Thursday, March 18, 2021

`பீஃப் கவிதைகள்' கவிதை நூலில் இடம்பெற்ற முன்னுரை

பண்ணை அடிமைக்கும் தாலாட்டும் ஒப்பாரியும் பாடும் பெற்றோருக்கும் கடைமகனாக கரந்தமலைக்கும் சிறுமலைக்கும் இடையே உள்ள கோவில்பட்டியில் பிறந்தேன். அப்பாவுக்குப் பண்ணையடிக்கவே நேரம் போதாமல் அம்மா, அண்ணன், அக்கா என எல்லாரையும் அதில் ஈடுபடுத்துவார். அம்மாதான் எங்களுக்கு எல்லாம். ஆனாலும், அப்பாவிடம் வாங்கும் விதவிதமான அடிகளுக்கு ஈடாக அம்மாவைத்தான் வகைவகையாக ஏமாற்றுவேன். ஏமாற்றுவதையும் சேர்த்துதான் அன்புகாட்டி வளர்த்தார். யார் எங்கு கூப்பிட்டாலும் யோசிக்காமல் கூடச் செல்வேன். மளிகை கடைக்கு, அரவை மில்லுக்கு, காதலருக்குத் தூதாக, கரந்தமலைக்கு நெல்லிக்காய் தொரட்டி பறிக்க என எங்கெங்கோ சுற்றித் திரிந்திருக்கிறேன். சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும்தான் வீட்டுக்குச் செல்வேன். பல நேரங்களில் மாரியம்மன் கோயில், அங்கன்வாடி, பெருமாள் கோயில் மண்டபம் என எங்க ஊர்ப் பசங்க மொத்தமாகத் தூங்குவோம். அதற்காகவே, ஒரு போர்வையை வீட்டிலிருந்து எடுத்துவந்து வைத்திருப்பேன். இப்படி சிறுவயதில் வீட்டில் தங்காத மனநிலை இப்போதும் தொடர்ந்து வருவது இயல்பாக இருப்பதை அறியமுடிகிறது. அது, என் படைப்பூக்கத்துக்கும் தனித்தன்மைக்கும் வழிவகுப்பதாக உணரவும் முடிகிறது.

 எட்டாம் வகுப்பு வரை கிராமத்தில் படித்தேன். ஒன்பதாம் வகுப்புக்கு வேறு ஊருக்குச் செல்ல நேர்ந்தது. அதுவும் விடுதியில் தங்கிப் படிக்கும் சூழ்நிலை. ஓரிரு வாரங்களில் பெட்டி படுக்கையோடு யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து ஊருக்கு நடந்தே வந்துவிட்டேன். வேறு பள்ளிகளில் படிக்கவைக்கும் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. சொந்த ஊரில் பிள்ளைகள் இருந்தால் தம்மைப்போலவே, பண்ணையடிமையாக மாறிவிடுவார்களோ என்ற பயத்தில் ஒவ்வொரு பிள்ளைகளாக வெளியேற்றுவதிலேயே உறுதியாக இருந்தார் அப்பா. இதையடுத்து தையல், எலக்ட்ரீசியன், கட்டடத்து வேலை, ஃபைனான்ஸ் கடை எனப் பலவேலைகளில் சேர்த்துவிட்டாலும் எங்கும் மனம் நிலைக்கவில்லை. கடைசியாக சென்னையில் உள்ள அண்ணன் கடைக்கு வேலைக்கு அனுப்பலாம் என்று முடிவெடுத்தார்கள். சென்னை என்றதும், சேட்டு அண்ணன் தங்கச்சி சடங்கு அன்று நிலா வெளிச்சத்தில் உறைகிணறு சற்றில் ரவி மாமா அமர்ந்து, சுற்றியிருந்த சிறுவர்களை நோக்கி மெட்ராஸுக்கும் சென்னைக்கும் எத்தனை கி.மீட்டர் என்று கேட்க அதிகபட்சமாக 500 கி.மீ என்று நான் சொன்னது ஞாபகத்தில் வந்தது. மேலும், வடமதுரை பள்ளியில் அக்காவும் நானும் படிக்கையில், அந்த வழியாகப் போகும் சென்னைப் பேருந்துகளைப் பார்த்து ``இதுல போனா அண்ணனைப் பார்க்கப் போலாம்ல" என்று பேசுவதும் நினைவிலாடியது. பின்பு, ஒருவழியாக அப்பாவுடன் சென்னைக்குக் கிளம்பினேன். அவர், கடன்வாங்கிய ஐயாயிரம் ரூபாயை மஞ்சள் பையில் வைத்து சென்னைக்குப் போகும்வரை பத்திரப்படுத்த பெரும் சிரமப்பட்டார். இப்படி, சென்னைக்கு காஜா பட்டன் வைக்க வந்த கணேசன்தான் பச்சோந்தி.  

சென்னைக்கு வந்த தொன்னூறுகளின் இறுதியில், நான்கு ஆண்டுகளுக்குப் பின் ஊருக்குச் செல்கையில், என் கிராமத்தின் மொத்த வடிவமும் கட்டமைப்பும் மாறியிருந்தன. கள்ளிச் செடிகளுக்குள் சட்டை கிழிய  தசை கிழிய பள்ளிக்குச் சென்ற பாதை, தார் பூசியிருக்க... ஊரே கூடி தண்ணீர் பிடித்த அடிகுழாய் துருப்பிடிக்க... ஒவ்வொரு வீட்டிலும் திருகு குழாய் முளைத்திருந்தது. செடிகளும் கொடிகளும் மரங்களும் மண்டிக்கிடந்த நிலம், பாலையாகியிருந்தது. பெயர்த்து எடுக்கப்பட்ட உறைகிணறு, காளியம்மன் கோயிலானது. மாடுகள் பூட்டி நிலம் உழுத கலப்பை, கறையான் பிடித்து புளியமரத்தின் நிழலில் சாய்க்கப்பட்டிருந்தது. குழந்தையைப் பெற்றெடுத்த சில நிமிடங்களுக்குள் வலிப்பில் இறந்தாள் மகேஸ்வரி, `அம்மை’ வந்து இறந்தாள் முட்டிக்காலில் நடக்கும் அமுல் அம்மா, பெருமாள் கோயில் மண்டபத்தைச் சுற்றிக்கிடக்கும் ஒட்டுப்பீடிகளைப் பொறுக்கிக் குடிக்கும் சவரியார் மாமா பேயடித்து இறந்தார். இப்படி, வாழ வேண்டியவர்கள் சுடுகாட்டிலும் சுடுகாட்டுக்குச் சென்றவர்கள் ஆவிகளாக ஊருக்குள்ளுமாக வாழ்வது ஏன், எப்படி நிகழ்ந்தது என்கிற இடத்திலிருந்து ஆரம்பித்தது என் எழுத்து.


என் ஊரில் இருந்த குட்டிச்சுவரைப் படம் பிடித்து, அப்படத்துடன் ஒரு சிறிய கவிதையை கணையாழிக்கு அனுப்பிவைத்தேன். ``கவிதையாக வரவில்லை. படம் யோசிக்க வைக்கிறது" என்று அவர் அளித்த இரண்டாவது சொற்றொடரைப் பற்றிக்கொண்டேன். வானம்பாடிகளின் கவிதைகளை மட்டும் வாசித்த காலம். பிறகு, தற்போதைய கவிதைப் போக்கை, வடிவத்தை அறிந்துகொள்ள பலகவிதை நூல்களை வாங்கிப் படித்தேன். அப்படி, தி.நகரில் உள்ள கடையில் நா.முத்துக்குமாரின் `பட்டாம்பூச்சி விற்பவன்' தொகுப்பைப் படித்ததும் நெருக்கமாக இருந்ததை உணர்ந்தேன். அதில், `இன்னும் கொஞ்சம் நீண்டு எழுதியிருக்கலாம்' என்று பாலுமகேந்திரா சொன்னதில் எனக்கும் உடன்பாடு இருந்தது. மேலும், நா.முத்துக்குமாரின் `தூர்' கவிதை படித்ததும் அப்போதய கவிதைப் போக்கு நமக்கும் வசப்படும் என்று நம்பிக்கை பிறந்தது. பிறகு, நா.பிச்சமூர்த்தி தொடங்கி அப்போது வந்த கவிதை நூல்கள் வரை படிங்கத் தொடங்கினேன். குறிப்பாக கிராமத்துக் கவிதைகளின் போக்கு, அதன் இயங்குதளம் பற்றி அறிய விரும்பினேன். ஒருசில தொகுப்புகளில் ஒன்றிரண்டு கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தன என்பதைவிடவும் என்வாழ்நிலைய யொட்டி இருந்தன. ஆனாலும், ஒரு போதாமை என்னைத் துரத்திக்கொண்டே இருந்தது. அதுகுறித்து இணையத்தில் தேடுகையில் ந.முருகேசபாண்டியனின் `கிராமத்துத் தெருக்களின் வழியே' நூல் பரிச்சயமானது. உயிர்மை பதிப்பகம் வெளியிட்டதை அறிந்துகொண்டு வாங்கிப் படித்தேன். என் கிராமத்து வாழ்க்கையை அப்படியே அசலாகப் பதிவுசெய்திருந்ததைக் கண்டு திகைப்புற்றேன். இதைத் தாண்டி எழுதுவது என்பது அப்போதைக்கு சவாலாகவும் தோன்றியது. ஆனாலும், என் கிராமத்து மக்களின் வாழ்வியலை எழுத ஆரம்பித்தேன். பின்பு, இராச.கணேசன் என்கிற பெயரில் `மாடுகளின் காலடிச் சுவடுகள்' எனும் தலைப்பில் `காட்சி' இணையத்தில் வெளியானது. எழுதிய முதல்கவிதையே அதுவும் இயக்குநர் ராம் நடத்தும் இணையத்தில் வெளியானது உற்சாகமாக இருந்தது. மேலும்,  `குடிசைக் குடைக்குள் குட்டை' என்கிற கவிதை இரண்டு பக்கங்களில் கணையாழியில் வெளியாகியது. இப்படி நான் பிறந்த ஊரான கோவில்பட்டியின் நிலத்தை, அங்கு வாழ்ந்த வாழும் மக்களைப் பற்றி எழுதியதுதான் என் முதல் நூலான `வேர்முளைத்த உலக்கை'. 

இந்நூல் தமிழக எழுத்தாளர்களிடம், வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஏழு மாவட்டங்களில் நூல் விமர்சனம் நடத்தினார்கள். ஆனாலும், திண்டுக்கல் செல்மா பிரியதர்ஸன் என்னை அழைத்துப் பேசிய வார்த்தைகள் தொடர்ந்து பயணிக்க உந்துதலாக இருந்தது. ``என் கால்நூற்றாண்டு வாழ்க்கை இதில் வைத்திருக்கிறான். இவனது கவிதைகள் கரப்ட் ஆகாமல் இருக்கு. இப்போது வந்திருக்கும் தொகுப்புகளில் நூறு கவிதை நூல்களின் அட்டைப்படத்தையும் பெயரையும் நீக்கிவிட்டால் எல்லாம் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். ஆனால், இவற்றிலிருந்து வேர்முளைத்த உலக்கையை தனியாகப் பிரித்துவிடலாம். எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆளா வருவான் " என செல்மா பேசியது நவீன கவிதையின் பயணத்தின் பாதையில் எனக்கிருந்த புரிதலை மேலும் வலுவாக்கியது. இந்நூலுக்கு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அந்த ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கான `கவிதை உறவு' விருது வழங்கினார்.
 
பிறகு, கிராமத்துக்கும் சென்னைப் பெருநகருக்கும் தொடர் அலைச்சலில் இருந்தேன். அங்கும் இங்குமான ஊடாட்டம் பெரும் அலைக்கழிவு `கூடுகளில் தொங்கும் அங்காடி'யை எழுதவைத்தது. இந்நூலுக்குக் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டேன். ``தனித்துவமான வாழ்வியல் அனுபவம் உங்கள் கவிதைகளில் உண்டு. ஆனால், சொல்லல் முறையில் தனித்துவம் இல்லை ;மாடர்னிட்டி கைகூடவில்லை; நாஸ்டாலஜி தேக்கமடைந்த உள்ளது. போன்ற விமர்சனங்கள் முதல் இரண்டு கவிதை நூல்களுக்குக் கிடைத்தது. இப்படியான படைப்பிலக்கியம் சார்ந்த உரையாடல் மூலம் அது என்ன? இது என்ன?என்று தேடித் தேடிப் படித்தேன். மிகவும் நேசித்தவர்களின் பிரிவு, நிராகரிப்பு, இருட்டடிப்பு போன்றவை தற்கொலைக்குத் தூண்டியது. இவர்களின் கால்கள் என்னோடு நடக்கத் தயங்கின; கண்கள் சந்திக்க மறுத்தன; அழைப்பை ஏற்க மறுத்தன. சிலர் சம்பந்தமில்லாமல் சமூக வலைதளங்களில் என்னை விமர்சனம் செய்தனர். இவை எல்லாவற்றையும் படிப்படியாக ஒவ்வொன்றாகத் தாண்டி வாசிப்பும் எழுத்துமாக இருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு எழுதியதுதான் `அம்பட்டன் கலயம்'. இந்நூலுக்கு வெற்றிமொழி இலக்கியக் கூட்டத்தில் விமர்சனம் செய்த மனோ.மோகன் கடந்த பத்து ஆண்டுகளில் கவிதையின் பயணம் குறித்தும் அதில் பச்சோந்தியின் இடம் என்ன என்றும் மிக அற்புதமான கட்டுரை வாசித்தார். அதன்மூலம் மிகத் தெளிவான ஒரு பாதை தெரிந்தது. கற்றுக்கொள்ளும் படியாகவும் இருந்தது.

தொடர்ந்து இந்திரன் அய்யா, பிரவீன் பஃறுளி, இளங்கோ கிருஷ்ணன் போன்றோர் கூகையில் நடைபெற்ற விமர்சனக் கூட்டத்தில் மிகச் சிறப்பாகப் பேசினார்கள். ஆனாலும், என்னை நானே சுயதணிக்கை செய்கிறேன்.என்னை நானே மறுதலிக்கிறேன். இன்னும் ஒன்றும் செய்யாதது போலத்தான் உள்ளது. இனி வரும் காலங்களில் யாரும் எழுதாதவற்றை எழுதுவேன். எத்தனை விருதுகள் கிடைத்தாலும் தமுஎகச விருதை மறக்க இயலாது. தமுஎகச வுக்கும் விருது அறிவிச்சதும் தனக்குக் கிடைத்ததைப் போல மகிழ்ச்சியடைந்த நண்பர்களுக்கும் நன்றி.  நிலவொளியில் பறையிசை முழங்க நடைபெற்ற திருவாரூர் இலக்கிய விருது விழா என் வாழ்வின் மறவா தருணங்கள்.

ஊரெங்கும் மணக்கும் வறுத்த மாட்டுக்கறியை, எருமைத் தோலில் பறை செய்யும் தாத்தாவை, பயிர் விளைந்த நிலம் அபகரிக்கப்படுவதை எதிர்த்ததால் துப்பாக்கி குறிவைக்கும் தாயின் மார்பை, நிலஅளவைக் கல்லைக் கண்டு வள்ளிக் கிழங்கின் வேர்களைக் கட்டிக்கொண்டு அழும் அப்பனை, சுட்ட கல் எடுத்து குண்டி துடைப்பவனை, தண்டவாளங்களில் உறைந்த ரத்தத்தை என இச்சமூகத்திடமிருந்து எஞ்சி இருப்பதாலும் எல்லாவற்றிலிருந்தும் இச்சமூகம் எஞ்சி இருப்பதாலும் எழுதுகிறேன். குடும்பம், உறவு, நட்பு, காமம் இவற்றில் திருப்தியின்மையால் அலைக்கழிகிறேன். அப்பா அம்மா சேர்ந்திருந்த கால் நூற்றாண்டுக்கும் முந்தைய நிழற்படம் ஒன்றை  சமீபத்தில் அக்கா வீட்டில் கண்டேன். அப்புகைப்படத்தில் இருப்பவர்கள் அப்பா அம்மாதான் என்றாலும், அதில் இருப்பவை அவர்களின் இப்போதைய முகங்கள் அல்ல. ஒளிர்ந்து சிரிக்கும் பற்கள், பூக்கள் மணக்கும் கூந்தல், விதவிதமான பூக்கள் பூத்த சேலைகள், சற்று உடல் பெருத்த அம்மா என இவை எதுவுமே அதில் இல்லை. அவள் பாடிய தாலாட்டுப் பாடல், நடவுப் பாடல், ஒப்பாரிப் பாடல் இவை மட்டுமே மீதமிருக்கின்றன. என் வாசல் வழியே செல்லும் வாலிபன் என் அம்மாவை, ``ஏய் மாரிக் கிழவி!” என்று அழைத்தவாறு கடந்துபோகிறான். அம்மாவுக்கு உண்மையிலேயே வயதாகி விட்டதா என்ற சந்தேகம் பலமுறை ஏற்பட்டதுண்டு. சென்ற வாரம் அம்மாவின் பற்களற்ற சுருங்கிய கன்னம் சோற்றைக் குதப்பிக்கொண்டிருந்தது. அவள் என்னைவிடச் சற்று உயரம் குறைந்து காணப்படுகிறாள். அவள் கைகள் பிடித்துச் சென்ற காலம்போய், தோளின்மீது கைகள் போட்டபடி செல்கிறேன். இப்போது அவள், சாவின் பிடியில் சிக்குண்டதுபோல் உணர்கிறேன் அல்லது சாவின் பற்கள் அவளைக் கவ்வுவதற்கு காத்திருப்பதைப் போல் அச்சமுறுகிறேன். நினைத்துப் பார்க்கையில் இந்த அந்நியமாதல் எப்படி, ஏன் நிகழ்ந்தது என்று நினைக்கையில் கொஞ்சம் என் விரல்கள் எழுதுகோலின் மைக்குள் பிசுபிசுக்கின்றன; என் கண்கள் புத்தக வரிகளின் இடைவெளிக்குள் ஓடியாடுகின்றன.
   
மாட்டுக்கறி உண்பதற்காக சிறுபான்மை மக்களும் தலித் மக்களும் காவி அரசால் அச்சுறுத்தப்படுவதையும் தாக்கப்படுதையும் கொல்லப்படுவதையும் வார்த்தைகளாக மட்டுமல்ல; காட்சிகளாகவும் ஊடகங்களின் வாயிலாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். உங்கள் எல்லோரைப் போலவே நானும் மிகவும் பதற்றத்தோடும் அச்சத்தோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இவ்வாறு ஏன் நடக்கிறது. கொல்லப்படுவது யார் கொல்லுவது யார் என்ற கேள்விகள் என்னைத் துரத்திக்கொண்டே இருந்தன. இதில் யார் செய்வது சரி, யார் செய்வது தவறு, இவ்வாறு சிந்திக்கும் நான் யார் போன்ற இக்கேள்விகளுக்கு விடைதேடிய பயணம்தான் `பீஃப் கவிதைகள்'. மாட்டுக்கறி சார்ந்து ஒரு நூல் எழுதலாம் என்று ஆரம்பிததுதான் மூன்றாவது நூலான `அம்பட்டன் கலயம்'. ஆனால், சேலம் எட்டுவழிச் சாலை, கஜா புயல் இருபெரும் சம்பவங்களும் என் போக்கை மாற்றியமைத்தன. மேலும், மத்தியில் பாஜக அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்ற ஒருமாத கால இடைவெளியிலேயே மாட்டுக்கறி சம்பந்தமாக ஒரு முஸ்லிம் தாத்தா கொலைசெய்யப்பட்டார். அப்போது, இந்நூல் எழுதும் எண்ணம் ஆணித்தனமாக வேரூன்றியது. 

இதுகுறித்து, முதல்முறை எழுத்தாளர் நக்கீரனுடன் உரையாடும் போது யதேச்சையாகச் சொன்னேன். ``எழுதுங்கள் தமிழுக்குப் புதிதாக இருக்கும்" என்றார். ஆனாலும், மாட்டுக்கறி, மாடு சார்ந்து அம்பட்டன் கலயத்தில் எழுதியதைச் சொன்னபோது ``பெருங்கோபத்தோடு என்ன நீ அப்படி எழுதிட்ட" என்றவாறு இருந்தது அந்தப் பார்வை. உடனே, இதுகுறித்து எழுத ஏதாவது ரெஃபெரென்ஸ் நூல் இருந்தால் சொல்லுங்கள் என்றேன். `பசு புனிதம்' என்கிற நூலை அவர் வீட்டின் நூலகத்திலிருந்து எடுத்துவந்து இது ஒன்றைப் படித்தால் போதும் என்றார். புராணங்களிலும், இதிகாசங்களிலும், வேள்வித் தீயிலும் மாடு உட்பட பல மிருகங்கள் எப்படி வதை செய்யப்பட்டன என்பதை அந்நூலில் மேற்கோள்களுடன் இருப்பதை அறியமுடிந்தது. பசுவதை ஒருவரலாற்றுப்  பார்வை உட்பட அதுசம்பந்தமா தேடிப்படித்தேன். ஆனாலும் இவை எல்லாவற்றையும் எடுத்து ஓரம் வைத்துவிட்டு மக்களை நோக்கி ஓட ஆரம்பித்தேன்.
 
மாடு வெட்டும் முறை, அதன் ஓசை, அந்த இடத்தின் தன்மை, வெட்டுபவர்களின் உருவ அமைப்பு இதைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால், எங்கு போவது யாரிடம் பேசுவது என்று ஒன்றுமே புரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் சிறுவயதில் என் ஊரில் புளியமரத்து நிழலில் அவ்வப்போது வெட்டிய மாடும் வீட்டின் வெளியெங்கும் தோரணத்தில் தொங்கவிட்ட, உப்புக் கண்டம் போட்ட கறித்துண்டுகள்தாம். இப்போதைய நடைமுறைகளை அறியலாம் என்று பாண்டியன் ரயிலைப் பிடித்து  திண்டுக்கல்லுக்குச் சென்றேன். அதிகாலை 4 மணிக்கு இறங்கி பேருந்து நிலையத்தில் பேகம்பூர் செல்லும் முதல் பேருந்துக்காகக் காத்திருந்தேன். அப்பேருந்தும் என்னை இருட்டிலேயே இறக்கிவிட்டது. திக்குதெரியாத காட்டில் போவதுபோலே பனிக்காலத்தின் இரவில் மெதுவாக ஊர்ந்து நடந்தேன். இருபக்கமும் வேடிக்கை பார்த்தபடி சென்றேன். கன்றை சாலையிலிருந்து ஒருவர் உள்ளே இழுத்துக்கொண்டிருந்தார். சோடியம் ஒளியைப் பெய்த தெருவிளக்கின் பின்னிருட்டில் சிறுநீர்கழித்தபடி பார்த்தேன். ஒரு கேன்டர் லாரியில் ஆட்டுத்தோல் நிரம்பியிருந்தன. மேலும் சற்று தூரம் நடந்து மீண்டும் பின்நோக்கித் திரும்பினேன். திரும்பி வரும்போது மாடுகள் சத்தமின்றி வெட்டப்பட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். ஆனால், அவர்களிடம் எப்படி, என்ன பேசுவது என்று தெரியாமல் வீட்டுக்கு வந்தேன். பின், மீண்டும் இன்னொரு நாள் இதேபோல் ரயிலைப் பிடித்து இங்கும் அங்குமாக விடியும்வரை நடந்து திரிந்தேன். அதிகாலையில் தேநீர்குடித்துவிட்டு ஒரு கறிக்கடையில் மாட்டுவால் வேண்டும் என்று கேட்டேன். உடனே கட்டிக்கொடுத்துவிட்டார்கள். கறிவாங்க மாமா வந்துகொண்டிருப்பாதச் சொல்லி ஒன்றரை மணிநேரம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். 

ஒருநாள் திண்டுக்கல் தமிழ்தாசனிடம் பேசிக்கொண்டிருக்கையில் இப்படி ஒரு நூல் எழுதலாம் என்கிற எண்ணத்தைச் சொன்னேன். உடனே, அவர் தன் இருசக்கரவாகனத்தில் என்னை உட்காரவைத்து மாடுவெட்டும் ஒரு தாத்தாவிடம் என்னை அறிமுகப்படுத்திவைத்தார். பின், அவர் சொன்ன தேதியில் மீண்டும் அங்கே சென்று அவருடன் இருந்தேன். அப்படி ஒவ்வொரு விடுமுறை நாளிலும் அவர் கடைக்குச் செல்வேன். மாடு வெட்டும் காட்சிகளில் கன்றுகளின் தோல், கண், அதன் நடுக்கம் எல்லாம் கண்டு அதிர்ந்து மாட்டுக்கும் நமக்குமான உறவு வெறும் கறிம் மட்டும் தானா என்கிற கேள்வி எழுந்தது. விவரம் தெரிந்த நாளிலிருந்தே மாடுமேய்த்தது, குளத்தில் குளிக்கும் போது மாட்டையும் குளிப்பாட்டுவது, சோறூட்டுவது, பொட்டுவைப்பது, நோய்வந்தால் மருந்தூட்டுவது எனக் கடந்தகாலங்கள் என்முன் நின்றன.

முதல் கவிதையே `பீஃப் கவிதைகள்' என்னும் தலைப்பில்தான் எழுதினேன். ஶ்ரீசங்கர் என்னிடம் பலமுறை கவிதை அனுப்பச்சொன்னது ஞாபகம் வர அவருக்கு அனுப்பினேன். அவர் `நிலவெளி'யில் வெளியிட பலபேர் அக்கவிதை குறித்து என்னிடம் பேசினார்கள். சரியான பாதையில்தான் போகிறோம் என்று தெளிவுற்றேன். இதையே தொகுப்பின் தலைப்பாகவும் வைக்கலாம் என்று முடிவுசெய்தேன். அடுத்து மாடுகளுக்கு ஏற்படுகிற நோய்களும் குணப்படுத்தும் முறைகளும் பற்றி `தொழுவத்து மருத்துவக் குறிப்புகள்' என்னும் தலைப்பில் எழுதினேன். இது `கனலி'யில் வெளிவந்தது. தொடர்ந்து திருவல்லிக்கேணியில் அலைந்து திரிந்து `அக்ரஹாரத்து மாடுகள்' எழுதினேன். இது டிசம்பர் `அம்ருதா'வில் வெளியாகியுள்ளது. பறை செய்யும், பறையடிக்கும் கலைஞர்களின் வாழ்வியல் பின்புலத்தில் `வழிப்போக்கனின் புலால் நாற்றம்', எழுதினேன். மேலும், மாடுவெட்டும் இடமான சென்னைப் புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி பற்றி `கடைசிப் பச்சயம் தேசியக்கொடியில்', வாசக சாலை இணையத்தில் வெளிவந்தது. மேலும், விபத்துக்கு உள்ளாகும் மாடுகள், சர்வதேச அளவில் நடைபெறும் மாட்டுச் சந்தை, கோசாலை மாடுகள் பற்றியும் எழுதநேர்ந்தது. `வேள்வியில் எஞ்சிய கறியமுதம்' என்கிற கவிதை `பேபல்' இதழில் வெளிவருவதாக அதன் ஆசிரியர் குழு தெரிவித்துள்ளது. இக்கவிதைக்காக மட்டுமே பாண்டிச்சேரி, மார்த்தாண்டம், திண்டுக்கல், கொச்சி ஆகிய நகரங்களுக்குப் பயணமானேன். முதல் மூன்று நூல்களைவிட, குறைவான காலக்கட்டங்களில் அதிக பயணம் செய்து களஆய்வோடு எழுதப்பட்டது இந்நூல்.

அரிதான தருணங்களில் சந்தித்தாலும் செல்மா பிரியதர்ஸன் அவர்களுடனான உரையாடல் மந்திரம் போன்ற சொற்களால் என்னை வழிநடத்தியது. மேலும், என் எழுத்தைக் கண்டு அதன்மூலமே என்னை கூர்மைப்படச்செய்தவர். தொடர்ந்து உரையாடி என்மேல் பெரும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் கல்யாணராமன், யவனிகா ஶ்ரீராம், பிரவீன் பஃறுளி, வெய்யில், நேசமித்ரன், கிகிகொமேரி ஆரம்பம் முதலே நல்ல நூல்களை அறிமுகப்படுத்தும் பரிசல்.சிவ செந்தில்நாதன், நிலவெளி கவிதை படித்துவிட்டு நல்லதொரு உரையாடலை ஏற்படுத்திய தோழன் பெரு.விஷ்ணுகுமார் ஆகியோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்நூலுக்குப் பின்னட்டை எழுதிக்கொடுத்திருக்கும் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கும், கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அய்யாவுக்கும் நன்றி. தமுஎகச விருது பெற்றபோது திருச்சியிலிருந்து அழைத்து 'உன்னைக் கணையாழி விருது விழாவில் பார்த்தபோது கலைஞனுக்குரிய அத்தனை அம்சங்களுடன் நீ இருப்பதை அறிந்தேன். ஆனால், உன் திறமைக்கு நீ அடைந்திருக்கும் உயரம் இதுவல்ல" என்று அன்புவார்த்தைகள் உதிர்த்த எழுத்தாளர் கலைச்செல்விக்கு நன்றி. 

எப்போதும் விட்டுவிடுதலையாகி குடும்பத்தைவிட்டு ஓடும் என்னை, ஒருநாள்மிக இறுக்கமாக இருந்த போது தன் நகையை அடகுவைத்து `எங்கயாவது வெளியில போய்ட்டு வாங்க மாமா' என்று சொன்ன மனைவி சுகன்யாவுக்கு நன்றி என்ற ஒற்றைச் சொல் போதாது. எழுத காரணமாக இருப்பது என் கிராமமாக இருந்தாலும் எழுத்து வலிமையடைவதற்கு மனைவி தரும் சுதந்திரம்தான் காரணம். மேலும், என்னை மிகவும் நேசிக்கும் நான் மிகவும் நேசிக்கும் என்னைத் தன் அன்பால் நெறிப்படுத்தும் மகள் யாழிசைக்கும், மகன் மீகாமனுக்கும் நன்றி. இந்நூலை வெளியிடும் நீலம் அமைப்புக்கும் பா.இரஞ்சித் தோழருக்கும் அன்பு முத்தங்கள்.


 

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...