Sunday, March 27, 2022

தன்னிகரற்ற தனிப் பெரும் கலைஞனுக்கு...

பெருங்குடி ரயில் நிலையம். 18 அக்டோபர் 2020

நேசிப்பு என்பது தட்டையாகிவிட்ட காலத்தில் வாழ்கிறோம். நம்முடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள், நம்மைப் பற்றிப் புறம் பேசிக்கொண்டு இன்னொரு நபரிடமும் நெருக்கமாக இருப்பர். காதலின் பொருட்டு, காமத்தின் பொருட்டு, பொருளின் பொருட்டு என இதற்கு எத்தனை பொருட்டு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். இப்படி பாவனையான உலகத்தில் சிற்சில நேரம் நாமும் பாவனை செய்ய நேர்வது நம் விதி. ஆழ்ந்த நம்பிக்கையோ, காதலோ எதுவுமற்று வாழ்வது சாபம். அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் அனைத்தும் வளர்ந்தோங்கிய 21 ஆம் நூற்றாண்டில் கூட்டம் கூட்டமாய்த்தான் இருக்கிறோம், தனிமையைச் சுமந்தபடி. என்ன நடந்தாலும் நான் இருக்கிறேன், கவலைப் படாதே என்று சொல்லும் உறவு அரிதாகி விட்டது. இப்படியான காலத்தில் அன்பின் பேருருவாய் ஒருவன் வந்தான். அவனுடன் தெருத் தெருவாய் அலைந்தேன் ; நேரங்காலமின்றி உரையாடினேன் ; எண்ணற்ற புத்தகங்களைப் பெற்றேன் ; விலகி விலகி ஓடினாலும் துரத்தித் துரத்தி நேசிக்கப்பட்டேன்.

புதிய உடை வாங்கிக் கொடுத்தான் ; உரையாடலின் போது எதிர்த் தரப்பின் கருத்தையும் ஆமோதித்தான் ; அன்பை மட்டுமல்ல சண்டையும் செய்தோம் ; கோபம் கொண்டோம் ; பேசாமல் இருந்தோம் ; பின் அகங்காரத்தை உடைத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டோம் இப்படி எத்தனையோ தருணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அன்பு காட்டுவதில் அன்னையாகவும் கண்டிப்பதில் தந்தையாகவும் நல்லது கெட்டது பகிர்வதில் நண்பனாகவும் இருப்பவன். 

வேலையற்ற கொரோனா காலத்தில் வாடகை கட்ட முடியாமல் வீடு காலி செய்யச் சொன்ன வீட்டு உரிமையாளர் ஒரு புறம் ; தினந்தோறும் கதவைத் தட்டும் வங்கி ஊழியர் ஒரு புறம் என அல்லலுற்ற போது, ஒரேயடியாக ஊருக்குச் செல்லும் சூழல் வந்தது. தகவல் அறிந்த உடன் தன் நண்பனின் உதவியால் என்னைச் சென்னையில் நிலைபெறச் செய்தவன். இப்படி எத்தனையோ சொல்லலாம். அதையும் மீறி அக்கொடிய காலத்தில் ``ஒன்னு ஊருக்குப் போகணும், இல்லையா இங்கேயே இருந்து கொடியை நாட்டணும்'' என்று அவன் உதிர்த்த வார்த்தைகள் இன்னும் அடிநெஞ்சில் நிலைத்திருக்கின்றன. 

1998 ஆம் ஆண்டு 13 வயதில் காஜா பட்டன் வைக்கச் சென்னை வந்த போது, இரண்டு மாதத்திலேயே நிராதரவற்று நிற்கையில் ``ஊரை விட்டுப் போலாமா, இல்லை இங்கே நின்று ஜெயிப்போமா'' என்று அண்ணனும் நானும் கலந்து பேசி ``நின்று ஜெயிப்போம்'' என்ற முடிவுக்கு வந்தோம். அப்படியான உறுதிதான் இது. எது நடந்தாலும் நான் இருக்கிறேன், கவலைப்படாதே என்று சொல்லுமவன் எனக்கு எல்லாமுமாய் இருப்பவன். 

யாருக்கும் விலை போகாமல், யாருடனும் சமரசம் செய்யாமல், பலத்தோடும் பலவீனத்தோடும் விளங்கும் தன்னிகரற்ற தனிப் பெரும் கலைஞன். என் பார்வையில் அறம் மிகுந்த மனிதன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷங்கர்!

27.03.2022
ஞாயிற்றுக்கிழமை

(மார்ச் 25 அன்று ஷங்கர்ராமசுப்ரமணியன் பிறந்த நாள்)

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...