Friday, March 25, 2022

தம்மை ஆட்டுவிக்கும் கலை





எக்ஸ்பிரஸ் அவென்யுவில் `Parallel Mothers' என்னும் ஸ்பேனிஷ் திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன். அரங்கினுள் கிட்டத்தட்ட 10 பேர்தான் இருந்திருப்போம். அவர்களில் இருவர் கணவன் மனைவியாக இருக்கலாம். நான்கு பேர் நண்பர்கள். மூன்று பெண்கள் ஒரு ஆண். முன் வரிசையில் ஒரு ஆணையும் பெண்ணையும் விட்டுவிட்டு மற்ற இரண்டு பெண்கள் பின்வரிசையின் நடுப் பகுதிக்குச் சென்றுவிட்டனர். ஜானிஸ், அனா என இரண்டு கர்ப்பிணிகள் ஒரே நேரத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். முக்கலும் முனகலும் அலறலும் அழுகையுமாக பிரசவத் தருணத்தின் வலிகளை நேரடியாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். டிஎன்ஏ பேட்டர்னிட்டி டெஸ்டிங் முடிந்து குழந்தைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போது மாற்றிக் கொடுத்துவிடுகின்றனர். அவர்களில் ஒரு குழந்தை இறந்து போக இன்னொரு குழந்தை என்ன ஆனது, உரிய தாயிடம் சேர்க்கப்பட்டதா இல்லையா என்பது மிச்சக் கதை.

படம் முடிந்து வெளிவரும் போது ஒருவிதமான போதைக்கு அலைந்தது மனம். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வணிக அங்காடியின் மையத்தில் பத்து மணி ஆகியும் சந்தை கலையாமல் இருந்தது. நறுமணத் தைலம், ஐஸ்கிரீம் இன்னும் ஏதேதோ வாசனை கலந்த ஜில்லென்ற காற்றில் ததும்பியபடி கிழக்கு வாசலை அடைந்தேன். குளிர் காற்று விடுத்து வெப்பம் ஆட்கொண்டது. மூங்கில்களால் ஆன கார்டன் பாருக்குச் செல்லலாம் என்று தோன்றியது. திறந்த வெளியில் அங்கங்கே மூங்கில் சின்னஞ் சிறிய மரமாய்ச் செழித்திருக்கும். ஆனால், அங்காடியின் எதிரில் டாஸ்மாக் என்னும் பலகை உள்ளிழுத்தது. சரி, சாலையோரம் இருக்கும் என்று சென்றால், குறுக்குத் தெருவின் நீண்ட இருள் என்னைக் கரம் பிடித்துச் சென்றது. அது ஜி.பி.சாலை. இரு பக்கமும் கடைகள் மூடப்பட்டிருந்ததால் இருளின் அடர்த்தி கூடியிருந்தது. தெருவில் நுழையவே அச்சமாய் இருந்தது. அங்கங்கே நின்றிருக்கும் வாகனத்தின் முன், பின், நடைபாதை என எங்கெங்கும் காணினும் ஒரே குடிகாரர்களின் வீதி உலாதான். இவர்களில் யாராவது போதையில் வந்து என் செல்போனைப் பிடிங்கி விடுவார்களோ, பையை வாங்கிக்கொண்டு காசு கேட்பார்களோ, அவர்களுக்கு இசையவில்லையென்றால் கொன்று விடுவார்களோ இப்படியான சிந்தனைகள் என்னை இறுக்கின. ஆனாலும் குடிக்க வேண்டுமென்னும் போதை ஒரு தெம்பைக் கொடுத்தது. முட்டுச் சந்தின் வலது புறம் இருந்த டாஸ்மாக்கின் இரும்புக் கம்பிகளுக்கிடையே ஒரு ஒயின் வேண்டுமென்றேன். 220 ரூபாய் ஒயின்தான் இருக்கிறது என்றார். எடிஎம் இல் 330 ரூபாய் இருந்தது. சரி கொடுங்கள் என்று Gpay செய்யச் சென்றேன். Gpay வசதி கிடையாது என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பினேன். 

டாஸ்மாக்கின் எதிரில் கூட்டம் அதிகமாய் இருந்தது. தெருவிளக்கில் ஒளிர்ந்த ஆலங்கிளையைக் கண்டு ரசித்த படி திரும்பினேன். மரத்தைத் தாண்டியதும் அடர் இருள். எப்படியோ குடிகாரர்களிடமிருந்து சற்று தூரம் வந்த நிம்மதி. நகர வீதிகளில் விடிய விடிய தனியனாய் அலைந்து திரிந்திருப்பதால் வேறு பயமில்லை. 

ஜி.பி.சந்தின் வழியாக மீண்டும் ஜி.பி.சாலையை அடைந்தேன். சவுத் இந்தியன் வங்கி ஏடிஎம் இருந்தது. அதிலிருந்து முந்நூறு ரூபாயை எடுத்து, எதிரில் இருந்த டாஸ்மாக்கில் ஒரு ஒயின் வேண்டுமென்று நூறு ரூபாயை நீட்டினேன். நீட்டின கையை ஒருவரும் சீந்துவாரில்லை. எனக்குப் பின் வந்த ஐந்து பேர் சரக்கு வாங்கிச் சென்று விட்டனர். சரக்குக் கொடுப்பவரில் ஒருவர் போதையாக இருந்ததால் என்னால் கோபப்பட்டுக் கேட்க முடியவில்லை. எப்படியோ வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன். யாருமற்ற woods சாலையில் நடந்து வரும் போதே சாலையோரம் நின்று ஒயினைக் குடித்துவிடலாமா என்றிருந்தது. மனதை அடக்கிக்கொண்டு அண்ணாசாலையை அடைந்தேன். 18K பேருந்து சிக்னலில் நின்றிருந்ததைக் கண்டு வேகமாய் ஓடி ஏறினேன். 

ஒய்எம்சி வரை சென்று அங்கிருந்து வேறு ஒரு வண்டி பிடித்துச் சென்று விடலாம் என நினைத்தேன். ஆனால், டிஎம் எஸ் நிறுத்தத்திற்கும் முன் ஒரு மளிகைக் கடை திறந்திருந்ததால் சைடிஸ் வாங்க இறங்கிவிட்டேன். பேரிச்சை, முந்திரி, உலர்ந்த திராட்சை, செவ்வாழை, காராச்சேவு வாங்கிக்கொண்டு நடந்தேன். செவ்வாழையின் தோலை உரித்து இருட்டில் எறிந்துவிட்டேன். பின்பு, வெகு நேரமாய் டிஎம்எஸ் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். வாகனம் எதுவும் வரவில்லை. சரி, ஒயினைக் குடித்துவிடலாம் என்று சாலையின் ஓரமாய்த் திரும்பி நின்று ஒயினின் மூடியைப் பல்லால் கடித்துத் திறந்தேன். என் வாழ்வில் முதல் முறையாக மதுப் போத்தலை நானே திறந்தது அப்போதுதான். மிடறு மிடறாகத்தான் குடிப்பதுதான் வழக்கம்.  அன்றென்னவோ பெருங்குடிகாரனைப் போல் மடமடவெனக் குடிக்க ஆரம்பித்தேன். என் குடியின் மீது பேருந்து வெளிச்சமடித்தது. மூடியும் மூடாமலும் பைக்குள் பாட்டிலைத் திணித்தேன். பேருந்தில் ஏறுவதற்குக் கூச்சமாகவும் பேருந்தின் உள்ளிருப்பவர்களைப் பார்க்க அவமானமாகவும் இருந்தது. இருக்கையில் அமர்ந்து பைக்குள் கைநுழைத்து ஒயின் கொட்டிவிட்டதா என்று தடவிப் பார்த்தேன். நட்டக்குத்தமாய் நின்றிருந்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன். 

பேரிச்சை, உலர்ந்த திராட்சை, முந்திரி அனைத்தையும் இறங்குவதற்கு முன்பே தின்று முடித்துவிட்டேன். ஒய்எம்சியில் நாலைந்து இளைஞர்கள் நின்றுகொண்டிருந்தனர். பேருந்து நிழற்குடையில் பையை வைத்து எஞ்சியிருந்த ஒயினை எடுத்து ஒரே மூச்சில் குடித்துவிட்டேன். பசங்க முன்பு குடிக்க ஒரு மாதிரியாக இருந்தது. ஆதலால்தான் நிழற்குடைத் தூணின் பின்சென்று அதைச் செய்தேன். காராச்சேவின் உறையைக் கிழித்து வேடனைப் போல் தின்ன ஆரம்பித்தேன். நகரம் மெல்ல மெல்ல ஆட ஆரம்பித்தது. ஆட்டத்துடன் Rapido bike பதிவு செய்தேன். ஐந்து நிமிடத்தில் வந்த பைக்கில் ஏறி அமர்ந்து காராச்சேவு சாப்பிடுகிறீர்களா என்றேன். வேண்டாம் என்று மறுத்துவிட்டார். ஒரு துண்டு கூட மிச்சம் வைக்காமல் தின்றபடியே பயணித்தேன். நகரம், வானம், நட்சத்திரங்கள், வெளிச்சம், இருட்டு என எல்லாம் ஆட்டத்தைத் தொடங்கின. சற்று என்னை உற்றுப் பார்த்தேன். அட ஆட்டத்தில் பெரும் ஆட்டம் தன்னைத் தானே ஆட்டுவிப்பதுதான். 

25.03.2022
வெள்ளிக்கிழமை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...