகாயத்தைத் தரையிறக்கும் பொழுதில்

ரத்தக்கறை படிந்த லுங்கியொன்று

நடைமேடை மீது தூங்கித் தூங்கி வழிகிறது.

சிலையாய் நிற்கும் ஜார்ஜ் மன்னன்

சுட்டாலும் பாதத்தை மட்டும் நகர்த்தாமல் 

மண்டையைக் கழட்டிக் கிரீடத்தைச் சொரிகிறான்.



 பத்ரியன் மலர்ச் சந்தையைப் பற்றவைத்தேன் 


பாரிமுனைப் பத்ரியன் மலர்ச் சந்தையை உரசி

சிகரெட்டைப் பற்றவைத்தேன்.

படங்களாய்க் குவிந்து கிடக்கும் கடவுள்களின் மீது

ஊதுவத்தியின் சாம்பல் படர்கிறது.

வட்டமான மூங்கில் கூடையில்

தாழம் பூக்களை அடுக்குபவனிடம்

வாசத்தை நுகரக் கேட்டேன்.

தென்னங்குருத்தைப் போன்ற இலையால்

நாசித் துளைகளை அடித்து விரட்டலானான்.

சற்றும் அசையாது

ஒரு வண்டைப் போல் சதா ரீங்கரித்தேன்.

நடுக்கமுற்ற அவன் தாய்

பூவைப் பிய்த்து என் திசை பார்த்து எறிந்தாள்.

கண்களால் கவ்விச்சென்று

மேற்கூரை இடிந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்து

முகர்ந்துகொண்டே இருந்தேன்.

நாசியின் விளிம்பில் ஒட்டிய

சாமை போன்ற மென்துகள்களை

நுனி விரலில் கிள்ளி எடுக்கப் பார்த்த போது

என் முதுகு தட்டப்பட்டது.

தட்டிய ஓசையைத் தேடினேன் 

ஆலம் விழுதுகளால் நெய்யப்பட்ட சுவர்தான் நின்றிருந்தது.

பாதி உடைந்த ஜன்னலில் எட்டிப் பார்த்தேன் 

நிழலில் காயவைத்த தாழம் பூவைப் 

பொடிசெய்யும் பசியற்ற வயிறு

வெந்நீரில் கொதித்த தாழம் பூவில்

பனைவெல்லத்தைக் கரைக்கும் தேகச் சூடு உள்ளவன் 

தாழம் பூ இலையை நெய்யில் வதக்கும் நீர்க்கடுப்பு உள்ளவன்

தாழம் பூ இலை கொதித்த நீரில் 

தொண்டையால் நீச்சலடிக்கும் தோல் நோயாளி

எண்ணற்ற நிழல்கள் 

மேற்கூரை இடிந்த சுவருக்குள்

மீண்டும் பற்றவைத்தேன்

மலர்ச் சந்தையை.

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...